Thursday, August 27, 2015

02.01 – ஆரூர் - (திருவாரூர்)

02.01 – ஆரூர் - (திருவாரூர்)



2010-10-18
திருவாரூர்
"ஆரூர் அரன்தாள்
----------------------
(அறுசீர் விருத்தம் - '5 மா + மாங்காய்')
(சம்பந்தர் தேவாரம் - 1.67.1 - “வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளை யெருதேறிப்”)



1)
காக்கும் நற்றாள் அடியார்க் கிடர்செய் காலன் அவன்மாளத்
தூக்கும் பொற்றாள் தூநீ றணிந்தார் தொல்லை வினையெல்லாம்
தீர்க்கும் திருத்தாள் ஆடல் செய்யும் செம்மை திகழுந்தாள்
ஆர்க்கும் கழலை அணிந்த ஐயன் ஆரூர் அரன்தாளே.



ற்றாள் - நல்ல திருவடி;
பொற்றாள் - பொன்னடி;
தூநீறு - தூய திருநீறு;
தொல்லை வினை - பழைய வினை;
ஆடல் செய்யும் செம்மை திகழுந்தாள் - ஆடல் செய்யும் தாள், செம்மை திகழும் தாள்;
ஆர்க்கும் கழல் - ஒலிக்கும் வீரக்கழல்;



2)
முன்பு தேரில் ஏறி அச்சை முரியச் செய்யுந்தாள்
வம்பு நாறும் மலர்கள் தூவி வானோர் வணங்குந்தாள்
துன்பம் போக்கும் இன்பம் ஆக்கும் துதித்துப் பணிகின்ற
அன்பர் நெஞ்சை அகலா திருக்கும் ஆரூர் அரன்தாளே.



முன்பு தேரில் ஏறி அச்சை முரியச் செய்யும் தாள் - முப்புரம் எரித்த வரலாற்றைக் காண்க;;
வம்பு நாறும் - வாசனை கமழும்;
அடிகள் 3-4: "துன்பம் போக்கும் தாள்; இன்பம் ஆக்கும் தாள்; துதித்துப் பணிகின்ற
அன்பர் நெஞ்சை அகலாது இருக்கும் ஆரூர் அரன் தாள்” என்று இயைத்துப் பொருள் காண்க;.



3)
சிந்தை செய்யும் பத்தர் எல்லாம் தினமும் வணங்குந்தாள்
சந்தம் பாடு சண்பை வேந்தர் தமிழால் பரவுந்தாள்
கந்தம் கமழும் தாம ரைத்தாள் காதல் செய்வார்கட்(கு)
அந்தம் இல்லா இன்பம் நல்கும் ஆரூர் அரன்தாளே.



சந்தம் பாடு சண்பை வேந்தர் தமிழால் பரவும் தாள் - பக்தர்கள் எல்லாம் சண்பை நகரில் அவதரித்த திருஞான சம்பந்தரின் சந்தத் தமிழான தேவாரத்தால் போற்றும் திருவடி; ("முன்னம் சம்பந்தர் சந்தத் தமிழ் பாடிப் போற்றிய திருவடி" என்றும் பொருள் கொள்ளலாம்);
(பரவுதல் - துதித்தல்);
கந்தம் - வாசனை;



4)
பூவைப் போலப் பொலிந்தி ருக்கும்; போற்றி செய்வார்தம்
பாவம் எல்லாம் எஞ்சல் இன்றிப் பறையச் செய்யுந்தாள்
சேவை செய்து மகிழ்ந்தி ருக்கும் சித்தத் தவர்தேவை
யாவை யுந்தீர்த் தருளும் செல்வன் ஆரூர் அரன்தாளே.



எஞ்சல் - எஞ்சுதல் - மிச்சம் இருத்தல்;
பறைதல் - அழிதல்;
சித்தத்தவர் - மனம் உடையவர்;



5)
வண்டி னங்கள் வந்து தேனை மாந்தும் மலரொக்கும்;
அண்டும் அமரர் அல்லல் போக்கி அமுதை அளிக்குந்தாள்
பண்டை நாளொன் றாய்நிற் குந்தாள் பலிக்கு நடக்குந்தாள்
அண்டம் எல்லாம் கடந்து நின்ற ஆரூர் அரன்தாளே.



மாந்துதல் - உண்ணுதல்;
அண்டும் அமரர் - அடைக்கலம் புகுந்த தேவர்கள்.
அமுதை அளிக்கும் தாள் - ஈசன் தான் நஞ்சை உண்டு மரர்களுக்கு அமுதத்தை அளித்ததைச் சுட்டியது.
பண்டைநாள் - முன்னொருநாள்;
ஒன்றாய் நிற்கும் தாள் - ஏகபாதர் மூர்த்தத்தைச் சுட்டியது;
(அப்பர் தேவாரம் - 6.6.5 - 'ஒருகாலத் தொன்றாகி நின்றவடி' - படைப்புக்காலத்தில் இறைவர் ஒரு திருவடியினராய் ( ஏகபாதராய் ) நின்றிருந்தார்);
பலி - பிச்சை; (பலிக்கு நடக்கும் தாள் - பிக்ஷாடனர் கோலத்தைச் சுட்டியது;)
அண்டம் கடந்தவன் - இப்பிரபஞ்சத்தின் உள்ளும் புறமும் உள்ளவன்.



6)
பன்றிப் பின்போய்ப் பார்த்த னுக்குப் படையை அருளுந்தாள்
மன்று தனிலும் மயானம் தனிலும் மகிழ்ந்து நடிக்குந்தாள்
உன்றன் அடிமை துயர்தீர்த் தருளென் றுரைசெய் தோழர்க்கா
அன்று தூது செல்ல நடந்த ஆரூர் அரன்தாளே.



பார்த்தன் - அருச்சுனன்;
படை - அஸ்திரம்; இங்கே, பாசுபதாஸ்திரம்;
மன்று - அம்பலம்;
நடித்தல் - ஆடுதல்;
தோழர்க்கா - தோழருக்காக;
* 3, 4ம் அடிகள் - திருவாரூரில் சுந்தர்க்காகப் பரவையாரிடம் சிவபெருமான் தூது சென்றதைச் சுட்டியது.



7)
விருத்த னாய்வன் தொண்டர் முடிமேல் விரும்பி வைக்குந்தாள்
ஒருத்தி கூறாய் உள்ள தாலே ஒவ்வா திருக்குந்தாள்
திருத்தம் மிகுந்தாள் தில்லை தன்னில் நிருத்தம் செய்யுந்தாள்
அருத்தி யோடு பத்தர் போற்றும் ஆரூர் அரன்தாளே.



* முதல் அடி - திருவதிகையில் இறைவன் முதிய அந்தணர் வடிவம் பூண்டு யாரும் அறியாதபடி புகுந்து சுந்தரர் தலையின் மேலே தமது திருவடி படும்படியாக வைத்துத் துயில் கொள்வாரைப் போன்று இருந்ததைச் சுட்டியது.
(சுந்தரர் தேவாரம் - 7.38.1 - 'தம்மானை அறியாத சாதியார் உளரே')
விருத்தன் - முதியவன்;
திருத்தம் - செம்மை; தூய்மை; (தீர்த்தம் என்பதன் சிதைவு என்றும் கொள்ளலாம்); (ஈசனைத் 'திருத்தன்' என்று கூறக் காணலாம்);
(அப்பர் தேவாரம் - 6.6.6 - 'திருமகட்குச் ..... உருவிரண்டும் ஒன்றோடொன் றொவ்வா அடி...' - வலம் இடம் இருபுறத்து அடிகளும் ஆண் அடியும் பெண் அடியுமாய் ஒன்றொடொன்று ஒவ்வாது அமைந்திருப்பன)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி ...." - பொன் துணை திருந்து அடி - பொன்னடி, துணையடி, திருந்தடி எனப் பொலிவும் இணையும் செம்மையும் கொள்க.);
நிருத்தம் - நடனம்;
அருத்தி - விருப்பம்; அன்பு;


8)
மலையை அசைத்த இலங்கை மன்னன் வருந்தி அழுமாறே
மலரை ஒத்த விரலை அன்று வரைமேல் ஊன்றுந்தாள்
புலரும் கதிரைப் புரையும் பொற்றாள் புரைகள் தீர்க்குந்தாள்
அலர்கள் தூவி அமரர் போற்றும் ஆரூர் அரன்தாளே.



வரை - மலை;
புரைதல் - ஒத்தல்;
புரை - குற்றம்;
அலர் - மலர்;


கயிலைமலையைப் பெயர்க்க முயன்ற இராவணன் துன்புற்று அழும்படி, அன்று அம்மலைமேல் மலர் போன்ற விரலை ஊன்றும் திருவடி; உதிக்கின்ற சூரியனைப் போன்ற பொன்னடி; குற்றங்களைத் தீர்க்கும் திருவடி; பூக்களைத் தூவித் தேவர்கள் வணங்கும் திருவாரூர்ச் சிவபெருமானது திருவடி.



9)
கரிய நஞ்சு கடலில் தோன்றக் கண்டு மிகஅஞ்சி
இரியும் தேவர் வந்து தொழுந்தாள் இரவில் ஆடுந்தாள்
விரியும் மலர்போல் வாசத் தோடு மென்மை நிலவுந்தாள்
அரியும் அயனும் அடைதற் கரிய ஆரூர் அரன்தாளே.



இரிதல் - அஞ்சி ஓடுதல்;



10)
பொய்யிற் புரளும் புல்லர் என்றும் போற்ற நினையாத்தாள்
உய்ய எண்ணும் அன்பர் என்றும் ஓம்பி உவக்குந்தாள்
வெய்ய வினைதீர்க் குந்தாள் சாம வேதம் பாடுந்தாள்
ஐயம் ஏற்க ஊரூர் நடக்கும் ஆரூர் அரன்தாளே.



புல்லர் - கீழோர்;
ஓம்பி உவக்கும் தாள் - வணங்கி மகிழும் திருவடி;
வெய்ய வினை - கொடிய வினை;
ஐயம் - பிச்சை;
ஊர் ஊர் நடக்கும் - பல ஊர்களுக்கு நடக்கும்/ பல ஊர்களில் நடக்கும்;



11)
எண்ணும் ஆழி எய்த மாலோர் எழிலார் மலர்போலக்
கண்ணை இடந்து பூசை செய்து கைகள் கூப்புந்தாள்
பண்ணைப் பாடிப் பரவிப் பணியும் பத்தர் அகத்துள்ளே
அண்ணித் திருக்கும் அமுதே ஆகும் ஆரூர் அரன்தாளே.



* சக்கரம் வேண்டித் திருமால் திருவீழிமிழலையில் தினம் ஆயிரம் தாமரைப்பூக்கள் இட்டு ஈசனை வழிபட்டு வரும்போது, ஒரு நாள் ஒரு பூக்குறையத் தன் கண்ணையே பூவாகத் தோண்டி இட்டு வழிபடவும், ஈசன் மகிழ்ந்து சக்கராயுதம் அருளியதைச் சுட்டியது.
ஆழி - சக்கரம்;
எய்துதல் - அடைதல் (To obtain, acquire, attain);
இடத்தல் - தோண்டுதல்;
அண்ணித்தல் - தித்தித்தல்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்

----------------- ----------------

No comments:

Post a Comment