Thursday, January 18, 2024

07.27 – கச்சூர் (திருக்கச்சூர்) - ஆமை தொழுதேத்து

07.27 – கச்சூர் (திருக்கச்சூர்)

2016-03-09

கச்சூர் (திருக்கச்சூர்) (இத்தலம் செங்கல்பட்டு அருகே உள்ளது)

----------------------

(வஞ்சித்துறை - "தானா தனதானா"; திருவிருக்குக்குறள் அமைப்பு; "மா மாங்காய்" - வாய்பாடு);

(சம்பந்தர் தேவாரம் - 1.93.1 - "நின்று மலர்தூவி")


1)

ஆமை தொழுதேத்து

மாமை திகழ்கண்டன்

காமர் கச்சூரான்

நாமம் நினைநெஞ்சே.


ஆமை தொழுது ஏத்து - ஆமை வடிவில் வந்த திருமால் வழிபாடு செய்த; (* கூர்மமாக வந்த திருமால் ஈசனை வழிபட்ட தலம் திருக்கச்சூரில் உள்ள கச்சபேஸ்வரர் கோயில்);

மா மை திகழ் கண்டன் - அழகிய கறை திகழும் கண்டத்தை உடையவன் - நீலகண்டன்; (மா - அழகு); (மை - கருமை; கறை);

காமர் கச்சூரான் - அழகிய திருக்கச்சூரில் உறையும் ஈசன்; (காமர் - அழகு);

நாமம் நினை நெஞ்சே - அப்பெருமானுடைய திருநாமத்தை நெஞ்சே எண்ணுவாயாக;


2)

கூர்மம் அடிபோற்று

சீர்மன் னிறையெம்மான்

ஏர்மன் கச்சூரான்

நீர்மை நினைநெஞ்சே.


கூர்மம் அடி போற்று - ஆமை வழிபட்ட; (கூர்மம் - ஆமை);

சீர் மன்னு இறை எம்மான் - புகழ் பொருந்திய இறைவன், எம் தலைவன்; (மன்னுதல் - நிலைபெறுதல்; தங்குதல்; பொருந்துதல்);

ஏர் மன் கச்சூரான் - அழகு பொருந்திய திருக்கச்சூரில் உறையும் ஈசனுடைய; (ஏர் - அழகு);

நீர்மை நினை நெஞ்சே - தன்மையை எண்ணு மனமே; (நீர்மை - தன்மை); (அப்பர் தேவாரம் - 4.8.1 - "அவனது பெற்றி கண்டும் அவன்நீர்மை கண்டும் அகநேர்வர் தேவர் அவரே");


3)

நாறு கணையெய்தான்

நீறு படநோக்கி

சோறு தருகச்சூர்

கூறு மடநெஞ்சே.


நாறு கணை எய்தான் நீறுபட நோக்கி - வாசம் கமழும் மலரம்பை எய்த மன்மதனைச் சாம்பல் ஆகும்படி நோக்கியவன்; (நாறுதல் - மணம் வீசுதல்);

சோறு தரு கச்சூர் - வீடுபேறு அளிக்கும் திருக்கச்சூரை; (சோறு - அன்னம்; முக்தி); (சுந்தரருக்கு இரந்து உணவிட்டதைக் குறித்தது என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - 5.1.1 - "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்");

கூறு மட நெஞ்சே - வாழ்த்து என் பேதை மனமே;


4)

வாசத் திருநீறு

பூசு மணிமார்பன்

தேசன் உறைகச்சூர்

பேச நினைநெஞ்சே.


வாசத் திருநீறு பூசு மணி மார்பன் - மணம் மிக்க திருநீற்றைப் பூசிய அழகிய மார்பை உடையவன்;

தேசன் - ஒளி உருவினன்;

உறை கச்சூர் பேச நினை நெஞ்சே - அப்பெருமான் உறையும் திருக்கச்சூரைப் புகழ்ந்து பேச நெஞ்சே எண்ணுவாயாக;


5)

கல்லே சிலையாகப்

பொல்லார் புரமெய்ய

வல்லான் கச்சூரைச்

சொல்லாய் மடநெஞ்சே.


கல்லே சிலையாகப் - மேருமலையையே வில்லாக ஏந்தி; (கல் - மலை); (சிலை - வில்);

பொல்லார் புரம் எய்ய வல்லான் - பொல்லாதவர்களான அசுரர்களது முப்புரங்களைக் கணை எய்து அழித்த சிவபெருமான்;

கச்சூரைச் சொல்லாய் மடநெஞ்சே - அப்பெருமான் உறையும் திருக்கச்சூரைப் புகழ் நெஞ்சே;


6)

ஆற்றுச் சடையீசன்

கூற்றை உதைபாதன்

ஏற்றன் கச்சூரைப்

போற்றிப் பணிநெஞ்சே.


ஆற்றுச் சடை ஈசன் - சடையில் கங்கையை உடைய ஈசன்;

கூற்றை உதை பாதன் - எமனை உதைத்த திருப்பாதன்;

ஏற்றன் கச்சூரைப் போற்றிப் பணி நெஞ்சே - இடபவாகனன் உறையும் திருக்கச்சூரைப் போற்றி வணங்கு மனமே;


7)

ஆனை உரிமூடி

கானை இடமாக்கொள்

கோனைக் கச்சூரெம்

மானைத் துதிநெஞ்சே.


ஆனை உரி மூடி - யானையின் தோலைப் போர்த்தவனை; (உரி - தோல்); (மூடி - மூடியவன் - பெயர்ச்சொல்);

கானை இடமாக்கொள் கோனைக் - சுடுகாட்டை இடமாக விரும்பிய தலைவனை;

கச்சூர் எம்மானைத் துதி நெஞ்சே - திருக்கச்சூரில் உறையும் எம் பெருமானை வணங்கு நெஞ்சே;


8)

தலைபத் துடையான்வாய்

அலற விரலூன்ற

வலவர் கச்சூரெம்

தலைவர் நினைநெஞ்சே.


தலை பத்து உடையான் வாய் அலற விரல் ஊன்ற வலவர் - பத்துத்தலைகள் உடைய இராவணனுடைய வாய்கள் அலறும்படி ஒரு விரலை ஊன்ற வல்லவர்; (வலவர் - வல்லவர் - இடைக்குறையாக வந்தது);

கச்சூர் எம் தலைவர் நினை நெஞ்சே - திருக்கச்சூரில் உறையும் எம் தலைவரை, நெஞ்சே, எண்ணுவாயாக;


9)

நேடி அயன்மாலார்

வாடித் தொழுசோதி

ஆடி கச்சூரைப்

பாடிப் பணிநெஞ்சே.


நேடி அயன் மாலார் வாடித் தொழு சோதி - பிரமனும் திருமாலும் தேடி வாடி வணங்கிய சோதி; (நேடுதல் - தேடுதல்);

ஆடி - கூத்தன்; (ஆடி - ஆடுபவன் - பெயர்ச்சொல்); (சம்பந்தர் தேவாரம் - 1.57.3 - "பூதம் பாடப் புறங்காட் டிடையாடி வேத வித்தகன்");

கச்சூரைப் பாடிப் பணி நெஞ்சே - அப்பெருமான் உறையும் திருக்கச்சூரைப் பாடி வணங்கு மனமே;


10)

கையர் சுவரொட்டும்

பொய்கள் மதியேன்மின்

உய்ம்மின் கச்சூரெம்

ஐயன் பணிசெய்தே.


கையர் சுவர் ஒட்டும் பொய்கள் மதியேன்மின் - கீழோர்கள் சுவர்களில் ஒட்டுகின்ற பொய்ப்பிரசாரத்தை நீங்கள் மதிக்கவேண்டா; (கையர் - வஞ்சகர்; கீழோர்);

உய்ம்மின் கச்சூர் எம் ஐயன் பணி செய்தே - திருக்கச்சூரில் உறையும் எம் தலைவனான சிவபெருமானுக்குத் தொண்டு செய்து உய்யுங்கள்;


11)

சேவார் கொடியீசன்

காவார் கச்சூரான்

நாவால் நவில்வார்கட்

கோவா தருள்வானே.


சே ஆர் கொடி ஈசன் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடைய ஈசன்; (சே - எருது);

கா ஆர் கச்சூரான் - சோலை சூழ்ந்த திருக்கச்சூரில் உறையும் பெருமான்; (கா - சோலை);

நாவால் நவில்வார்கட்கு ஓவாது அருள்வானே - அவன் பெயரையும் புகழையும் நாவினால் சொல்லும் அடியவர்களுக்கு முடிவின்றி அருள்புரிவான்; (நவில்தல் - சொல்லுதல்); (ஓவுதல் - முடிதல்; நீங்குதல்); ("நாவால் ஓவாது நவில்வார்கட்கு அருள்வானே" - என்று இயைத்தும் பொருள்கொள்ளள் ஆம்);


பிற்குறிப்புகள் :

யாப்புக் குறிப்பு :

  • வஞ்சித்துறை - "தானா தனதானா" - சந்தம்; "மா மாங்காய்" என்ற வாய்பாடு.

  • தானா என்பது தான, தனன, என்றெல்லாம் வரலாம்

  • தனதானா என்பது தானானா என்று வரலாம்.

  • தேவாரத்தில் திருவிருக்குக்குறள் அமைப்பு.

  • சம்பந்தர் தேவாரம் - 1.93.1 - "நின்று மலர்தூவி".


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment