Saturday, November 28, 2015

02.44 – வாட்போக்கி - (ஐயர்மலை)

02.44 – வாட்போக்கி - (ஐயர்மலை)



2012-03-24
திருவாட்போக்கி
"வாட்போக்கி மலையமர்ந்த மாமணி"
---------------------------------
(திருத்தாண்டக அமைப்பு - எண்சீர் விருத்தம். பொதுவாகக் 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு.)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 6.1.1 - “அரியானை அந்தணர்தம் சிந்தை யானை”)



1)
பான்மதியின் துண்டத்தைச் சூடி னானைப்
.. பாய்கங்கை தனைச்சடையுள் அடக்கி னானை
மான்மறியும் மழுவாளும் ஏந்தி னானை
.. வன்னஞ்சைக் கண்டத்தில் நிறுத்தி னானைத்
தேன்மொழியோர் பங்கினனைச் சேவ தேறும்
.. சிவனைக்கண் ணுதலானைத் தேவ தேவை
வான்முகில்வந் துலவுகின்ற திருவாட் போக்கி
.. மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே.



பான்மதி - பால்+மதி - பால்போலும் வெள்ளிய சந்திரன்;
மான்மறி - மான்கன்று;
வன்னஞ்சு - கொடிய விஷம்;
தேன்மொழி - தேன்போன்ற மொழி பேசும் உமையம்மை; (சம்பந்தர் தேவாரம் - 1.100.2 - "அங்கமொராறும் .... தேன்மொழி பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.");
சே - இடபம்; எருது;
கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்;
வான் - பெருமை; நன்மை; வானம்;
வான்முகில் - பெரு மேகங்கள்; வானத்திலிருக்கின்ற கருக்கொண்ட மேகம்;
மா - அழகிய; சிறந்த; பெரிய;
மணி - மாணிக்கம்; இரத்தினம்;
வாழ்த்துவாயே - வாயே, வாழ்த்து; / வாழ்த்துவாயாக;
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.9.5 - "வாயே வாழ்த்துகண்டாய்");


பால்போன்ற வெண்பிறைச் சந்திரனைச் சூடியவனைப், பாய்ந்துவந்த கங்கையைச் சடையுள் அடக்கியவனை, மான்கன்றையும் மழுவாளையும் கையில் ஏந்தியவனைக், கொடிய விஷத்தைக் கண்டத்துள் நிறுத்தியவனைத், தேன்போலும் இனிய மொழி பேசும் உமையம்மையை ஒரு பங்காக உடையவனை, எருதின்மேல் ஏறும் சிவபெருமானை, நெற்றிக்கண்ணனைத், தேவதேவனைப், பெருமேகங்கள் வந்து உலவுகிற திருவாட்போக்கி மலையில் எழுந்தருளியுள்ள மாணிக்கத்தை, வாயே நீ வாழ்த்துவாயாக!



2)
கரதலத்தில் கனலேந்தி ஆடு வானைக்
.. காதல்செய் அடியார்க்கா நரியை யெல்லாம்
துரகமெனச் செய்வானைச் சோதி யானைத்
.. துதிப்பாரை நீங்காத துணையா னானைப்
பரகதிக்கு வழிகாட்டி நிற்கின் றானைப்
.. பழவினையை அறுத்தெம்மைப் பாரிப் பானை
மரகதம்போல் வயல்சூழ்ந்த திருவாட் போக்கி
.. மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே.



கரதலம் - கை;
கனல் - தீ;
காதல் - அன்பு; பக்தி;
துரகம் - குதிரை;
சோதியான் - ஜோதி வடிவினன்;
பரகதிக்கு வழிகாட்டி நிற்கின்றானை - (அப்பர் தேவாரம் - 6.61.2 - "விடிவதுமே .... செல்கதிக்கு வழிகாட்டும் சிவனே என்றும் ....");
பாரித்தல் - காத்தல்;
மரகதம்போல் வயல் - பச்சைப்பசேல் என்றிருக்கும் வயல்கள்;


* நரியைப் பரியாக்கிய வரலாற்றைத் திருவிளையாடற்புராணத்தில் காண்க.



3)
தேனோடு பால்கலந்தாற் போலி னிக்கும்
.. செந்தமிழைப் புகலியர்கோன் பாடக் கேட்டுக்
கூனோடப் பாண்டியனுக் கருள்செய் தானைக்
.. குரைகழற்சீர் கூறுகிற ஏடும் அன்று
மீனோடும் வைகையினில் எதிர்ந்து சென்று
.. வெற்றிகொள அருள்புரிந்த விமலன் தன்னை
வானோடும் மதிதீண்டும் திருவாட் போக்கி
.. மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே.



புகலியர்கோன் - திருஞான சம்பந்தர்; (புகலி - சீகாழி);
கூன் ஓட - முதுகிலிருந்த கூன் நீங்குமாறு;
மீன் ஓடும் வைகை - மீன்கள் பாயும் வைகை ஆறு;
எதிர்தல் - To oppose, confront; எதிர்த்தல்.
விமலன் - மலமற்றவன்;
வான் ஓடும் மதி - வானிற் செல்லும் சந்திரன்;


* மதுரையில் சமணர்களோடு செய்த புனல்வாதத்து நிகழ்ச்சியைச் சுட்டியது.


தேனும் பாலும் கலந்தாற்போல் இனிக்கிற செந்தமிழைத் திருஞான சம்பந்தர் பாடக் கேட்டுக், கூன்பாண்டியன் முதுகை நிமிர்த்தியவனை, ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிப் புகழைச் சொல்லும் தேவாரப் பதிக ஏடு, மீன்கள் பாயும் வைகை ஆற்றுவெள்ளத்தை எதிர்த்து நீந்திச் சென்று அத்தினம் வெற்றிபெற அருள்செய்த விமலனை, வானிற் செல்லும் சந்திரன் வந்து தீண்டுமாறு உயர்ந்த திருவாட்போக்கி மலையில் எழுந்தருளியுள்ள மாணிக்கத்தை, வாயே நீ வாழ்த்துவாயாக!



4)
குளமான கண்ணினராய்க் கையி ரண்டும்
.. கூப்பியரன் தாள்பணியும் அன்பர் ஆவி
கொளவோடி வந்தடைந்த கூற்றைச் செற்றுக்
.. குறைவில்நாள் அவர்க்கருளும் குணத்தி னானைக்
களமாரும் கண்டத்தைக் காட்டு வானைக்
.. கச்சாக நாகத்தைக் கட்டு வானை
வளமாரும் வயல்சூழ்ந்த திருவாட் போக்கி
.. மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே.



அரன் - ஹரன்;
கூற்று - எமன்;
செறுதல் - அழித்தல்;
குறைவு இல் நாள் - நீண்ட ஆயுள்;
களம் - கருமை; (12.8.47 - பெரிய புராணம் - எறிபத்த நாயனார் புராணம் - "வளவனார் .... களமணி களத்துச் செய்ய கண்ணுதல் ...." - களம் - எனவருவனவற்றுள் முன்னையது கறுப்பும் பின்னையது கழுத்தும் ஆம்);
ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்;


நீர் மல்கிய குளம் போல ஆன கண்களை உடையவராய்க் கைகள் கூப்பிச் சிவபெருமான் திருவடியைத் தொழுத மார்க்கண்டேயரைக் கொல்ல ஓடி வந்த எமனைக் கொன்று மார்க்கண்டேயருக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்தவனை, நீலகண்டனைப், பாம்பை அரையில் கச்சாகக் கட்டுபவனை, வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த திருவாட்போக்கி மலையில் எழுந்தருளியுள்ள மாணிக்கத்தை, வாயே நீ வாழ்த்துவாயாக!



5)
அழையாத தக்கன்செய் வேள்வி தன்னை
.. அழித்தானை அந்தியொளி வண்ணத் தானை
உழையாரும் கையானை உம்ப ரானை
.. ஒளிநீறு துதைந்திலங்கு மார்பி னானைக்
குழையோர்பால் தோடோர்பால் காட்டு வானைக்
.. குரைகடல்நஞ் சுண்டிருண்ட கண்டத் தானை
மழைமேகம் வந்துலவும் திருவாட் போக்கி
.. மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே.



உழை - மான்;
உம்பரான் - தேவர்கள் தலைவன்;
துதைதல் - படிதல் (To be steeped);
(அப்பர் தேவாரம் - 6.59.1 - ".... தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும் ...");
குழை - ஆண்கள் காதில் அணிவது;
தோடு - பெண்கள் காதில் அணிவது;
குரைகடல் - ஒலிக்கிற கடல்;


ஈசனை இகழ்ந்த தக்கன் செய்யப்புகுந்த வேள்வியை அழித்தவனைச், செவ்வான நிறத்தானை, மான்கன்றை ஏந்திய கையானைத், தேவர்கள் தலைவனைக், குழை ஒரு பக்கமும் தோடு ஒரு பக்கமும் திகழும் அர்த்தநாரீஸ்வரனை, ஒலிக்கும் கடலில் எழுந்த விஷத்தை உண்டதனால் கண்டத்தில் கருமை திகழும் நீலகண்டனை, மேகம் வந்து உலவுகிற உயர்ந்த திருவாட்போக்கி மலையில் எழுந்தருளியுள்ள மாணிக்கத்தை, வாயே நீ வாழ்த்துவாயாக!



6)
கணக்குச்செய் தடியார்பால் வந்த டைந்த
.. காலனையு தைத்தருளும் கழலி னானை
வணக்கிச்செய் மலைவில்லால் வானிற் செல்லும்
.. மதில்மூன்றை உடனெரித்த மைந்தன் தன்னைப்
பணிக்கச்சை அணிகின்ற பரமன் தன்னைப்
.. பணிசெய்வார் பிணிதீர்க்கும் பண்பி னானை
மணிப்பச்சை வயல்சூழும் திருவாட் போக்கி
.. மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே.



கணக்குச்செய்து - வாழ்நாளைக் கணக்கிட்டு;
வணக்குதல் - வளைத்தல்;
மலைவில்லால் - மேருமலை என்ற வில்லினால்;
மதில் மூன்று - முப்புரங்கள்;
மைந்தன் - வீரன்;
பணி - 1) நாகம்; / 2) தொண்டு;
கச்சு / கச்சை - அரைக்கச்சு (belt);
பிணி - வினைக்கட்டு; நோய்;
மணிப்பச்சை வயல்- மரகதம்போல் பச்சைப்பசேல் என்று இருக்கும் வயல்கள்;



7)
புகலான பொன்னடியில் மறவா தென்றும்
.. பூவிட்டுத் தமிழ்மாலை சாத்திப் போற்றும்
தகவாளர் தமைப்புணையாய்த் தாங்கு வானைச்
.. சங்கரனைத் தன்னொப்பார் இல்லா தானைப்
பகவானை மலைமகளோர் பங்கன் தன்னைப்
.. பாரோடு விண்ணெல்லாம் ஆனான் தன்னை
மகவோடு மந்திதிரி திருவாட் போக்கி
.. மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே.



புகல் - அடைக்கலம்;
சாத்துதல் - அணிதல் (To put on, adorn); (e.g.: "திருமுல்லை வாயில் எய்திச் செழுந்தமிழ் மாலை சாத்தி")
தகவாளர் - நற்பண்பாளர்கள்;
புணை - படகு; தெப்பம்; (அடியவர்களை வினைக்கடலில் ஆழாமல் காக்கும் படகு);
சங்கரன் - நன்மைசெய்பவன்;
மகவு - கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளை (Young of animals living on trees, as of monkeys) - குட்டி;
மந்தி திரி - பெண்குரங்கு திரிகின்ற;


(11.4.87 - அற்புதத் திருவந்தாதி -
"நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் .....")



8)
வானமதில் ஓடும்தேர் நிற்கக் கண்டு
.. வரையிடக்கச் செல்லரக்கன் தனைய டர்த்துக்
கானமிகக் கேட்டருள்செய் கயிலை யானைக்
.. கல்லால மரத்தின்கீழ் அறம்சொல் வானைத்
தேனமரும் கொன்றையணி சடையி னானைத்
.. தீராத நோய்தீர்க்கும் தேவ தேவை
வானரங்கள் பாய்ந்தோடும் திருவாட் போக்கி
.. மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே.



வானமதில் - வானில்; (இதை ஒத்த பிரயோகம்: அப்பர் தேவாரம் - 6.19.4 - "கானமதில் நடமாட வல்லான்");
வரை - மலை;
இடத்தல் - பெயர்த்தல்; தோண்டுதல்;
அரக்கன் - இராவணன்;
அடர்த்தல் - நசுக்குதல்;
கானம் - இசை;
தேன் அமரும் கொன்றை - வண்டுகள் விரும்பும் கொன்றைமலர்; தேன் பொருந்திய கொன்றைமலர்;
தீராத நோய் - பிறவிப்பிணி;
தேவதேவை - தேவதேவனை;


வானத்தில் ஓடும் தன் தேர் கயிலைமலைமேல் செல்லாமல் நின்றதும், ஆணவத்தோடு அம்மலையைப் பெயர்த்தெறியச் சென்ற தசமுகனை நசுக்கிப் பின் அவன் அழுது இசைபாடக் கேட்டு அவனுக்கு அருள்செய்த கயிலைமலையானைக், கல்லால மரத்தின்கீழ்ச் சனகாதியருக்குப் போதிக்கும் தக்ஷிணாமூர்த்தியை, வண்டுகள் விரும்பும் தேன் பொருந்திய கொன்றைமலரைச் சடையில் அணிபவனைத், தீராத பிறவிப்பிணியைத் தீர்க்கும் தேவதேவனைக், குரங்குகள் பாய்ந்து ஓடுகிற திருவாட்போக்கி மலையில் எழுந்தருளியுள்ள மாணிக்கத்தை, வாயே நீ வாழ்த்துவாயாக!



9)
சந்திரனைத் தலைமீது சூடி னானைத்
.. தையலையோர் கூறாக நாடி னானைச்
சுந்தரனை நான்மறைகள் பாடி னானைச்
.. சுடலைதனில் திருநட்டம் ஆடி னானை
வந்தயன்மால் அடிமுடியும் நேடி வாட
.. வரையில்லாச் செந்தழலாய் நீடி னானை
மந்திபல மகிழ்ந்தாடும் திருவாட் போக்கி
.. மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே.



தையல் - பெண் - பார்வதி;
சுந்தரன் - அழகுடையவன்;
சுடலை - சுடுகாடு;
அயன் - பிரமன்;
மால் - திருமால்;
நேடுதல் - தேடுதல்;
வரை - அளவு; எல்லை;
நீடுதல் - நீளுதல்;



10)
அஞ்சுவன அஞ்சாமல் ஓயா தென்றும்
.. அறநெறியாம் மறைநெறியைப் பழித்துப் பேசும்
வஞ்சகருக் கெட்டாத கருத்தன் தன்னை
.. வார்சடைமேல் வளர்திங்கட் கண்ணி யானை
அஞ்சுபதம் சொல்கின்ற அடிய வர்க்கோர்
.. அரணாகிக் காத்தருளும் அண்ணல் தன்னை
மஞ்சுவந்து தீண்டுகிற திருவாட் போக்கி
.. மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே.



அஞ்சுவன அஞ்சாமல் - அஞ்சவேண்டியவற்றுக்குப் பயப்படாமல்;
கருத்தன் - 1) கடவுள் / தலைவன் (கர்த்தா); / 2) அன்பர்தம் கருத்தில் இருப்பவன்;
வார்சடை - நீள்சடை - நீண்ட சடை;
கண்ணி - தலைமேல் அணியும் ஒருவகை மாலை; (ஒரு பக்கம் காம்பு மட்டும் சேர்க்கும் பூந்தொடை);
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.3.1 - "மாதர்ப் பிறைக்கண்ணி யானை");
அஞ்சுபதம் - திருவைந்தெழுத்து;
அரண் - பாதுகாவல்;
மஞ்சு - மேகம்;



11)
விண்ணவரும் போற்றுநிலை விளைய வேண்டில்
.. வெள்விடைமேல் ஊர்வானை வேதத் தானைக்
கண்ணமரும் நெற்றியனைக் கடலெ ழுந்த
.. கருநஞ்சம் திகழ்கின்ற கண்டத் தானைப்
பண்ணமரும் மொழிமாதோர் பாகத் தானைப்
.. பனிமதியம் புனைவானை எங்கும் பச்சை
வண்ணமலி வயல்சூழ்ந்த திருவாட் போக்கி
.. மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே.



விண்ணவர் - தேவர்;
வெள்விடை - வெள்ளை எருது;
ஊர்தல் - செல்லுதல்;
கண் அமரும் நெற்றியன் - நெற்றிக்கண்ணன்;
பண் அமரும் மொழி மாது - பண் பொருந்திய இனிய மொழி பேசும் உமாதேவியார்;
பனி மதியம் - குளிச்சி பொருந்திய சந்திரன்;
பச்சை வண்ணம் மலி வயல் - பசிய நிறம் மிகுந்த வயல் - பச்சைப்பசேல் என்று திகழும் வயல்கள்;


வானோரும் போற்றும் உயர்ந்த நிலையைப் பெறவேண்டும் என்றால், வெள்ளை இடபத்தின்மேல் செல்பவனை, வேதப்பொருளாய் இருப்பவனை, நெற்றிக்கண்ணனைப், பாற்கடலில் எழுந்த கரிய விஷம் மணிபோல் விளங்கும் நீலகண்டனைப், பண் பொருந்திய இனிய மொழி பேசும் உமாதேவியாரைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக உடையவனைக், குளிர்ந்த சந்திரனைச் சூடுபவனை, எங்கும் பசுமைமிகும் வயல்கள் சூழ்ந்த திருவாட்போக்கி மலையில் எழுந்தருளியுள்ள மாணிக்கத்தை, வாயே நீ வாழ்த்துவாயாக!



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
திருத்தாண்டக அமைப்பு -
  • எண்சீர் விருத்தம்.
  • பொதுவாகக் 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு.
  • ஒரோவழி (சில சமயம்) காய்ச்சீர் வருமிடத்தில் விளம் / மா வரும்.
  • அப்படிக் காய்ச்சீர் வருமிடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்)
2) திருவாட்போக்கி - இத்தலம் இக்காலத்தில் 'ஐயர்மலை' என்று அழைக்கப்பெறுகிறது . குளித்தலையிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது .
3) திருவாட்போக்கி - ஐயர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=553

-------------- --------------

02.43 – வீழிமிழலை - (திருமுக்கால்)

02.43வீழிமிழலை - (திருமுக்கால்)

2012-02-04
திருவீழிமிழலை
---------------------
(திருமுக்கால் அமைப்பில்)
(சம்பந்தர் தேவாரம் 3.97.1 - திடமலி மதிலணி)

1)
அரியொரு படைபெற அடிதொழ அடைபதி
விரிபொழில் மிழலையு ளீரே
விரிபொழில் மிழலையு ளீருமை மேவுவார்
அரிவினை அவையுடன் அறுமே.



அரி - ஹரி - திருமால்;
படை - ஆயுதம் - இங்கே சக்கரம்;
பதி - தலம்;
மேவுவார் - இடைவிடாது தியானிப்பவர்; (மேவுதல் - விரும்புதல்; ஓதுதல்; பொருந்துதல்);
அரித்தல் - வருத்துதல்; கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ந்து தின்னுதல்;
அரிவினை - அரிக்கும் வினை;
உடன் - உடனே; அப்பொழுதே;



2)
மரைமலர் கொடுதிரு மால்தொழ அடைபதி
விரைகமழ் மிழலையு ளீரே
விரைகமழ் மிழலையு ளீருமை மேவுவார்
தரையினி வரலிலர் தாமே.



மரைமலர் - தாமரைமலர் (முதற்குறையாக வந்தது);
விரை - வாசனை;
விரைகமழ் மிழலை - மணம் கமழும் திருவீழிமிழலை; ('வாசமலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை' என்பதைச் சுட்டியது);
தரை இனி வரல் இலர் - இனிமேல் பூமியில் பிறவார்; (வரல் - வருதல்);



3)
பறிமலர் எனவிழி மாலிடப் படையருள்
வெறிகமழ் மிழலையு ளீரே
வெறிகமழ் மிழலையு ளீருமைக் குறியென
அறிபவர் அருவினை அறுமே.



பறிமலர் - பறித்த மலர்;
படை - ஆயுதம் - இங்கே சக்கரம்;
வெறி - வாசனை;
குறி - இலக்கு;
(அப்பர் தேவாரம் - 5.18.3
ஆரியம் தமிழோடு இசை ஆனவன்,
கூரிய குணத்தார் குறி நின்றவன்,
காரிகை உடையான் கடம்பந்துறைச்
சீர்இயல் பத்தர் சென்று அடைமின்களே.)



4)
கண்ணிடு மால்தொழத் தண்ணருள் செய்திடும்
விண்ணிழி மிழலையு ளீரே
விண்ணிழி மிழலையு ளீருமை எண்ணுவார்
பண்ணிய பழவினை படுமே.



தண் அருள் - குளிர்ந்த அருள்;
விண்ணிழி மிழலை உளீர் - திருமாலால் விண்ணுலகிலிருந்து கொண்டு வந்து நிறுவப்பெற்ற விமானத்தை உடைய வீழிமிழலையில் உள்ளவரே;
எண்ணுவார் - தியானிப்பவர்;
படுதல் - அழிதல்;



5)
அடியவர் பசியறப் படிநிதம் நல்கிய
வெடிகமழ் மிழலையு ளீரே
வெடிகமழ் மிழலையு ளீரும தடிதொழ
மிடியொடு செடிவினை விடுமே.



படி - படிக்காசு (நாட்செலவுக்குக் கொடுக்கும் பணம் - Subsistence allowance for a day);
நிதம் - தினந்தோறும்;
வெடி - வாசனை;
மிடி - வறுமை; துன்பம்;
செடி - தீமை; பாவம் (Sin);
குறிப்பு : திருவீழிமிழலையில் திருநாவுக்கரசருக்கும் திருஞானசம்பந்தருக்கும் சிவபெருமான் படிக்காசு அருளியதைப் பெரியபுராணத்திற் காண்க.



6)
மான்விழி மாதொடு மால்விடை மேல்வரும்
வான்பொழில் மிழலையு ளீரே
வான்பொழில் மிழலையு ளீரும வார்கழல்
தேன்மல ரால்தொழல் தெளிவே.



மான்விழி மாது - மான் போன்ற நோக்கு உடைய உமையம்மை;
மால் விடை - பெரிய இடப வாகனம்;
வான்பொழில் - உயர்ந்த சோலை;
உம வார் கழல் - உம்முடைய நீண்ட திருவடி; (- ஆறன் உருபு);
தேன் மலர் - தேன் நிறைந்த மலர்;
தெளிவு - ஞானம்;



7)
நீரடை சடைமிசை நீள்மதி சூடிய
ஏருடை மிழலையு ளீரே
ஏருடை மிழலையு ளீருமை ஏத்துவார்
சீருடை வாழ்வுறல் திடனே.



ஏர் - அழகு;
சீர் - செல்வம்; நன்மை; புகழ்;
திடன் - திடம் - நிச்சயம்;


கங்கையை அடைத்த சடைமேல் நீண்ட பிறைச்சந்திரனை அணிந்து, அழகிய திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே! அழகிய திருவீழிமிழலையில் எழுந்தருளியிருக்கும் உம்மைத் துதிக்கும் பக்தர்கள் செல்வமும் புகழும் திகழும் வாழ்வு பெறுவது நிச்சயம்.



8)
வீம்பனை மெல்விரல் இட்டுநெ ரித்தருள்
மேம்படு மிழலையு ளீரே
மேம்படு மிழலையு ளீரும பூம்பதம்
ஓம்பிடு வார்க்குறும் உயர்வே.



வீம்பன் - கர்வம் உடையவன்; பிடிவாதக்காரன்; - இங்கே இராவணன்;
மேம்படுதல் - சிறத்தல்;
உம - உம் + (ஆறாம் வேற்றுமை உருபு) - உம்முடைய;
பூம்பதம் - பூப்போன்ற திருவடி;
ஓம்புதல் - போற்றுதல்;
உறுதல் - அடைதல்;



9)
வேதனும் மாயனும் மேலடி நேடிய
மேதகு மிழலையு ளீரே
மேதகு மிழலையு ளீருமைக் காதலாய்
ஓதடி யார்க்குறும் உயர்வே.



வேதன் - பிரமன்;
மாயன் - திருமால்;
மேல் அடி - முடியும் அடியும்
நேடுதல் - தேடுதல்;
மேதகுதல் - மேன்மையாதல்;
காதல் - அன்பு;
ஓதுதல் - துதித்தல்;



10)
பொக்கமு ரைத்துழல் புல்லர்கள் அடைகிலா
மிக்கநன் மிழலையு ளீரே
மிக்கநன் மிழலையு ளீருமை வேண்டுவார்
துக்கவி னைத்தொடர் தொலைவே



பொக்கம் - பொய்;
உழல்தல் - அலைதல்; நிலைகெடுதல்;
புல்லர் - அறிவீனர்; இழிந்தோர்;
அடைகிலா = அடையமாட்டாத;
மிக்க - உயர்ந்த (Excellent, superior);
துக்க வினைத்தொடர் - துக்கத்தை அளிக்கும் பழவினைகள்;
தொலைவு - அழிவு;



11)
பண்பயில் மொழியுடைப் பாவையைப் பங்கமர்
விண்பணி மிழலையு ளீரே
விண்பணி மிழலையு ளீருமை வேண்டிடும்
பண்புடை யாரிலர் பழியே.



பண் பயில் மொழியுடைப் பாவை - இனிய மொழி பேசும் பார்வதி;
விண் - விண்ணோர் - தேவர்கள்;
வேண்டுதல் - விரும்புதல்; பிரார்த்தித்தல்;
பண்பு - குணம்; இயல்பு; தன்மை;
பழி - குற்றம்; பாவம்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு : இப்பாடல்கள் தேவாரத்தில் திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பில் அமைந்தவை. இவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறை". என்று கருதலாம்.
முதல் அடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடி.



திருமுக்கால் பாடல் அடிகளின் அமைப்பு:
தானன தானன தானன தானன
தானன தானன தானா
தானன தானன தானன தானன
தானன தானன தானா



தானன வரும் இடத்தில் தனதன வரலாம். அதேபோல் தானா வரும் இடத்தில் தனனா வரலாம்.
தானன / தனதன – இச்சீர்கள் எல்லாம் குறில் / குறில்+ஒற்று என்ற ஒலியில் முடியும்.


இப்பாடல்களில் இரண்டாம் அடி மீண்டும் மூன்றாம் அடியில் வரும். (இடைமடக்கு).



2) சம்பந்தர் தேவாரம் - 3.98.3 -
"விரைமலி பொழிலணி மிழலையு ளீரொரு
வரைமிசை யுறைவதும் வலதே
வரைமிசை யுறைவதொர் வலதுடை யீருமை
உரைசெயு மவைமறை யொலியே."



3) திருவீழிமிழலை - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=523

----------- --------------