Monday, April 16, 2018

04.25 – அழுந்தூர் (திருவழுந்தூர் - தேரழுந்தூர்)


04.25அழுந்தூர் (திருவழுந்தூர் - தேரழுந்தூர்)



2013-11-23
அழுந்தூர் (திருவழுந்தூர் - இக்காலத்தில் "தேரழுந்தூர்" என்று வழங்குகின்றது)
" சேத்திரக்கோவை "
----------------------
( 2012 டிசம்பரில் தரிசித்த தலங்களிற் பல தலங்கள் இப்பாடல்களில் இடம்பெறுகின்றன.)
(அறுசீர் விருத்தம் - "மா மா காய்" என்ற அரையடி வாய்பாடு.)
(சுந்தரர் தேவாரம் - 7.52.1 - "முத்தா முத்தி தரவல்ல")
(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்")



1)
குற்றா லம்சங் கரநயினார் .. கோயில் கோலத் தென்காசி
கற்றோர் போற்று கருவைநகர் .. கடனா நதிபாய் சிவசைலம்
பற்றா நின்றார் பவம்தீர்க்கும் .. பாவ நாசம் புடைமருதூர்
அற்றார்க் கருளும் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.



கருவை - கரிவலம்வந்த நல்லூர்;
பற்றா நின்றார் - பற்றி நின்றவர்கள்; பற்றுக்கோடாகக் கொண்டவர்கள்;
(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "... முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே" - பற்றா - பற்றுக்கோடாக);
பவம் - பிறப்பு;
அற்றார் - அற்றவர் - இறைவனையே பற்றியவர்; (அப்பர் தேவாரம் - 6.32.1 - "...அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி..." - அற்றவர் - ஈசனையன்றிப் பிறிதொரு பற்றற்றவர்கள்);
அழுந்தை - திருவழுந்தூர்;
அமர்தல் - விரும்புதல்; வீற்றிருத்தல்;


குற்றாலம், சங்கரநயினார் கோயில், தென்காசி, கரிவலம்வந்த நல்லூர், சிவசைலம், பாபநாசம், திருப்புடைமருதூர் என்ற தலங்கள் பாண்டிய நாட்டின் தென்பகுதியில் உள்ளன.



2)
செடிதீர் சேரன் மாதேவி .. செய்சூழ் இராச வல்லிபுரம்
கடிமா மதில்சூழ் களக்காடு .. கங்கை கொண்டான் கலிவீதி
நெடுமா டஞ்சூழ் நெல்வேலி .. நீரார் ஆத்தூர் வைகுண்டம்
அடியார்க் கருளும் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.



செடி - பாவம்; துன்பம்;
செய் - வயல்;
கடி - காவல்;
கலி - ஒலி; ஆரவாரம்;


சேரன்மாதேவி, ராஜவல்லிபுரம் (செப்பறை), களக்காடு, கங்கைகொண்டான், திருநெல்வேலி, ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம் என்ற தலங்கள் பாண்டிய நாட்டின் தென்பகுதியில் உள்ளன.



3)
பிரியர் சேர்தென் திருப்பேரை .. பிரம்ம தேசம் குன்னத்தூர்
கரிய வண்டார் களக்காடு .. கவினா ருங்கோ டகநல்லூர்
திரிபு ராந்த கம்மானூர் .. சேறார் வயல்சூழ் முறப்பநாடு
அரிய மறைசொல் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.



பிரியர் - அன்பர்;
வண்டு ஆர் - வண்டுகள் ஆர்க்கின்ற = வண்டுகள் ஒலிக்கின்ற;


தென்திருப்பேரை, பிரம்மதேசம், குன்னத்தூர், களக்காடு, கோடகநல்லூர், திரிபுராந்தகம் (பாளையங்கோட்டை), மானூர், முறப்பநாடு என்ற தலங்கள் பாண்டிய நாட்டின் தென்பகுதியில் உள்ளன.


யாப்புக் குறிப்பு : அடி-3 சீர்-6: புணர்ச்சியோடு நோக்கினால் "முறப்பநாடு + அரிய" = 'முறப்பநா டரிய' என்று ஆகி அச்சீர் கருவிளச்சீர் ஆகும். விருத்தங்களில் காய் வரும் இடத்தில் விளமும் ஒரோவழி (=அங்கங்கே) வரலாம்.
தலப்பெயர்கள் இடம்பெறும்போது சிலசமயம் இது நிகழ்வதும் உண்டு. உதாரணமாக அப்பர் அருளிய சேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தில்:
6.70.9
திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி
தேவூர் சிரபுரஞ்சிற் றேமம் சேறை
கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும்அதிகை வீரட் டானம்
ஐயா றசோகந்தி ஆமாத் தூருங்
கண்டியூர் வீரட்டங் கருகா வூருங்
கயிலாய நாதனையே காண லாமே.


திருத்தாண்டகப் பாடலில் அரையடிதோறும் முதல் இரு சீர்கள் பொதுவாகக் காய்ச்சீராக அமையும் எனினும், இப்பாடலில் சில அடிகளில் கனிச்சீர் போலவும் விளச்சீர் போலவும் வந்துள்ளதையும் காணலாம்.



4)
புடைமா வயல்சூழ் புனவாயில் .. புன்மை தீர்க்கும் மெய்ஞ்ஞானப்
படையே நல்கும் பெருந்துறைநம் .. பயங்கள் தீர்க்கும் திருப்புத்தூர்
உடல்மூத் திடினும் அன்புகுன்றா .. உளத்தார் போற்றும் தீயத்தூர்
அடைவார்க் கருளும் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.



புடை - பக்கம்;
படை - ஆயுதம்; (திருவாசகம் - திருப்படையெழுச்சி - 8.46.1 - "ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்" - ஞானமாகிய வாளைத் தாங்கிய இறைவரது பிரணவமாகிய நாதப்பறையை முழக்குங்கள்);
உடல் மூத்திடினும் அன்பு குன்றா உளத்தார் போற்றும் தீயத்தூர் - திருப்புனவாயிலில் வாழும் முதிய சிவாசாரியார் இத்தலத்திலும் பூசை செய்கின்றார். (That aged gurukkal rode with us from thiruppunavAsal to thIyaththUr. He said that the buses are infrequent in that route. If he misses the 7.45 pm bus to return to thiruppunavAsal, the next bus is after a few hours! In his younger days he would walk back but now he has to wait for the bus. Still he continues his service. Such is his dedication)


திருப்புனவாயில், திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்), திருப்புத்தூர், தீயத்தூர் என்ற தலங்கள் பாண்டிய நாட்டில் உள்ளன.



5)
அன்பில் ஆலந் துறைவயல்கள் .. அணிசெய் திருமங் கலம்முடிவில்
இன்பம் தன்னை நல்குநகர் .. எழில்மாந் துறைஅம் பூவாளூர்
துன்பம் அகற்றும் தொல்பிடவூர் .. சோலை சூழ்காட் டுப்பள்ளி
அன்பர்க் கருளும் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.



அன்பில் ஆலந்துறை, திருமங்கலம், நகர், மாந்துறை, பூவாளூர், திருப்பிடவூர் (திருப்பட்டூர்), திருக்காட்டுப்பள்ளி என்ற தலங்கள் சோழநாட்டில் லால்குடியிலிருந்து 3-இலிருந்து 20 கிமீ தொலைவிற்குள் உள்ளன.



6)
தெளிநீர்ப் பொன்னித் தென்கரையில் .. திருவார் கின்ற பராய்த்துறைஆர்
அளிசேர் கடம்பந் துறைதிங்கள் .. அணவு கின்ற செங்கோடு
குளிரார் பாண்டிக் கொடுமுடிவிண் .. கொடுக்கும் வெஞ்ச மாக்கூடல்
அளிவார்க் கருளும் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.



தெளிநீர் - தெளிந்த நீர்; (அப்பர் தேவாரம் - 4.8.2 - "விரிகதிர் ஞாயி றல்லர் மதியல்லர் ... தெளிநீரு மல்லர் ...");
திங்கள் அணவுகின்ற - நிலவை அணுகும்;
ஆர் அளி - ஒலிக்கின்ற வண்டுகள்;
குளிர் ஆர் - குளிர்ச்சி பொருந்திய;
விண் கொடுக்கும் - வானுலக வாழ்வு நல்கும்;
அளிதல் - மனம் குழைதல்;


(சம்பந்தர் தேவாரம் - 2.43.8 - "பண்ணொன்ற இசைபாடு மடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் …");
(சுந்தரர் தேவாரம் 7.42.10 - "... வெஞ்சமாக்கூஉ டல்விகிர் தாஅடியே னையும்வேண்டுதி யேஎன்று ... வன்ன் றொண்டன்சொன்ன செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும்வல்லார் சிவலோகத்தி ருப்பது திண்ணமன்றே.");


திருப்பராய்த்துறை, கடம்பந்துறை (குளித்தலை), - சோழநாட்டுத் தலங்கள்;
திருச்செங்கோடு, கொடுமுடி, வெஞ்சமாக்கூடல் - கொங்குநாட்டுத் தலங்கள்;



7)
ஒருதாய் ஆனான் சிராப்பள்ளி .. ஓங்கு பொழில்சூழ் ஆனைக்கா
வருவார் மகிழ்மூக் கீச்சரம்வான் .. வந்து வணங்கு திருவெறும்பூர்
கருவார் வினைதீர் நெடுங்களம்நம் .. கட்டம் களைகற் குடிவிலங்கல்
அருமா மறைசொல் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.



வான் வந்து வணங்கு திருவெறும்பூர் - தேவர்கள் எறும்பு வடிவில் ஈசனைப் பூசித்த தலம்;
கரு ஆர் வினை தீர் - கருவிற் பிணிக்கும் வினையைத் தீர்க்கும்; (ஆர்த்தல் - பிணித்தல்);
கட்டம் களை கற்குடி விலங்கல் - கஷ்டங்களைப் போக்கும் கற்குடி மலை; (விலங்கல் - மலை;)


திருச்சிராப்பள்ளி (தாயுமானவர் கோயில்), திருவானைக்கா, மூக்கீச்சரம் (உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்), திருவெறும்பூர், திருநெடுங்களம், திருக்கற்குடி (உய்யக்கொண்டான்மலை) - திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள தலங்கள்;



8)
அணிபாற் றுறைதென் பூந்துருத்தி .. ஆலம் பொழில்வண் தாமரையான்
பணிவான் கண்டி யூர்பரவும் .. பத்தர் பிணிதீர் புள்ளமங்கை
மணியார் முடிபத் துடையானை .. மலைக்கீழ் நெரித்து வரமீந்தான்
அணியா மதிசூ டழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.



அணி பாற்றுறை - அழகிய திருப்பாற்றுறை;
தென் பூந்துருத்தி ஆலம்பொழில் - அழகிய திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில்;
வண் தாமரையான் பணி வான் கண்டியூர் - வளமையான தாமரைமேல் இருக்கும் பிரமன் பணிந்தேத்தும் அழகிய திருக்கண்டியூர்; (வான் - அழகு);
பரவும் பத்தர் பிணிதீர் புள்ளமங்கை - துதிக்கின்ற பக்தர்களது பிணிகளைத் தீர்க்கும் திருப்புள்ளமங்கை;
மணி ஆர் முடி பத்து உடையானை மலைக்கீழ் நெரித்து வரம் ஈந்தான் - நவரத்தினக் கிரீடங்கள் திகழும் பத்துத் தலைகளை உடைய இராவணனைக் கயிலைமலையின்கீழே நசுக்கிப் பின் வரம் அளித்தவன்;
அணியா மதிசூடு அழுந்தை அரன் அமரும் பதிகள் அடைவோமே - ஆபரணமாகப் பிறைச்சந்திரனைப் புனைந்தவன், திருவழுந்தூர்ச் சிவபெருமான் விரும்பி உறையும் பதிகள்; அவற்றைச் சென்றடைவோமாக.


கண்டியூர் - அட்டவீரட்டத்தலங்களுள் ஒன்று. பிரமனின் சிரத்தைக் கொய்த தலம்;


திருப்பாற்றுறை, திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், திருக்கண்டியூர், புள்ளமங்கை (பசுபதிகோவில்) - சோழநாட்டுத் தலங்கள்;



9)
கோலக் கொட்டை யூர்நன்னீர்க் .. கொள்ளி டஞ்சூழ் வைகாவூர்
ஏலப் பொழிலார் விசயமங்கை .. ஏரார் புறம்ப யமின்னம்பர்
நீல வண்ணன் மலர்மேலான் .. நேட நின்ற பரஞ்சோதி
ஆலம் உண்ட அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.



கோலம் - அழகு;
ஏலம் - வாசனை; ( நம்பியாண்டார் நம்பி அருளிய "ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்" - 11.38.3 - "ஏலப் பொழிலணி சண்பையர் கோனை ")
ஏர் - அழகு; நன்மை;
நீலவண்ணன் மலர்மேலான் நேட நின்ற பரஞ்சோதி - கரிய நிறமுடைய திருமாலும் தாமரைமேல் உறையும் பிரமனும் தேடுமாறு ஓங்கிய மேலான ஒளிவடிவிவினன்;


கொட்டையூர், திருவைகாவூர், விசயமங்கை (விஜயமங்கை), திருப்புறம்பயம் (திருப்புறம்பியம்), இன்னம்பர் (இன்னம்பூர்) - கும்பகோணத்தைச் சுற்றியுள்ள தலங்கள்.



10)
அஞ்செ ழுத்தே நினைசண்டிக் .. கருள்பு ரிந்த ஆப்பாடி
மஞ்சு வளம்சேர் சேய்ஞலூர் .. வயல்சூழ் தேவன் குடிவியலூர்
வெஞ்சொல் பேசித் திரிகின்ற .. மிண்டர்க் கருளான் அடியாரை
அஞ்சல் என்னும் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.



சண்டி - சண்டேசுர நாயனார்;
அஞ்செழுத்தே நினை சண்டி - பெரியபுராணத்தில் இவ்வரலாற்றைக் காண்க. ("அவர் தந்தையார் கையில் கொண்ட தண்டால் மகனார் திருமுதுகில் புடைத்துக் கடுஞ்சொற்களைக் கூறிய பொழுதும், பெருமானுக்குத் தொண்டுபுரிந்து கொண்டிருக்கும் சிறிய பெருந்தகையார், தம் பெருமானுடைய வழிபாட்டில் திளைத்திருந்தமையால் வேறொன்றும் அறிந்திலராயினர்");
மஞ்சு - மேகம்;
மிண்டர் - கல்நெஞ்சர்;
அடியாரை 'அஞ்சல்' என்னும் அழுந்தை அரன் - பக்தர்களை 'அஞ்சேல்' என்று அபயம் அளித்துக் காக்கும் திருவழுந்தூர் அரன்;


திருவாப்பாடி (திருவாய்ப்பாடி), சேய்ஞலூர் (சேங்கனூர்), திருந்துதேவன்குடி (கற்கடேஸ்வரர் கோயில்), திருவியலூர் (திருவிசநல்லூர்) - கும்பகோணத்தைச் சுற்றியுள்ள தலங்கள்.



11)
எயிறு திகழ்வெள் ளேனமடி .. ஏத்த நின்ற சிவபுரம்சீர்
பயிலு கின்ற கலயநல்லூர் .. பழனஞ் சூழ்ந்த கருக்குடிபூங்
குயிலார் சோலைக் குளிர்நறையூர்க் .. கோயில் சித்தீச் சரமெல்லாம்
அயிலார் சூலன் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.



எயிறு - பன்றிக்கொம்பு; பல்;
வெள் ஏனம் - வெண்பன்றி;
பயில்தல் - பொருந்துதல்; தங்குதல்;
பழனம் - வயல்;
பூங்குயில் ஆர் சோலைக் குளிர் நறையூர்க் கோயில் சித்தீச்சரம் - அழகிய குயில்கள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த குளிர்ச்சி பொருந்திய நறையூரில் உள்ள சித்தீச்சரம் என்ற கோயில்;
அயில் ஆர் சூலன் - கூர்மை மிக்க திரிசூலத்தை ஏந்தியவன்;


* திருமால் பன்றி உருவில் ஈசனை வழிபட்ட தலம் சிவபுரம். (தலபுராணத்திற் காண்க).
(சம்பந்தர் தேவாரம் - 1.112.2 - "வென்றிகொ ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள் சென்றடி வீழ்தரு சிவபுரமே." - வெண்பன்றி - திருமாலாகிய சுவேதவராகம். )


சிவபுரம், திருக்கலயநல்லூர் (சாக்கோட்டை), கருக்குடி (மருதாநல்லூர்), நறையூர்ச் சித்தீச்சரம் (நறையூர்ச் சித்தநாதேஸ்வரர் கோயில்) - கும்பகோணத்தைச் சுற்றியுள்ள தலங்கள்.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) அழுந்தூர் - திருவழுந்தூர் (தேரழுந்தூர்) - வேதபுரீஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=222
-------------- --------------

No comments:

Post a Comment