Saturday, November 17, 2018

04.58 – பொது - ( உமைபங்கன் போற்றி )


04.58 பொது - ( உமைபங்கன் போற்றி )



2014-03-30
பொது - ( உமைபங்கன் போற்றி )
----------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - "தானன தானன தானன தானா" என்ற சந்தம்).
(லிங்காஷ்டகம் - "ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்")



1)
காமன தாகமெ ரித்தனை போற்றி
சோமனை அஞ்சடை ஏற்றினை போற்றி
சேமம ளித்திடு சேவக போற்றி
கோமக னேஉமை கூறின போற்றி.



பதம் பிரித்து:
காமனது ஆகம் எரித்தனை போற்றி;
சோமனை அம் சடை ஏற்றினை போற்றி;
சேமம் அளித்திடு சேவக போற்றி;
கோமகனே; உமை கூறின போற்றி.


காமனது ஆகம் எரித்தனை - மன்மதனது உடலை எரித்தவனே; (ஆகம் - உடல்); (எரித்தனை - எரித்தாய் - எரித்தவனே);
சோமனை அம் சடை ஏற்றினை - சந்திரனை அழகிய சடையின்மீது ஏற்றியவனே; (சோமன் - சந்திரன்); (அம் - அழகு);
சேமம் அளித்திடு சேவக - க்ஷேமம் அளிக்கும் வீரனே; (சேவகன் - வீரன்);
கோமகனே -உமை கூறின - தலைவனே, உமையை ஒரு கூறாக உடையவனே; (உமை கூறினன் - உமையை ஒரு கூறாக உடையவன் - உமைபங்கன்);
(சம்பந்தர் தேவாரம் - 2.112.3 - "மங்கைகூறினன் மான்மறியுடை அங்கையான்");
(எரித்தனை போற்றி, ஏற்றினை போற்றி, போன்ற பிரயோக உதாரணம்:
திருவாசகம் - போற்றித்திருவகவல் - 8.4:
அடி-86: தாயே ஆகி வளர்த்தனை போற்றி
அடி-209: கருங்குரு விக்கன் றருளினை போற்றி
அடி-210: இரும்புலன் புலர இசைந்தனை போற்றி);



2)
காலனை நெஞ்சிலு தைத்தனை போற்றி
பாலனை வாழ்ந்திட வைத்தனை போற்றி
வேலனை ஈன்றப ரம்பர போற்றி
கோலம டக்கொடி கூறின போற்றி.



காலனை நெஞ்சில் உதைத்தனை - காலனை மார்பில் உதைத்தவனே;
பாலனை வாழ்ந்திட வைத்தனை - மார்க்கண்டேயரை வாழவைத்தத்தவனே;
வேலனை ஈன்ற பரம்பர - முருகனைப் பெற்ற பரம்பரனே; (பரம்பரன் - மிக மேலானவன்; முழுமுதற்கடவுள்);
கோல மடக்கொடி கூறின - அழகிய இளம் கொடி போன்ற உமையை ஒரு கூறாக உடையவனே;



3)
அன்றெரி நஞ்சினை ஆர்ந்தனை போற்றி
அன்றின ரேரெயி லட்டனை போற்றி
மன்றினி லாடிடு மன்னவ போற்றி
ஒன்றென மாதொடு நின்றனை போற்றி.



பதம் பிரித்து:
அன்று எரி நஞ்சினை ஆர்ந்தனை போற்றி;
அன்றினர் ஏர் எயில் அட்டனை போற்றி;
மன்றினில் ஆடிடும் மன்னவ போற்றி;
ஒன்று என மாதொடு நின்றனை போற்றி.


அன்று எரி நஞ்சினை ஆர்ந்தனை - முன்பு ஆலகால விடத்தை உண்டவனே; (ஆர்தல் – உண்ணுதல்);
அன்றினர் ஏர் எயில் அட்டனை - பகைவர்களது அழகிய கோட்டைகளை எரித்தவனே; (அன்றினர் - பகைவர்); (ஏர் எயில் - அழகிய கோட்டைகள் - முப்புரங்கள்); (அடுதல் - எரித்தல்; அழித்தல்);
மன்றினில் ஆடிடும் மன்னவ - அம்பலத்தில் ஆடும் நடராஜனே;
ஒன்று என மாதொடு நின்றனை - உமையோடு ஒன்றாகி நின்றவனே;



4)
வெற்புவி லாலர ணெய்தனை போற்றி
மற்புய மெட்டுடை வல்லவ போற்றி
இற்பலி வெண்டலை ஏற்றனை போற்றி
அற்புத னேஉமை பங்கின போற்றி.



பதம் பிரித்து:
வெற்பு விலால் அரண் எய்தனை போற்றி;
மற்புயம் எட்டுடை வல்லவ போற்றி;
இல் பலி வெண் தலை ஏற்றனை போற்றி;
அற்புதனே உமைபங்கின போற்றி.


வெற்பு விலால் அரண் எய்தனை - மேருமலை என்ற வில்லால் முப்புரங்களை எய்தவனே; (அரண் - கோட்டை - முப்புரம்); (சம்பந்தர் தேவாரம் - 1.135.10 - “பருவிலாலெயி லெய்துபராய்த்துறை மருவினான்றனை வாழ்த்துமே.”);
மற்புயம் எட்டுடை வல்லவ – வலிமைமிக்க எட்டுத் தோள்களையுடைய சமர்த்தனே; (மற்புயம் = மல் + புயம்); (வல்லவன் - வலிமையுடையவன்; சமர்த்தன்); (அப்பர் தேவாரம் - 4.9.2 - "கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்தன்னை எண்தோள் வீசிநின் றாடும் பிரான்தன்னைக் கண்காள் காண்மின்களோ );
இல் பலி வெண் தலை ஏற்றனை - பல இல்லங்களில் வெண்ணிற மண்டையோட்டில் பிச்சை ஏற்றவனே;
அற்புதனே உமைபங்கின - அற்புதனே, உமைபங்கனே;



5)
விண்ணவ ரேத்திடு முக்கண போற்றி
தண்ணதி பாய்தரு வேணிய போற்றி
எண்ணடி யார்வினை தீர்த்தனை போற்றி
பெண்ணொரு பங்கில மர்ந்தனை போற்றி;



விண்ணவர் ஏத்திடும் முக்கண – தேவர்கள் துதிக்கும் முக்கண்ணனே;
தண் நதி பாய்தரு வேணிய - குளிர்ந்த கங்கை பாயும் சடையினனே; (தண்ணதி - தண் நதி - குளிர்ந்த கங்கை); (தரு - ஒரு துணைவினைச்சொல்); (வேணி - சடை);
எண்ணு அடியார் வினை தீர்த்தனை - உன்னை நினையும் பக்தர்களது வினைகளைத் தீர்த்தவனே; (எண்ணுதல் - நினைதல்);
பெண் ஒரு பங்கில் அமர்ந்தனை - உமையை ஒரு கூறாக விரும்பியவனே;



6)
வெள்விடை ஏறிய வித்தக போற்றி
கள்விரி கொன்றைய ணிந்தனை போற்றி
ஒள்ளெரி வண்ணவு ருத்திர போற்றி
விள்ளரி யாய்உமை கூறின போற்றி.



வெள்விடை ஏறிய வித்தக - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய வித்தகனே; (வித்தகன் - சாமர்த்தியம் உள்ளவன்; பேரறிவாளன்);
கள் விரி கொன்றை அணிந்தனை - தேன் நிறைந்த கொன்றைப்பூவைச் சூடியவனே; (கள் - தேன்); (விரிதல் - மலர்தல்);
ஒள் எரி வண்ண உருத்திர - ஒளி வீசும் நெருப்பு போன்ற செம்மேனியுடைய உருத்திரனே; ( "ஒள் எரி வண்ண = தீவண்ணனே" என்று தனியாகவும் பொருள்கொள்ளலாம்);
விள்ளரியாய் - விள்ள அரியாய் - சொல்லற்கு அரியவனே; (விள்ளுதல் - சொல்லுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.81.2 - “சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே.”);
உமை கூறின – உமாதேவியை ஒரு கூறாக உடையவனே; (கூறின – கூறினன் என்பதன் அண்மை விளி); (சம்பந்தர் தேவாரம் - 2.112.3 - “மங்கைகூறினன் மான்மறியுடை அங்கையானுறை யாடானை”);



7)
நாரண னுக்கரி நல்கினை போற்றி
ஆரண மோதிய நாவின போற்றி
வாரண ஈருரி போர்த்தனை போற்றி
பூரண மாதொரு பங்கின போற்றி.



பதம் பிரித்து:
நாரணனுக்கு அரி நல்கினை போற்றி;
ஆரணம் ஓதிய நாவின போற்றி;
வாரண ஈருரி போர்த்தனை போற்றி;
பூரண; மாது ஒரு பங்கின போற்றி.


நாரணனுக்கு அரி நல்கினை - திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருளியவனே; (அரி - சக்கரம்; 3. ஆயுதம்); (விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் தியான ச்லோகத்தில், ”அரி நளின, கதா, சங்க பாணி:” என்னும் சொற்றொடரில் வரும் 'அரி' சக்கரத்தைக் குறிக்கும் ஸம்ஸ்க்ருதச் சொல்); (நல்குதல் - கொடுத்தல்);
ஆரணம் ஓதிய நாவின - வேதங்களைப் பாடியருளியவனே; (ஆரணம் - வேதம்);
வாரண ஈருரி போர்த்தனை - ஆனையின் உரித்த தோலைப் போர்த்தவனே; (ஈர்த்தல் - உரித்தல்); (ஈர் - ஈரம்; பசுமை);
பூரண மாது ஒரு பங்கின - பூரணனே, உமை ஒரு பங்கினனே;



8)
வாளவு ணன்வலி வாட்டினை போற்றி
நீளவ வன்தொழு நின்மல போற்றி
வாளவ னுக்களி பண்பின போற்றி
கோளர வாஉமை கூறின போற்றி.



பதம் பிரித்து:
வாள் அவுணன் வலி வாட்டினை போற்றி;
நீள அவன் தொழு நின்மல போற்றி;
வாள் அவனுக்கு அளி பண்பின போற்றி;
கோள் அரவா, உமை கூறின போற்றி.


வாள் அவுணன் வலி வாட்டினை - கொடிய அரக்கனான இராவணனது வலிமையை அழித்தவனே; (வாள் அவுணன் - கொடிய அரக்கன் - இராவனன்); (வலி - ஆற்றல்; வலிமை); (வாட்டுதல் - வாடச்செய்தல்; கெடுத்தல்); (அப்பர் தேவாரம் - 5.74.10 - “மறங்கொள் வாளரக் கன்வலி வாட்டினான் எறும்பி யூர்மலை யெம்மிறை காண்மினே.”);
நீள அவன் தொழு நின்மல - பன்னெடுங்காலம் அவனால் தொழப்பெற்ற தூயனே; (நீள – நெடுங்காலமாக; நீள் - நெடுங்காலம்));
வாள் அவனுக்கு அளி பண்பின – அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளை அருளியவனே; (பண்பு - குணம்; இயல்பு);
கோள் அரவா உமை கூறின - கொல்லும் தன்மையுடைய பாம்பை அணிந்தவனே, உமைபங்கனே;



9)
மாலய னேடவ ளர்ந்தனை போற்றி
ஆலம துண்டமி டற்றின போற்றி
மூலமு மந்தமு மாயினை போற்றி
கோலவ ணங்கொரு கூறின போற்றி.



பதம் பிரித்து:
மால் அயன் நேட வளர்ந்தனை போற்றி;
ஆலமது உண்ட மிடற்றின போற்றி;
மூலமும் அந்தமும் ஆயினை போற்றி;
கோல அணங்கு ஒரு கூறின போற்றி.


மால் அயன் நேட வளர்ந்தனை - திருமால் பிரமன் இவர்கள் தேடும்படி ஓங்கியவனே; (நேட - தேட); (வளர்தல் - ஓங்குதல்; நீளுதல்);
ஆலம் அது உண்ட மிடற்றின - நீலகண்டனே; (மிடறு - கண்டம்);
மூலமும் அந்தமும் ஆயினை - முதலும் முடிவும் ஆனவனே;
கோல அணங்கு ஒரு கூறின - அழகிய உமையம்மையை ஒரு கூறாக உடையவனே; (கூறினன் = ஒரு கூறில் உடையவன்; கூறின - கூறினனே என்ற விளி);



10)
ஏசிடு வார்க்கில னாயினை போற்றி
பேசிடு வார்வினை தீர்த்தனை போற்றி
மாசில னேமழு வாளின போற்றி
மாசிவை வாமம கிழ்ந்தனை போற்றி.



பதம் பிரித்து:
ஏசிடுவார்க்கு இலன் ஆயினை போற்றி;
பேசிடுவார் வினை தீர்த்தனை போற்றி;
மாசு இலனே, மழு வாளின போற்றி;
மா சிவை வாமம் மகிழ்ந்தனை போற்றி.


ஏசிடுவார்க்கு இலன் ஆயினை - இகழ்பவர்களுக்கு அருள் இல்லாதவனே; (ஏசுதல் - இகழ்தல்);
பேசிடுவார் வினை தீர்த்தனை - போற்றும் பக்தர்களது வினையைத் தீர்ப்பவனே; (பேசுதல் - துதித்தல்; திருப்புகழைப் பேசுதல்); (அப்பர் தேவாரம் - 6.1.1 - “அரியானை ... பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே”);
மாசு இலனே, மழு வாளின - குற்றமற்றவனே, மழு வாளை ஏந்தியவனே;
மா சிவை வாமம் மகிழ்ந்தனை - ஆழகிய உமையை இடப்பக்கம் கூறாக விரும்பியவனே; (மா = அழகு); (சிவை = உமை; பார்வதி);



11)
கொக்கிற கும்புனை பிஞ்ஞக போற்றி
நக்கர ணஞ்சுடு நாயக போற்றி
முக்கண முப்புரி நூலின போற்றி
பக்கமு மைக்களி பாங்கின போற்றி.



பதம் பிரித்து:
கொக்கிறகும் புனை பிஞ்ஞக போற்றி;
நக்கு அரணம் சுடு நாயக போற்றி;
முக்கண, முப்புரி நூலின போற்றி;
பக்கம் உமைக்கு அளி பாங்கின போற்றி.


கொக்கிறகும் புனை பிஞ்ஞக - கொக்கிறகை அணிந்த தலைக்கோலம் உடையவனே; (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்); (கொக்குவடிவாய் இருந்தமையின், 'குரண்டன்' எனப் பெயர்பெற்ற அசுரனை அழித்து, அவன் இறகைச் சிவபிரான் தலையில் அணிந்தனன் என்பது புராண வரலாறு); (அப்பர் தேவாரம் - 6.39.2 - "கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்");
நக்கு அரணம் சுடு நாயக - சிரித்து முப்புரங்களை எரித்த தலைவனே;
முக்கண முப்புரி நூலின - முக்கண்ணனே, முப்புரி நூல் அணிந்தவனே;
பக்கம் உமைக்கு அளி பாங்கின - ஒரு பக்கத்தை உமைக்கு அளித்தவனே; (பாங்கு - இயல்பு );



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - "தானன தானன தானன தானா" என்ற சந்தம்.
வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.
குரு - நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று.
லகு - குறில் (ஒற்றுத் தொடராதபோது).
அடி ஈற்றில் வரும் லகுவும் குருவாகக் கருதப்படும்.
வடமொழியில் ஐகாரம் நெடில் (குரு) என்று கருதப்படினும், தமிழ்ப் பாடலில் அலகிடும்போது ஐகாரக் குறுக்கம் வரும் இடங்களில் அது குறில் (லகு) என்று கொள்ளப்படும்.)



2) உதாரணம்: - லிங்காஷ்டகம் -
"ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஶோபித லிங்கம்
ஜன்மஜ து:க விநாஶக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஶிவலிங்கம்"
----------- --------------

No comments:

Post a Comment