Wednesday, June 10, 2026

P.502 - நீடூர் - மாயனுக்கு ஆழி

2020-04-27

P.502 - நீடூர்

(மயிலாடுதுறை அருகுள்ள தலம்)

------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு; விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம்)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.23.1 - "பத்தனாய்ப் பாட மாட்டேன்")


1)

மாயனுக் காழி ஈந்த .. வள்ளலை நீறு பூத்த

தீயன மேனி யானைச் .. சினவிடை ஊர்தி யானை

வேயன தோளி வண்டார் .. மென்குழல் மாதி னுக்கு

நேயனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


மாயனுக்கு ஆழி ஈந்த வள்ளலை - திருமாலுக்குச் சக்கரத்தை அருளிய வள்ளலை; (ஆழி - சக்கரம்);

நீறு பூத்த தீ அன மேனியானைச் - நீறு பூத்த நெருப்புப் போலச் செம்மேனிமீது திருநீற்றைப் பூசியவனை; (அன - அன்ன - ஒத்த);

சினவிடை ஊர்தியானை - சினக்கின்ற இடபத்தை வாகனமாக உடையவனை;

வேய் அன தோளி வண்டு ஆர் மென்குழல் மாதினுக்கு நேயனை - மூங்கில் போன்ற புஜங்களை உடையவளும் வண்டுகள் மொய்க்கும் மென்மையான கூந்தலை உடையவளுமான உமைக்கு அன்புடையவனை; (* வேயனதோளி - இத்தலத்து இறைவி திருநாமம் - "வேயுறு தோளியம்மை");

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


2)

சோதியை அரையில் வேங்கைத் .. தோலனைத் திருவு டம்பில்

பாதியை உமைக்க ளித்த .. பண்பனை அந்தம் இல்லா

ஆதியைப் பத்தர்க் காக .. அடல்நமன் தனையு தைத்த

நீதியை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


சோதியை - ஒளிவடிவினை;

அரையில் வேங்கைத்-தோலனைத் - அரையில் புலித்தோலை ஆடையாகக் கட்டியவனை;

திருவுடம்பில் பாதியை உமைக்கு அளித்த பண்பனை - திருமேனியில் பாதியை உமைக்கு அளித்தவனை;

அந்தம் இல்லா ஆதியைப் - ஈறு இல்லாத முதல்வனை;

பத்தர்க்காக அடல்-நமன்தனை உதைத்த நீதியை - மார்க்கண்டேயருக்காக வலிய கூற்றுவனை உதைத்த நீதிவடிவினனை;

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


3)

பாலனைக் கொல்வ தற்குப் .. பரிவிலா தோடி வந்த

காலனைக் காய்ந்த கோனைக் .. கைதொழு சுரர்கள் உய்ய

வேலனைத் தந்த தேவை .. விடத்தினை உண்மி டற்றில்

நீலனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


பாலனைக் கொல்வதற்குப் பரிவு இலாது ஓடி வந்த காலனைக் காய்ந்த கோனைக் - மார்க்கண்டேயரைக் கொல்வதற்காக இரக்கம் இன்றி விரைந்து வந்த காலனை உதைத்து அழித்த தலைவனை;

கைதொழு சுரர்கள் உய்ய வேலனைத் தந்த தேவை - கைதொழுத தேவர்கள் உய்யுமாறு முருகனைத் தந்த தேவனை;

விடத்தினை உண்-மிடற்றில் நீலனை - ஆலகாலத்தை உண்ட கண்டத்தில் நீலநிறம் உடையவனை; (மிடறு - கண்டம்);

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


4)

போற்றிய பகீர தற்காப் .. புரிசடை தன்னில் கங்கை

ஆற்றினைத் தாங்கி நின்ற .. அண்ணலை இளைய வெள்ளை

ஏற்றனை ஊணி ரக்கும் .. ஏந்தலை மார்பிற் சாந்த

நீற்றனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


போற்றிய பகீரதற்காப் புரிசடை-தன்னில் கங்கை-ஆற்றினைத் தாங்கி-நின்ற அண்ணலை - தவம் செய்து வழிபட்ட பகீரதனுக்காக முறுக்கிய சடையில் கங்கைநதியைத் தாங்கிய தலைவனை; (பகீரதற்கா - பகீரதனுக்காக; கடைக்குறை விகாரம்); (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்);

இளைய வெள்ளை ஏற்றனை - இள-வெள்-எருதை வாகனமாக உடையவனை;

ஊண் இரக்கும் ஏந்தலை - பிச்சையேற்கும் பெருமானை;

மார்பில் சாந்த-நீற்றனை - மார்பில் சந்தனம்போல் திருநீற்றைப் பூசியவனை; (அப்பர் தேவாரம் - 4.22.3 - "சடையனார் சாந்த நீற்றர்");

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


5)

மாரனைப் பொடிசெய் தானை .. மாமதில் மூன்றெ ரித்த

வீரனைக் கொடிமேல் வெள்ளை .. விடையனை விரைகொள் கொன்றைத்

தாரனைத் திங்கள் தங்கும் .. சடையினில் அலைக்கும் கங்கை

நீரனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


மாரனைப் பொடி செய்தானை - மன்மதனைச் சாம்பலாக்கியவனை; (மாரன் - காமன்);

மா-மதில் மூன்று எரித்த வீரனைக் - பெரிய முப்புரங்களை எரித்த வீரனை;

கொடிமேல் வெள்ளை விடையனை - வெண்ணிற இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவனை;

விரைகொள் கொன்றைத்-தாரனைத் - மணம் கமழும் கொன்றைமாலையை அணிந்தவனை;

திங்கள் தங்கும் சடையினில் அலைக்கும் கங்கை-நீரனை - சந்திரனை அணிந்த சடையில் அலைக்கின்ற கங்கையாற்றை உடையவனை;

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


6)

அத்தனை வன்றொண் டர்க்கா .. அல்லினில் தூது சென்ற

பித்தனைத் தேவர் ஏத்தும் .. பெரியனை முடியின் மீது

மத்தனை மழுவாள் சூலம் .. மான்மறி அங்கை ஏந்தும்

நித்தனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


அத்தனை - தந்தையை;

வன்தொண்டர்க்கா அல்லினில் தூது சென்ற பித்தனைத் - சுந்தரருக்காக இரவில் திருவாரூரில் தூது சென்ற பேரன்பனை; (வன்றொண்டர்க்கா - வன்தொண்டர் என்ற பெயருடைய சுந்தரருக்காக); (அல் - இரவு);

தேவர் ஏத்தும் பெரியனை - தேவர்கள் துதிக்கும் பெரியவனை;

முடியின் மீது மத்தனை - திருமுடிமேல் ஊமத்தமலரைச் சூடியவனை; (மத்தம் - ஊமத்தமலர்); (அப்பர் தேவாரம் - 5.4.3 - "மத்தனைம் மதயானை உரித்த");

மழுவாள் சூலம் மான்மறி அங்கை ஏந்தும் நித்தனை - கையில் மழு, சூலம், மான்கன்று இவற்றை ஏந்திய அழிவற்றவனை;

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


7)

அருவனை அன்போ டேத்தும் .. அடியவர் விரும்பு கின்ற

உருவனை மின்ம ருங்குல் .. உமையவள் பாக மாகும்

ஒருவனை உலப்பி லானை .. ஒற்றைவெள் விடைய தேறும்

நிருபனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


அருவனை - உருவம் அற்றவனை;

அன்போடு ஏத்தும் அடியவர் விரும்புகின்ற உருவனை - பக்தியோடு வணங்கும் அடியார்கள் எவ்வுருவை எண்ணி வழிபடுகின்றார்களோ அவ்வுருவம் உடையவனை;

மின்-மருங்குல் உமையவள் பாகம் ஆகும் ஒருவனை - மின்னல் போன்ற நுண்ணிடை உடைய உமையை ஒரு பாகமாக உடைய ஒப்பற்றவனை; (மின் - மின்னல்);

உலப்பு இலானை - அழியாதவனை;

ஒற்றை வெள்-விடையது ஏறும் நிருபனை - ஒப்பற்ற வெள்ளை இடபத்தை வாகனமாக உடைய அரசனை; (நிருபன் - அரசன்);

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


8)

யோசனை சிறிதும் இன்றி .. உயர்மலை தன்னைப் பேர்த்த

நீசனை விரலை ஊன்றி .. நெரித்தொரு பெயரும் ஈந்த

ஈசனை எழுத்தஞ் சோதி .. இணையடி போற்றி னார்க்கு

நேசனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


யோசனை சிறிதும் இன்றி உயர்மலை-தன்னைப் பேர்த்த நீசனை விரலை ஊன்றி நெரித்து, ரு பெயரும் ஈந்த ஈசனை - சிறிதும் யோசியாமல் கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான தசமுகனைத் திருப்பாதவிரலை ஊன்றி நசுக்கி, (அவன் அழுது இசைபாடக் கேட்டு இரங்கி) அவனுக்கு (நீண்ட ஆயுள், வாள் இவற்றோடு) "இராவணன்" (அழுதவன்) என்ற பெயரையும் தந்த ஈசனை; (நீசன் - இழிந்தோன்; அறிவிலி); (நெரித்தல் - நசுக்குதல்); (பெயரும் - உம் - எச்சவும்மை);

எழுத்து-அஞ்சு ஓதி இணையடி போற்றினார்க்கு நேசனை - திருவைந்தெழுத்தை ஓதி இருதிருவடிகளை வழிபடும் பக்தர்களுக்கு அன்பு உடையவனை;

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


9)

குழலினை ஊது மாலும் .. குளிர்மலர் மேலி னானும்

கழலிணை ஏத்து மாறு .. கனலுரு ஆயி னானை

மழையன கண்டத் தானை .. மறைவிரித் தருளும் ஆல

நிழலனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


குழலினை ஊது மாலும் குளிர்மலர் மேலினானும் - கிருஷ்ணனாக அவதரித்துப் புல்லாங்குழலை ஊதிய திருமாலும் குளிர்ந்த தாமரைப்பூவின்மேல் இருக்கும் பிரமனும்;

கழலிணை ஏத்துமாறு கனலுரு ஆயினானை - தன் இருதிருவடிகளைப் போற்றும்படி ஜோதியாகி நின்றவனை; (கனல் - தீ);

மழை அன கண்டத்தானை - மேகம் போன்ற கரிய கண்டத்தை உடையவனை;

மறை விரித்தருளும் ஆல-நிழலனை - வேதப்பொருளை உபதேசித்த, கல்லாலமரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தியை; (விரித்தல் - உபதேசித்தல்); (ஆல் - கல்லாலமரம்);

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


10)

பொருத்தமில் வார்த்தை பேசும் .. புன்னெறி யாளர்க் கில்லான்

திருத்திகழ் நீறு பூசும் .. சீலர்கள் தமக்கு நல்லான்

அருத்தனை அமரர் கோனை .. அரையினில் அரவம் ஆர்த்த

நிருத்தனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


பொருத்தம் இல் வார்த்தை பேசும் புன்னெறியாளர்க்கு இல்லான் - பொருத்தமற்ற வார்த்தைகளைப் பேசுகின்ற சிறுநெறியாளர்களுக்கு (அருள்) இல்லாதவன்;

திருத் திகழ் நீறு பூசும் சீலர்கள்-தமக்கு நல்லான் - திருவுடைய திருநீற்றைப் பூசும் சீலர்களுக்கு நன்மை செய்பவன்;

அருத்தனை - அந்த மெய்ப்பொருளானவனை; வேதத்தின் பொருளானவனை; (அர்த்தம் - பொருள்); (சம்பந்தர் தேவாரம் - 1.111.1 - "அருத்தனை அறவனை அமுதனை நீர்")

அமரர்-கோனை - தேவர்கள்-தலைவனை;

அரையினில் அரவம் ஆர்த்த நிருத்தனை - அரையில் பாம்பைக் கச்சாகக் கட்டிய கூத்தனை; (ஆர்த்தல் - கட்டுதல்); (நிருத்தன் - கூத்தன்);

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


11)

பொருப்பினை ஏந்தி மூன்று .. புரமெரித் தானை ஒற்றை

மருப்பினைக் காட்டு கின்ற .. மைந்தனுக் கத்தன் தன்னைக்

கருப்புவில் ஏந்தி எய்த .. காமனைக் காய்ந்த கண்ணில்

நெருப்பனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


பொருப்பினை ஏந்தி மூன்று புரம் எரித்தானை - மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை எரித்தவனை; (பொருப்பு - மலை);

ஒற்றை மருப்பினைக் காட்டுகின்ற மைந்தனுக்கு அத்தன்-தன்னைக் - ஒரு தந்தத்தை உடைய விநாயகனுக்குத் தந்தையை; (மருப்பு - தந்தம்); (அத்தன் - தந்தை);

கருப்புவில் ஏந்தி எய்த காமனைக் காய்ந்த கண்ணில் நெருப்பனை - கரும்பை வில்லாக ஏந்தி கணை எய்த மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணில் நெருப்பை உடையவனை; (கருப்புவில் - கரும்பால் ஆன வில்);

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


N.058 - திருநாவுக்கரசர் துதி - கல்லே கடலில்

2020-04-17

N.058 - திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2020

----------------


1) --- (சந்தக் கலிவிருத்தம் - தானா தனனா தனனா தனனா) ---

கல்லே கடலிற் புணையாய்க் கரைசேர்

நல்லார் நமையாள் திருநா வரசர்

பொல்லா நமனே வரினும் வெருவொன்

றில்லார் அவர்தாள் இணைவா ழியவே.


கல்லே கடலில் புணையாய்க் கரைசேர் நல்லார் - (ஆழ்த்துவதற்காகச் சமணர்கள்) பிணித்த கல்லே கடலில் ஒரு தெப்பம் ஆகி மிதக்கக், கரைசேர்ந்து உய்ந்த நல்லவர்; (புணை - தெப்பம்);

நமை ஆள் திருநாவரசர் - நம்மை ஆளும் திருநாவுக்கரசர்; (நமை - நம்மை);

பொல்லா நமனே வரினும் வெரு ஒன்று இல்லார் - கொடிய கூற்றுவனே வந்தாலும் சிறிதும் அச்சம் இல்லாதவர்; (வெரு / வெருவு - அச்சம்); (ஒன்று - ஒன்றும்; உம் தொக்கது); (அப்பர் தேவாரம் - 6.98.1 - "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்");

அவர் தாள்இணை வாழியவே - அவரது இருதிருவடிகள் வாழ்க.


2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

செப்பரிய செயல்செய்த திருவுடைய இருவரைக்கண்

டப்பொழுதே அப்பூதி அடிகள்மகன் உயிர்பெறவே

ஒப்பரிய தமிழ்சொன்ன உயர்வாக்கின் மன்னரடி

எப்பொழுதும் நிலையாக எம்மனத்தில் இருப்பனவே.


செப்பரிய செயல் செய்த திரு உடைய இருவரைக் கண்டு - சொல்வதற்கு அரிய செயலைச் செய்த திரு மிக்க அப்பூதி-அடிகளின் மனைவியையும் அவரையும் பார்த்து மனம் நெகிழ்ந்து; (செப்பரிய - செப்ப அரிய; தொகுத்தல் விகாரம்);

அப்பொழுதே அப்பூதி-அடிகள்-மகன் உயிர் பெறவே - (பாம்பின் விடத்தால் மாண்ட) அப்பூதி-அடிகளின் மகன் உடனே மீண்டும் உயிர்பெற்று எழும்படி;

ஒப்பு அரிய தமிழ் சொன்ன உயர் வாக்கின்மன்னர் அடி - ஒப்பற்ற அரிய தமிழ்ப்-பாமாலை பாடியருளிய உயர்ந்த திருநாவுக்கரசரது திருவடிகள்;

எப்பொழுதும் நிலையாக எம் மனத்தில் இருப்பனவே - எங்கள் மனத்தில் நீங்காமல் எப்பொழுதும் இருக்கின்றன;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.501 - சாய்க்காடு - குயிலினும் இன்மொழியாள்

2020-03-05

P.501 - சாய்க்காடு (சாயாவனம்)

-----------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.41.1 - "மண்புகார் வான்புகுவர்")

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

குயிலினுமின் மொழியாளோர் கூறுமகிழ் கோமானே

தயிர்நறுநெய் பாலாடும் சாய்க்காட்டெம் பெருமானே

அயிலுடைய சூலத்தாய் அடியேனுக் கிரங்கிவினைச்

சயிலமது பொடிசெய்யாய் தண்மதியார் சடையானே.


குயிலினும் இன்மொழியாள் ஓர் கூறு மகிழ் கோமானே - குயிலினும் இனிய மொழி பேசும் உமையை ஒரு கூறாக விரும்பிய தலைவனே; (கோமான் - அரசன்; தலைவன்); (* குயிலினும் இன்மொழியம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்);

தயிர் நறுநெய் பால் ஆடும் சாய்க்காட்டு எம் பெருமானே - தயிர், மணம் மிக்க நெய், பால் இவற்றால் அபிஷேகம் பெறுகின்ற, திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

அயிலுடைய சூலத்தாய் - கூர்மை பொருந்திய சூலத்தை ஏந்தியவனே; (அயில் - கூர்மை);

அடியேனுக்கு இரங்கி வினைச்-சயிலம் அது பொடி-செய்யாய் - உன் அடியவனான எனக்கு இரங்கி மலை போன்று இருக்கும் என் வினையை அழித்து அருள்வாயாக; (சயிலம் - சைலம் - மலை);

தண்-மதி ஆர் சடையானே - சடைமேல் குளிர்ந்த சந்திரனைச் சூடியவனே; (சம்பந்தர் தேவாரம் - 3.49.6 - "மந்தரம் அன பாவங்கள் மேவிய பந்தனையவர்தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை");


2)

இயற்பகையே ஓலமென எடுத்தழைத்து விடையின்மேல்

கயற்கண்ணி தன்னோடும் காட்சிதந்த கண்ணுதலே

தயைக்கடலே தண்பொழில்சூழ் சாய்க்காட்டெம் பெருமானே

துயர்க்கடலில் தோணியெனத் துணையாகிக் காத்தருளே.


"இயற்பகையே ஓலம்" என எடுத்து அழைத்து விடையின்மேல் கயற்கண்ணி-தன்னோடும் காட்சிதந்த கண்ணுதலே - "இயற்பகையே ஓலம்" என்று உரத்துக் கூவி அவரைத் துணைக்கு அழைத்து, இடபவாகனத்தின்மீது கயல் போன்ற கண்ணையுடைய உமையோடு அவருக்குக் காட்சியளித்த நெற்றிக்கண்ணனே; (எடுத்தல் - உரத்துச் சொல்லுதல்); (* இயற்பகை நாயனாருக்கு ஈசன் அருள்புரிந்த தலம் இது); (பெரியபுராணம் - இயற்பகை நாயனார் புராணம் - 12.3.29 - "இயற்பகை முனிவா ஓலம் ஈண்டுநீ வருவாய் ஓலம்");

தயைக்கடலே - கருணைக்கடலே;

தண்-பொழில் சூழ் சாய்க்காட்டு எம் பெருமானே - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

துயர்க்கடலில் தோணி எனத் துணை ஆகிக் காத்தருளே - துன்பக்கடலில் முழுகும் எனக்கு ஒரு படகு போல நீ வந்து என்னைக் காப்பாயாக;


3)

செங்கணுடைச் செம்பியர்கோன் செய்கோயில் வண்டினங்கள்

தங்கிமகிழ் தண்பொழில்சூழ் சாய்க்காட்டெம் பெருமானே

அங்க(ம்)மறை நாலோதும் அங்கணனே செஞ்சடையிற்

கங்கையனே கைதொழுதேன் கடுவினைதீர்த் தருளாயே.


செங்கணுடைச் செம்பியர்-கோன் செய் கோயில் சாய்க்காட்டு எம் பெருமானே - சிவந்த கண்களையுடைய சோழ-அரசனான கோச்செங்கட்சோழன் கட்டிய கோயிலான திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே; (செம்பியர் - சோழர்); (* கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்று திருச்சாய்க்காடு); (சம்பந்தர் தேவாரம் - 2.23.5 - "செங்கட் பெயர்கொண்டவன் செம்பியர்கோன் அங்கட் கருணை பெரிதாயவனே");

வண்டினங்கள் தங்கி மகிழ் தண்-பொழில் சூழ் சாய்க்காட்டு எம் பெருமானே - வண்டுகள் எப்பொழுதும் உலாவுகின்ற குளிர்ந்த சோலை சூழ்ந்த திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

அங்கம் மறை-நாலு ஓதும் அங்கணனே - நால்வேதங்களையும் ஆறங்கங்களையும் பாடியருளிய, அருள்நோக்கம் உடையவனே;

செஞ்சடையில் கங்கையனே - சிவந்த சடையில் கங்கையைத் தரித்தவனே;

கைதொழுதேன் கடுவினை தீர்த்து அருளாயே - உன்னைக் கைகூப்பி வணங்கும் (/வணங்குகின்றேன்) என் கொடிய வினையைத் தீர்த்து அருள்வாயாக; (கடுமை - கொடுமை);


4)

பாண்டவன்செய் தவங்கண்டு பாசுபதம் ஈந்தவனே

தாண்டவனே தண்பொழில்சூழ் சாய்க்காட்டெம் பெருமானே

மாண்டவர்தம் எலும்பணியும் மாதேவா மண்மீது

மீண்டுவரச் செய்வினையை வீட்டியெனைக் காத்தருளே.


பாண்டவன் செய் தவம் கண்டு பாசுபதம் ஈந்தவனே - அர்ஜுனன் செய்த தவத்தைக் கண்டு அவனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருளியவனே;

தாண்டவனே - தாண்டவம் ஆடும் கூத்தனே;

தண்-பொழில் சூழ் சாய்க்காட்டு எம் பெருமானே - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

மாண்டவர்தம் எலும்பு அணியும் மாதேவா - இறந்த பிரமவிஷ்ணுக்களின் எலும்பை அணியும் மஹாதேவனே;

மண்மீது மீண்டு-வரச்செய் வினையை வீட்டி எனைக் காத்தருளே - இம்மண்ணின்மேல் மீண்டும் பிறவியைக் கொடுக்கின்ற வினையை அழித்து என்னைக் காப்பாயாக; (வீட்டுதல் - அழித்தல்);


5)

பெண்சேரும் மேனியுடைப் பெருமையினாய் வண்டறையும்

தண்சோலை புடைசூழ்ந்த சாய்க்காட்டெம் பெருமானே

பண்சேரும் தமிழ்மகிழும் பண்பினனே எண்குணனே

கண்சேரும் நெற்றியினாய் கைதொழுதேன் காத்தருளே.


பெண் சேரும் மேனியுடைப் பெருமையினாய் - உமையைத் திருமேனியில் ஒரு பங்காக உடைய பெருமையை உடையவனே;

வண்டு அறையும் தண்-சோலை புடை சூழ்ந்த சாய்க்காட்டு எம் பெருமானே - வண்டுகள் ஒலிக்கும் குளிர்ந்த சோலை சூழ்ந்த திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

பண் சேரும் தமிழ் மகிழும் பண்பினனே - பண் பொருந்தப் பாடப்பெறும் தமிழ்ப்பாமாலைகளை விரும்பியவனே;

எண்குணனே - எட்டுக்குணங்கள் உடையவனே; (சுந்தரர் தேவாரம் - 7.40.3 - "இறையவனை மறையவனை எண்குணத்தினானை");

கண் சேரும் நெற்றியினாய் - நெற்றிக்கண்ணனே;

கைதொழுதேன் காத்தருளே - உன்னைக் கைகூப்பி வணங்குகின்றேன்; அடியேனைக் காப்பாயாக;


6)

கடலிடையோர் மலையூன்றிக் கடைந்தவர்தம் கலக்கமற

விடமதனை அமுதுண்டு மிடறுதனில் கரந்தவனே

தடமதில்மூன் றெய்தவனே சாய்க்காட்டெம் பெருமானே

படர்சடைமேல் பாம்புடையாய் பழவினைதீர்த் தருளாயே.


கடலிடை ஓர் மலை ஊன்றிக் கடைந்தவர்தம் கலக்கம் அற விடம்-அதனை அமுதுண்டு மிடறுதனில் கரந்தவனே - பாற்கடலில் ஒரு மலையை மத்தாக ஊன்றிக் கடைந்தவர்களது அச்சம் தீர ஆலகாலத்தை உண்டு கண்டத்தில் மறைத்தவனே; (மிடறு - கழுத்து); (கரத்தல் - மறைத்தல்; ஒளித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.50.3 - "வல்விடம் கரந்த கண்டத்தினான்");

தடமதில் மூன்று எய்தவனே - பெரிய மூன்று கோட்டைகளை ஒரு கணையால் எய்து அழித்தவனே; (தடம் - பெருமை; அகலம்);

சாய்க்காட்டு எம் பெருமானே - திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

படர்சடைமேல் பாம்பு உடையாய் - படரும் சடையின்மேல் பாம்பை அணிந்தவனே;

பழவினை தீர்த்தருளாயே - என் பழவினையைத் தீர்த்து அருள்வாயாக;


7)

மலைமாது மணவாளா மணம்வீசும் கொன்றைமலர்

தலைமாலை புனைந்தவனே சாய்க்காட்டெம் பெருமானே

சிலையாக மலையேந்தித் திரிபுரத்தை எரித்தவனே

கலைமானோர் கையினனே கடுவினைதீர்த் தருளாயே.


மலைமாது மணவாளா - மலைமங்கையான உமைக்குக் கணவனே;

மணம் வீசும் கொன்றைமலர் தலைமாலை புனைந்தவனே - வாசனை கமழும் கொன்றைமலரையும் மண்டையோட்டு-மாலையையும் அணிந்தவனே;

சாய்க்காட்டு எம் பெருமானே - திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

சிலையாக மலை ஏந்தித் திரிபுரத்தை எரித்தவனே - மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை எரித்தவனே; (சிலை - வில்);

கலைமான் ஓர் கையினனே - ஒரு கையில் மானை ஏந்தியவனே;

கடுவினை தீர்த்து அருளாயே - என் கொடிய வினையைத் தீர்த்து அருள்வாயாக; (கடுமை - கொடுமை);


8)

தோள்வலியை உன்னிமலை தூக்கியவன் கத்தியழத்

தாள்விரலை ஊன்றியருள் சாய்க்காட்டெம் பெருமானே

வேள்விரையார் கணையெய்ய விழித்தவனைச் சுட்டவனே

நாள்கணிகூற் றடைந்தென்னை நலியாமுன் காத்தருளே.


தோள்வலியை உன்னி மலை தூக்கியவன் கத்தி அழத் தாள்விரலை ஊன்றி அருள் - தன் புஜபலத்தை எண்ணிக் கயிலைமலையை பெயர்த்த இராவணன் கத்தி அழும்படி திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கி அருளிய;

சாய்க்காட்டு எம் பெருமானே - திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

வேள் விரை ஆர் கணை எய்ய, விழித்து அவனைச் சுட்டவனே - மன்மதன் வாசனை மிக்க மலரம்பை எய்த பொழுது நெற்றிக்கண்ணால் பார்த்து அவனைச் சுட்டெரித்தவனே;

நாள் கணி- கூற்று அடைந்து என்னை நலியாமுன் காத்தருளே - ஆயுளைக் கணக்கிடும் காலன் என்னை அடைந்து துன்புறுத்துவதன் முன்னமே அடியேனைக் காப்பாயாக; (கணித்தல் - கணக்கிடுதல்); (நலித்தல் - வருத்துதல்);


9)

நாரணனு(ம்) நான்முகனு(ம்) நண்ணவொணாப் பரஞ்சுடரே

தாரணியு(ம்) மார்பினனே சாய்க்காட்டெம் பெருமானே

வாரணியு(ம்) முலைமங்கை வாமத்தாய் வானவர்க்காக்

காரணியும் கண்டத்தாய் கடுவினைதீர்த் தருளாயே.


நாரணனும் நான்முகனும் நண்ண ஒணாப் பரஞ்சுடரே - விஷ்ணு பிரமன் இவர்களால் அணுக ஒண்ணாத மேலான ஜோதியே; (நண்ணுதல் - நெருங்குதல்); (ஒணா - ஒண்ணாத);

தார் அணியும் மார்பினனே - மார்பில் (கொன்றை, அரவ) மாலை அணிந்தவனே;

சாய்க்காட்டு எம் பெருமானே - திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

வார் அணியும் முலை-மங்கை வாமத்தாய் - கச்சு அணிந்த முலையுடைய உமையை இடப்பக்கத்தில் கூறாக உடையவனே; (வார் - முலைக்கச்சு);

வானவர்க்காக் கார் அணியும் கண்டத்தாய் - தேவர்களுக்காக (ஆலகாலத்தை உண்டு) கருமையைக் கண்டத்தில் அணிந்தவனே;

கடுவினை தீர்த்து அருளாயே - என் கொடிய வினையைத் தீர்த்து அருள்வாயாக; (கடுமை - கொடுமை);


10)

மெய்யறியா வீணருரை வெற்றுரையில் வீழேன்மின்

தையலொரு பங்குடைய சாய்க்காட்டெம் பெருமானார்

கையிலணி மலரேந்திக் கழலிட்டுத் தொழுமன்பர்

மையலறுத் தவரையின்ப வானத்தில் வைப்பாரே.


மெய் அறியா வீணர் உரை வெற்றுரையில் வீழேன்மின் - தத்துவம் ஒன்றும் அறியாத வீணர்கள் சொல்லும் பொருளற்ற பேச்சில் நீங்கள் மயங்கவேண்டா; (ஏல் - எதிர்மறை ஏவல்ஒருமை விகுதி); (மின் - ஏவற்பன்மை விகுதி);

தையல் ஒரு பங்கு உடைய சாய்க்காட்டு எம் பெருமானார் - உமையை ஒரு பங்காக உடையவரும் திருச்சாய்க்காட்டில் உறைபவருமான எம்பெருமானார்; (தையல் - பெண்);

கையில் அணி-மலர் ஏந்திக் கழல் இட்டுத் தொழும் அன்பர் மையல் அறுத்து அவரை இன்ப-வானத்தில் வைப்பாரே - கையில் அழகிய மலரை ஏந்தித் திருவடியில் தூவி வழிபடும் பக்தர்களது மயக்கத்தை நீக்கி அவர்களை இன்பம் மிக்க சிவலோகத்தில் வைப்பார்; (மையல் - மயக்கம்); (சம்பந்தர் தேவாரம் - 1,80.2 - "பின்தாழ் சடையானை மறப்பிலார் கண்டீர் மையல் தீர்வாரே");


11)

சங்குமணி கையுடையார் தண்மதுவுண் டளியினங்கள்

தங்குமணி பொழில்சூழ்ந்த சாய்க்காட்டெம் பெருமானார்

எங்குமணி யாகப்பாம் பிலங்குமிறை கரியவொளி

பொங்குமணி கண்டத்தர் பொன்னடிகள் புகலாமே.


சங்கும் அணி கை உடையார் - கையில் வளையலும் அணிந்தவர் - அர்த்தநாரீஸ்வரர்; (சங்கு - வளையல்);

தண்-மது உண்டு அளியினங்கள் தங்கும் அணி-பொழில் சூழ்ந்த சாய்க்காட்டு எம் பெருமானார் - குளிர்ந்த தேனை உண்டு வண்டுகள் உலாவுகின்ற அழகிய சோலை சூழ்ந்த திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானார்;

எங்கும் அணியாகப் பாம்பு இலங்கும் இறை - திருமேனியில் எங்கும் ஆபரணம்போல் பாம்புகள் திகழும் இறைவர்;

கரிய ஒளி பொங்கு மணிகண்டத்தர் - (ஆலகாலத்தை உண்டு) ஒளிவீசுகின்ற நீலமணி விளங்கும் கண்டத்தை உடையவர்;

பொன்னடிகள் புகல் ஆமே - அப்பெருமானாரின் பொன் போன்ற திருவடிகள் நமக்குப் புகலிடம் ஆகும்; (புகல் - அடைக்கலம்; சரண்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------