Saturday, November 27, 2021

05.26 – புகலூர் (திருப்புகலூர்)

05.26 – புகலூர் (திருப்புகலூர்)

2015-03-13

புகலூர் (திருப்புகலூர்)

----------------------

(எழுசீர்ச் சந்தவிருத்தம் - "தனதான தான தனதான தான தனதான தான தனனா" என்ற சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன்")


1)

வனமேந்து கின்ற முலைமாதை வாமம் மகிழ்கின்ற எந்தை புகழே

தினமோதும் அன்பர் இடர்தீர்த்து மல்கு திருவாக நல்கும் ஒருவன்

கனலேந்தி ஆடி கடல்நஞ்சம் உண்டு கறைகாட்டு கின்ற மிடறன்

புனலார்ந்த வாவி புடைசூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.


வனம் ஏந்துகின்ற முலை மாதை வாமம் மகிழ்கின்ற எந்தை புகழே - அழகு மிக்க முலையையுடைய உமையை இடப்பக்கம் கூறாக விரும்பிய எம் தந்தையின் புகழையே; (வனம் - அழகு); (ஏந்துதல் - சிறத்தல்; மிகுதல்); (வாமம் - இடப்பக்கம்);

தினம் ஓதும் அன்பர் இடர் தீர்த்து மல்கு திரு ஆக நல்கும் ஒருவன் - தினமும் ஓதுகின்ற பக்தர்களது துன்பத்தைத் தீர்த்து மிகுந்த திருவை அருளும் ஒப்பற்றவன்;

கனல் ஏந்தி ஆடி - தீயை ஏந்தி ஆடுபவன்; (ஆடி - ஆடுபவன்);

கடல்நஞ்சம் உண்டு கறை காட்டுகின்ற மிடறன் - கடலில் எழுந்த விடத்தை உண்டு கறையைக் கண்டத்தில் உடையவன்;

புனல் ஆர்ந்த வாவி புடைசூழ்ந்து இலங்கு புகலூரில் நின்ற பரனே - நீர் நிறைந்த தடாகம் சூழ்ந்திருக்கும் திருப்புகலூரி உறைகின்ற பரமன்;


2)

வடியாரும் மூன்று நுனைவேலும் மானும் மழுவாளும் ஏந்தும் இறைவன்

அடியேநி னைந்து துதிபாடு கின்ற அடியார்க்கு நல்கும் அருளன்

துடியேர்ம ருங்குல் உமைபங்கன் நீறு துதைகின்ற மார்பில் அரவன்

பொடியாரும் வண்டு புகழ்பாடு கின்ற புகலூரில் நின்ற பரனே.


வடியாரும் மூன்று நுனைவேலும் - கூரிய மூன்று நுனிகளையுடைய சூலத்தையும்; (வடி - கூர்மை); (நுனை - முனை; நுனி);

துடி ஏர் மருங்குல் - உடுக்கை போன்ற இடை - சிற்றிடை;

துதைதல் - படிதல்; மிகுதல்;

அரவன் - பாம்பை அணிந்தவன்;

பொடி ஆரும் வண்டு புகழ் பாடுகின்ற புகலூரில் நின்ற பரனே - பூக்களில் மதுவுண்டு மகரந்தப் பொடியை உடல்மேல் அணிந்த வண்டுகள் துதி பாடுகின்ற புகலூரில் உறைகின்ற பரமன்; (பொடி - மகரந்தம்); (திருநீறு பூசித் தொண்டர்கள் ஈசன் புகழைப் பாடுவது போல் பொடி அணிந்த வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற புகலூர்);


3)

பாதார விந்த இணைபோற்று பத்தர் பவநீக்கி இன்பம் அருள்வான்

மாதாரு மேனி மணியேறு கண்டம் மதியேறு சென்னி உடையான்

ஆதார மாகி உலகங்க ளாக்கி அவைநீக்கி ஆடல் புரிவான்

போதாரும் ஏர்கொள் பொழில்சூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.


பாதாரவிந்த இணை போற்று பத்தர் பவம் நீக்கி இன்பம் அருள்வான் - இரு திருவடித்தாமரைகளைப் போற்றும் பக்தர்களது பிறவிப்பிணியை நீக்கி இன்பம் அருள்பவன்; (பவம்- பிறவித்தொடர்);

மாது ஆரும் மேனி, மணி ஏறு கண்டம், மதி ஏறு சென்னி உடையான் - அர்த்தநாரீஸ்வரன், நீலகண்டன், சந்திரசேகரன்;

ஆதாரம் ஆகி உலகங்கள் ஆக்கி அவை நீக்கி ஆடல் புரிவான் - ஆதாரம் ஆகி, உலகங்களையெல்லாம் படைத்துப், பின் அவற்றை ஒடுக்கித் திருவிளையாடல் செய்பவன்; (ஆதாரம் - பற்றுக்கோடு);

போது ஆரும் ஏர்கொள் பொழில் சூழ்ந்து இலங்கு புகலூரில் நின்ற பரனே- பூக்கள் நிறைந்த அழகிய சோலை சூழ்ந்து விளங்குகின்ற புகலூரில் உறைகின்ற பரமன்; (போது - பூ); (ஏர் - அழகு);


4)

சேவேறு கின்ற சிவனைப்ப ணிந்து திருவாக்கும் நால்வர் தமிழ்தான்

நாவேறு கின்ற அடியார்கள் என்றும் நலவாழ்வு வாழ அருள்வான்

வானாறு கொன்றை மதமத்தம் வன்னி மதிசூடு கின்ற முடியன்

பூநாறு கின்ற பொழில்சூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.


சே ஏறுகின்ற - இடபத்தை ஊர்தியாக உடைய;

திரு ஆக்கும் நால்வர் தமிழ்தான் நா ஏறுகின்ற அடியார்கள் - நன்மை தரும் தேவாரம், திருவாசகம் பாடுகின்ற பக்தர்கள்;

என்றும் நலவாழ்வு வாழ அருள்வான் - என்றும் நலம் மிக்க வாழ்வு பெற அருள்பவன்; (நலவாழ்வு - 1. நலம் + வாழ்வு; 2. நல்ல வாழ்வு);

வான் ஆறு, கொன்றை, மதமத்தம், வன்னி, மதி சூடுகின்ற முடியன் - திருமுடிமேல் கங்கை, கொன்றை, ஊமத்தமலர், வன்னி, திங்கள் அணிந்தவன்; (வான் ஆறு - வானதி - கங்கை);

பூ நாறுகின்ற பொழில் - பூக்கள் மணம் வீசுகின்ற சோலை;


5)

கதநாகம் ஆர்த்த அரையாதொ டுத்த கணைகண்டு கண்ணி லெரியால்

மதனாகம் அட்ட மணியேபி றங்கு மதியாயெ னச்சொ லடியார்

எதனாலும் இன்னல் இலராக நல்கும் எழிலார்ந்த கண்டம் உடையான்

புதுவீயில் வண்டு மதுவுண்டு பாடு புகலூரில் நின்ற பரனே.


கத நாகம் ஆர்த்த அரையா - சீறும் பாம்பைக் கட்டிய அரையை உடைய அரசனே; (கதம் - சினம்); (அரையன் - அரசன்); (அரை - இடுப்பு );

தொடுத்த கணை கண்டு கண்ணில் எரியால் மதன் ஆகம் அட்ட மணியே - மன்மதன் மலர்க்கணையைத் தொடுத்தபொழுது நெற்றிக்கண்ணின் நெருப்பால் அவனது உடலை எரித்தவனே, சிறந்த மணி போன்றவனே;

பிறங்கு மதியாய் எனச் சொல் அடியார் - பிரகாசிக்கும் சந்திரனை அணிந்தவனே என்று போற்றும் பக்தர்கள்; (பிறங்குதல் - விளங்குதல்); (அப்பர் தேவாரம் - 4.89.2 - "தேய்ந்திலங்கும் சிறு வெண்மதியாய்");

எதனாலும் இன்னல் இலராக நல்கும் எழில் ஆர்ந்த கண்டம் உடையான் - எவ்விதத் துன்பமும் அற்றவர்கள் ஆகும்படி அருளும், அழகிய நீலகண்டத்தை உடையவன்;

புது வீயில் வண்டு மது உண்டு பாடு - அன்று பூத்த பூவில் வண்டுகள் தேனை உண்டு ரீங்காரம் செய்கின்ற; (வீ - பூ); (சுந்தரர் தேவாரம் - 7.41.1 - "மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள்தன் மணவாளா");

புகலூரில் நின்ற பரனே - திருப்புகலூரில் எழுந்தருளிய பரமன்;


6)

நாவார வாழ்த்தி அடிபோற்றும் அன்பர் நலமாக வாழ அருள்வான்

மேவார்தம் மூன்று புரம்வேவ மேரு விலையேந்தி நக்க பெருமான்

தேவாதி தேவன் மலைமங்கை கூறு திகழ்கின்ற மேனி உடையான்

பூவாச மல்கு பொழில்சூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.


மேவார் - பகைவர்;

மேரு விலை - மேருமலை என்ற வில்லை; (விலை - வில்லை என்பது இடைக்குறையாக வந்தது);

நக்க - சிரித்த;

பூவாசம் மல்கு பொழில் - பூக்களின் மணம் மிகுந்த சோலை;


7)

அவியாது வாழ அமுதத்தை நாடும் இமையோர்க டைந்த கடலில்

குவிநஞ்சு கண்டு தவிநெஞ்சு கொண்டு குழுமிப்ப ராவு மொழிகள்

செவியேற்று நஞ்சை மணிசெய்து காத்த திருநீல கண்டம் உடையான்

புவியோர டைந்து புகழ்பாடு கின்ற புகலூரில் நின்ற பரனே.


அவியாது வாழ அமுதத்தை நாடும் இமையோர் கடைந்த கடலில் - இறவாமல் வாழ அமுதத்தைப் பெற விரும்பிய தேவர்கள், கடைந்த பாற்கடலில்; (அவிதல் - சாதல்);

குவி நஞ்சு கண்டு தவி நெஞ்சு கொண்டு குழுமிப் பராவு மொழிகள் - திரண்ட விடத்தைக் கண்டு தவிக்கும் மனம்கொண்டு ஒன்றுகூடித் துதித்த துதிகளை; (குவிநஞ்சு - குவிந்த நஞ்சு);

செவியேற்று நஞ்சை மணிசெய்து காத்த திருநீலகண்டம் உடையான் - கேட்டருளி, ஆலகால விடத்தை நீலமணி (போல) ஆக்கிக் காத்த திருநீலகண்டன்; (அப்பர் தேவாரம் - 5.97.24 - "மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்");

புவியோர் அடைந்து புகழ் பாடுகின்ற புகலூரில் நின்ற பரனே - உலகத்தினர் வந்து ஈசன் புகழைப் பாடி வழிபடுகின்ற திருப்புகலூரில் எழுந்தருளிய பரமன்;


8)

கரமூன்றி நீடு வரைபேர்த்த மூடன் உரமார்பு யங்க ளுடனே

சிரமூன்று மேழும் இறவூன்றி யாழின் இசைகேட்டி ரங்கு வரதன்

சரமூன்றி ரண்டு தனையேவு காமன் உடல்நீறு செய்த தலைவன்

புரமூன்றை எய்த வரைவில்லி எந்தை புகலூரில் நின்ற பரனே.


பதம் பிரித்து:

கரம் ஊன்றி நீடு-வரை பேர்த்த மூடன் உரம் ஆர் புயங்களுடனே

சிரம் மூன்றும் ஏழும் இற ஊன்றி, யாழின் இசை கேட்டு இரங்கு வரதன்;

சரம் மூன்று இரண்டுதனை ஏவு காமன் உடல் நீறு செய்த தலைவன்;

புரம் மூன்றை எய்த வரைவில்லி, எந்தை, புகலூரில் நின்ற பரனே.


கரம் ஊன்றி நீடு வரை பேர்த்த மூடன் - கைகளால் கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான இராவணனது; (நீடு வரை - நெடிய மலை - இங்கே கயிலைமலை);

உரம் ஆர் புயங்களுடனே சிரம் மூன்றும் ஏழும் இற ஊன்றி - வலிய புஜங்களும் பத்துத்தலைகளும் அழியும்படி திருப்பாத விரலை ஊன்றி;

யாழின் இசை கேட்டு இரங்கு வரதன் - அவன் இசைத்த யாழ் இசையைக் கேட்டு இரங்கி வரம் அருளியவன்; (வரதன் - வரம் அளிப்பவன்);

சரம் மூன்று இரண்டுதனை ஏவு காமன் உடல் நீறு செய்த தலைவன் - ஐந்து பாணங்களைத் தொடுக்கும் மன்மதனது உடலைச் சாம்பலாக்கிய தலைவன்;

புரம் மூன்றை எய்த வரைவில்லி - மேருமலையை வில்லாக ஏந்தி ஒரு கணையை எய்து முப்புரங்களை அழித்தவன்; (வரைவில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவன்);

எந்தை - எம் தந்தை;

புகலூரில் நின்ற பரனே - திருப்புகலூரில் எழுந்தருளிய பரமன்;


9)

மயல்கொண்டு நேடு மலரானும் மாலும் அறியாத சோதி வடிவன்

இயல்கொண்டும் ஏழின் இசைகொண்டும் ஏத்தும் அடியாரை நாடி வருவான்

கயல்கெண்டை பாயும் வயல்கண்டு நாரை இரைதேர நிற்க அயலே

புயல்வந்து தீண்டு பொழில்சூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.


மயல்கொண்டு நேடு மலரானும் மாலும் அறியாத சோதி வடிவன் - ஆணவத்தால் தேடிய பிரமனாலும் திருமாலாலும் அறிய ஒண்ணாத சோதி உருவினன்; (மயல் - அறியாமை); (கொண்டு - ஆல் என்ற வேற்றுமை உருபு); (மலரான் - பிரமன்);

இயல்கொண்டும் ஏழின் இசைகொண்டும் ஏத்தும் அடியாரை நாடி வருவான் - இயற்றமிழ் இசைத்தமிழ் இவற்றால் வழிபடும் பக்தர்களைத் தேடி வருபவன்; (இயல் - இயற்றமிழ்);

கயல் கெண்டை பாயும் வயல் கண்டு நாரை இரைதேர நிற்க அயலே - கயல், கெண்டை முதலிய மீன்கள் பாயும் வயலைக் கண்டு நாரைகள் இரைதேர்வதற்காக நிற்க, அருகே;

புயல் வந்து தீண்டு பொழில் சூழ்ந்து இலங்கு புகலூரில் நின்ற பரனே - மேகம் வந்து தீண்டுகின்ற உயர்ந்த சோலை வீளங்குகின்ற திருப்புகலூரில் எழுந்தருளிய பரமன்; (புயல் - மேகம்);


10)

கள்ளங்க ரந்த கருநெஞ்சி னோர்கள் கழறும்பு ரட்டை ஒழிமின்

உள்ளங்க ரைந்து தொழுவார்க்கு நம்பன் உலவாத இன்பம் அருள்வான்

வெள்ளங்க ரந்த சடைமீது நாகம் வெறியார்ந்த கொன்றை அணிவான்

புள்ளின்கு லங்கள் ஒலிசோலை சூழ்ந்த புகலூரில் நின்ற பரனே.


கள்ளம் கரந்த கருநெஞ்சினோர்கள் - வஞ்சத்தை உள்ளே மறைத்திருக்கும் கொடிய மனம் உடையவர்கள்; (கருமை - கறுப்பு ; கொடுமை);

கழறுதல் - சொல்லுதல்;

புரட்டு - வஞ்சகப்பேச்சு;

ஒழிமின் - ஒழியுங்கள்; விட்டுநீங்குங்கள்; (ஒழிதல் / ஒழித்தல்);

நம்பன் - விரும்பத்தக்கவன்; விரும்பப்படுபவன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று;

உலவாத இன்பம் - அழிவற்ற இன்பம்; (உலத்தல் - குறைதல்; அழிதல்);

வெள்ளம் கரந்த சடைமீது நாகம் வெறி ஆர்ந்த கொன்றை அணிவான் - கங்கையை ஒளித்த சடைமேல் பாம்பு, மணம் மிக்க கொன்றைமலர் இவற்றை அணிந்தவன்; (வெள்ளம் - நீர் - கங்கை); (வெறி - வாசனை);

புள்ளின் குலங்கள் ஒலி சோலை - பறவை இனங்கள் ஒலிக்கின்ற பொழில்;


11)

ஒலிமாலை சூட்டி உளமார வாழ்த்தி உடலால்வ ணங்கும் அடியார்

மெலியாத வண்ணம் வினைமாசை வீட்டி மிகவேவ ழங்கும் ஒருவன்

நலியாத வண்ணம் நளிர்திங்கள் வாழ நதியோடு சென்னி அணிவான்

பொலிகோபு ரத்தை முகில்தீண்டு கின்ற புகலூரில் நின்ற பரனே.


ஒலிமாலை சூட்டி உளமார வாழ்த்தி உடலால் வணங்கும் அடியார் - மனம், மொழி, மெய் மூன்றாலும் வழிபடும் பக்தர்கள்; (ஒலிமாலை - பாமாலை; (கலிக்கோவை)); (சம்பந்தர் தேவாரம் - 2.12.11 - "கலிக்கோவையால் சந்தமே பாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன்");

மெலிதல் - இளைத்தல்; வருந்துதல்;

வீட்டுதல் - அழித்தல்;

நலிதல் - அழிதல்; இளைத்தல்; வருந்துதல்;

நளிர்தல் - குளிர்தல்;

பொலிதல் - சிறத்தல்; பெருகுதல் (To be enlarged; to appear grand);


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள்:

1) யாப்புக்குறிப்பு:

  • எழுசீர்ச் சந்தவிருத்தம் - "தனதான தான தனதான தான தனதான தான தனனா" என்ற சந்தம்.

  • சில பாடல்களில் முதற்சீர் 'தானான' என்றும் வரும்;

2) சம்பந்தர் தேவாரம் - 2.88.1 -

துளிமண்டி உண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன்

ஒளிமண்டி உம்பர் உலகங் கடந்த உமைபங்கன் எங்க ளரனூர்

களிமண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவில்

தெளிமண்டி உண்டு சிறைவண்டு பாடு திருமுல்லை வாயி லிதுவே.

---- --------


05.25 – சாட்டியக்குடி

05.25சாட்டியக்குடி

2015-03-07

சாட்டியக்குடி (திருவாரூர்க்குத் தென்கிழக்கே 20 கிமீ தூரத்தில் உள்ள தலம்)

----------------------------------

(அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் விளம் விளம் மா தேமா' என்ற வாய்பாடு; சம்பந்தர் தேவாரப் பதிகத்தில் இவ்வமைப்பில் கடைசி இரு மாச்சீர்களும் சேர்ந்து ஒரு விளங்காய்ச்சீராகவும் அமையக் காணலாம்.)

(சம்பந்தர் தேவாரம் - 3.91.1 - "கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை");

(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு");


1)

பண்பயில் தமிழ்கொடு பரவிடும் அடியவர் பற்ற றுப்பான்

பெண்மயில் போன்றவள் தனையொரு பங்கெனப் பேணும் அன்பன்

கண்பயில் நெற்றியன் கடல்விடம் உண்டருள் கறைமி டற்றன்

தண்வயல் புடையணி சாட்டியக் குடியுறை தந்தை தானே.


பயில்தல் - பொருந்துதல்; தங்குதல்;


2)

புதுமலர் கொண்டடி போற்றினார் வல்வினை போக்கும் அண்ணல்

மதுமலர்க் கொன்றையும் மத்தமும் புனைந்தவன் வாள ராவைக்

கதிர்மதி அதனயல் களித்திட வைத்தவன் காக்கும் ஈசன்

சதுர்மறை ஓதிய சாட்டியக் குடியுறை தந்தை தானே.


வாள் அரா - கொடிய பாம்பு;

சதுர்மறை ஓதிய - நால்வேதங்களைப் பாடிய; நால்வேதங்களால் பாடப்பெற்ற;


3)

நந்திவட் டம்மலர் கொண்டடி தொழவினை நாசம் ஆக்கும்

அந்திவண் ணத்தரன் அரையினில் அரவினை ஆர்த்த ஐயன்

சுந்தர நீற்றினன் தொன்மறை பாடிய தூய நாவன்

சந்திர சேகரன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


நந்திவட்டம்மலர் - மகர ஒற்று விரித்தல் விகாரம்;

நந்திவட்டம் - நந்தியாவட்டம் (நந்தியாவட்டை);

ஆர்த்தல் - கட்டுதல்;


4)

அலைகிற ஐம்புலன் அடக்கிய யோகியர் அன்பர் நெஞ்சில்

நிலையென நின்றவன் நெற்றியிற் கண்ணினன் நீல கண்டன்

சிலையினிற் கணையினைச் சேர்த்தெயில் செற்றவன் சென்னி மீது

தலைமலி மாலையன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


சிலை - வில்;

எயில் - கோட்டை;

செற்றவன் - அழித்தவன்;


5)

அடைவது சிவனடி எனவறிந் திறைஞ்சிடும் அன்பர் கட்குத்

தடைகளைத் தகர்த்தருள் சங்கரன் எம்மிறை தாயின் நல்லன்

கடைதொறும் பலிக்குழல் காரணன் ஆரணன் கங்கை யாளைச்

சடையிடைக் கரந்தவன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


அன்பர்கட்குத் தடைகளைத் தகர்த்தருள் சங்கரன் - தடைகளை நீக்கி அன்பர்களுக்கு அருள்புரியும் சங்கரன்; (அப்பர் தேவாரம் - 5.31.6 - "தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம் அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே");

தாயின் நல்லன் - தாயினும் நல்லவன்;

கடை - வாயில்;

பலி - பிச்சை;

காரணன் - உலகிற்கு நிமித்த காரணன் ஆகிய சிவபிரான்;

ஆரணன் - வேதப் பொருளாக உள்ளவன்; (ஆரணம் - வேதம்)

கரந்தவன் - ஒளித்தவன்;


6)

பாங்கொடு பதமலர் பரவிடும் அடியவர் பாசம் நீக்கித்

தாங்கிடும் அங்கணன் திருப்பனந் தாளினில் தாட கைக்கா

ஆங்குவ ளைந்தவன் அருவரை வளைத்தெயில் அட்ட வன்மான்

தாங்கிய கையினன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


பாங்கு - அழகு; தகுதி; (சம்பந்தர் தேவாரம் - 3.120.9 - "பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி பாங்கினாற் பணிசெய்து பரவ");

பாசம் - தளை; மும்மலக்கட்டு;

தாங்குதல் - புரத்தல்;

அங்கணன் - அருள்நோக்கம் உடையன்;

ஆங்கு - அப்படி; அசைச்சொல்; அவ்விடம்; அக்காலத்தில்;

திருப்பனந்தாளினில் தாடகைக்கா ஆங்கு வளைந்தவன் - திருப்பனந்தாளில் தாடகையெனும் பத்திமையுடைய பெண் ஒருத்தி, நாளும் பெருமானை வழிபட்டுவந்தாள்; ஒருநாள் அப்பெருமானுக்கு மாலை அணிந்து வழிபாடு செய்யும்பொழுது, அவள் ஆடை நெகிழ்ந்தது; கையில் மாலையை ஏந்தியிருந்ததால், தன் கைகளால் ஆடையை உடலோடு இடுக்கிக்கொண்டாள்; அதுகண்ட இறைவன் அவள் பெண்மைக்கு இழுக்கு நேராதபடி, தன் தலையைச் சாய்த்து, அம்மாலையை ஏற்றான்; (இவ்வரலாற்றைப் பெரியபுராணத்தில் குங்கிலியக் கலயநாயனார் புராணத்திற் காண்க);

அருவரை - மேருமலை;


7)

மழவிடை ஊர்தியன் குழையொரு காதினன் வாழ்த்து வார்தம்

பழவினை தீர்ப்பவன் பாய்புலித் தோலினன் பாம்பை ஆர்த்தான்

மழையன மிடற்றினன் மான்மறிக் கையினன் மார்பில் நூலன்

தழலன மேனியன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


மழவிடை - இளமையான் ஏறு;

பாம்பை ஆர்த்தான் - அரையில் பாம்பைக் கட்டியவன்;

மழை அன மிடற்றினன் - மேகம் போன்ற கண்டத்தை உடையவன்;

தழல் அன மேனியன் - தீப்போல் செம்மேனி உடையவன்;


8)

மையலால் மலையசை வாளரக் கன்தனை வாட ஊன்றும்

ஐயனே அருள்கவென் றனுதினம் அடிதொழும் அன்பர்க் கன்பன்

பையரா பனிமதி படர்சடை வைத்தவன் பால்வெண் ணீற்றன்

தையலோர் பங்கினன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


மையலால் மலை அசை வாளரக்கன்தனை வாட ஊன்றும் - ஆணவத்தால் கயிலையைப் பெயர்த்த கொடிய இராவணன் வாடுமாறு விரல் ஊன்றி அவனை நசுக்கிய;

பையரா - படத்தை உடைய பாம்பு; (பை - பாம்பின் படம்);


9)

மாலயன் நேடிட மாலெரி ஆயினான் வான வர்க்கா

ஆலமுண் டருளினன் அருமறை விரித்திட ஆல மர்ந்தான்

காலையும் மாலையும் கடிமலர் தூவிடும் காத லர்க்குச்

சாலவும் இனியவன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


மால் அயன் நேடிட மால் எரி ஆயினான் - திருமால் பிரமன் இருவரும் தேடுமாறு பெரிய சோதி ஆனவன்;

வானவர்க்கா ஆலம் உண்டருளினன் - தேவர்களுக்காக ஆலகால விடத்தை உண்டு அருளியவன்;

அருமறை விரித்திட ஆல் அமர்ந்தான் - அரிய வேதங்களின் பொருளை விளக்கக் கல்லால மரத்தின்கீழ் இருந்தவன்;

காலையும் மாலையும் கடிமலர் தூவிடும் காதலர்க்குச் சாலவும் இனியவன் - இருபொழுதும் வாசமலர்களைத் தூவும் பக்தர்களுக்கு மிகுந்த இனிமை பயப்பவன்;


10)

வஞ்சம னத்தினர் மறைநெறி பழிப்பவர் மாச ழக்கர்

கொஞ்சமும் அவருரை கூற்றினை நம்பிடேல் கொல்ல வந்த

வெஞ்சினக் கூற்றினை விலக்கிய சேவடி வேண்டு வார்தம்

சஞ்சலம் தீர்ப்பவன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


மறைநெறி - வேதநெறி; (சம்பந்தர் தேவாரம் - 3.53.10 - "மெய்யைப்போர்க்கும் பொய்யரும் வேதநெறியை அறிகிலார்");

சழக்கர் - தீயவர்;

கூற்று - 1) பேச்சு; 2) யமன்;

அவர் உரை கூற்றினை நம்பிடேல் - அவர்கள் சொல்லும் வார்த்தைகளை நம்பவேண்டா / மதிக்கவேண்டா;

கொல்ல வந்த வெஞ்சினக் கூற்றினை விலக்கிய சேவடி - மார்க்கண்டேயரைக் கொல்ல வந்த கொடிய கோபம் மிக்க காலனை உதைத்து அழித்த சேவடி;

சேவடி வேண்டுவார்தம் சஞ்சலம் தீர்ப்பவன் - சிவந்த திருவடியை வணங்குபவர்களுடைய துன்பத்தைத் தீர்ப்பவன்;


11)

ஆழ்கடல் கக்கிய அருவிடம் எரித்திட அஞ்சி வானோர்

போழ்மதி சூடியே புண்ணியா என்றடி போற்ற உண்டு

வாழ்வளித் தருளிய மணிமிட றுடையவன் வஞ்சம் இன்றித்

தாழ்பவர்க் கீபவன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


போழ்மதி - பிளவுபட்ட சந்திரன் / நிலாத்துண்டம் = பிறைச்சந்திரன்;

வஞ்சம் இன்றித் தாழ்பவர்க்கு ஈபவன் - நெஞ்சில் வஞ்சம் இல்லாத அன்பர்களுக்கு அளிப்பவன்; அன்பர்களுக்குச் சிறிதும் வஞ்சமின்றி வாரி வழங்குபவன்;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள் :

சாட்டியக்குடி - வேதநாதர் கோயில் : https://www.kamakoti.org/tamil/tiruvasagam17.htm

திருவிசைப்பாவில் இத்தலத்திற்கு ஒரு பதிகம் உள்ளது - 9.15 - "பெரியவா கருணை".


05.24 – மறைக்காடு (திருமறைக்காடு - வேதாரண்யம்) - (புஜங்கம்)

05.24 – மறைக்காடு (திருமறைக்காடு - வேதாரண்யம்) - (புஜங்கம்)

2015-02-28

மறைக்காடு (திருமறைக்காடு - வேதாரண்யம்) - "புஜங்கம்"

----------------------------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - "புஜங்கம்" - சந்த அமைப்பு; "தனானா தனானா தனானா தனானா"; - இதனைத் "தனாதான தானா தனாதான தானா" என்றும் நோக்கலாம்)


1)

முளைக்கும் பொருட்கோர் முதல்வன் தொழும்பர்

இளைப்பைத் துடைப்பான் இளந்திங் களைத்தான்

வளர்த்தான் மதில்மூன் றெரிக்கப் பொருப்பை

வளைத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


முளைத்தல் - தோன்றுதல்;

பொருட்கோர் - பொருள்+கு+ஓர் - பொருளுக்கு ஒரு;

(அப்பர் தேவாரம் - 4.71.3 - "விளைபொருள் மூல மான கருத்தனை" - தோன்றும் பொருளையெல்லாம் படைப்பவனை);

தொழும்பர் - அடியவர்;

இளைப்பு - சோர்வு; கிலேசம் (distress);

துடைத்தல் - நீக்குதல்; அழித்தல்;

இளந் திங்களைத்தான் வளர்த்தான் - வளர்கின்ற இளம்பிறை சூடியவன்;

மதில் மூன்று எரிக்கப் பொருப்பை வளைத்தான் - முப்புரங்களை எரிக்க மேருமலையை வில்லாக வளைத்தவன்; (பொருப்பு - மலை);

தென் - அழகிய;

மறைக்காடு - இக்காலத்தில் இத்தலம் வேதாரண்யம் என்று வழங்கப்பெறுகின்றது;


2)

தழைக்கும் தமிழ்ப்பா தனைக்கேட் பதற்கா

வழக்கென்று புத்தூர் மணத்தைத் தடுத்தான்

அழைக்கும் சுரர்க்கார் அருள்செய்து நஞ்சுண்

மழைக்கண்ட னூர்தென் மறைக்காடு தானே.


* அடிகள் 1-2: சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு - தடுத்தாட்கொண்டபுராணம். சிவபெருமான் கிழவேதியராக வந்து வழக்கு ஒன்று உள்ளது என்று சொன்னதால் புத்தூரில் நிகழவிருந்த சுந்தரர் திருமணம் நின்றது.

கேட்பதற்கா - கேட்பதற்காக - கடைக்குறை விகாரம்;

சுரர்க்கு ஆரருள்செய்து நஞ்சு உண் - தேவர்களுக்குப் பேரருள் புரிந்து விடத்தை உண்ட;

மழைக்கண்டன் - மேகம் போன்ற நீலகண்டத்தை உடையவன்;


3)

அடுத்தோர் சரத்தைத் தொடுத்தான் படத்தான்

கடுத்தே நுதற்கண் கனன்றான் இராவில்

நடத்தான் திருக்காப் பகற்றத் தமிழ்ப்பா

மடுத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


அடுத்து - நெருங்கி; அணுகி; (அடுத்தல் - சமீபமாதல்);

சரம் - அம்பு;

படுதல் - சாதல்; அழிதல்;

கடுத்தல் - சினத்தல்; கோபித்தல்;

நுதற்கண் - நெற்றிக்கண்;

கனல்தல் - சிவத்தல்; சுடுதல்;

இராவில் நடத்தான் - இரவில் நடம் செய்பவன்;

திருக்காப்பு அகற்றத் தமிழ்ப்பா மடுத்தான் - திருமறைக்காட்டில் கோயிற்கதவம் தாழ் நீக்கவேண்டித் திருநாவுக்கரசர் பாடிய தேவாரத்தைச் செவிமடுத்தவன்; (காப்பு - கதவு; கதவின் தாழ்); (அப்பர் தேவாரம் - 5.10.1 - "பண்ணினேர்மொழியாள்..."); (பெரிய புராணம் - 12.21.266 - "தொல்லை வேதந் திருக்காப்புச் செய்த வாயில் தொடர்வகற்ற");


4)

வலப்பால் தழல்போல் வணத்தான் சிரத்திற்

சலத்தான் சிரிப்பால் தகித்தான் புரங்கள்

நிலத்தார் விசும்பார் நிதம்வாழ்த்தி ஏத்தும்

மலர்ப்பாத னூர்தென் மறைக்காடு தானே.


வலப்பால் தழல்போல் வணத்தான் - வலப்பக்கத்தில் தீப்போல் செவ்வண்ணம் உடையவன்;

சிரத்திற் சலத்தான் - தலைமேல் கங்கையை ஏற்றவன்,

சிரிப்பால் தகித்தான் புரங்கள் - முப்புரங்களைச் சிரித்தே எரித்தவன்;

நிலத்தார் விசும்பார் நிதம் வாழ்த்தி ஏத்தும் மலர்ப்பாதன் - மண்ணோரும் விண்ணோரும் தினமும் வாழ்த்திப் போற்றும் மலர்ப்பாதம் உடையவன்;

ஊர் தென் மறைக்காடு தானே - அப்பெருமான் உறையும் தலம் அழகிய திருமறைக்காடு ஆகும்;


5)

நினைத்தார் பிழைக்கச் சினக்கூற் றுதைத்தான்

வனப்போதி னான்றன் சிரத்தூண் மகிழ்ந்தான்

அனைத்தும் படைப்பான் அழிப்பான் துதிப்பார்

மனத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


நினைத்தார் பிழைக்கச் சினக்கூற்று உதைத்தான் = மிகவும் எண்ணி வழிபட்ட மார்க்கண்டேயர் உயிரைக் காத்துக் கோபம் மிக்க காலனை உதைத்தவன்;

வனப் போதினான்தன் சிரத்து ஊண் மகிழ்ந்தான் - அழகிய தாமரை மலரின்மேல் உறையும் பிரமனது மண்டையோட்டில் உணவை விரும்பியவன்; (வனப்போது - நீரில் உள்ள பூ; அழகிய பூ; - தாமரை); (வனம் - அழகு; நீர்); (போது - பூ); (வனருகம் n. < vana-ruha. தாமரை. ) (ஊண் - உணவு);

அனைத்தும் படைப்பான் அழிப்பான் - எல்லாவற்றையும் தோற்றுவித்து ஒடுக்குபவன்;

துதிப்பார் மனத்தான் இடம் தென் மறைக்காடு தானே - வழிபடுவார் மனத்தில் இருப்பவன் உறியும் தலம் அழகிய திருமறைக்காடு ஆகும்;


6)

அணங்கோர் புறத்தான் அராவும் புனைந்தான்

கணங்கள் கரத்தில் விளக்கேந்த ஆடி

மணங்கொள் புதுப்பூ அடிச்சாத்தி வானோர்

வணங்கும் பிரானூர் மறைக்காடு தானே.


அணங்கு ஓர் புறத்தான் - ஒரு பக்கத்தில் உமையை உடையவன்; (அணங்கு - பெண் - உமை);

அராவும் புனைந்தான் - பாம்பையும் அணிந்தவன்; (அரா - பாம்பு);

கணங்கள் கரத்தில் விளக்கு ஏந்த ஆடி - பூதகணங்கள் கையில் விளக்கை ஏந்தக் கூத்தாடுபவன்; (ஆடி - ஆடுபவன்);

மணங்கொள் புதுப்பூ அடிச்சாத்தி வானோர் வணங்கும் பிரான் ஊர் மறைக்காடுதானே - வாசமிக்க நாண்மலர்களை திருவடியில் இட்டுத் தேவர்கள் வணங்கும் தலைவன் உறையும் தலம் திருமறைக்காடு; (புதுப்பூ - புதிய மலர் - நாண்மலர்); (சாத்துதல் - அணிதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.8.11 - "சந்தமெல்லாம் அடிச் சாத்தவல்ல மறை ஞானசம்பந்தன செந்தமிழ்");

இலக்கணக் குறிப்பு : இரண்டாம் அடியின் ஈற்றில் "ஆடி" என்ற சொல்லில் 'டி' லகு ஆயினும் அஃது அடி ஈற்றில் உள்ளதால் இவ்விடத்தில் பாடலின் வாய்பாடு கருதிக் குரு என்று அலகிடப்படும்;


7)

இதத்தைக் கொடுப்பான் இலாடத்து நீற்றன்

பதத்தைப் பணிந்தார் பவத்தைத் துடைப்பான்

நுதற்கண் திறந்தே சுதன்தந் தவன்மன்

மதற்சுட்ட மானூர் மறைக்காடு தானே.


இதத்தைக் கொடுப்பான் - நன்மை செய்பவன்; (இதம் - ஹிதம் - நன்மை);

இலாடத்து நீற்றன் - நெற்றியில் திருநீறு பூசியவன்; (இலாடம் - lalAta - நெற்றி); (அப்பர் தேவாரம் - 6.61.3 - "எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி");

பதத்தைப் பணிந்தார் பவத்தைத் துடைப்பான் - திருவடியை வழிபடும் பக்தர்கள்து பிறவியை அறுப்பவன்; (பவம் - பிறவி;)

நுதற்கண் திறந்தே சுதன் தந்தவன் மன்மதற் சுட்ட மான் - நெற்றிக்கண்ணைத் திறந்து மகனைத் தந்தவன், தலைவன்; மன்மதனைச் சுட்ட பெரியோன்; (சுதன் - மகன்); (மன் - தலைவன்); (மதன் - காமன்); (மன்மதன் - காமன்); (மான் - பெரியோன்); (பரணதேவர் - சிவபெருமான் திருவந்தாதி - 11.23.86 - "கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின்" - கயிலைமான் = கயிலைப் பெரியோன்);

"மன்மதற்சுட்ட" என்பதை "மன் + மதற் சுட்ட" என்றும், "மன்மதற் சுட்ட" என்றும் இருவிதமாகப் பிரித்துப் பொருள்கொள்ளலாம். (மன் = தலைவன், மதன் = காமன்);

இலக்கணக் குறிப்பு:

மதற் சுட்ட = மதன் + சுட்ட = "மதனைச் சுட்ட" என்ற பொருளில்;

இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருள்மயங்காதிருக்கும் பொருட்டு, முதற்சொல்லின் ஈற்றில் வல்லொற்று மிகுதல், னகர ஒற்று றகர ஒற்றாகத் திரிதல், முதலியன நிகழும்);


8)

பறக்கும் கடுந்தேர் இறங்கப் பதைத்தே

மறத்தால் பொருப்பைப் பெயர்த்தான் சிரந்தோள்

இறத்தான் நெரித்தான் எரிக்கும் விடத்தை

மறைத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


கடுமை - விரைவு (speed);

கடுந்தேர் - விரைவுடைய விமானம்; (அப்பர் தேவாரம் - 6.99.10 - "இலங்கை வேந்தன் கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற பொருவரையாய்");

பதைத்தல் - ஆத்திரப்படுதல் (To be anxious); (அப்பர் தேவாரம் - 5.16.11 - "திரு மாமலைக் கீழ்ப்புக்குப் பதைத்தங் கார்த்தெடுத் தான்");

பறக்கும் கடுந்தேர் இறங்கப் பதைத்தே - வானிற் பறந்து விரைந்து செல்லும் தன் இரதம் பறவாமல் தரையில் இறங்கக் கண்டு சினந்து;

மறம் - வலிமை; சினம்;

பொருப்பு - மலை - கயிலைமலை;

இற - இறும்படி; (இறுதல் - முறிதல்; கெடுதல்);

மறத்தால் பொருப்பைப் பெயர்த்தான் சிரம் தோள் இறத்தான் நெரித்தான் - தன் வலிமையால் கயிலைமலையைப் பெயர்த்த இராவனனது முடிகளும் புயங்களும் முறியும்படி நசுக்கியவன்;

எரிக்கும் விடத்தை மறைத்தான் - ஆலகாலத்தைக் கண்டத்தில் ஒளித்தவன்;


9)

அகழ்ந்தும் பறந்தும் மயன்மா லயர்ந்தார்

புகழ்ந்தும் விழுந்தும் பொலம்பூம் பதங்கள்

உகந்தார் மனத்தே உறைந்தான் இடம்பெண்

மகிழ்ந்தா னிடம்தென் மறைக்காடு தானே.


பிரமனும் திருமாலும் வானிற் பறந்துசென்றும் மண்ணை அகழ்ந்தும் அடிமுடி தேடிக் காணாது தளர்ந்தனர்; பொன் போன்ற மலர்த்திருவடியைப் புகழ்ந்தும் விழுந்து வணங்கியும் விரும்பி வழிபடும் அன்பர்களது மனத்தில் உறைந்தவன்; இடப்பக்கம் உமையை ஒரு கூறாக விரும்பியவன்; அப்பெருமான் உறையும் தலம் அழகிய திருமறைக்காடு;


பறந்தும்மயன் - பறந்தும் அயன் - மகர ஒற்று விரித்தல் விகாரம்;

அகழ்ந்தும் பறந்தும் அயன் மால் - எதிர்நிரனிறையாக வந்தது;

அயர்தல் - தளர்தல்;

விழுதல் - விழுந்து வணங்குதல் (To lie prostrate, as in reverence);

பொலம் - பொன்; அழகு;

பொலம்பூம்பதங்கள் - பொலம்பூவடி; (பட்டினத்து அடிகள் அருளிய கோயில் நான்மணிமாலை - 11.26.40 - "போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே" - பொலம் பூ அடி - பொற்பூப்போலும் திருவடிகள்);

உகத்தல் - விரும்புதல்;


10)

நிதிக்கா நிதம்பல் புறன்சொல் சழக்கர்

சதிச்சேற் றழுந்தேல் தவிப்பைத் தவிர்ப்பான்

நதிச்சென்னி மேலே நறும்போது நாகம்

மதிக்கண்ணி யானூர் மறைக்காடு தானே.


நிதிக்கா நிதம் பல் புறன் சொல் சழக்கர் சதிச்சேற்று அழுந்தேல் - பணத்திற்காகத் தினமும் பல பழிச்சொற்களைப் பேசும் தீயவர்களது வஞ்சனை என்ற சேற்றில் அழுந்தவேண்டா;

(சதி - வஞ்சனை); (சழக்கர் - தீயவர்கள்; சழக்கு - குற்றம்; தீமை);

தவிப்பைத் தவிர்ப்பான் - பக்தர்களது வருத்தத்தை தீர்ப்பவன்;

நதிச்சென்னி மேலே - கங்கையைத் தாங்கிய திருமுடிமேல்;

நறும் போது நாகம் - வாசமலர்கள் பாம்பு இவற்றோடு;

மதிக்கண்ணியான் - கண்ணிமாலைபோல் பிறைச்சந்திரனைச் சூடியவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலை);

ஊர் மறைக்காடு தானே - அப்பெருமான் உறையும் தலம் திருமறைக்காடு;


11)

புரங்கள் கனல்வாய்ப் புகத்தான் சிரித்தான்

கரங்கள் குவித்துக் கழல்போற்று வார்க்கே

வரங்கள் வழங்கும் பரன்மேய ஊராம்

மரங்கள் வளம்சேர் மறைக்காடு தானே.


புரங்கள் கனல்வாய்ப் புகத்தான் சிரித்தான் - முப்புரங்களும் தீயிற் புகும்படி சிரித்தவன்; (கனல் - நெருப்பு); (வாய் - ஏழாம் வேற்றுமை உருபு);

கரங்கள் குவித்துக் கழல்போற்றுவார்க்கே வரங்கள் வழங்கும் பரன் மேய ஊர் ஆம் - கைகூப்பித் திருவடியை வழிபடுபவர்களுக்கு வரங்கள் கொடுக்கும் பரமன் உறைகின்ற தலம் ஆவது;

மரங்கள் வளம்சேர் மறைக்காடுதானே - விருட்சங்களும் படகுகளும் வளம் சேர்க்கின்ற திருமறைக்காடு (வேதாரண்யம்); (மரங்கள், மரக்கலங்கள் முதலிய வளங்கள் நிறைந்த வேதாரண்யம்); (மரம் - விருட்சம்; மரக்கலம் (கப்பல், படகு));


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு:

இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு:

புஜங்கம் என்பது சமஸ்கிருத பாடல் அமைப்புகளுள் ஒன்று.

புஜங்க அமைப்பின் இலக்கணம்:

4 அடிகள்; ஓர் அடிக்கு 4 "தனானா" ( = லகு-குரு-குரு) இருக்கும்.

"தனானா தனானா தனானா தனானா" - இதனைத் "தனாதான தானா தனாதான தானா" என்றும் நோக்கலாம்

லகு = குறில்.

குரு = நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று. அடி ஈற்றுக் குறிலும் 'குரு' எனக் கருதப்படும்

இப்பாடல்களில், தமிழ் யாப்பை ஒட்டிச், சொல்லின் இடையிலோ இறுதியிலோ வரும் ''காரக் குறுக்கத்தைக் குறிலாகக் கொண்டுள்ளேன்.