Thursday, March 17, 2022

06.01.114 - சிவன் - பௌர்ணமி - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்


2010-01-30

06.01.114 - சிவன் - பௌர்ணமி - சிலேடை

-----------------------------------------------

பிறையணி பூரணமாய்ப் பேரொளி யோடு

பிறங்கியல்லில் ஆடுகின்ற பெற்றி - நிறையும்

பெருங்காதல் கொண்டோர்கள் பேசவரும் சீரார்

கருங்கண்டன் பௌர்ணமி காண்.


சொற்பொருள்:

அணி - அழகு;

அணிதல் - சூடுதல்;

அணி பூரணமாய் - அழகிய முழுமை ஆகி; / அணிகின்ற பூரணன் ஆகி;

பிறங்குதல் - விளங்குதல்;

அல் - இரவு; / இருள்;

ஆடுதல் - சஞ்சரித்தல்; / நாட்டியம் ஆடுதல்;

பெற்றி - தன்மை; பெருமை;

காதல் - அன்பு; / பக்தி;

பேசவரும் - 1. பேச வரும்; / 2. பேச அரும்;

பேசுதல் - சொல்லாடுதல்; / துதித்தல்;

காண் - முன்னிலை அசை;


பௌர்ணமி:

பிறை அணி பூரணமாய்ப் - பிறையாகத் தோன்றி முழுமையடைந்து;

பேரொளியோடு பிறங்கி - மிகுந்த ஒளியோடு திகழ்ந்து;

அல்லில் ஆடுகின்ற பெற்றி நிறையும் - இரவில் இயங்குகின்ற தன்மை நிறைந்தது;

பெரும் காதல் கொண்டோர்கள் பேச வரும் சீர் ஆர் - மிகவும் அன்புடைய ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் கலந்து பேசுமாறு வருகின்ற பெருமை பொருந்திய

பௌர்ணமி - முழுநிலவு;


சிவன்:

பிறை அணி பூரணமாய்ப் - பிறைச்சந்திரனைச் சூடும் பூரணப்பொருள் ஆகி;

பேரொளியோடு பிறங்கி - தேஜோமயனாகத் திகழ்ந்து;

அல்லில் ஆடுகின்ற பெற்றி நிறையும் - நள்ளிருளில் திருநடம் செய்கின்ற பெருமை உடையவன்;

பெருங்காதல் கொண்டோர்கள் பேச அரும் சீர் ஆர் - பேரன்புடைய பக்தர்கள் துதிக்க அரும் புகழ் மிக்க;

கருங்கண்டன் - நீலகண்டன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.01.113 - சிவன் - மரம் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்


2010-01-30

06.01.113 - சிவன் - மரம் - சிலேடை

-----------------------------------------------

இலைமலர் மேல்திகழு மெய்ப்பை அகற்றி

நலம்தரும் தாள்நிழல் நாளு - மலைபவர்க்

கென்றுமில்லா மாண்பிருக்கும் ஏகபா தங்காட்டும்

மன்றினடம் ஆடி மரம்.


சொற்பொருள்:

மெய்ப்பை - உடலாகிய கூடு;

எய்ப்பு - இளைப்பு (Weariness); / வறுமைக் காலம் (Time of adversity);

திகழுமெய்ப்பை - 1. திகழும்; எய்ப்பை / 2. திகழும்; மெய்ப்பை

நிழல் - 1. Shade, shadow; சாயை. / 2. ஒளி; புகலிடம்; தானம்;

அலைபவர் - திரிபவர்;

மலைபவர் - மயங்குபவர்; மாறுபடுபவர்;

இல்லாமாண்பு - 1. இல் ஆம் மாண்பு / 2. இல்லா மாண்பு;

பாதம் - 1. மரத்தின் அடியிடம்; அடித்தண்டு; / 2. திருவடி;

ஏகபாதர் - ஒற்றைத் தாளர் ஆகிய சிவமூர்த்தம்; (A manifestation of Šiva with one foot);

(அப்பர் தேவாரம் - 6.35.2 - "பாதந் தரிப்பார்மேல் வைத்த பாதர்....ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்");

மன்றினடம் ஆடி - மன்றில் நடம் ஆடி - அம்பலத்தில் நடனம் செய்பவன்;


மரம்:

இலை மலர் மேல் திகழும் - இலையும் பூக்களும் மேலே இருக்கும்.

எய்ப்பை அகற்றி நலம்தரும் தாள் நிழல் - (வெயிலில்) அதன் கீழ் இருக்கும் நிழல் (மக்கள்) களைப்பைப் போக்கி நலம் அளிக்கும்.

நாளும் அலைபவர்க்கு என்றும் இல் ஆம் மாண்பு இருக்கும் - எப்போதும் ஊர் ஊராகத் திரிபவர்க்கு மரத்தடியே வீடும் ஆகும். (பஜகோவிந்தம் - 18: "சுர மந்திர தரு மூல நிவாஸ: .....")

ஏக பாதம் காட்டும் மரம் - ஒரே ஒரு அடிமரம் காட்டும் மரம்.


சிவன்:

இலை மலர் மேல் திகழும் - திருமுடிமேல் மலர்களும் வில்வம் முதலிய இலைகளும் சூடுவான்.

மெய்ப்பை அகற்றி நலம் தரும் தாள்நிழல் - பக்தர்கள் உடலாகிய கூட்டை அடையாதபடி வினைதீர்த்து நலம் அளிப்பான். (தாள் நிழல் - திருவடி);

நாளும் மலைபவர்க்கு என்றும் இல்லா மாண்பு இருக்கும் - என்றும் மயங்கி முரண்படுபவர்களுக்கு இல்லாதவன். (அவர்களால் அறியப்படாதவன்; அவர்களுக்கு அருளில்லாதவன்);

ஏகபாதம் காட்டும் - ஏகபாத மூர்த்தி.

மன்றில் நடம் ஆடி - தில்லையம்பலத்தில் ஆடுகிற நடராஜன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Tuesday, March 15, 2022

06.01.112 - சிவன் - திருமால் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்


2010-01-28

06.01.112 - சிவன் - திருமால் - சிலேடை

-----------------------------------------------

வானரர் வாழ்த்தும் அரவணைநீர் மையரவர்

கானலர் சூடுவர்அஞ் சக்கரர் - மானடிப்பார்

காத்தருள்வார் வெற்புவில் கையேந்தி ஆரழல்சேர்

நேத்திரனார் நீலவண்ணர் நேர்.


சொற்பொருள்:

வானரர் - வான் நரர்; / வானரர்;

வான் - தேவர் (இடவாகுபெயர்);

அணைதல் - பொருந்துதல்; / படுத்தல் (To lie down);

அணை - மெத்தை; படுக்கை;

அரவணை நீர்மையரவர் - அரவு அணை (வினைத்தொகை) நீர் மையர்; அவர் / அரவு அணை (படுக்கை) நீர்மையர்; அவர்;

நீர் - கடல்;

மை - கருநிறம்; விஷம்;

நீர்மை - தன்மை; சிறந்த குணம்;

நீர்மையர் - கடல் விடத்தர்; (நீர் - கடல்; மை - விஷம்); / தன்மையர்; கடல் நடுவில் இருப்பவர்; (மையம் - நடு); (நாராயணன் - நீரை இடமாக உடையவன் - திருமால்);

கான் - வாசனை;

அலர் - பூ;

நலர் - நல்லர் (நல்லவர்கள்) - இடைக்குறையாக வந்தது;

கானலர் - கான் அலர் சூடுவர் (கான் + அலர்) / கால், [ல்]லர் சூடுவர் (கால் + நலர்);

அம் - அழகு;

அக்கரம் - எழுத்து;

அஞ்சக்கரர் - அஞ்சு அக்கரர் / அம் சக்கரர்;

மான் - பெருமான்; பெரியோன் (Great person or being); / மான் என்ற விலங்கு;

மால் - திருமால்; கருமை; பெருமை;

நடித்தல் - 1. கூத்தாடுதல்; 2. பாசாங்கு செய்தல்;

மானடிப்பார் - மான் நடிப்பார் (பெருமான்; நாட்டியம் ஆடுவார்); / மான் அடிப்பார் (இராமனாய் மான் வேடத்தில் வந்த மாரீசனைப் புடைப்பார்); மால் நடிப்பார் (கிருஷ்ணனாய் மிகப் பாசாங்கு செய்வார்);

வெற்பு - மலை;

வெற்புவில் - 1) மேருமலை ஆகிய வில்; 2) வெற்பும் வில்லும் - உம்மைத்தொகை.

நீலவண்ணர் - கரிய நிறத்தினர் - விஷ்ணு;


திருமால்:

வானரர் வாழ்த்தும், அரவணை நீர்மையர்; - (இராமனாக வந்தபோது) வானரர்கள் போற்றுகின்ற, (நீர் நடுவே) நாகப் படுக்கை உடையவர்;

அவர் கால் நலர் சூடுவர் - அவர் திருவடியை நல்லவர்கள் (தங்கள் உச்சியில்) சூடுவார்கள்;

அம் சக்கரர் - அழகியவர்; சக்கராயுதம் உடையவர்;

மான் அடிப்பார் (--அல்லது-- மால் நடிப்பார்) - இராமனாய் மானைப் புடைப்பார்; (--அல்லது-- கிருஷ்ணனாய் மிகப் பாசாங்கு செய்வார்);

காத்தருள்வார் வெற்பு, வில் கை ஏந்தி - கிருஷ்ணனாய் மலையைக் குடையாக உயர்த்திப் பிடித்தும், இராமனாய் வில்லைக் கையில் ஏந்தியும் காப்பார்;

நீல வண்ணர் - கரிய நிறம் உடைய விஷ்ணு;


சிவன்:

வான் நரர் வாழ்த்தும், அரவு அணை, நீர் மையர் - வானவர்களும் மனிதர்களும் வணங்குகின்ற, பாம்புகள் பொருந்தும் திருமேனியர்; கடல் விஷம் உண்டவர்;

அவர் கான் அலர் சூடுவர் - அவர் வாச மலர்களை அணிவார்;

அஞ்சு அக்கரர் - திருவைந்தெழுத்தானவர்;

மான் நடிப்பார் - பெருமான்; திருநடம் செய்வார்;

காத்தருள்வார் வெற்புவில் கை ஏந்தி - (முப்புரம் எரித்தபொழுது) மேருமலையாகிய வில்லை ஏந்திக் காத்தருள்பவர்;

ஆரழல் சேர் நேத்திரனார் - தீ இருக்கும் நெற்றிக்கண் உடையவர்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


6.3.49 - தினமும் - பிழைகளை - மடக்கு

06.03 – மடக்கு


2010-01-26

6.3.49) தினமும் - பிழைகளை - மடக்கு

--------------

தினமும் பணிவீர் சிவனையவன் முன்னோர்

தினமும் மதில்செற்றான் தீச்சேர் - தினமும்

பிழைகளை எண்ணுநமன் பேணிப்போ மாறு

பிழைகளை காப்பெம் பிரான்.


பதம் பிரித்து:

தினமும் பணிவீர் சிவனை; அவன் முன் ஓர்

தினம் மும்மதில் செற்றான்; தீச் சேர் தினம், உம்

பிழைகளை எண்ணும் நமன் பேணிப் போமாறு,

பிழை களை காப்பு எம் பிரான்.


தினமும் - 1. தினந்தோறும்; 2. தினம் மும்; 3. தினம் உம்;

பிழைகளை - 1. குற்றங்களை; 2. பிழையைத் தீர்க்கும்;

செறுதல் - அழித்தல்;

களைதல் - நீக்குதல்;

காப்பு - பாதுகாவல்; இரட்சை;


தினமும் பணிவீர் சிவனை - தினந்தோறும் சிவபெருமானைப் பணியுங்கள்;

அவன் முன் ஓர் தினம் மும்மதில் செற்றான் - அவன் முன்னொரு நாள் முப்புரங்களை அழித்தான்;

தீச் சேர் தினம் உம் பிழைகளை எண்ணும் மன் பேணிப் போமாறு - (உயிர்போய் உடல்) தீயில் சேர்கின்ற நாளில் உங்கள் பாவங்களை எண்ணுகின்ற இயமன் உங்களை வணங்கிச் செல்லும்படி;

பிழை களை காப்பு எம் பிரான் - (உங்கள்) குற்றங்களையெல்லாம் நீக்கிவிடும் காப்பாக எம்பெருமான் இருப்பான்;


(அப்பர் தேவாரம் - 5.92.7 -

படையும் பாசமும் பற்றிய கையினீர்

அடையன்மின் நமது ஈசன் அடியரை

விடைகொள் ஊர்தியினான் அடியார்குழாம்

புடைபுகாது நீர் போற்றியே போமினே.)


(சுந்தரர் தேவாரம் - 7.55.1 -

அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத

.. அவனைக் காப்பது காரணமாக

வந்த காலன்றன் ஆருயிரதனை

.. வவ்வினாய்க்கு உன்றன் வன்மைகண்டு அடியேன்

எந்தை நீஎனை நமன்தமர் நலியில்

.. இவன்மற்று என் அடியான் என விலக்கும்

சிந்தையால் வந்துன் திருவடி அடைந்தேன்

.. செழும்பொழில் திருப்புன்கூர் உளானே.)


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


6.3.48 - மருளார் - தருவாய் - மடக்கு

06.03 – மடக்கு


2010-01-23

6.3.48) மருளார் - தருவாய் - மடக்கு

--------------

மருளார் மனத்தர் வழியறியார் பின்னேன்

மருளார் அடியார்க்கும் உண்டோ - மருளார்

தருவாய் அருளெனினும் சங்கரன் ஓர்வான்

தருவாய் அளிப்பான் தமர்க்கு.


பதம் பிரித்து:

மருள் ஆர் மனத்தர் வழி அறியார்; பின் ஏன்

மருளார்? அடியார்க்கும் உண்டோ - மருள்? ஆர்

"தருவாய் அருள்" எனினும், சங்கரன் ஓர்வான்

தருவாய் அளிப்பான் தமர்க்கு.


மருள் - 1. மயக்கம்; 2. அச்சம்;

மருளுதல் - 1. மயங்குதல்; 2. அஞ்சுதல்;

ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்

ஆர் = யார்;

தரு - கற்பகமரம்;

மருளார் - 1. மயக்கம் மிகுந்த; 2. அஞ்சமாட்டார்; 3. அச்சம்; யார்;

ஓர்வான் - 1. திருவுளம் செய்வான்; 2. ஒப்பற்ற வானுலக;

தரு - மரம்;

வான்தரு - கற்பகமரம்;

தருவாய் - 1. கொடுப்பாய்; 2. கற்பகமரமாக;

தமர் - தொண்டர்;


மருள் ஆர் மனத்தர் வழி அறியார் - அறியாமை மிகுந்த மனம் உடையவர்கள் தக்க நெறியை அறியமாட்டார்கள்;

பின் ஏன் மருளார்? - பிறகு அவர்கள் ஏன் அஞ்சமாட்டார்கள்? (அதனால்தான் அவர்கள் அஞ்சுகின்றார்கள் என்பது குறிப்பு);

அடியார்க்கும் உண்டோ மருள்? - பக்தர்களுக்கும் அச்சம் உண்டோ? (இல்லை என்பது குறிப்பு);

ஆர் "தருவாய் அருள்" எனினும் சங்கரன் ஓர்வான் தருவாய் அளிப்பான் தமர்க்கு - "அருள்புரிவாயாக" என்று யார் தொழுதாலும் சங்கரன் திருவுளம் செய்வான்; (அப்படித் திருவுளம் செய்து) ஒப்பற்ற கற்பக மரத்தைப் போல் தொண்டர்களுக்கு வரம் தருவான்; ("ஓர்வான்" என்ற சொற்றொடரை இடைநிலைத் தீவகமாக இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம். "சங்கரன் ஓர்வான்" & " ஓர் வான்தருவாய் அளிப்பான்");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Monday, March 14, 2022

6.3.47 - வானஞ்சு - கண்டம் - மடக்கு

06.03 – மடக்கு


2010-01-10

6.3.47) வானஞ்சு - கண்டம் - மடக்கு

--------------

வானஞ்சு வாயரவால் வாரிகடை நாளிலெழு

வானஞ்சு வாதைசெய வாடியுய் - வானஞ்சு

கண்டந் தவிர்த்தருளாய் கண்ணுதலே என்னவது

கண்டந் தரித்தான்நம் காப்பு.


பதம் பிரித்து:

வான், அஞ்சு வாய் அரவால் வாரி கடை நாளில் எழு

வான்-நஞ்சு வாதை-செய, வாடி உய்வான், "அஞ்சு

கண்டம் தவிர்த்து அருளாய் கண்ணுதலே" என்ன, அது

கண்டம் தரித்தான் நம் காப்பு.


வான் - 1. தேவர்கள்; 2. பெரிய; 3. ஒரு வினையெச்ச விகுதி;

அஞ்சு - 1. ஐந்து; 2. அஞ்சுகின்ற;

நஞ்சு - 1. விடம்; 2. நைந்து என்பதன் போலி; (நைந்து - மனம் குழைந்து);

வானஞ்சு - 1) வான் அஞ்சு (தேவர்கள் ஐந்து); 2) வான் நஞ்சு (பெரிய விடம்); "வல்+நஞ்சு" (கொடிய விடம்) என்பது "வால்+நஞ்சு" என்று நீட்டல் விகாரம் பெற்றதாகவும் கொள்ளல் ஆம்; 3) உய்வான் அஞ்சு / உய்வான் நஞ்சு (நைந்து); (உய்வான் = உய்வதற்காக);

கண்டம் - 1. ஆபத்து; 2. மிடறு; கழுத்து;

வாரி - கடல்;


வான், அஞ்சு வாய் அரவால் வாரி கடை நாளில் எழு - தேவர்கள் ஐந்தலை நாகமான வாசுகியைக் கயிறாகக்கொண்டு கடலைக் கடைந்த சமயத்தில் எழுந்த;

(பெருங்கதை - உஞ்சைக்காண்டம் - "ஐந்தலை உத்தி அரவு நாணாக, மந்தர வில்லின் அந்தணன் விட்ட, தீவாய் அம்பு திரிதரு நகரின்" - உத்தி - படப்பொறி. அரவு - வாசுகி);

வான் நஞ்சு வாதை-செய, வாடி உய்வான் - பெரிய கொடிய ஆலகால விஷம் மிகவும் துன்பம் செய்ய, அதனால் வருந்தி, உய்வதற்காக;

"அஞ்சு கண்டம் தவிர்த்து அருளாய் கண்ணுதலே" என்ன - "யாம் அஞ்சுகின்ற இந்த ஆபத்தைப் போக்கி அருள்வாய் முக்கண்ணனே" என்று வேண்ட;

(உய்வான் நஞ்சு, "கண்டந் தவிர்த்து அருளாய் கண்ணுதலே" என்ன --- என்றும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்; அப்படி எனில், "மனம் நைந்து, உய்யும்பொருட்டு, இந்த ஆபத்தைப் போக்கி அருள்வாய் முக்கண்ணனே என்று வேண்ட");

து கண்டம் தரித்தான் நம் காப்பு - அவ்விஷத்தை உண்டு கண்டத்தில் வைத்த சிவபெருமானே நம் காவல்/துணை;


இலக்கணக் குறிப்பு:

வினையெச்சம், "செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர்" என்னும் ஒன்பது வாய்பாடுகளில் அமையும். "வான், பான், பாக்கு" ஆகிய விகுதிகளைப் பெற்றும் வரும்.

வான் : மழை பெய்வான் மரம் வளர்ப்போம் = மழை பெய்ய மரம் வளர்ப்போம்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


6.3.46 - ஆனஞ்சு - கொண்டாடு - மடக்கு

 06.03 – மடக்கு


2010-01-10

6.3.46) ஆனஞ்சு - கொண்டாடு - மடக்கு

--------------

ஆனஞ்சு வேங்கை அதள்அணிவான்; தேவர்க்கா

ஆனஞ்சு கண்டத் தடைத்தருள்வான்; - ஆனஞ்சு

கொண்டாடு முக்கணனைக் கோனென்று நெஞ்சேநீ

கொண்டாடு; தீரும் குறை.


பதம் பிரித்து:

ஆன் அஞ்சு வேங்கை-அதள் அணிவான்; தேவர்க்கா

ஆல்-நஞ்சு கண்டத்து அடைத்து-அருள்வான்; ஆன்-அஞ்சு

கொண்டு ஆடு முக்கணனைக் கோன் என்று நெஞ்சே நீ

கொண்டாடு; தீரும் குறை.


ஆனஞ்சு - 1. ஆன் அஞ்சு (பசுக்கள் அஞ்சுகின்ற); 2. ஆல் நஞ்சு (ஆலகால விஷம்); 3. ஆன் அஞ்சு (பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்கள் - பால், தயிர், நெய், கோசலம், கோமயம் - பஞ்சகவ்வியம்);

கொண்டாடு - 1. கொண்டு ஆடுகின்ற (கொண்டு அபிஷேகம் செய்யப்பெறும்); 2. புகழ்தல்; பாராட்டுதல்;

வேங்கை அதள் - புலித்தோல்;

தேவர்க்கா - தேவர்க்காக - கடைக்குறை - செய்யுள் விகாரம்.

கோன் - தலைவன்;


( சுந்தரர் தேவாரம் - 7.17.4 - "அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற்")


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------