Thursday, October 11, 2018

04.55 – நெடுங்களம் (திருநெடுங்களம்)


04.55 நெடுங்களம் (திருநெடுங்களம்)



2014-03-15
திருநெடுங்களம்
----------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - "தனாதனா தனாதனா தனாதனா தனாதனா" என்ற சந்தம்.
இதனைத் 'தனாதனான தானனா தனாதனான தானனா' என்றும் நோக்கலாம்.)
உதாரணம் - கணேச பஞ்சரத்ன ஸ்தோத்திரம் - "முதாகராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்");
(சம்பந்தர் தேவாரம் - 2.98.1 - "வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன் களுந்திவந்")



1)
கழல்மகிழ்ந்து வாழ்த்துவார் களிக்குமாறு நல்குவான்
தழல்விளங்கு கையினான் தரைக்கிறங்கு வான்புனற்
சுழல்விளங்கு வேணியான் துதைந்திலங்கு நீற்றினான்
நிழல்மழுப் படைக்கரன் னெடுங்களத்து நாதனே.



* திருநெடுங்களத்து ஈசன் திருநாமம் - திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர்.
கழல் மகிழ்ந்து வாழ்த்துவார் களிக்குமாறு நல்குவான் - திருவடியை விரும்பித் துதிக்கும் அன்பர்கள் இன்புறும்படி அருள்புரிபவன்;
தழல் விளங்கு கையினான் - கையில் தீயை ஏந்தியவன்;
தரைக்கு இறங்கு வான்புனற் சுழல் விளங்கு வேணியான் - வானத்திலிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்த கங்கையின் சுழல்கள் விளங்கும் சடையை உடையவன் - கங்காதரன்; (வேணி - சடை);
துதைந்து இலங்கு நீற்றினான் - மேனிமேல் திருநீற்றை அழுந்தப் பூசியவன்;
நிழல் மழுப்படைக் கரன் - ஒளிவீசும் மழுவாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன்;
நெடுங்களத்து நாதனே - திருநெடுங்களத்தில் உறையும் பெருமான்;
இலக்கணக் குறிப்பு : கரன்னெடுங்களத்து - கரன் நெடுங்களத்து - னகர ஒற்று விரித்தல் விகாரம்;



2)
புனைந்ததிங்க ளோடராப் பொருந்துகின்ற சென்னியான்
நனைந்தசெஞ்ச டைப்பரன் னடஞ்செயும் பதந்தனைச்
சினந்தவிர்ந்த நெஞ்சராய்த் தினம்பணிந்து போற்றிட
நினைந்தவர்க்கு நன்மையான் நெடுங்களத்து நாதனே.



புனைந்த திங்களோடு அராப் பொருந்துகின்ற சென்னியான் - திருமுடிமேல் சந்திரனையும் பாம்பையும் அணிந்தவன்; (அரா - பாம்பு );
நனைந்த செஞ்சடைப் பரன் - கங்கையைச் சடையில் உடைய பரமன்;
ம் செயும் பதந்தனைச் சினம் தவிர்ந்த நெஞ்சராய்த் தினம் பணிந்து போற்றிட நினைந்தவர்க்கு நன்மையான் - கூத்தாடும் திருவடியைச் சினம் முதலிய குற்றங்கள் நீங்கிய மனத்தோடு தினமும் மறவாமல் வழிபடும் பக்தர்களுக்கு நன்மை செய்பவன்;
நெடுங்களத்து நாதனே - திருநெடுங்களத்தில் உறையும் பெருமான்;
இலக்கணக் குறிப்பு : பரன்னடஞ்செயும் - பரன் நடஞ்செயும் - னகர ஒற்று விரித்தல் விகாரம்;



3)
உறங்குகின்ற போதிலும் முறங்கிடாத போதிலும்
மறந்திடாது வாழ்த்தினால் மறைப்பிலாது நல்குவான்
பிறங்குதிங்க ளேற்றவன் பிறப்பிறப்பி லாதவன்
நிறங்களைந்து மாயினான் நெடுங்களத்து நாதனே.



உறங்குகின்ற போதிலும் றங்கிடாத போதிலும் மறந்திடாது வாழ்த்தினால் மறைப்பு இலாது நல்குவான் - இரவும் பகலும் நினைந்து வழிபடும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குபவன்;; (மறைப்பு - ஒளித்தல்);
(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்...");
பிறங்குதிங்கள் ஏற்றவன் - ஒளிவீசும் சந்திரனைச் சூடியவன்; (பிறங்குதல் - விளங்குதல்);
பிறப்பு இறப்பு இலாதவன் - பிறத்தலும் சாதலும் இல்லாதவன்;
நிறங்கள் ஐந்தும் ஆயினான் - (திருவாசகம் - சிவபுராணம் - அடி 49-50 "... நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் ..." - 'நினைவார் நினைவின் வண்ணம் எந்நிறத்துடனும் தோன்றுவாய்' என்றபடி. இனிச் சிவபிரானது திருமுகங்கள் ஐந்தனுள்ளும் ஒரோவொன்று ஒரோவொரு நிறம் உடையதாதலும் அறிந்து கொள்க.);
இலக்கணக் குறிப்பு : போதிலும் முறங்கிடாத - போதிலும் உறங்கிடாத - மகர ஒற்று விரித்தல் விகாரம்;



4)
விருப்பிலான் வெறுப்பிலான் விரும்புவார்க் கருத்தியான்
பருப்பதத்தி லுள்ளவன் பதங்கடந்து நிற்பவன்
பொருப்புவில்ல தேந்தினான் புரந்தகிக்க நக்கவன்
நெருப்பிருக்கு நெற்றியான் நெடுங்களத்து நாதனே.



விருப்பிலான் வெறுப்பிலான் - விருப்பு வெறுப்பு இவை இல்லாதவன்;
விரும்புவார்க்கு அருத்தியான் - அன்பருக்கு அன்பன்; (அருத்தி - அன்பு; ஆசை; விருப்பம்);
பருப்பதத்தில் உள்ளவன் - கயிலைமலையான்; ஸ்ரீசைலத்தில் உள்ளவன்; (பருப்பதம் - மலை - இங்கே கயிலைமலை; திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) என்றும் கொள்ளலாம்);
பதம் கடந்து நிற்பவன் - வாக்கிற்கு எட்டாதவன்; (பதம் - மொழி; சொல்; அளவை); (திருவாசகம் - திருவண்டப் பகுதி - அடி 111 - "சொற்பதங் கடந்த தொல்லோன்");
பொருப்பு வில்து ஏந்தினான் - மேருமலையை வில்லாக ஏந்தியவன்;
புரம் தகிக்க நக்கவன் - முப்புரங்களை எரிக்கச் சிரித்தவன்; (தகித்தல் - எரித்தல்);
நெருப்பு இருக்கும் நெற்றியான் - நெற்றிக்கண்ணன்;



5)
பகைத்தெதிர்ந்த மும்மதப் பகட்டினைச் செகுத்தவன்
மிகைத்ததக்க னார்சிரம் தடிந்தவன் வியன்புரம்
நகைத்தழித்த பெற்றியான் நலங்கிளர்ந்த செஞ்சுடர்
நிகர்த்திலங்கு மேனியான் நெடுங்களத்து நாதனே.



பகைத்து எதிர்ந்த மும்மதப் பகட்டினைச் செகுத்தவன் - ஏதிர்த்துப் பொர்செய்த ஆண்யானையைக் கொன்றவன்; (பகடு - ஆண் யானை); (செகுத்தல் - கொல்லுதல்);
மிகைத்த தக்கனார் சிரம் தடிந்தவன் - ஆணவத்தோடு வேள்விசெய்த தக்கனது தலையை வெட்டியவன்; (மிகைத்தல் - செருக்குறுதல்); (தக்கனார் - தக்கன்; ஆர் - இழித்தற் பொருளில் வந்தது); (தடிதல் - வெட்டுதல்);
வியன் புரம் நகைத்து அழித்த பெற்றியான் - முப்புரங்களைச் சிரித்து எரித்த பெருமைய உடையவன்; (வியன் - பெரிய); (அப்பர் தேவாரம் - 6.5.1 - எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி .... வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி ...); (நகைத்தல் - சிரித்தல்); (பெற்றி - பெருமை; இயல்பு );
நலம் கிளர்ந்த செஞ்சுடர் நிகர்த்து இலங்கு மேனியான் - அழகு மிக்க செந்தீப் போல் செம்மேனியன்; (நலம் - நன்மை; அழகு); (கிளர்தல் - மிகுதல்; சிறத்தல்; ஓங்குதல்);



6)
மருந்துவேண்டு வானவர் வழுத்தநஞ்ச முண்டவன்
பொருந்திவந்து சந்ததம் புரிந்தவல் வினைத்தொடர்
வருந்தவைத்தி டாவணம் வணங்குகின்ற அன்பரை
நெருங்கிநின்று காப்பவன் னெடுங்களத்து நாதனே.



மருந்து வேண்டு வானவர் வழுத்த நஞ்சம் உண்டவன் - அமுதினை விரும்பிய தேவர்கள் வணங்க, அவர்களுக்கு இரங்கி ஆலகால விஷத்தை உண்டவன்; (மருந்து - அமுதம்); (வழுத்துதல் - துதித்தல்); (நஞ்சம் - விஷம்);
பொருந்திவந்து சந்ததம் புரிந்த வல்வினைத்தொடர் வருந்தவைத்திடாவணம் - முன் செய்த வல்வினைத்தொடர் இப்பிறப்பில் பொருந்திவந்து எப்பொழுதும் துன்புறுத்தாதபடி; (சந்ததம் - எப்பொழுதும்; ஓயாமல்);
வணங்குகின்ற அன்பரை நெருங்கிநின்று காப்பவன் - வணங்கும் பக்தர்களை அருகிருந்து காத்தருள்பவன்;



7)
மறைந்துவாளி எய்தவல் மதன்தனைப் பொடித்தவன்
குறைந்ததிங்க ளேத்தவே குளிர்ந்துகுஞ்சி வைத்தவன்
நிறந்திகழ் மிடற்றினான் நிலத்திலும் விசும்பிலும்
நிறைந்திலங்கு பெற்றியான் நெடுங்களத்து நாதனே.



மறைந்து வாளி எய்த வல் மதன்தனைப் பொடித்தவன் - ஒளித்திருந்து அம்பை எய்த வலிய மன்மதனைச் சாம்பலாக்கியவன்; (மறைந்து - "மறைத்து" என்றது எதுகைநோக்கி "மறைந்து" என்று வந்தது); (வாளி - அம்பு ); (சம்பந்தர் தேவாரம் - 3.22.5 - "கொங்கலர் வன்மதன் வாளி ஐந்தகத்து...");
குறைந்த திங்கள் ஏத்தவே குளிர்ந்து குஞ்சி வைத்தவன் - தேய்ந்து அழியவிருந்த சந்திரன் வணங்கவும், இரங்கித் தன் தலைமேல் அணிந்து அதனைக் காத்தவன்; (குளிர்தல் - கருணையால் முகங்கனிதல்); (குஞ்சி - தலை);
நிறம் திகழ் மிடற்றினான் - கரிய நிறம் திகழும் கண்டத்தன்; (கருமை என்பது குறிப்பால் பெறப்பட்டது);
நிலத்திலும் விசும்பிலும் நிறைந்து இலங்கு பெற்றியான் - மண்ணிலும் விண்ணிலும் எங்கும் வியாபித்து இருப்பவன்; (விசும்பு - ஆகாயம்); (பெற்றி - தன்மை);



8)
தரித்தவன் சலத்தினைத் தலைச்சரம் புனைந்தவன்
எரித்தவன் திரிந்தமூ வெயில்களைக் கணத்தினிற்
சிரித்துவா ளரக்கனார் சிரங்களஞ்சொ டஞ்சையும்
நெரித்துவா ளளித்தவன் னெடுங்களத்து நாதனே.



தரித்தவன் சலத்தினைத் - கங்காதரன்;
தலைச்சரம் புனைந்தவன் - தலைமாலை அணிந்தவன்;
எரித்தவன் திரிந்த மூவெயில்களைக் கணத்தினிற், சிரித்து - திரிந்த முப்புரங்களைத் தன் சிரிப்பினால் நொடியளவில் எரித்தவன்;
சிரித்து, வாள் அரக்கனார் சிரங்கள் அஞ்சொடு அஞ்சையும் நெரித்து வாள் அளித்தவன் - (இராவணன் கயிலைமலையை அசைத்தபோது) சிரித்துக் கொடிய அரக்கனான அவன் தலைகள் பத்தையும் நசுக்கி (பின் இசைகேட்டு இரங்கி அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற) வாளைத் தந்தருளியவன்;
நெடுங்களத்து நாதனே - திருநெடுங்களத்தில் உறையும் சிவபெருமான்.
குறிப்புகள் :
a) இலக்கணக்குறிப்பு : முதலடியில் "தலை" என்ற சொல், "தரித்தவன் சலத்தினைத் தலை", "தலைச்சரம் புனைந்தவன்" என்று இருபக்கமும் இடைநிலைத் தீவகமாகி இயையும்);
b) 'சிரித்து' என்ற சொல்லை இடைநிலைத் தீவகமாக இருபக்கமும் சேர்த்துப் பொருள்கொள்க;
c) அரக்கனார் - ஆர் என்றது இழிவு குறித்து;
d) இராவணன் கயிலையை ஆட்டியபோது ஈசன் சிரித்தது: அப்பர் தேவாரம் - 4.80.10 -
"தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி யுன்னித் தடவரையை
வரைக்கைக ளாலெடுத் தார்ப்ப மலைமகள் கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்து மணிதில்லை யம்பலவன்
நெருக்கி மிதித்த விரல்கண்ட கண்கொண்டு காண்பதென்னே."



9)
அலம்புமாழி வண்ணனும் மலர்ந்தபோதி னண்ணலும்
புலம்புமா றுயர்ந்தவன் புறத்தகத் திருப்பவன்
சலம்புகுந்த வேணியன் சலந்தரற் றடிந்தவன்
நிலம்பணிந்து போற்றிசெய் நெடுங்களத்து நாதனே.



அலம்பும் ஆழி வண்ணனும் லர்ந்த போதின் அண்ணலும் புலம்புமாறுயர்ந்தவன் - ஒலிக்கின்ற கடலின் நிறத்தை உடைய திருமாலும் மலர்ந்த தாமரைமேல் இருக்கும் பிரமனும் அடிமுடி தேடி வருந்துமாறு ஓங்கியவன்; (அலம்புதல் - ஒலித்தல்); (ஆழி - கடல்); (போது - பூ - தாமரைப்பூ); (புலம்புதல் - வாடுதல்; வருந்துதல்; அடிக்கடி கூறுதல்);
இலக்கணக் குறிப்பு : வண்ணனும் மலர்ந்த - வண்ணனும் அலர்ந்த - மகர ஒற்று விரித்தல் விகாரம்;
புறத்து அகத்து இருப்பவன் - உம்மைத்தொகை - வெளியிலும் உள்ளும் இருப்பவன்;
சலம் புகுந்த வேணியன் - சடையில் ஜலத்தை (கங்கையை) உடையவன்;
சலந்தரற் றடிந்தவன் - சலந்தரனைத் தடிந்தவன் - சலந்தராசுரனை அழித்தவன்;
(இலக்கணக் குறிப்பு - உயர்திணைப் பெயர்கள் வரும் இடத்தில் இரண்டாம் வேற்றுமைத்தொகையில் னகர ஒற்று றகர ஒற்றாகத் திரியும். ஆறுமுக நாவலரின் இலக்கணச்சுருக்கத்திலிருந்து: #101.
உயர்திணைப் பெயரீற்று லகர ளகரங்கள், மாற்கடவுள், மக்கட்சுட்டு என இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினும், லகர ளகர னகரங்கள், குரிசிற் கண்டேன், மகட்கொடுத்தான், தலைவற்புகழ்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினுந் திரியுமெனக் கொள்க.)
நிலம் பணிந்து போற்றிசெய் நெடுங்களத்து நாதனே - உலகோர் வழிபடும் ஈசன், திருநெடுங்களத்தில் உறைகின்ற சிவபெருமான்;



10)
பொலாததே புகன்றிடும் புரட்டரும் பிரட்டரும்
இலார்நலங்க ளேத்துவீர் இரங்குவா னுருத்திரன்
நலார்கணால்வ ருக்கறம் விரித்தவேத நாயகன்
நிலாவணிந்த உச்சியான் நெடுங்களத்து நாதனே.



பொலாததே புகன்றிடும் புரட்டரும் பிரட்டரும் இலார் நலங்கள் - பொல்லாதவற்றையே பேசுகின்ற வஞ்சகர்களும் நெறிக்குப் புறம்பானவர்களும் நன்மை இல்லாதவர்கள் ; (பொலாததே, இலார், நலார்கள் - பொல்லாததே, இல்லார், நல்லார்கள் - இடைக்குறை விகாரம்); (புரட்டர் - பொய்யர்கள்; வஞ்சகர்கள்); (பிரட்டர் - பிரஷ்டர் - நெறிக்குப் புறம்பானவர்கள்); (நலம் - நல்ல குணம்; உயர்வு; அன்பு; இன்பம்);
த்துவீர் இரங்குவான் உருத்திரன் - நீங்கள் உருத்திரமூர்த்தியான சிவபெருமானைத் துதியுங்கள்; அப்பெருமான் இரங்கி அருள்பவன்;
(அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன்...");
நலார்கணால்வருக்கறம் விரித்தவேத நாயகன் - நல்லார்கள் நால்வருக்கு அறம் விரித்த வேத நாயகன் - முனிவர்கள் நால்வருக்கு மறைப்பொருளை உபதேசித்தவனும் வேதங்களுக்குத் தலைவனுமான தட்சிணாமூர்த்தி;
நிலாணிந்த உச்சியான் - சந்திரசேகரன்;



11)
கரந்தவன் திரைப்புனல் சிரத்திலூ ணிரந்தவன்
கரந்தொழும் தொழும்பரின் கருத்தறிந்து வேண்டிய
வரந்தரும் பரம்பரன் மடக்கொடிக் கிடந்தரும்
நிரந்தரன் சுதந்திரன் நெடுங்களத்து நாதனே.



கரந்தவன் திரைப்புனல் - அலைமிக்க கங்கையைச் சடையில் ஒளித்தவன்; (கரத்தல் - ஒளித்தல்; மறைத்தல்);
சிரத்தில் ஊண் இரந்தவன் - பிரமனது மண்டையோட்டில் பிச்சை ஏற்பவன்; (ஊண் - உணவு);
கரம் தொழும் தொழும்பரின் கருத்து அறிந்து வேண்டிய வரம் தரும் பரம்பரன் - கைதொழும் அடியவர்களது எண்ணத்தை அறிந்து அவர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் தருகின்ற மேலானவன்; (தொழும்பர் - அடியவர்);
மடக்கொடிக்கு இம் தரும் - இளங்கொடி போன்ற உமைக்கு இடப்பாகத்தைத் தருகின்ற;
நிரந்தரன் சுதந்திரன் - அழிவற்றவன், தனக்கு ஒரு தலைவன் இல்லாதவன்; (நிரந்தரன் - அழிவற்றவன்; எப்பொழுதும் உள்ளவன் ); (சுதந்திரன் - சுதந்தரன் - தனக்கு ஒரு தலைவன் இல்லாதவன்); (அப்பர் தேவாரம் - 6.98.1 - "நாமார்க்குங் குடியல்லோம் ... தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன் ..." - தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையை உடைய சங்கரன்);
நெடுங்களத்து நாதனே - திருநெடுங்களத்தில் உறைகின்ற சிவபெருமான்;



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - "தனாதனா தனாதனா தனாதனா தனாதனா" என்ற சந்தம்.
இதனைத் 'தனாதனான தானனா தனாதனான தானனா' என்றும் நோக்கலாம்.
'லகு-குரு' என்ற அமைப்பு அடிக்கு 8 முறை வரும்.
குரு = நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று.
லகு = குறில் (ஒற்றுத் தொடராதபோது).
அடி ஈற்றில் வரும் லகுவும் குருவாகக் கருதப்படும்.
இச்சந்தத்தை வடமொழியில் "பஞ்சசாமரம்" (pañcacāmaram - पञ्चचामरम्) என்பர்;
உதாரணம் - கணேச பஞ்சரத்ன ஸ்தோத்திரம் - "முதாகராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்");



சம்பந்தர் தேவாரம் - 2.98.1 -
"வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன் களுந்திவந்
திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங் குகாவிரிக்
கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்
உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமா றுவல்லமே")


(தேவாரத்தில் 4 விளச்சீர்கள் வரும் வேறு பதிகங்களும் உள்ளன. ஆனால் அவை இச்சந்தத்தினின்று சற்றே வேறுபடுவன. உதாரணம்: சம்பந்தர் தேவாரம் - 3.25.1 - "மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை")
2) திருநெடுங்களம் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=571
திருநெடுங்களம் - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=173
----------- --------------

No comments:

Post a Comment