Thursday, May 25, 2017

03.04.036 - சிவன் - சோறு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-20

3.4.36 - சிவன் - சோறு - சிலேடை

-------------------------------------------------------------

மூன்று முறைநாள்நாம் வேண்டுவதால் பாலினில்

தோன்றுதயிர் ஆடுவதால் தூயமலை போன்றவுருத்

தோன்ற இலையிடச் சொல்வதால் ஏறேறு

தோன்றல் பசிதீர்க்கும் சோறு.


சொற்பொருள்:

நாள் - நாளும்; (உம்மைத்தொகை);

வேண்டுதல் - 1. இன்றியமையாததாதல்; தேவைப்படுதல்; / 2. வணங்குதல்; பிரார்த்தித்தல்;

ஆடுதல் - குளித்தல்; அபிஷேகம் பெறுதல்;

தோன்றுதல் - 1. உண்டாதல்; / 2. கண்ணுக்குப் புலப்படுதல்; அறியப்படுதல்;

ஏறு - இடபம்;

ஏறுதல் - மேலே ஏறுதல்; ஏறிச் செலுத்துதல்;

தோன்றல் - தலைவன்;


சோறு:

மூன்றுமுறை நாள் நாம் வேண்டுவதால் - தினமும் மூன்று வேளை நமக்குத் தேவைப்படுகிறது;

பாலினில் தோன்று-தயிர் ஆடுவதால் - பாலில் உண்டாகும் தயிரில் குளிக்கும் (தயிர்சோறு);

தூய-மலை போன்ற உருத் தோன்ற இலை இடச் சொல்வதால் - இலையில் இடும்படி சொல்வோம்; அப்படி அதனை இடும்போது தூய வெண்மலை போன்ற வடிவம் தோன்றும்;

பசி தீர்க்கும் சோறு - நம் பசியத் தீர்க்கின்ற சோறு;


சிவன்:

மூன்றுமுறை நாள் நாம் வேண்டுவதால் - (பக்தர்கள்) தினமும் மூன்று வேளை வணங்குவார்கள். (சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.83.1 - "அந்தியும் நண்பகலும் அஞ்சுபதஞ் சொல்லி");

பாலினில் தோன்று-தயிர் ஆடுவதால் - பாலில் உண்டாகும் தயிரால் அபிஷேகம் உண்டு.

தூய-மலை போன்ற உருத் தோன்ற இலை இடச் சொல்வதால் - தூய பவளமலை போன்ற திருவுரு உடைய சிவபெருமான் காட்சிதர வேண்டுமானால் (வில்வம், வன்னி முதலிய) இலைகளைத் தூவி வழிபடுங்கள் என்று (பெரியோர்) சொல்வர்; (திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8.20.2 - "அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே");

ஏறு ஏறு தோன்றல் - இடபவாகனம் உடைய தலைவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.035 – சிவன் - மூன்று - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-19

3.4.35 - சிவன் - மூன்று - சிலேடை

-------------------------------------------------------------

எண்ணில் இரண்டொன்று கூடிவரும் எவ்வித

வண்ணமும் ஆகும் வகுப்பதற் கொண்ணாமை

காட்டிடும் காலங் கடந்திடும்பு ரங்களில்தீ

மூட்டிய மேருவில்லி மூன்று.


சொற்பொருள்:

எண்ணில் - 1. எண்களில்; / 2. சிந்தித்தால்;

இரண்டொன்று கூடி - 1. இரண்டும் ஒன்றும் கூடி - (உம்மைத்தொகை); / 2. இரண்டு ஒன்றுகூடி;

ஒன்றுகூடுதல் - ஒன்றாய்ச்சேர்தல்;

வண்ணம் - 1. நிறம்; / 2. குணம்;

வகுத்தல் - 1. பகுத்தல் (divide); / 2. இனம் பிரித்தல்;

காலங்கடந்திடும் - 1. காலங்கள் தந்திடும்; / 2. காலம் கடந்திடும்;


மூன்று:

எண்ணில் இரண்டு ஒன்று கூடி வரும் - எண்களில் இரண்டும் ஒன்றும் சேர்ந்து வருவது.

எவ்வித வண்ணமும் ஆகும் - எல்லா நிறங்களும் மூன்று அடிப்படை நிறங்களின் கலவையால் கிடைக்கும்.

வகுப்பதற்கு ஒண்ணாமை காட்டிடும் - வகுக்க முடியாத எண் (prime number).

காலங்கள் தந்திடும் - காலங்கள் மூன்று ஆகும்.

மூன்று - மூன்று என்ற எண்.



சிவன்:

எண்ணில் இரண்டு ஒன்று கூடி வரும் - தியானித்தால் சிவனும் பார்வதியும் ஒன்றாக இணைந்து அர்த்தநாரீஸ்வரனாகக் காட்சிதருவான்;

எவ்வித வண்ணமும் ஆகும் - எல்லாக் குணங்களும் உடையவன்;

வகுப்பதற்கு ஒண்ணாமை காட்டிடும் - (அவன் அவள் அது என்று) வகைப்படுத்த இயலாதவன்; (அப்பர் தேவாரம் - 6.97.10 - "அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே");

காலம் கடந்திடும் - காலத்தைக் கடந்தவன்;

புரங்களில் தீ மூட்டிய மேருவில்லி - முப்புரங்களில் தீ மூட்டிய, மேருமலையை வில்லாக ஏந்திய, சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------