Saturday, August 31, 2019

03.04.073 - சிவன் - மைசூர்ப்பாகு - சிலேடை - 2

03.04 – சிவன் சிலேடைகள்

2007-06-20

03.04.73 - சிவன் - மைசூர்ப்பாகு - சிலேடை - 2

-------------------------------------------------------

அடைந்தார்க்கும் விள்ளற் கரிதாகி நிற்கும்

உடையா நிலைகொள்ளும் செய்ய - மடவார்கள்

ஐயம்கொள் ஓர்பொருளே என்றிங் கழைப்பதால்

ஐயன்மை சூர்ப்பா கறி.


சொற்பொருள்:

அடைதல் - 1. பெறுதல்; / 2. சேர்தல்;

விள்ளல் - 1. உடைதல்; / 2. சொல்லுதல்;

அரிது - அரியது; கஷ்டமானது; அருமையானது;

நில் - இருத்தல்;

உடைதல் - தகர்தல்; பிளத்தல்;

உடையான் - சுவாமி; (உடையர் - தலைவர்); உடையா - உடையன் என்பதன் விளி. (உடையாய், உடையானே என்ற விளி கடைக்குறையாய் உடையா என்று வந்தது எனவும் கொள்ளலாம்.)

நிலை - தன்மை;

நிலைகொள்ளுதல் - 1. தன்னிலை அடைதல்; / 2. அழியாது இருத்தல்;

செய்தல் - பண்ணுவது; செய்வது;

செய்யன் - செம்மேனியன்; (செய் - செம்மை); செய்ய - செய்யன் என்பதன் விளி.

மடவார்கள் - பெண்கள்;

ஐயம் - 1. சந்தேகம்; / 2. பிச்சை;

ஓர் பொருள் - 1. ஒரு பண்டம்; / 2. ஒப்பில்லாத வஸ்து (இறைவன்);

அழைத்தல் - 1. பெயரிட்டுக் கூப்பிடுதல்; / 2. கூப்பிடுதல்;

ஐயன் - கடவுள்;


மைசூர்ப்பாகு:

அடைந்தார்க்கும் விள்ளற்கு அரிது ஆகி நிற்கும் உடையா நிலை கொள்ளும் - கிட்டியவர்களுக்கும் அது விள்ள முடியாததாகி இருக்கும்படி உடையாத (கெட்டியான) தன்மை கொள்ளும்;

செய்ய மடவார்கள் ஐயம் கொள் ஓர் பொருளே என்று இங்கு அழைப்பதால் - அதனைச் செய்வதற்குப் பெண்டிர் (செய்ம்முறை பற்றியும், தம் செய்தால் எப்படி வருமோ என்றும்) சந்தேகம் கொள்கின்ற ஒரு பண்டம்" என்று உலகு சொல்லும்.

மைசூர்ப்பாகு -


சிவன்:

"அடைந்தார்க்கும் விள்ளற்கு அரிது ஆகி நிற்கும் உடையா! - "திருவடியைச் சேர்ந்தவர்களாலும் சொல்லி விளக்க முடியாது இருக்கும் சுவாமியே!

நிலைகொள்ளும் செய்ய! - அழியாது இருக்கும், செம்மேனியனே!

மடவார்கள் ஐயம் கொள் ஓர் பொருளே! - பெண்கள் (இடும்) பிச்சையை ஏற்கும் ஒப்பற்ற மெய்ப்பொருளே!

என்று இங்கு அழைப்பதால் - என்று பூவுலகில், பக்தர்கள், போற்றுவதால்;

ஐயன் - சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.072 - சிவன் - மைசூர்ப்பாகு - சிலேடை - 1

03.04 – சிவன் சிலேடைகள்

2007-06-20

3.4.72 - சிவன் - மைசூர்ப்பாகு - சிலேடை - 1

-------------------------------------------------------

பல்லோர் மிகவிரும்பிப் பார்ப்பர் ஒருசிலர்க்குக்

கல்லாகக் காணும் கரத்தினில் - வில்லை

உடைய வலிமிகும் நெய்யாடும் என்பார்

சடையன்மை சூர்ப்பாகு தான்!


சொற்பொருள் :

பல்லோர் - 1. பல் உள்ளவர்கள்; / 2. பலர்;

விரும்புதல் - 1. ஆசைப்படுதல்; / 2. மிகவும் கருதுதல்;

பார்த்தல் - 1. கண்ணால் பார்த்தல்; / 2. ஆராய்தல்; வணங்குதல்;

காணுதல் - தென்படுதல்;

வில்லை - 1. துண்டம்; / 2. வில்லினை;

உடைதல் - தகர்தல்; பிளத்தல்;

உடைய - பெற்ற; கொண்டுள்ள;

வலி - 1. நோவு; / 2. வலிமை; சக்தி;

நெய் - 1. நெய்; / 2. தேன்; உதிரம்;

ஆடுதல் - 1. அளைதல்; / 2. நீராடுதல்;

என்பு - எலும்பு;

ஆர்தல் - பூணுதல்

என்பார் - 1. என்று சொல்வர்; / 2. என்பு ஆர் - எலும்பு அணியும்;

சடையன் - சடையை உடையவன்;

தான் - அசைச்சொல்;

மைசூர்ப்பாகு:

பல்லோர் மிக விரும்பிப் பார்ப்பர் - பல் உள்ளவர்கள் (-அல்லது- பலரும்) மிக ஆசையோடு (அதனைப்) பார்ப்பார்கள்.

ஒரு சிலர்க்குக் கல்லாகக் காணும் - ஒரு சிலருக்கு அது கல்லைப் போலத் தென்படும்.

கரத்தினில் வில்லை உடைய வலி மிகும் - கையில் (அந்த) வில்லை உடைய, (அதற்குச் செய்த முயற்சியால் உடைத்தவர்க்கு) மிகுந்த நோவாகும்.

நெய் ஆடும் என்பார் - அது நெய்யில் அளையும் (அதிக நெய் இருக்கும்) என்று சொல்வார்கள்.

மைசூர்ப்பாகுதான் - மைசூர்ப்பாகு.


சிவன்:

பல்லோர் மிக விரும்பிப் பார்ப்பர் - பலரும் (திருவுருவை) மிகப் பக்தியோடு தரிசிப்பார்கள். (-அல்லது-- பலரும் மிகப் பக்தியோடு வணங்குவார்கள்).

ஒரு சிலர்க்குக் கல்லாகக் காணும் - நாஸ்திகர்களுக்குக் கல்லாகத் தென்படும்.

கரத்தினில் வில்லை உடைய - (திரிபுரம் எரித்த சமயத்தில் அல்லது அருச்சுனனோடு காட்டில் மோதிய சமயத்தில்) கையில் வில்லை உடைய;

வலி மிகும் - மிகுந்த ஆற்றல் உடைய;

நெய் ஆடும் - நெய் அபிஷேகம் மகிழ்கின்ற;

என்பு ஆர் - எலும்பைப் பூண்ட;

சடையன் - சடையை உடையவன் - சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.07.003 – மாணிக்க வாசகர் துதி - செழுமா மலர்க் குருந்தின் - (வண்ணம்)

03.07.003 – மாணிக்க வாசகர் துதி - செழுமா மலர்க் குருந்தின் - (வண்ணம்)

2007-06-19

3.7.3 - மாணிக்க வாசகர் குருபூஜை - 2007-06-20 (ஆனி மகம்)

----------------------------------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனனா தனத்த தந்த

தனனா தனத்த தந்த

தனனா தனத்த தந்த .. தனதான)

(கடிமா மலர்க்கு ளின்பம் - திருப்புகழ் - சுவாமிமலை)


செழுமா மலர்க்கு ருந்தின் .. அடியே அறத்தை அன்று

.. சிவனே உரைத்த கன்று .. விடவாடித்

தொழுதே அரற்றி நைந்து .. துணையாய் இருக்கும் எந்தை

.. துணையார் அடிக்க லங்கல் .. எனநாளும்

வழுவா தருத்தி பொங்கு .. தமிழால் வழுத்தி நின்ற

.. மணிவா சகர்க்கி ரங்கு .. பெருமானை

மெழுகா உருக்கு கின்ற .. திருவா சகத்தொ டின்று

.. வினைமா சறுக்க என்று .. பணிவேனே.


பதம் பிரித்து:

செழு-மா மலர்க்-குருந்தின் .. அடியே அறத்தை அன்று

.. சிவனே உரைத்து அகன்றுவிட, வாடித்,

தொழுதே அரற்றி நைந்து, .. துணையாய் இருக்கும் எந்தை

.. துணை-ஆர் அடிக்கு அலங்கல் .. என நாளும்

வழுவாது அருத்தி பொங்கு .. தமிழால் வழுத்தி நின்ற

.. மணிவாசகர்க்கு இரங்கு .. பெருமானை,

மெழுகா உருக்குகின்ற .. திருவாசகத்தொடு இன்று,

.. "வினை-மாசு அறுக்க" என்று .. பணிவேனே.


செழு-மா மலர்க்-குருந்தின் அடியே அறத்தை அன்று சிவனே உரைத்து அகன்றுவிட வாடித் - செழுமையான மலர்கள் நிறைந்த குருந்தமரத்தின் கீழே சிவனே குருவாகி வந்து ஞானத்தைப் போதித்துப் பின்னர் நீங்கிவிடவும், மிகவும் மனம் வாடித்;

தொழுதே அரற்றி நைந்து, துணையாய் இருக்கும் எந்தை துணை ஆர் அடிக்கு அலங்கல் என நாளும் - அழுது தொழுது உருகி, உற்ற துணையான எம் தந்தை சிவபெருமானது இரு-திருவடிகளுக்கு மாலையாகத் தினமும்; (துணை - உதவி; இரண்டு); (அலங்கல் - மாலை);

வழுவாது அருத்தி பொங்கு தமிழால் வழுத்தி நின்ற மணிவாசகர்க்கு இரங்கு பெருமானை - தவறாமல் அன்பு பொங்கும் தமிழால் போற்றிய மாணிக்கவாசகர்க்கு இரங்கியருளிய பெருமானை; (அருத்தி - அன்பு);

மெழுகா உருக்குகின்ற திருவாசகத்தொடு இன்று "வினை-மாசு அறுக்க" என்று பணிவேனே - மெழுகாக உருக்குகின்ற திருவாசகத்தால் இன்று, "என் வினைகளைத் தீர்ப்பாயாக" என்று வேண்டிப் பணிவேன்; (மெழுகா - மெழுகாக; கடைக்குறை விகாரம்); (அறுக்க - அறுப்பாயாக);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Thursday, August 29, 2019

03.05.051 – நாகை (நாகப்பட்டினம்) - இறாமலியும் ஓதம் - (வண்ணம்)

03.05.051 – நாகை (நாகப்பட்டினம்) - இறாமலியும் ஓதம் - (வண்ணம்)

2007-05-18

3.5.51) இறாமலியும் ம் - நாகை (நாகப்பட்டினம்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனாதனன தான தனாதனன தான

தனாதனன தான .. தனதான )

(இந்த அமைப்பைப் பெரும்பாலும் ஒத்த அமைப்பு உடைய திருப்புகழ்:

இராவினிருள் போலும் - திருப்புகழ் - சுவாமிமலை)


இறாமலியும் ஓதம் அறாதொலிசெய் நாகை

..... யிலேஉறையும் ஈச .. உனைநாடா

.. திடாதவரை வீர உதாரகுண சீல

..... இராமனன தீர .. எனலாமோ

சுறாவுலவு வேலை யிலோர்கலமி லாது

..... துழாவிமிக வாடு .. வதுபோலத்

.. தொழாதுநித(ம்) மாலின் விடாதபிடி யோடு

..... சுலாவுமனை யோர்கள் .. அவர்மேலே

பொறாமைமிக வாகி விடாயிடைவி டாது

..... பொலாவினையை நாடி .. நலமேதும்

.. புகாதமன மாறி நிலாவணியு(ம்) நாத

..... புராணவென ஓத .. அருளாயே

அறாவினையு(ம்) மாள அடாதனவும் ஓட

..... அராமுடியில் ஏறும் .. உனையோதி

.. அவாவையறு மாணி படாமலுயிர் வாழ

..... அழாநமனை நூறு .. பெருமானே.


பதம் பிரித்து :

"இறா மலியும் ஓதம் அறாது ஒலி செய் நாகை

..... யிலே உறையும் ஈச .. உனை நாடாது,

.. இடாதவரை "வீர! உதார! குண சீல!

..... இராமன் அன தீர!" .. எனல் ஆமோ ?

சுறா உலவு வேலையில் ஓர் கலம் இலாது

..... துழாவி மிக வாடுவது போலத்,

.. தொழாது, நிதம் மாலின் விடாத பிடியோடு

..... சுலாவு மனையோர்கள் .. அவர் மேலே

பொறாமை மிக ஆகி, விடாய் இடைவிடாது,

..... பொலா வினையை நாடி .. நலம் ஏதும்

.. புகாத மனம் மாறி, "நிலா அணியும் நாத!

..... புராண!" என ஓத .. அருளாயே!

அறா வினையும் மாள, அடாதனவும் ஓட,

..... அரா முடியில் ஏறும் .. உனை ஓதி,

.. அவாவை அறு மாணி படாமல் உயிர் வாழ,

..... அழா நமனை நூறு .. பெருமானே.


இறா மலியும் ஓதம் அறாது ஒலி செய் நாகையிலே உறையும் ஈச உனை நாடாது - இறால்கள் நிறைந்திருக்கும் கடல் தொடர்ந்து ஒலி செய்யும் நாகப்பட்டினத்தில் உறையும் ஈசனே உன்னை நாடாமல்; (இறா - இறால் மீன்); (மலிதல் - மிகுதல்); (ஓதம் - அலை; கடல்); (அறாது - தொடர்ந்து; (அறுதல் - முடிதல்); (நாகை - நாகப்பட்டினம்);

இடாதவரை "வீர! உதார! குண சீல! இராமன் அன தீர!" எனல் ஆமோ ? - (இரந்தாலும் ஒன்றும்) கொடாதவரை "வீரனே ! கொடையாளியே! நற்குணம் உடையவனே! இராமனைப் போன்ற தீரனே !" என்று புகழ்ந்து உழலலாமோ? ; (இடுதல் - போடுதல்; கொடுத்தல்); (உதாரன் - கொடையாளி); (அன - அன்ன - ஒத்த);

சுறா உலவு வேலையில் ஓர் கலம் இலாது துழாவி மிக வாடுவது போலத் - சுறா மீன்கள் சஞ்சரிக்கும் கடலில் ஒரு படகு இல்லாமல் ( கையால் அளைந்து) தடுமாறி மிகவும் வருத்தம் அடைவது போல; (சுறா - சுறா மீன்); (உலவுதல் - சஞ்சரித்தல்); (வேலை - கடல்); (கலம் - படகு; கப்பல்); (துழாவுதல் - கையால் அளைதல்; தடுமாறுதல்);

தொழாது, நிதம் மாலின் விடாத பிடியோடு சுலாவு மனையோர்கள் அவர் மேலே பொறாமை மிக ஆகி, விடாய் இடைவிடாது, பொலா வினையை நாடி நலம் ஏதும் புகாத மனம் மாறி - (உன்னைத்) தொழாமல் தினமும் அறியாமையின் பிடியினால், சுற்றி உள்ள வீடுகளில் வசிப்போர் மீது பொறாமை கொண்டு, இடைவிடாத ஆசையால், எப்போதும் தீய வினைகளை நாடி, ஒருவித நல்ல தன்மையும் நுழையாத (என்) மனமானது திருந்தி; (மால் - அறியாமை; ஆணவம்); (பிடி - பற்றுகை); (சுலாவுதல் - சூழ்தல்; சுற்றி இருத்தல்); (மனை - வீடு); (விடாய் - தாகம்; ஆசை); (பொலா வினை - பொல்லா வினை);

"நிலா அணியும் நாத! புராண!" என ஓத அருளாயே! - "சந்திரனைச் சூடும் தலைவனே! பழமையானவனே!" என்று உன்னைப் போற்றிப் பாட அருள்வாயாக; (புராணன் - பழமை ஆனவன்; கடவுள்); (ஓதுதல் - சொல்லுதல்; செபித்தல்; பாடுதல்);

அறா வினையும் மா, அடாதனவும் ஓ, அரா முடியில் ஏறும் உனை ஓதி - தீரா வினையும் அழியப், பொருந்தாதவையும் விட்டு விலகப், பாம்பை முடிமீது உடைய உன்னைத் துதித்து; (அறுதல் - இல்லாமல் போதல்; தீர்தல்); (அறா - அறாத – தீராத); (மாளுதல் - அழிதல்; கழிதல்); (அடாதன - தகாதவை; பொருந்தாதவை); (அரா - பாம்பு);

அவாவை அறு மாணி படாமல் உயிர் வாழ அழா நமனை நூறு பெருமானே - ஆசைகளை வென்ற மார்க்கண்டேயர் சாவாமல் வாழவும், என்றும் யாருக்காகவும் அழாத காலனை அழித்த பெருமானே; (மாணி - மார்க்கண்டேயர்); (படுதல் - சாதல்; படாமல் - சாவாமல்); (நூறுதல் - அழித்தல்; கொல்லுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Sunday, August 25, 2019

03.05.050 – ஏடகம் (திருவேடகம்) - இருளே மிகுத்த - (வண்ணம்)

03.05.050 – ஏடகம் (திருவேடகம்) - இருளே மிகுத்த - (வண்ணம்)

2007-05-15

3.5.50) இருளே மிகுத்த - ஏடகம் (திருவேடகம்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனனா தனத்த தனனா தனத்த

தனனா தனத்த .. தனதான )

(தனனா தனத்த = தனதான தத்த)

(மருவே செறித்த குழலார் மயக்கி - திருப்புகழ் - சுவாமிமலை)

(செகமாயை உற்று - திருப்புகழ் - சுவாமிமலை)


இருளே மிகுத்த உருகா மனத்தின்

.. .. இழிவால் அவத்தை .. உறுவேனும்

.. இனிமேல் உனக்கு மணமார் சரத்தை

.. .. இனிதே தொடுக்க .. அருளாயே

கருமா விடத்தை அமுதா மடுத்த

.. .. கறைசேர் மிடற்ற .. சுரரேவக்

.. கடியார் சரத்தை விடுவேள் எரித்த

.. .. கனலார் நுதற்க .. ணுடையானே

திருமால் அயற்கும் அரியாய் நிருத்த

.. .. தெளியா மனத்தர் .. விழவேடு

.. திரையார் சலத்தில் எதிரேறி யுற்ற

.. .. திருவே டகத்தில் .. உறைவோனே

ஒருபூ இலைக்கும் அடியார் நினைத்த

.. .. துடனே கொடுக்கும் .. அருளாளா

.. உமையாள் இடத்தில் உடனா யிருக்க

.. .. ஒருகூ றளித்த .. பெருமானே.


பதம் பிரித்து:

இருளே மிகுத்த உருகா மனத்தின்

.. .. இழிவால் அவத்தை .. உறுவேனும்

.. இனிமேல் உனக்கு மணம் ஆர் சரத்தை

.. .. இனிதே தொடுக்க .. அருளாயே;

கரு-மா விடத்தை அமுதா மடுத்த

.. .. கறை சேர் மிடற்ற; .. சுரர் ஏவக்

.. கடி ஆர் சரத்தை விடு-வேள் எரித்த

.. .. கனல் ஆர் நுதற்கண் .. உடையானே;

திருமால் அயற்கும் அரியாய்; நிருத்த;

.. .. தெளியா மனத்தர் .. விழ, ஏடு

.. திரை ஆர் சலத்தில் எதிர் ஏறி உற்ற

.. .. திருவேடகத்தில் .. உறைவோனே;

ஒரு பூ இலைக்கும் அடியார் நினைத்தது-

.. .. உடனே கொடுக்கும் .. அருளாளா;

.. உமையாள் இடத்தில் உடனாய் இருக்க

.. .. ஒரு கூறு அளித்த .. பெருமானே.


இருளே மிகுத்த உருகா மனத்தின் இழிவால் அவத்தை உறுவேனும் - அறியாமையே மிகுந்த, உருகாத கல் போன்ற மனத்தின் கீழ்மையால் வேதனையே அடைகின்ற நானும்; (அவத்தை - அவஸ்தை - வேதனை);

இனிமேல் உனக்கு மணம் ஆர் சரத்தை இனிதே தொடுக்க அருளாயே - இனி உனக்கு மணம் பொருந்திய மாலைகள் (பாமாலைகள்) தொடுக்கும்படி அருள்வாயாக; (சரம் - மாலை);


கரு மா விடத்தை அமுதா மடுத்த கறை சேர் மிடற்ற - கரிய பெரிய நஞ்சை அமுதம்போல் உண்ட கறையைக் கண்டத்தில் உடையவனே; (மடுத்தல் - உண்ணுதல்); (மிடறு - கண்டம்);

சுரர் ஏவக் கடி ஆர் சரத்தை விடு வேள் எரித்த கனல் ஆர் நுதற்கண் உடையானே - தேவர்களின் தூண்டுதலினல் மணம் பொருந்திய (மலர்) அம்பைத் தொடுத்த மன்மதனை எரித்த தீப் பொருந்திய நெற்றிக்கண் உடையவனே; (சுரர் - தேவர்); (கடி - வாசனை); (சரம் - அம்பு ); (வேள் - மன்மதன்);


திருமால் அயற்கும் அரியாய் - விஷ்ணு பிரமன் இவர்களால் (அடிமுடி) அடைய ஒண்ணாதவனே;

நிருத்த - கூத்தனே;

தெளியா மனத்தர் விழடு திரைர் சலத்தில் எதிர் ஏறி ற்ற - தெளிவில்லாத மனத்தை உடைய சமணர்கள் தோற்று ஒழியும்படி, சம்பந்தர் இட்ட ஏடு அலை மிக்க வைகையில் எதிர்த்துச் சென்று அடைந்த; (விழுதல் - தோற்றுப்போதல்);

திருவேடகத்தில் உறைவோனே - திருவேடகத்தில் உறைகின்றவனே;


ஒரு பூ இலைக்கும் அடியார் நினைத்ததுடனே கொடுக்கும் ருளாளா - அடியார் இடும் எந்தப் பூவிற்கும் இலைக்கும் மகிழ்ந்து, அவர்கள் விரும்பிய வரத்தை உடனே அளிக்கும் அருளாளனே;

உமையாள் இடத்தில் உடனாய் இருக்க ஒரு கூறு அளித்த பெருமானே - உமை இடப்பக்கத்தில் ஒன்றாகி இருக்குமாறு திருமேனியில் ஒரு கூறு அளித்த பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.049 – பொது - தேவைகள் எத்தனை - (வண்ணம்)

03.05.049 – பொது - தேவைகள் எத்தனை - (வண்ணம்)

2007-05-14

3.5.49) தேவைகள் எத்தனை - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானன தத்தன தத்தன தத்தன

தானன தத்தன தத்தன தத்தன

தானன தத்தன தத்தன தத்தன .. தனதான )

(கோமள வெற்பினை - திருப்புகழ் - சுவாமிமலை)


தேவைகள் எத்தனை இச்சைகள் எத்தனை

... ... தேடுப ணத்தைநி னைத்துநி னைத்திழை

.. .. தீமைகள் எத்தனை இப்படி இப்புவி .. உழலாமல்

.. தேனினி னித்திடு சொற்றமி ழைக்கொடு

... ... சேவடி யைத்தின(ம்) நச்சிவ ழுத்திடு

.. சீரிய நற்குணம் உற்றிடு தற்கருள் .. புரியாயே

மூவர ணத்தினர் நித்தமி ழைத்திடு

... ... மாவிட ருற்றவர் அத்துயர் அற்றிட

.. .. மூவரின் முற்படும் அத்தவெ னத்தொழ .. அவர்வாழ

.. மூரிமி குத்தசி லைக்கொரு வெற்பினை

... ... ஆரவ ளைத்தர வத்தையி ணைத்தெயில்

.. .. மூளெரி பற்றிவி ழக்கணை தொட்டருள் .. ஒருவீரா

காவல ரைக்கணை உய்த்தவ னைப்பொடி

... ... ஆகிட நெற்றியி லுற்றக ணைக்கொடு

.. .. காதிய ரற்றிர திக்கென மற்றுயிர் .. தருவோனே

.. காதல்மி குத்தடி யைத்தொழு நற்றவ

... ... மாணித னைக்கொல உற்றவி ரக்கமில்

.. .. காலனி ரத்தமு குத்தழி வுற்றிட .. உதைகாலா

பாவலர் செப்பிய நற்றமிழ் மெச்சிய

... ... காவல புற்றர வைத்தரி அற்புத

.. .. பாவைத னக்கொரு பக்கம ளித்திடு .. மணவாளா

.. பாய்நதி எற்றிடு பொற்சடை யிற்பல

... ... நாண்மல ரைப்பிறை யைப்புனை பொற்பின

.. .. பாரினர் அட்டுப லிக்குவி ருப்புறு .. பெருமானே.


பதம் பிரித்து:

தேவைகள் எத்தனை, இச்சைகள் எத்தனை,

... ... தேடு பணத்தை நினைத்து நினைத்து இழை

.. .. தீமைகள் எத்தனை, இப்படி இப்புவி .. உழலாமல்,

.. தேனின் இனித்திடு சொற்றமிழைக்கொடு

... ... சேவடியைத் தின(ம்) நச்சி வழுத்திடு

.. சீரிய நற்குணம் உற்றிடுதற்கு அருள் .. புரியாயே;

மூவரணத்தினர் நித்தம் இழைத்திடு

... ... மாவிடர் உற்றவர் அத்துயர் அற்றிட,

.. .. "மூவரின் முற்படும் அத்த" எனத் தொழ, .. அவர் வாழ

.. மூரி மிகுத்த சிலைக்கு ஒரு வெற்பினை

... ... ஆர வளைத்து அரவத்தை இணைத்து எயில்

.. .. மூள்-எரி பற்றி விழக் கணை தொட்டருள் .. ஒரு வீரா;

கா-அலரைக் கணை உய்த்தவனைப் பொடி

... ... ஆகிட நெற்றியில் உற்ற கணைக்கொடு

.. .. காதி, அரற்று இரதிக்கு என மற்று-உயிர் .. தருவோனே;

.. காதல் மிகுத்து அடியைத் தொழு நற்றவ

... ... மாணிதனைக் கொல உற்ற இரக்கம்-இல்

.. .. காலன் இரத்தம் உகுத்து அழிவுற்றிட .. உதை காலா;

பாவலர் செப்பிய நற்றமிழ் மெச்சிய

... ... காவல; புற்றரவைத் தரி அற்புத;

.. .. பாவைதனக்கு ஒரு பக்கம் அளித்திடு .. மணவாளா;

.. பாய்-நதி எற்றிடு பொற்சடையிற் பல

... ... நாண்மலரைப் பிறையைப் புனை பொற்பின;

.. .. பாரினர் அட்டு பலிக்கு விருப்புறு .. பெருமானே.


தேவைகள் எத்தனை இச்சைகள் எத்தனை தேடு பணத்தை நினைத்து நினைத்து இழை தீமைகள் எத்தனை இப்படி இப்புவி உழலாமல் - தேவைகளும் ஆசைகளும் தேடும் பொருளை எண்ணி எண்ணிச் செய்யும் தீமைகளும் எண்ணற்றவை; இப்படி இந்த உலகில் உழலாமல்;

தேனின் இனித்திடு சொற்றமிழைக்கொடு சேவடியைத் தினம் நச்சி வழுத்திடு சீரிய நற்குணம் உற்றிடுதற்கு அருள் புரியாயே - தேனைவிட இனிக்கின்ற சொற்கள் பொருந்திய தமிழால் உன் சிவந்த திருவடியைத் தினமும் விரும்பி வழிபடும் உயர்ந்த நற்குணத்தைப் பெறுவதற்கு அருள்வாயாக; (நச்சுதல் - விரும்புதல்); (வழுத்துதல் - துதித்தல்); (சீரிய - சிறப்பான);

மூவரணத்தினர் நித்தம் இழைத்திடு மார் உற்றவர் அத்துயர் அற்றிட மூவரின் முற்படும் அத்தனத் தொழ அவர் வாழ - முப்புரத்து அசுரர்கள் தினமும் செய்யும் பெரும் துன்பங்களுக்கு ஆளான தேவர்கள் அந்தத் துன்பம் தீரும்படி, "பிரமன், திருமால், உருத்திரன் என்ற மூவரினும் மேலான தந்தையே" என்று உன்னைத் தொழ, அவர்கள் உய்யும்படி; (மூ அரணம் - மூன்று கோட்டைகள் - முப்புரம்); (அத்தன் - தந்தை);

மூரி மிகுத்த சிலைக்கு ஒரு வெற்பினை ஆர வளைத்து அரவத்தை இணைத்து எயில் மூள் எரி பற்றி விழக் கணை தொட்டுஅருள் ஒரு வீரா - வலிமை மிக்க வில்லாக ஒரு மலையை நன்கு வளைத்து ஒரு பாம்பை நாணாகக் கட்டி முப்புரங்களும் மூளும் தீப்பற்றி அழியும்படி ஒரு கணையை எய்து அருள்செய்த ஒப்பற்ற வீரனே; (மூரி - வலிமை); (சிலை - வில்); (வெற்பு - மலை); (ஆர - மிக); (ஒரு - ஒப்பற்ற);

காலரைக் கணை உய்த்தவனைப் பொடி ஆகிட நெற்றியில் உற்ற கணைக்கொடு காதிரற்று இரதிக்கு என மற்று உயிர் தருவோனே - (சோலையில் பூக்கும் மலர்களைக் கணையாக ஏவிய மன்மதன் சாம்பல் ஆகும்படி அவனை நெற்றிக்கண்ணால் அழித்துப், பின் புலம்பிய இரதிக்கு இரங்கி அவளுக்காக அவனுக்கு மீண்டும் உயிரைத் தந்தவனே; (கா- சோலை); (அலர் - பூ); (உய்த்தல் - ஆயுதம் பிரயோகித்தல்); (கணைக்கொடு - கண்ணைக்கொண்டு - கண்ணால்); (காதுதல் - கொல்லுதல்); (மற்று - மீண்டும்);

காதல் மிகுத்து அடியைத் தொழு நற்றவ மாணிதனைக் கொல உற்ற இரக்கம்-ல் காலன் இரத்தம் உகுத்து அழிவுற்றிட உதை காலா - பக்தி மிகுந்து திருவடியைத் தொழுத நல்ல தவமுடைய மார்க்கண்டேயரைக் கொல்ல அடைந்த இரக்கமற்ற காலன் இரத்தம் சிந்தி இறக்குமாறு அவனை உதைத்த காலனே (காலகாலனே); (மாணி - அந்தணச் சிறுவன்; மார்க்கண்டேயர்); (கொல - கொல்ல); (உறுதல் - அடைதல்); (உகுத்தல் - சிந்துதல்);

பாவலர் செப்பிய நற்றமிழ் மெச்சிய காவல - புலவர்கள் பாடிய நல்ல தமிழை விரும்பிய காவலனே; (காவலன் - அரசன்);

புற்றரவைத் தரி அற்புத - புற்றில் வாழும் தன்மையை உடைய பாம்பை மாலையாகத் தரித்தவனே;

பாவைதனக்கு ஒரு பக்கம் அளித்திடும் மணவாளா - உமைக்குத் திருமேனியில் ஒரு பக்கத்தை அளித்த மணவாளனே;

பாய்நதி ற்றிடு பொற்சடையிற் பல நாண்மலரைப் பிறையைப் புனை பொற்பின - பாயும் கங்கை மோதும் பொற்சடையில் பல புதுமலர்களையும் பிறைச்சந்திரனையும் அணிந்த அழகனே; (எற்றுதல் - மோதுதல்); (பொற்பு - அழகு);

பாரினர் அட்டு பலிக்கு விருப்புறு பெருமானே - உலகோர் இடும் பிச்சைக்கு விருப்பம் உடைய பெருமானே; (பார் - உலகம்); (அட்டுதல் - இடுதல்); (பலி - பிச்சை); (அகம் - மனம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------