Thursday, May 6, 2021

05.08 – குரோம்பேட்டைக் குமரன் குன்றம்

05.08 – குரோம்பேட்டைக் குமரன் குன்றம்


2014-12-08

குரோம்பேட்டைக் குமரன் குன்றம் (சென்னைப் புறநகர்ப் பகுதியில் தாம்பரம் அருகே உள்ளது)

----------------------------------

(அறுசீர் விருத்தம் - "மா மா காய்" என்ற அரையடி வாய்பாடு.)

(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல")

(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்")


1)

பண்டும் இன்றும் என்றுமுளாய் .. பாவை பங்கா எனவாழ்த்தித்

தொண்டு செய்யும் அடியார்தம் .. தொல்லை வினையைத் துடைத்தருள்வான்

அண்டர் வேண்ட அவர்க்கிரங்கி .. அருநஞ் சத்தை அமுதுண்ட

கொண்டற் கண்டன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


பண்டும் இன்றும் என்றும் உளாய் - அன்றும் இன்றும் என்றும் உள்ளவனே;

பாவை பங்கா என வாழ்த்தித் - உமைபங்கனே என்று வாழ்த்தி;

தொண்டு செய்யும் அடியார்தம் தொல்லை வினையைத் துடைத்தருள்வான் - தொண்டு செய்யும் பக்தர்களது பழவினையைத் தீர்த்து அருள்வான்;

அண்டர் வேண்ட அவர்க்கு இரங்கி அருநஞ்சத்தை அமுதுண்ட கொண்டற் கண்டன் - தேவர்கள் இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கிக் கொடீய விடத்தை உண்ட, மேகம் போன்ற நீலகண்டத்தை உடையவன்; (அண்டர் - தேவர்); (கொண்டல் - மேகம்);

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;


2)

நீற்றைப் பூசி நெஞ்சத்தில் .. நிலைத்த நேயம் உடையவராய்

ஆற்றுச் சடையாய் அடல்விடையாய் .. அமரர் கோவே அருளென்று

போற்றி நாளும் பொன்னடியிற் .. பூவிட் டேத்து மாணிக்காக்

கூற்றை உதைத்தான் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


நீற்றைப் பூசி நெஞ்சத்தில் நிலைத்த நேயம் உடையவராய் - திருநீற்றைப் பூசி உள்ளத்தில் நீங்காத அன்பு உடையவர்கள் ஆகி;

ஆற்றுச் சடையாய், அடல் விடையாய், அமரர் கோவே அருள் என்று போற்றி - "கங்கையைச் சடையில் உடையவனே, வலிய இடபத்தை வாகனமாக உடையவனே, தேவர் தலைவா, அருள்க" என்று துதித்து;

நாளும் பொன்னடியில் பூ இட்டு ஏத்து மாணிக்காக் கூற்றை உதைத்தான் - தினமும் பொற்பாதத்தில் பூவைத் தூவி வழிபட்ட மார்க்கண்டேயருக்காகக் காலனை உதைத்தவன்; (மாணி - மார்க்கண்டேயர்);

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே.




3)

புத்தம் புதிய மலர்தூவிப் .. புகழ்ந்து பாடிப் பொன்னடியை

நித்தம் நீள நினைந்தேத்தும் .. நேயர்க் கன்பன் நீள்சடையன்

மத்தன் வலிய அந்தகன்றன் .. மார்பில் கூரார் சூலத்தாற்

குத்திச் செற்றான் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


நித்தம் - தினந்தோறும்;

மத்தன் - ஊமத்த மலர் அணிந்தவன்;

அந்தகன் - அந்தகாசுரன்;

செற்றான் - அழித்தான்;


4)

பொக்கம் இன்றிப் பொன்னடியைப் .. போற்றிப் பணியும் அடியார்தம்

துக்கம் எல்லாம் தீர்த்தருளித் .. தோன்றாத் துணையாய் நிற்குமரன்

அக்கும் அரவும் அணிமார்பன் .. ஆறு லாவும் சடைமீது

கொக்கின் இறகன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


பொக்கம் - பொய்;

தோன்றாத் துணையாய் நிற்கும் அரன் - தோன்றாத துணை ஆகி நின்று காக்கும் ஹரன்;

அக்கு - உருத்திராக்கம்; எலும்பு;

ஆறு உலாவும் சடைமீது கொக்கின் இறகன் - கங்கை திகழும் சடையின்மேல், (கொக்கு வடிவம் உடைய குரண்டாசுரனை அழித்து அதன் ஆடையாளமாகக்) கொக்கின் இறகை அணிந்தவன்;


5)

ஒன்றும் பலவும் ஆகியவன் .. உமையாள் பங்கன் தில்லைதனுள்

மன்றில் ஆடும் மலர்ப்பாதன் .. மறவா அன்பர் மனத்தளியில்

என்றும் உள்ள எம்பெருமான் .. இளவெண் திங்கள் திகழ்முடிமேல்

கொன்றை சூடி குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


மனத்தளி - மனக்கோயில்;

கொன்றை சூடி - கொன்றைமலரைச் சூடியவன்;


6)

பறைகள் ஒலிக்க இரவில்நடம் .. பயிலும் பரமன் படுநஞ்சால்

கறைகொள் கண்டன் கணையெய்த .. காம னைக்காய் கண்ணுதலான்

மறைகள் பாடு மாதேவன் .. வணங்கு கின்ற அடியார்தம்

குறைகள் தீர்க்கும் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


இரவினடம் - இரவில் + நடம்;

நடம் பயிலும் - நாட்டியத்தை நிகழ்த்தும்;

படுநஞ்சு - இறத்தற்கு ஏதுவாகிய நஞ்சு; (படுத்தல் - கொல்லுதல்; அழித்தல்); (படுதல் - to touch; ஒன்றன்மீது ஒன்று உறுதல் - என்றும் கொள்ளலாம் - கண்டத்தில் பட்ட விடம்);

காமனைக் காய் கண்ணுதலான் - மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்;


7)

பிழைசெய் தாதை தாள்துணித்த .. பிள்ளை சண்டிக் கருளீசன்

பழையாய் பதியே அருளென்று .. பணிந்த தேவர் உயிர்காத்த

மழையார் மிடற்றன் கயிலாய .. மலையன் கையில் மழுவேந்தி

குழையோர் செவியன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


பிழை செய் தாதை தாள் துணித்த பிள்ளை சண்டிக்கு அருள் ஈசன் - குற்றம் செய்த தந்தையின் இரு கால்களையும் வெட்டிய மகனாரான சண்டீசருக்கு அருளிய ஈசன்;

"பழையாய் பதியே அருள்" என்று பணிந்த தேவர் உயிர் காத்த மழை ஆர் மிடற்றன் - "புராதனனே தலைவனே அருளாய்" என்று இறைஞ்சிய தேவர்களது உயிரைக் காத்த மேகம் போன்ற நீலகண்டம் உடையவன்;

கயிலாய மலையன் - கயிலைமலையில் வீற்றிருப்பவன்;

கையில் மழு ஏந்தி - கையில் மழுவை ஏந்தியவன்;

குழை ஓர் செவியன் - ஒரு காதில் குழை அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்;

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே.


8)

சூலப் படையான் திருமலையைத் .. துணிந்த சைத்த இராவணனைச்

சால நாள்கள் அழுமாறு .. தனியோர் விரலால் நசுக்கியவன்

மூலர் மூவா யிரந்தமிழை .. மொழிய அருள்செய் முக்கண்ணன்

கோலப் பிறையன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


சூலப் படையான் திருமலையைத் துணிந்து அசைத்த இராவணனைச் - சூலாயுதத்தை ஏந்தும் சிவபெருமான் உறையும் கயிலைமலையைப் பெயர்க்க முயன்ற இராவணனை;

சால நாள்கள் அழுமாறு தனி ஓர் விரலால் நசுக்கியவன் - பல காலம் அழும்படி அவனை ஒப்பற்ற ஒரு விரலால் நசுக்கிய பெருமான்;

மூலர் மூவாயிரம் தமிழை மொழிய அருள்செய் முக்கண்ணன் - திருமூலரைத் திருமந்திரம் பாட அருள்செய்த நெற்றிக்கண்ணன்; (மூவாயிரம் தமிழ் - 3000 பாடல்களையுடைய திருமந்திரம்);

கோலப் பிறையன் - அழகிய பிறைச்சந்திரனை அணிந்தவன்;

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே.




9)

தோடி லங்கும் திருச்செவியன் .. சுடலைப் பொடியன் தூமறைகள்

பாடி யருளும் திருநாவன் .. பன்றி அன்னம் அடிமுடியைத்

தேடி நாண எழுசோதி .. சிவனே அருளென் றடியார்கள்

கூடிப் போற்றும் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


தோடு இலங்கும் திருச்செவியன் - ஒரு காதில் தோடு அணிந்தவன்;

சுடலைப் பொடியன் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியவன்;

தூமறைகள் பாடியருளும் திருநாவன் - வேதங்களைப் பாடியருளியவன்;

பன்றி அன்னம் அடிமுடியைத் தேடி நாண எழு சோதி - திருமாலும் பிரமனும் பன்றி அன்னப்பறவை ஆகி அடியையும் முடியையும் தேடிக் காணாது நாணுமாறு உயர்ந்த ஜோதி;

"சிவனே அருள்" என்று அடியார்கள் கூடிப் போற்றும் - "சிவனே அருளாய்" என்று பக்தர்கள் திரண்டு போற்றுகின்ற;

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே.


10)

பாதை அறியாப் புன்னெறியார் .. பகலில் விளக்கைப் பிடித்துழல்வார்

வாதை சேர்க்கும் அவர்மொழியில் .. மயங்கேல் திருவைந் தெழுத்தோதின்

தீதை நீக்கித் திருவருள்வான் .. திங்கள் திகழும் செஞ்சடையான்

கோதை பங்கன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


புன்னெறி - பொய்ச்சமயங்கள்; தீநெறிகள்;

வாதை - துன்பம்;

மயங்கேல் - மயங்காதே; (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி);

திருவைந்தெழுத்து ஓதின் - பஞ்சாக்ஷரம் (நமச்சிவாய மந்திரம்) ஓதினால்;

கோதை பங்கன் - உமைபங்கன்;


11)

அரையா அருளென் றடிபோற்றி .. அமரர் இறைஞ்ச மேருவெனும்

வரையே வில்லா வளைத்ததிலே .. வாயு மால்தீக் கணைகோத்து

விரவார் புரங்கள் மூன்றுமுடன் .. வெந்து பொடியாய் விழவெய்த

குரையார் கழலன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


"அரையா அருள்" என்று அடிபோற்றி அமரர் இறைஞ்ச - "அரசனே அருளாய்" என்று திருவடியைத் தேவர்கள் வணங்க; (அரையன் - அரசன்);

மேரு எனும் வரையே வில்லா வளைத்து அதிலே வாயு மால் தீக் கணை கோத்து - மேரு மலையை வில்ளாக வளைத்து அதில் அக்கினி, திருமால், வாயு இம்மூவரையும் ஒரு கணையாகக் கோத்து; (வரை - மலை);

விரவார் புரங்கள் மூன்றும் உடன் வெந்து பொடியாய் விழ எய்த - எதிர்த்த அசுரர்களது முப்புரங்களும் ஒருங்கே உடனே வெந்து சாம்பலாகி அழிய எய்த; (விரவார் - பகைவர்);

குரை ஆர் கழலன் - ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்தவன்;

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே.


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள் :

1) சென்னைப் புறநகர்ப் பகுதியில் தாம்பரம் அருகே உள்ள குரோம்பேட்டையில் குமரன் குன்றம் கோயில் உள்ளது. க்கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தனிக்கோயிலும் உள்ளது : தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=26


----------- --------------


Tuesday, May 4, 2021

05.07 – ஒற்றியூர் - (திருவொற்றியூர்)

 05.07 – ஒற்றியூர் - (திருவொற்றியூர்)


2014-12-07

ஒற்றியூர் - (திருவொற்றியூர்)

-----------------------

(எண்சீர்விருத்தம் - "காய் காய் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு. திருத்தாண்டகம் ஒத்த அமைப்பு)

(அப்பர் தேவாரம் - 6.1.1 - அரியானை அந்தணர்தம் சிந்தை யானை)


1)

ஊர்வதற்கு வெள்விடையொன் றுடையான் தன்னை

.. உலகத்தை நோக்கிமிக விரைந்தி ழிந்த

நீர்வதியும் சடையானை நெற்றி மீது

.. நேத்திரனை ஒருகையில் நெருப்பி னானைக்

கூர்வதியும் மூவிலைவேல் ஏந்து கின்ற

.. கோமானைக் கோலமயில் போன்றி லங்கு

பார்வதியோர் பங்கினனை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


* படம்பக்க நாதர் - திருவொற்றியூரில் இறைவன் திருநாமம்;


ஊர்வதற்கு வெள்விடை ஒன்று உடையான் தன்னை - வெண்ணீற இடபத்தை வாகனமாக உடையவனை;

உலகத்தை நோக்கி மிக விரைந்து இழிந்த நீர் வதியும் சடையானை - பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்த கங்கை தங்கும் சடையானை; (வதிதல் - தங்குதல்);

நெற்றி மீது நேத்திரனை - நெற்றிக்கண்ணனை;

ஒரு கையில் நெருப்பினானைக் - கையில் நெருப்பை ஏந்தியவனை;

கூர் வதியும் மூவிலைவேல் ஏந்துகின்ற கோமானைக் - கூர்மை மிக்க திரிசூலத்தை ஏந்திய தலைவனை; (கூர் - கூர்மை);

கோலமயில் போன்று இலங்கு பார்வதி ஓர் பங்கினனை - அழகிய மயில் போன்ற உமையை ஒரு பங்கில் உடையவனை;

ஒற்றியூரில் படம்பக்க நாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்க நாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


2)

தாய்வடிவும் தாங்குகின்ற கோனை நெஞ்சில்

.. தாங்கியவர் வினைதீர்த்துத் தாங்கு வானைத்

தேய்வடிவம் கண்டஞ்சித் திங்கள் போற்றச்

.. செஞ்சடைமேல் ஏற்றானை விரும்பிப் பெற்ற

பேய்வடிவம் உடையவரை ஆலங் காட்டிற்

.. பெருநடனம் காணவருள் பெம்மான் தன்னைப்

பாய்விடைமேல் வருவானை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


பேய்வடிவம் உடையவரை ஆலங்காட்டில் பெருநடனம் காண அருள் பெம்மான்தன்னைப் - காரைக்கால் அம்மையாருக்குத் திருவாலங்காட்டில் தன் திருக்கூத்தை காண அருள்செய்த பெருமானை;

பாய்விடைமேல் வருவானை - பாய்ந்து செல்லும் இடபத்தை வாகனமாக உடையவனை;


3)

கத்து கடலிடையே மலையை நட்டுக்

.. கடைந்தபொழு தெழுந்தவிடம் கண்டு தேவர்

அத்த அபயமருள் என்றி றைஞ்ச

.. அவர்க்கிரங்கி அதனையுண்ட கண்டன் தன்னைக்

கொத்து மலர்க்குழலி கூறா னானைக்

.. கோதில்லா அமுதத்தைக் கும்பிட் டேத்திப்

பத்தர் குழாம்கெழுமும் ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


கொத்து மலர்க்குழலி கூறு ஆனானைக் - மலர்க்கொத்துகளை அணிந்த உமையை ஒரு கூறாக உடையவனை;

கோது இல்லா அமுதத்தைக் - குற்றமற்ற அமுதம் போன்றவனை;

கும்பிட்டு ஏத்திப் பத்தர் குழாம் கெழுமும் ஒற்றியூரில் - வணங்கித் துதித்து அடியார் கூட்டம் நிறைகிண்ற திருவொற்றியூரில்; (கெழுமுதல் - நிறைதல்);


4)

மழவிடையை ஊர்தியென மகிழும் கோனை

.. வடிவுடைய மங்கையொரு பங்கி னானைத்

தழலனைய மேனியனை வானி ழிந்த

.. தண்ணதியைச் சடையிடையே தாங்கி னானை

அழவினைகள் எத்தனையோ ஆற்றி னாரும்

.. அஞ்செழுத்தை ஓதியடி போற்று வாரேல்

பழவினைகள் தீர்ப்பவனை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


* வடிவுடைய மங்கை - திருவொற்றியூரில் அம்பிகை திருநாமம்;


மழவிடை - இளமையுடைய இடபம்;

தழல் அனைய மேனியனை - தீப்போல் செம்மேனியனை;

வான் இழிந்த தண் நதியைச் சடையிடையே தாங்கினானை - வானிலிருந்து இறங்கிய குளிர்ந்த கங்கையைச் சடையில் தாங்கியவனை; (அப்பர் தேவாரம் - 6.90.6 - “வான் இழிந்த கங்கை சேடெறிந்த சடையானைத்”);

அழ வினைகள் எத்தனையோ ஆற்றினாரும் - தம்மை வருத்தும்படி வினைப்பயன் தரும் பல பாவங்கள் செய்தவரும்;

அஞ்செழுத்தை ஓதி அடி போற்றுவாரேல் பழவினைகள் தீர்ப்பவனை - திருவைந்தெழுத்தை ஓதித் திருவடியைப் போற்றினால் அவர்களது பழவினையைத் தீர்ப்பவனை;


5)

அரவணியா மகிழ்வானை அரையில் வேங்கை

.. அதளாடை உடையானை அடலேற் றானைத்

தரையிலொரு சக்கரத்தைத் தாளாற் கீறிச்

.. சலந்தரனைத் தடிந்தானைச் சலமேற் றானைக்

கரவடையா மனத்தோடு கைகள் கூப்பிக்

.. கடிமலர்கள் பலதூவிக் கசிந்து பாடிப்

பரவியவர்க் கினியானை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


அரவு அணியா மகிழ்வானை - பாம்பை ஆபரணமாக விரும்பியவனை;

அரையில் வேங்கை அதள் ஆடை உடையானை - இடுப்பில் புலித்தோலைக் கட்டியவனை;

அடல் ஏற்றானைத் - வலிய இடபத்தை வாகனமாக உடையவனை;

தரையில் ஒரு சக்கரத்தைத் தாளால் கீறிச் சலந்தரனைத் தடிந்தானைச் - தரைமேல் ஒரு சக்கரத்தை வரைந்து அதைக்கொண்டு சலந்தராசுரனை அழித்தவனை;

சலம் ஏற்றானைக் - கங்கையைச் சடையில் ஏற்றவனை;

கரவு அடையா மனத்தோடு கைகள் கூப்பிக் கடிமலர்கள் பல தூவிக் கசிந்து பாடிப் பரவியவர்க்கு இனியானை - வஞ்சம் இல்லா மனத்தோடு கரங்குவித்து வாசமலர்கள் பல தூவி உள்ளம் கசிந்து பாடிப் போற்றும் பக்தர்களுக்கு இனியவனை;

ஒற்றியூரில் படம்பக்க நாதனைக் கண்டு இன்புற்றேனே.


6)

தோலாடை தரித்தானைத் தூவெண் ணீறு

.. துதைந்திலங்கு மேனியனைச் சூலத் தானை

மேலாடு வெண்மதியைச் சென்னி மீது

.. விளங்கவைத்த விகிர்தனை மின்னல் போல

நூலாடு மார்பினனைத் திருநா மங்கள்

.. நூறுபத் துடையபெரு மானை ஆவின்

பாலாடல் மகிழ்ந்தானை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


விகிர்தன் - மாறுபட்ட செயலினன்;

திருநாமங்கள் நூறுபத்து - சஹஸ்ரநாமம்;

ஆவின் பால் ஆடல் மகிழ்ந்தானை - பால் அபிஷேகத்தை விரும்பியவனை;


7)

துற்றகடல் நஞ்சத்தைக் கண்டம் இட்ட

.. துணைவனையோர் துணையிலியைச் சுற்றி ஆர்த்த

புற்றரவக் கச்சினனைப் பொருப்பு வில்லிற்

.. புரமூன்றை எரிகணையைப் பூட்டி னானை

நெற்றியிலோர் கண்ணுடைய நிமலன் தன்னை

.. நீரொடுபூக் கொண்டேத்து நேயர் தங்கள்

பற்றறுக்கும் பரம்பரனை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


துற்ற கடல் நஞ்சத்தைக் - உண்ட கடல் விடத்தை;

துணையிலியை - ஒப்பற்றவனை;

சுற்றி ஆர்த்த புற்றரவக் கச்சினனை - அரையில் பாம்பைக் கச்சாகக் கட்டியவனை;

பொருப்பு வில்லிற் புரம் மூன்றை எரிகணையைப் பூட்டினானை - மேருமலை வில்லில் முப்புரங்களை எரிக்கும் கணையைத் தொடுத்தவனை;

நெற்றியிலோர் கண்ணுடைய நிமலன் தன்னை - நெற்றிக்கண் உடைய தூயனை;

நீரொடு பூக் கொண்டு ஏத்து நேயர் தங்கள் பற்று அறுக்கும் பரம்பரனை - நீரும் பூவும் கொண்டு வழிபடும் பக்தர்களது பந்தங்களை நீக்கும் பராபரனை;


8)

வலியேன் எனவெண்ணி மலைய சைத்த

.. வாளரக்கன் அலறவிரல் வைத்தான் தன்னை

ஒலியார் நதியுலவு சடையி னானை

.. ஓதவிடம் உண்டவனை உள்க சிந்து

கலிதீர் கதிர்மதியாய் என்றி றைஞ்சிக்

.. கைதொழுவார்க் கருந்துணையைக் கலனொன் றேந்திப்

பலிதேர்ந் துழல்வானை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


வலியேன் என எண்ணி மலை அசைத்த வாள்அரக்கன் அலற விரல் வைத்தான் தன்னை - "நான் வலிமை உடையவன்" என்று எண்ணிக் கயிலைமலையைப் பெயர்க்க முயன்ற கொடிய அரக்கனான இராவணன் அலறும்படி விரலை ஊன்றி அவனை நசுக்கியவனை;

ஒலி ஆர் நதி உலவு சடையினானை - அலை ஒலிக்கின்ற கங்கை சஞ்சரிக்கும் சடையானை;

ஓத விடம் உண்டவனை - கடல் நஞ்சை உண்டவனை;

உள் கசிந்து "கலி தீர் கதிர்மதியாய்" என்று இறைஞ்சிக் கைதொழுவார்க்கு அரும் துணையைக் - மனம் உருகி, "எம் துன்பத்தைத் தீர்த்து அருள்க ஒளியுடைய சந்திரனை அணிந்தவனே" என்று கைகூப்பி வணங்கும் அடியவர்களுக்கு அருளும் ஒப்பற்ற துணைவனை; (கலி - துன்பம்);

பலிதேர்ந்து உழல்வானை - பிச்சை ஏற்றுத் திரிபவனை; (பலி - பிச்சை);


9)

பணிமீது துயில்மாலும் அயனும் அன்று

.. பன்றிபுள்ளாய் நேடியவோர் நெருப்பைக் காரார்

மணியாகக் கடல்நஞ்சைக் கண்டம் தன்னில்

.. வைத்தவனை மூவிலைய சூலத் தானை

அணியாக அரவங்கள் ஏறு கின்ற

.. ஆகமுடை அற்புதனை ஆரா அன்பால்

பணிவார்கட் கணியானை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


பணிமீது துயில் மாலும் அயனும் அன்று பன்றி புள்ளாய் நேடிய ஓர் நெருப்பைக் - பாம்பின்மேல் துயிலும் திருமாலும் பிரமனும் முன்பு பன்றி அன்னம் என்ற வடிவங்களில் தேடிய ஒப்பற்ற சோதியை; (பணி - நாகப்பாம்பு); (நேடிய - தேடிய);

கார் ஆர் மணியாகக் கடல்நஞ்சைக் கண்டம் தன்னில் வைத்தவனை - கரிய மணியாகக் கடல்விடத்தைக் கண்டத்தில் இட்டவனை;

மூவிலைய சூலத்தானை - மூன்று இலை போன்ற நுனிகளை உடைய சூலத்தை ஏந்தியவனை; (அப்பர் தேவரம் - 6.24.9 - "மூவிலைய சூலத் தான்காண்");

அணியாக அரவங்கள் ஏறுகின்ற ஆகமுடை அற்புதனை - ஆபரணமாகப் பாம்புகள் ஏறுகின்ற திருமேனியை உடைய அற்புதனை; (ஆகம் - மேனி);

ஆரா அன்பால் பணிவார்கட்கு அணியானை - பேரன்பால் வழிபடும் பக்தர்களுக்குப் பக்கத்தில் இருந்து அருள்பவனை;

ஒற்றியூரில் படம்பக்க நாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்க நாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


10)

பொன்னாரும் அடிபோற்றாப் புல்லர்க் கென்றும்

.. புரியாத தத்துவனைப் புனலை ஏற்ற

மின்னாரும் சடையானை வெண்ணீற் றானை

.. வேதியனை வேழத்தின் உரிவை யானைத்

தன்னாகம் தனில்நாரி தங்கப் பாதி

.. தந்தவனைத் தன்னேரில் தலைவன் தன்னைப்

பன்னாகம் பூண்டானை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


பொன் ஆரும் அடி போற்றாப் புல்லர்க்கு என்றும் புரியாத தத்துவனை - பொன்னடியை வழிபாடு செய்யாத கீழோர்களால் அறிய இயலாத மெய்ப்பொருளை; வழிபாடு செய்யாத கீழோர்க்கு அருள் இல்லாத மெய்ப்பொருளை; (ஆர்தல் - ஒத்தல்);

புனலை ஏற்ற மின் ஆரும் சடையானை - ஒளி மிக்க சடையில் கங்கையை ஏற்றவனை;

வெண்ணீற்றானை - வெண் திருநீற்றைப் பூசியவனை;

வேதியனை - வேதம் ஓதியவனை;

வேழத்தின் உரிவையானைத் - யானைத்தோலைப் போர்த்தவனை; (உரிவை - தோல்);

தன் ஆகம் தனில் நாரி தங்கப் பாதி தந்தவனைத் - உமைக்குத் தன் திருமேனியில் பாதியைத் தந்தவனை;

தன் நேர் இல் தலைவன் தன்னை - தனக்கு ஓர் ஒப்பு இல்லாத தலைவனை;

பன்னாகம் பூண்டானை - பல் நாகம் பூண்டானை - பல பாம்புகளை அணிந்தவனை; (திருவாசகம் - திருப்பூவல்லி - 8.13.17 - “இலங்கணியாம் பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ”);

ஒற்றியூரில் படம்பக்க நாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்க நாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


11)

கொலவடைந்த கூற்றுவனைக் கொன்று மாணி

.. குறைவின்றி வாழவருள் செய்த கோனை

அலைமலிந்த ஆறுலவும் சடையி னானை

.. அழியாத புகழானை அளவில் லானைத்

தலைமலிந்த மாலையினைத் தலைக்க ணிந்த

.. சங்கரனைத் தாள்பரவும் பத்தர்க் காகப்

பலவடிவும் ஏற்றானை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


கொல அடைந்த கூற்றுவனைக் கொன்று மாணி குறைவின்றி வாழ அருள் செய்த கோனை - ;

அலை மலிந்த ஆறு உலவும் சடையினானை - கொல்ல வந்தடைந்த காலனை அழித்து மார்க்கண்டேயர் சிரஞ்சீவியாக வாழ அருளிய தலைவனை; (மாணி - மார்க்கண்டேயர்);

அழியாத புகழானை - நிலைத்த புகழ் உடையவனை;

அளவு இல்லானைத் - எல்லை இல்லாதவனை;

தலை மலிந்த மாலையினைத் தலைக்கு அணிந்த சங்கரனைத் - தலைக்குத் தலைமாலை அணிந்த சங்கரனை;

தாள் பரவும் பத்தர்க்காகப் பல வடிவும் ஏற்றானை - திருவடியைத் துதிக்கும் பக்தர்களுக்காகப் பல வடிவங்களை ஏற்று அருள்பவனை;

ஒற்றியூரில் படம்பக்க நாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்க நாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :

1. யாப்புக்குறிப்பு :

எண்சீர்விருத்தம் - "காய் காய் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு.

திருத்தாண்டகம் ஒத்த அமைப்பு. காய்ச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

------- ---------