Friday, October 4, 2019

04.74 – திருந்துதேவன்குடி - ("கற்கடேஸ்வரர் கோயில்")


04.74 – திருந்துதேவன்குடி - ("கற்கடேஸ்வரர் கோயில்")

2014-08-19
திருந்துதேவன்குடி (இக்காலத்தில் "கற்கடேஸ்வரர் கோயில்" - "திருவிசநல்லூர்" அருகுள்ளது)
----------------------
(கலிவிருத்தம் - 'மா மா மா மாங்கனி' என்ற வாய்பாடு)
இவ்வமைப்பில் தேவாரத்தில் பாடல் உள்ளதா என்று அறியேன்)

1)
புவனம் படைத்த புராணன் பொருவெள்விடை
இவரும் இறைவன் ஏழை இடமுள்ளவன்
சிவனல் வயல்சூழ் திருந்து தேவன்குடி
நவனை நண்ண நாளும் நலமாகுமே.

புவனம் படைத்த புராணன் - உலகங்களைப் படைத்த பழையவன்;
பொரு வெள் விடை இவரும் இறைவன் - போர் செய்யும் வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவன்; (இவர்தல் - ஏறிச் செலுத்துதல்);
ஏழை இடம் உள்ளவன் - உமையை இடப்பக்கம் உடையவன்;
சிவனல் வயல்சூழ் - சிவன், நல் வயல் சூழ்;
நவன் - புதியவன்; (சுந்தரர் தேவாரம் - 7.72.2 - "புரமவை எரிதர வளைந்தவில் லினனவன்" - 'வில்லினன் நவன் ' எனப் பிரிக்க, - திரிபுரங்கள் எரியுமாறு வளைந்த வில்லை உடையவனும், புதியவனும்....);
நண்ணுதல் - அடைதல்;

2)
கொன்றை கோங்கம் குரவம் குளிர்கூவிளம்
துன்று சடையன் தூயன் சுடுநீற்றினன்
தென்றல் உலவும் திருந்து தேவன்குடி
நின்ற வன்பேர் நினைய வினைநீங்குமே.

கொன்றை, கோங்கம், குரவம் - மலர்களின் பெயர்கள்;
கூவிளம் - வில்வம்; (சம்பந்தர் தேவாரம் - 2.6.1 - ""கோடல்கோங் கங்குளிர் கூவிள மாலை .... சூடு மொருவனார்);
துன்றுதல் - நெருங்கியிருத்தல்;
நின்றவன் - அகலாமல் நிலைத்து உறைபவன்;

3)
சாந்த நீற்றன் தலைவன் தடவெற்புறை
ஏந்தல் இமையோர் ஏத்தும் எருதேறிறை
சேந்தன் தாதை திருந்து தேவன்குடி
வேந்தன் பாதம் தொழுவார் வினைவீடுமே.

சாந்த நீற்றன் - திருநீற்றையே சந்தனமாகப் பூசியவன்; (சாந்தம் - சந்தனம்);
தட வெற்பு உறை ஏந்தல் - பெரிய கயிலைமலையில் உறையும் தலைவன்; (ஏந்தல் - பெருமையிற் சிறந்தோன்);
இமையோர் ஏத்தும் எருது ஏறு இறிறை - தேவர்கள் வழிபடும் இடபவாகனன்;
சேந்தன் தாதை - முருகனுக்குத் தந்தை;
வினை வீடுமே - வினை நீங்கும்;

4)
விழுந்த மதியை வேணி மிசைவைத்தவன்
விழுங்கு வேலை விடத்தை மிடறிட்டவன்
செழுந்தண் வயல்சூழ் திருந்து தேவன்குடிக்
கொழுந்தைக் குறுகி னார்க்குக் குறையில்லையே.

விழுந்த மதியை - விழுந்து வணங்கிய சந்திரனை;
வேணி மிசை வைத்தவன் - சடையின்மேல் அணிந்தவன்;
விழுங்கு வேலை விடத்தை மிடறி இட்டவன் - உண்ட கடல் நஞ்சைக் கண்டத்தில் வைத்தவன்; (வேலை - கடல்); (மிடறு - கண்டம்);
மிடறு இட்டவன் - கண்டத்தில் வைத்தவன்;
செழும் தண் வயல் சூழ் திருந்து தேவன்குடிக் கொழுந்தை - செழுமையான குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருந்துதேவன்குடியில் உறைகின்ற தலைவனை; (கொழுந்து - தலையாயவன்);
குறுகினார்க்குக் குறை இல்லையே. - அடைந்தவர்களது குறைகள் தீரும்; (குறுகுதல் - அணுகுதல்; அடைதல்);

(சுந்தரர் தேவாரம் - 7.26.8 - "நீறார் மேனியனே நிம லாநினை யன்றிமற்றுக்
கூறேன் நாவதனாற் கொழுந் தேயென் குணக்கடலே...." - கொழுந்து, உச்சிக்கண் நிற்பதாகலின், உயர்ந்த பொருளைக், 'கொழுந்து' என உவமம் பற்றிக் கூறல் வழக்கு.);

5)
வரையின் மகளை வாமம் மகிழுஞ்சிவன்
புரையில் புகழான் மதியைப் புனைவேணியில்
திரையன் வயல்சூழ் திருந்து தேவன்குடி
அரையன் அடியை அடைய அறுமேதமே.

வரையின் மகளை வாமம் மகிழும் சிவன் - மலைமகளைத் தன் இடப்பக்கம் பாகமாக விரும்பும் சிவன்; (சுந்தரர் தேவாரம் - 7.73.1 - "கரையுங் கடலும் ... உருத்திர லோகன் வரையின் மடமகள் கேள்வன் ...");
புரை இல் புகழான் - ஒப்பற்ற புகழை உடையன் / குற்றமற்ற புகழை உடையவன்; (புரை - ஒப்பு; குற்றம்);
மதியைப் புனை வேணியில் திரையன் - சந்திரனை அணிந்த சடையில் கங்கையை உடையவன்; (வேணி - சடை); (திரை - நதி);
அரையன் - அரசன்;
அறும் ஏதம் - பாவம், துன்பம் எல்லாம் நீங்கும்; (ஏதம் - குற்றம், கேடு, துன்பம்);

6)
பூவிட் டடியைப் போற்றிப் புகழ்வானவர்
ஆவி காத்தின் னமுதம் அருள்செய்தவன்
தேவி பங்கன் திருந்து தேவன்குடிக்
கோவின் நாமம் கூறக் குறைவில்லையே.

பூ இட்டு அடியைப் போற்றிப் புகழ் வானவர் ஆவி காத்து இன் அமுதம் அருள்செய்தவன் - மலர் தூவித் திருவடியை வழிபட்ட தேவர்களது உயிரைக் காத்தி இனிய அமுதை அருளியவன்;
தேவி பங்கன் - உமைபங்கன்;
திருந்து தேவன்குடிக் கோவின் நாமம் கூறக் குறைவு இல்லையே - திருந்து தேவன்குடியில் உறையும் அரசனது திருநாமத்தைக் கூறினால் குறை தீரும்; (கோ - அரசன்);

7)
அட்ட மூர்த்தி அரையில் அரவொன்றினைக்
கட்டும் அழகன் கண்டம் கறையாகிய
சிட்டன் வயல்சூழ் திருந்து தேவன்குடி
நட்டன் நாமம் கூற நலிவில்லையே.

அட்டமூர்த்தி - ஐம்பூதங்கள் சூரியன் சந்திரன், ஆன்மா என்ற எட்டுப்பொருள்களைத் தன் வடிவமாக உடையவன்;
அரவு ஒன்றினைக் கட்டும் அழகன் - அரையில் ஒரு பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;
சிட்டன் - சிஷ்டன் - சிஷ்டாசாரமுடையவன் - உயர்ந்தவன்; (शिष्टः 1 An eminent or distinguished person. -2 A wise man.)
நட்டன் - கூத்தன்;

8)
உன்னி டாமல் ஓடி மலைபேர்த்தவன்
சென்னி பத்தும் சிதைத்த சிவனெம்மிறை
செந்நெல் வயல்சூழ் திருந்து தேவன்குடி
மன்னன் பாதம் வாழ்த்த வருமின்பமே.

உன்னிடாமல் ஓடி மலை பேர்த்தவன் சென்னி பத்தும் சிதைத்த சிவன் - சற்றும் எண்ணாமல் ஓடிப்போய்க் கயிலைமலையைப் பெயர்த்த இராவணந்து பத்துத்தலைகளையும் நசுக்கி அழித்த சிவன்; (உன்னுதல் - எண்ணுதல்); (சிதைத்தல் - அழித்தல்; குலைத்தல்);
எம் இறை - எம் கடவுள்;
செந்நெல் வயல் சூழ் திருந்து தேவன்குடி மன்னன் - சிறந்த நெல் வயல் சூழ்ந்த திருந்து தேவன்குடியில் உறைகின்ற அரசன்; (செந்நெல் - செஞ்சாலிநெல் - A kind of superior paddy of yellowish hue);
பாதம் வாழ்த்த வரும் இன்பமே - அப்பெருமானது திருவடியை வாழ்த்தினால் இன்பம் வந்தடையும்;

9)
செய்ய மலர்மேல் திகழ்வான் திகிரிப்படைக்
கையன் இவர்கள் காணாக் கனலானவன்
செய்ய ணிந்த திருந்து தேவன்குடி
ஐயன் அடியை அடைவார்க் கழகாகுமே.

செய்ய மலர்மேல் திகழ்வான் - சிவந்த தாமரைமலர்மேல் இருக்கும் பிரமன்;
திகிரிப்படைக் கையன் - சக்கராயுதத்தை ஏந்திய திருமால்;
இவர்கள் காணாக் கனல் ஆனவன் - இவ்விருவரால் அடிமுடியைக் காண இயலாத சோதி; (சம்பந்தர் தேவாரம் - 1.80.9 - "கோணா கணையானுங் குளிர்தா மரையானுங் காணார் கழலேத்தக் கனலா யோங்கினான்")
செய் அணிந்த திருந்து தேவன்குடி ஐயன் - வயல்கள் சூழ்ந்த திருந்து தேவன்குடியில் உறைகின்ற தலைவன் ; (செய் - வயல்);
அடியை அடைவார்க்கு அழகு ஆகுமே - அப்பெருமானது திருவடியைச் சரணடைந்தவர்களுக்கு சுகம் உண்டாகும்; (அழகு - சுகம்); (சம்பந்தர் தேவாரம் - 2.10.10 - "ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே." - அழகு - பேரின்ப வாழ்வு);

10)
தூறே சொல்லும் துரிசர் சொலைநீங்குமின்
ஆறோ டரவம் முடிமேல் அணியும்பரன்
சேறார் வயல்சூழ் திருந்து தேவன்குடி
ஏறே றிறையை ஏத்த இடரில்லையே.

தூறே சொல்லும் துரிசர் சொலை நீங்குமின் - பழித்துப் பேசும் வஞ்சகர்களது வார்த்தையை நீங்குங்கள்; (தூறு - பழிச்சொல்); (துரிசர் - குற்றம் உடையவர்); (சொலை - சொல்லை; இடைக்குறை விகாரம்);
ஆறு ஓடு அரவம் முடிமேல் அணியும் பரன் - திருமுடிமேல் கங்கை, மண்டையோடு, பாம்பு இவற்றையெல்லாம் அனிந்த பரமன்;
சேறு ஆர் வயல் சூழ் திருந்துதேவன்குடி - சேறு மிக்க வயல் சூழ்ந்த திருந்துதேவன்குடியில் உறைகிண்ற;
ஏறு ஏறு இறையை ஏத்த இடர் இல்லையே - இடபவாகனனை வாழ்த்தினால் துன்பம் தீரும்;


11)
மாயான் பிறவான் அங்கம் மறையோதிய
வாயான் மணமார் வாளி மதனைச்சுடு
தீயான் வயல்சூழ் திருந்து தேவன்குடி
மேயான் நாமம் சொல்வார் வினைவீடுமே.

மாயான் பிறவான் - இறப்பும் பிறப்பும் இல்லாதவன்; (மாய்தல் - இறத்தல்);
அங்கம் மறை ஓதிய வாயான் - நால்வேதமும் ஆறங்கமும் ஓதியவன்; (அங்கம் - ஆறங்கம் / வேதாங்கம் - சிட்சை வியாகரணம் சந்தசு நிருத்தம் சோதிடம் கற்பம் என ஆறுவகைப்பட்ட வேதப்பொருளை உணர்தற்குரிய கருவி);
(சம்பந்தர் தேவாரம் - 2.12.8 - "தூயானைத் தூயவா யம்மறை யோதிய வாயானை ...");
மணம் ஆர் வாளி மதனைச் சுடு தீயான் - மணம் பொருந்திய அம்புகளை (மலர்க்கணைகளை) உடைய மன்மதனை எரித்த நெருப்பாக இருப்பவன்; (வாளி - அம்பு); (தீயான் - 'தீயை ஏந்தியவன்' என்றும் கொள்ளலாம்);
திருந்து தேவன்குடி மேயான் - திருந்து தேவன்குடியில் எழுந்தருளியிருப்பவன்;
நாமம் சொல்வார் வினை வீடுமே - அப்பெருமானது திருநாமத்தை சொல்பவர்களது வினை நீங்கும்;

அன்போடு,
வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு :
கலிவிருத்தம் - 'மா மா மா மாங்கனி' என்ற வாய்பாடு
இவ்வமைப்பில் தேவாரத்தில் பாடல் உள்ளதா என்று அறியேன்.

2) சம்பந்தர் தேவாரத்தில் சில பதிகங்களில் அடியீற்றுச்சீர் மாங்கனிச்சீராகக் கருதுமாறும் வரக்காணலாம். உதாரணம்: 2.118.1 -
பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே
அடிகளாரத் தொழுதேத்த நின்ற அழகன்னிடம்
கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள்சோலைம் மலர்மணங் கமழும் மதிமுத்தமே.

சம்பந்தரின் இப்பதிகத்தை வேறுவிதமாகச் சீர்பிரித்து ஈற்றுச் சீரை விளச்சீராகவும் கருதலாம்.

3) திருந்துதேவன்குடி - கற்கடேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=386
திருந்துதேவன்குடி தலக்குறிப்பு: http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=357
'திருமுறைத் தலங்கள்' என்ற நூலில் பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதியது:
திருந்துதேவன்குடி என்னும் பெயருடைய ஊர் தற்போது இல்லை. கோயில் மட்டுமே உள்ளது. கோயில் இருந்த இடம் நன்செய் நிலங்களாயின. ‘கோயிலைச் சுற்றி அகழியுள்ளது.’.
-------------- --------------



No comments:

Post a Comment