Saturday, December 24, 2022

05.36 – விளமர் - (விளமல்)

05.36 – விளமர் - (விளமல்)

2015-06-06

விளமர் - (இக்காலத்தில் - விளமல்)

(திருவாரூர் அருகு உள்ள தலம்)

------------------

(வஞ்சித்துறை - "மா விளம்" என்ற வாய்பாடு - திருவிருக்குக்குறள் அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே")


1)

வெந்த நீறணி

எந்தை விளமரை

முந்தை வினையறச்

சிந்தி நெஞ்சமே.


வெந்த நீறு அணி - இச்சொற்றொடரைச் சிவபெருமானுக்கு அடைமொழியாகவும் கொள்ளலாம்; நெஞ்சுக்கு ஏவலாகவும் கொள்ளலாம்;


2)

நாயன் கையினில்

தீயன் விளமரில்

தூயன் தாள்தொழ

மாயும் வினைகளே.


நாயன் - தலைவன்; கடவுள்;


3)

புடையிற் பெண்ணினன்

விடையன் விளமரிற்

சடையன் தாள்தொழத்

தடைகள் நீங்குமே.


புடை - பக்கம்;


4)

நீரன் புரமெரி

வீரன் விளமரில்

ஈரன் தாள்தொழச்

சாரும் நன்மையே.


நீரன் - கங்காதரன்;

ஈரன் - தயை உடையவன்; (ஈரம் - இரக்கம்; கருணை; அன்பு);

தாள் தொழச் சாரும் நன்மையே - அப்பெருமானுடைய திருவடியைத் தொழுதால் நன்மை வந்தடையும்; (சார்தல் - சென்றடைதல்; பொருந்தியிருத்தல்);


5)

ஆடல் வல்லவன்

வேடன் விளமரிற்

சேடன் தாள்தொழ

வீடும் வினைகளே.


வேடன் - வேட்டுவன்; பல அருட்கோலங்கள் உடையவன்; (சுந்தரர் தேவாரம் - 7.13.5 - "துறையூர் வேடா உனை வேண்டிக்கொள்வேன் தவநெறியே");

சேடன் - உயர்ந்தவன்;

வீடும் - நீங்கும்;


6)

பாந்தள் மாலையன்

சாந்த நீறணி

வேந்தன் விளமரைச்

சூழ்ந்து வாழ்மினே.


பாந்தள் - பாம்பு;

சாந்த நீறு - சந்தனம்போல் திருநீறு; (சாந்தம் - சந்தனம்);

சூழ்ந்து வாழ்மினே - வலம்செய்து வாழுங்கள்; (சூழ்தல் - சுற்றிவருதல்; பிரதட்சிணம் செய்தல்); (வாழ்தல் - செழித்திருத்தல்); (- ஈற்றசை);


7)

வாச மாருதம்

வீசு விளமரில்

ஈசன் தாள்தொழ

நாசம் வினைகளே.


மாருதம் - காற்று - இங்கே தென்றல்;


8)

குன்றை ஆட்டினான்

கன்ற ஊன்றினான்

நின்ற விளமரைச்

சென்று சூழ்மினே.


குன்றை ஆட்டினான் கன்ற ஊன்றினான் - கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணனை அவன் வரும்தும்படி ஊன்றி நசுக்கியவன்; (ஆட்டினாற் கன்ற ஊன்றினான் - ஆட்டினானைக் கன்ற ஊன்றினான்; இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருள் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் உள்ள னகர ஒற்று றகர ஒற்றாகத் திரியும்); (கன்றுதல் - வருந்துதல்; நோதல்; வாடுதல்);

நின்ற - நிலையாகத் தங்கிய;


9)

எரியன் மாலயற்

கரியன் விளமரிற்

பிரியன் தாள்தொழப்

பிரியும் வினைகளே.


எரியன் - சோதி வடிவினன்;

மால் அயற்கு அரியன் - திருமாலுக்கும் பிரமனுக்கும் அடைய ஒண்ணாதவன்;

விளமரிற் பிரியன் - விளமரில் உறைகின்ற அன்பன்; (பிரியம் - அன்பு);

தாள் தொழப் பிரியும் வினைகளே - திருவடியைத் தொழுதால் வினைகள் நீங்கும்; (பிரிதல் - விட்டுநீங்குதல்; கட்டு அவிழ்தல்);


10)

தூற்று வாயினர்

கூற்றை விடுமினே

ஏற்றன் விளமரைப்

போற்றி உய்ம்மினே.


தூற்று வாயினர் - மறைநெறியைப் பழித்துப் பேசுவோர்;

கூற்று விடுமினே - பேச்சை பொருட்படுத்தவேண்டா; பேச்சை நீங்குங்கள்;

ஏற்றன் - இடப வாகனன்;

விளமரைப் போற்றி உய்ம்மினே - உறைகின்ற திருவிளமரைப் போற்றி உய்யுங்கள்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.93.1 - "பூந்துருத்தி பூந்துருத்தி என்பீ ராகில் பொல்லாப் புலால் துருத்தி போக்கலாமே"); (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.43.10 - "நல்ல நல்லம் எனும்பெயர் நாவினால் சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே");


11)

எண்ணில் பெயரினன்

கண்ணில் தீயினன்

அண்ணல் விளமரை

நண்ணில் உய்தியே.


எண் இல் பெயரினன் - எண்ணற்ற நாமங்கள் உடையவன்;

கண்ணில் தீயினன் - நெற்றிக்கண்ணில் நெருப்பை உடையவன்;

அண்ணல் விளமரை நண்ணில் உய்தியே - அப்பெருமான் எழுந்தருளிய விளமரை அடைந்தால் (சென்று வழிபட்டால்) உய்வு பெறலாம்; (நண்ணில் - நண்ணினால் - அடைந்தால்); (உய்தி - உய்வு; ஈடேற்றம்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.43.2 - "நல்லம் நண்ணுதல் நன்மையே");


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment