Friday, August 28, 2015

02.13 – பொது - (கூன்மதிசூடி வண்ணம்)

02.13 – பொது - (கூன்மதிசூடி வண்ணம்)



2011-03-07 – 2011-03-12
பொது
"கூன்மதிசூடி வண்ணம்"
------------------------------
(வண்ண விருத்தம். இப்பதிகப் பாடல்களின் யாப்பு அமைப்பைப் பிற்குறிப்பில் காண்க)



1) தீவினை போக்கு அரன்
--------------------------------
தன தந்தன தய்யன தத்தன தானன தாத்ததன



மலர் அம்பினை எய்தவ னைப்பொடி யாவிழ நோக்கியவன்
சலம் அம்புலி பையர வைத்தலை மீதினில் ஏற்றசிவன்
பல உம்பர்கள் கைதொழ மிக்கெழும் ஆலமு தாக்கியவன்
நலன் நம்பிவி ரையலர் இட்டவர் தீவினை போக்கரனே.



பதம் பிரித்து:
மலர் அம்பினை எய்தவனைப் பொடியா விழ நோக்கியவன்;
சலம் அம்புலி பையரவைத் தலைமேல் மீதினில் ஏற்ற சிவன்;
பல உம்பர்கள் கைதொழ, மிக்கு எழும் ஆல் அமுது ஆக்கியவன்;
நலன்; நம்பி விரை அலர் இட்டவர் தீவினை போக்கு அரனே.


மலர் அம்பினை எய்தவனை - மன்மதனை;
லம் - ஜலம் - கங்கை;
பையரவு - நாகம்; (பை - பாம்புப்படம் (Hood of a cobra));
ஆல் - நஞ்சு;
நலன் - நல்லன் (=நல்லவன்) - இடைக்குறையாக வந்தது;
நம்பி - விரும்பி; / ஆணில் சிறந்தோன்;
விரை அலர் - வாசமலர்களை;
போக்குதல் - இல்லாமற் செய்தல் (To remove, dispel, obliterate);
----------------------------------------------
2) நெற்றிவிழிப் பரன்
--------------------------
தன தனத்தன தத்தன தத்தன தத்தன தத்தனனா

அவி கொடுக்கம றுத்தவ னைத்தலை வெட்டிய உக்கிரனே
புவி நடுக்குற நட்டமி யற்றிடும் அத்தவெ னத்தமிழால்
கவி தொடுத்தடி யைத்தொழு பத்தர்க ளுக்கரு ளைத்தருவாய்
செவி மடுத்தொரு பெற்றமு கக்கிற நெற்றிவி ழிப்பரனே



பதம் பிரித்து:
"அவி கொடுக்க மறுத்தவனைத் தலை வெட்டிய உக்கிரனே;
புவி நடுக்கு உற நட்டம் இயற்றிடும் அத்த" எனத் தமிழால்
கவி தொடுத்து அடியைத் தொழு பத்தர்களுக்கு அருளைத் தருவாய்
செவி மடுத்து, ஒரு பெற்றம் உகக்கிற நெற்றிவிழிப் பரனே.


அவி கொடுக்க மறுத்தவன் - தக்கன்;
உக்கிரன் - வீரபத்திரன் ( - தக்ஷயாகத்தை அழித்தவர்);
அத்தன் - தந்தை; பெரியோன்;
புவி நடுக்கு உற நட்டம் இயற்றுதல் - பூமி நடுங்கும்படி ஆடல் புரிதல்;
(அப்பர் தேவாரம் - 6.5.7 - "மண்துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி" - நில உலகம் அசையுமாறு கூத்தாடுதலை மகிழ்ந்தவனே! உன்னை வணங்குகின்றேன்.)
கவி தொடுத்து அடியைத் தொழு பத்தர்களுக்கு அருளைத் தருவாய் செவி மடுத்து - பாடி வணங்கும் பக்தர்களுக்கு அதைக் கேட்டு மகிழ்ந்து அருள்புரிபவனே;
பெற்றம் - இடபம்;
உகத்தல் - விரும்புதல்;
----------------------------------------------
3) தருவான் உயர் வானம்
------------------------------
தன தானன தானன தானன தானன தானதன



சவம் ஆனவ ரேயென ஊருரை யாமுனம் ஓர்மனமே
தவம் மானன மாதொரு கூறுடை யானடி பாடுவதே
பவன் ஆனையின் ஈருரி யான்எழி லார்மதி சூடுபவன்
சிவன் ஊனமி லாநிலை யேதரு வான்உயர் வானமொடே



பதம் பிரித்து:
"சவம் ஆனவரே" என ஊர் உரையாமுனம், ஓர் மனமே;
தவம், மான் அன மாது ஒரு கூறு உடையான் அடி பாடுவதே;
பவன், ஆனையின் ஈருரியான், எழிலார் மதி சூடுபவன்,
சிவன், ஊனம் இலா நிலையே தருவான் உயர் வானமொடே.


"சவம் ஆனவரே" என ஊர் உரையாமுனம் - “இவர் இறந்தார்" என்று ஊர்மக்கள் சொல்லும் முன்னே;
ஓர் மனமே - நெஞ்சே நீ எண்ணு;
மான் அன மாது - மான் போன்ற பார்வதி;
பவன் - சிவன்; கடவுள் (God, as self-existent);
ஈருரி - ஈர் உரி - உரித்த தோல்;
ஊனம் - குறைபாடு; குற்றம்;
----------------------------------------------
4) வரம் அளிப்பாய்
-----------------------
தன தனதான தான தனதான தான தனதனத்த



திரு அடிமீது தூய தமிழ்மாலை பாடும் எனைவெருட்டும்
பெரு மிடியோடு மேலை வினைதீரு மாறு வரமளிப்பாய்
குரு வடிவாகி ஆல மரநீழல் நாடி மறைவிரித்தாய்
ஒரு கொடிபோலும் மாது பிரியாத மேனி உடையவத்தா.



பதம் பிரித்து:
திருவடி மீது தூய தமிழ்மாலை பாடும் எனை வெருட்டும்
பெரு மிடியோடு மேலை வினை தீருமாறு வரம் அளிப்பாய்;
குரு வடிவு ஆகி, ஆலமர நீழல் நாடி மறை விரித்தாய்;
ஒரு கொடிபோலும் மாது பிரியாத மேனி உடைய அத்தா.


வெருட்டுதல் - அச்சுறுத்துதல் (To terrify, frighten);
மிடி - வறுமை; துன்பம்;
மேலை வினை - பழவினை;
ஆலமர நீழல் - கல்லால மரத்தின்கீழ்;
விரித்தல் - விளக்கி உரைத்தல்;
ஒரு கொடிபோலும் மாது - கொடி போன்ற பார்வதி;
அத்தன் - தந்தை;
----------------------------------------------
5) இன்ப நெறி சேர அருள்
--------------------------------
தன தனதானத் தந்த தனதானத் தந்த தனதனனா



வழி ஒழுகாமற் கண்ட படிவாழ்விற் சென்று பகலினிலே
குழி விழுவேனுக் கின்ப நெறிசேரச் சிந்தை அருள்புரிவாய்
பழி கெழுவாநற் பண்ப பலிதேரற் கென்றும் உழல்பவனே
விழி எழுதீயைக் கொண்டு மதன்வேவக் கண்ட விடையவனே.



பதம் பிரித்து:
வழி ஒழுகாமல் கண்டபடி வாழ்வில் சென்று, பகலினிலே
குழி விழுவேனுக்கு இன்ப நெறி சேரச் சிந்தை அருள்புரிவாய்;
பழி கெழுவா நற் பண்ப; பலி தேரற்கு என்றும் உழல்பவனே;
விழி எழு தீயைக் கொண்டு மதன் வேவக் கண்ட விடையவனே.


வழி ஒழுகாமல் - நன்னெறியிற் செல்லாமல்;
பகலினிலே குழி விழுவேனுக்கு - கண்ணிருந்தும் குருடன்போல் பகலிலேயே குழியில் விழும் எனக்கு;
இன்ப நெறி சேரச் சிந்தை அருள்புரிவாய் - துன்பம் இல்லாத இன்ப நெறியில் சேரும் புத்தியைத் தந்தருள்வாயாக;
பழி கெழுவா நற் பண்பகுற்றமற்ற நல்லவனே; (பழி - குற்றம்); (கெழுவுதல் - பொருந்துதல்);
பலி தேரற்கு - பலி தேர்வதற்கு - பிச்சை பெறுவதற்கு;
மதன் - மன்மதன்;
விடையவன் - இடப வாகனன்;
----------------------------------------------
6) எந்தை அடியை வழுத்தி மகிழ்
---------------------------------------
தன தனதன தந்த தனன தனத்த தனதனனா



முனி உயிர்கொள வந்த நமனை உதைத்த மலரடியான்
தனி வயிரவன் நங்கை உறைய இடத்தை அளிபெருமான்
நுனி அயிலுறு கின்ற படையை வலக்கை உடைவிடையான்
பனி பயில்சடை எந்தை அடியை வழுத்தி மகிழ்மனமே.



பதம் பிரித்து:
முனி உயிர் கொள வந்த நமனை உதைத்த மலரடியான்;
தனி; வயிரவன்; நங்கை உறைய இடத்தை அளி பெருமான்;
நுனி அயில் உறுகின்ற படையை வலக்கை உடை விடையான்;
பனி பயில் சடை எந்தை அடியை வழுத்தி மகிழ் மனமே.


முனி - இங்கே மார்க்கண்டேயர்;
தனி - ஒப்பற்றவன்;
வயிரவன் - பைரவன்;
நங்கை உறைய இடத்தை அளி பெருமான் - உமைக்கு இடப்பாகத்தைத் தந்த பெருமான்;
அயில் - கூர்மை; (அயில் உறுகின்ற படை - கூர்மை பொருந்திய சூலப்படை);
உடை - உடைய;
பனி - நீர்.
பயில்தல் - தங்குதல்;
----------------------------------------------
7) வினைகள் அறும்
-----------------------
தன தனன தனன தனன தனன தனதனன



பணி பலவும் நெளியும் உடலும் அரவ நதியருகு
துணி நிலவும் உலவும் முடியும் அனலை உமிழ்விழியும்
மணி இலகு மிடறும் மழுவும் உடைய அரனடியில்
அணி மலர்கள் இடநம் வினைகள் எளிதில் அறுபடுமே.



பணி - நாகம்;
அரவம் - ஒலி; பாம்பு;
அரவ நதி - ஒலி செய்யும் கங்கை; 'பாம்பும் நதியும்' என்றும் பொருள்கொள்ளலாம்;
அருகு - அண்மையில்;
துணி நிலவு - நிலாத் துண்டம்;
இலகுதல் - விளங்குதல் (To shine); (மணி இலகு மிடறு - நீலகண்டம்);
அணி - அழகிய;
----------------------------------------------
8) நிறை சித்தம் அருள்
--------------------------
தன தனதந்த தத்தத் தனதன தானன தானதத்தா



இறை இகழ்கின்ற பத்துத் தலையனை ஓர்விர லாலடர்த்தாய்
மறை புகழ்கின்ற ஒற்றைத் தலைமக னேபிறை சூடுமத்தா
நறை திகழ்கின்ற புட்பத் தொடையணி வாய்கறை மாமிடற்றாய்
நிறை நிகழ்கின்ற சித்தத் தினையுற வேயருள் ஆசறுத்தே.



பதம் பிரித்து:
இறை இகழ்கின்ற பத்துத் தலையனை ஓர் விரலால் அடர்த்தாய்;
மறை புகழ்கின்ற ஒற்றைத் தலைமகனே; பிறை சூடும் அத்தா;
நறை திகழ்கின்ற புட்பத் தொடை அணிவாய்; கறை மா மிடற்றாய்;
நிறை நிகழ்கின்ற சித்தத்தினை உறவே அருள், ஆசு அறுத்தே.


இறை - இறைவன்; சிறிது;
இறை இகழ்கின்ற பத்துத் தலையனை ஓர் விரலால் அடர்த்தாய் - ஈசனை இகழ்ந்த இராவணனை ஒரு விரலால் நசுக்கியவனே; ("இகழ்கின்ற பத்துத் தலையனை ஓர் விரலால் இறை அடர்த்தாய்” என்று கொண்டால், "இராவணனை ஒரு விரலால் சிறிது நசுக்கியவனே”);
றை - வேதம்;
ஒற்றைத் தலைமகன் - ஒப்பற்ற கடவுள்;
நறை - தேன்; வாசனை;
புட்பத்தொடை - பூமாலை;
நிறை - மனவடக்கம்;
ஆசு - குற்றம்;
அறுத்தல் - நீக்குதல்; இல்லாமற்செய்தல்;
----------------------------------------------
9) தேவன தாள் தொழும்
-----------------------------
தன தனதன தானன தானன தானன தானதனா



கரி பிடியென மாதுட னாய்இடர் தீர்மக னார்அருள்வான்
அரி கடிமலர் மேலய னாரிவர் மேலொடு கீழறியா
எரி வடிவினன் ஊர்விடை யானொளிர் நீறணி மேனியினான்
திரி கடியரண் ஓர்நகை யாலழி தேவன தாள்தொழுமே.



பதம் பிரித்து:
கரி பிடி என மாதுடனாய் இடர் தீர் மகனார் அருள்வான்;
அரி, கடி மலர்மேல் அயனார், இவர் மேலொடு கீழ் அறியா
எரி வடிவினன்; ஊர் விடையான்; ஒளிர் நீறு அணி மேனியினான்;
திரி கடி அரண் ஓர் நகையால் அழி தேவன தாள் தொழுமே.


கரி - ஆண் யானை;
பிடி - பெண் யானை;
மாது - பார்வதி;
இடர் தீர் மகனார் - அடியவர்களது கஷ்டங்களைப் போக்கும் பிள்ளையார் - கணபதி;
கடி மலர் - வாசமலர் - தாமரை;
ஊர் விடை - ஊர்கிற இடபம்;
திரி கடி அரண் - திரிந்த, காவல் மிகுந்த கோட்டைகள் - முப்புரங்கள்;
தேவன - தேவன் + - தேவனுடைய; (- ஆறாம் வேற்றுமை உருபு);
தொழும் - தொழுவீர்; (உம் - ஏவற்பன்மை விகுதி);


(சம்பந்தர் தேவாரம் - 1.123.5
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
..... உமையம்மை பெண்யானை வடிவுகொள்ள, தான் ஆண்யானையின் வடிவு கொண்டு தன் திருவடியை வணங்கும் அடியவர்களின் இடர்களைக் கடியக் கணபதியைத் தோற்றுவித்தருளினான்.)
----------------------------------------------
10) சிவன் இருக்கப் பயமிலையே
----------------------------------------
தனந் தனதன தந்த தனன தனத்தத் தனதனன



நிதந் தெருவினில் நின்று புறனை உரைத்துத் திரிகிறவர்
மதம் பெருகிடு நெஞ்சர் அவர்சொல் விடுத்துச் சிவனைநினை
இதந் தருபவன் அண்டு வினையை அழித்துத் தரணிதனில்
சதங் குருபரன் அன்பின் உருவன் இருக்கப் பயமிலையே.



பதம் பிரித்து:
நிதம் தெருவினில் நின்று புறனை உரைத்துத் திரிகிறவர்,
மதம் பெருகிடு நெஞ்சர், அவர் சொல் விடுத்துச் சிவனை நினை;
இதம் தருபவன், அண்டு வினையை அழித்துத், தரணிதனில்;
சதம்; குருபரன்; அன்பின் உருவன் இருக்கப் பயம் இலையே.


நிதம் - தினந்தோறும்;
புறன் - பழிச்சொல்; பொய்;
விடுத்தல் - நீங்குதல்; விலக்குதல்;
இதம் - ஹிதம் - நன்மை; இன்பம்;
அண்டுதல் - நெருங்குதல்;
தரணி - பூமி;
இதம் தருபவன், அண்டு வினையை அழித்துத், தரணிதனில் - நம்மை நெருங்கும் வினைகளை அழித்து இவ்வுலக வாழ்வில் இன்பம் தருபவன்;
சதம் - அழிவில்லாதவன்;
----------------------------------------------
11) நினைதி நெஞ்சே
-----------------------
தன தனதன தந்த தனதன தந்த தனனதந்தா



இடர் அடைவது நின்று விடவழி உண்டு நினைதிநெஞ்சே
அடல் விடைமிசை வந்து கடைதொறும் நின்று பலியுகந்தான்
உடல் இடமுமை மங்கை இணைகிற எந்தை நனிபரிந்தே
கடல் விடமணி கண்டன் அடியிணை வந்தி விளையுமின்பே.



பதம் பிரித்து:
இடர் அடைவது நின்றுவிட வழி உண்டு, நினைதி நெஞ்சே;
அடல் விடைமிசை வந்து கடைதொறும் நின்று பலி உகந்தான்;
உடல் இடம் உமை மங்கை இணைகிற எந்தை; நனி பரிந்தே
கடல் விடம் அணி கண்டன் அடியிணை வந்தி; விளையும் இன்பே.


நினைதி - நினைவாய்;
அடல் விடைமிசை வந்து - வலிய இடபத்தின்மேல் ஏறிவந்து;
கடை - வாயில் (Entrance, gate);
பலி - பிச்சை;
நனி - மிகவும்;
பரிந்து - அன்புகொண்டு; இரங்கி;
வந்தி - தொழுவாயாக;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு :
1) கூன்மதிசூடி வண்ணம்:
கூன் - வளைவு; செய்யுளில் வரும் தனிச்சொல்;
கூன்மதிசூடி - வளைந்த பிறைச்சந்திரனைச் சூடியவன்;
வண்ணம் - இயல்பு; குணம்; சிறப்பு; சந்தப்பாட்டு;



2) இது ஒரு புதிய யாப்பு அமைப்பு என எண்ணுகின்றேன்.
இப்பாடலில், அடிகள்தோறும் முதலில் இருக்கும் நிரை அசையைக், கூன் பெற்ற பாடல்களில் வரும் தனிச்சொல்லைப் போலக் கருதலாம். கூனாக வரும் நிரையசைகளுள் ஓர் எதுகை பயின்று வரும். அடிகளில் உள்ள இரண்டாம் சீர்களிடையே இன்னோர் எதுகை பயின்றுவரும். அடிதோறும் முதலில் இருக்கும் சீர் - (நிரை அசைச்சொல்) - இல்லாமல், பாடலில் கட்டளைக்கலித்துறை இலக்கணம் பொருந்திவரும்.



3) இப்பதிகப் பாடல்கள் எல்லாம் வண்ணப்பாடல்கள். ஒவ்வொரு பாடலிலும் வெவ்வேறு சந்தக்குழிப்பு அமைந்திருக்கும்.
கூன் பெற்ற கட்டளைக் கலித்துறை - வண்ணம்.

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment