Wednesday, August 12, 2015

01.39 – பொது - (தோடகம்)

01.39பொது - (தோடகம்)



2008-10-01
பொது
"நாடகனுக்குத் தோடகம் - 2”
---------------------------------
(தோடகம் என்பது ஒரு சமஸ்கிருத பாடல் அமைப்பு.
"தனனா தனனா தனனா தனனா” என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - “சடையாய் எனுமால் சரணீ எனுமால்”);
(கந்தர் அனுபூதியில் பல பாடல்களும் இச்சந்தமே).



1)
பணமே பெரிதாய்ப் பலநாள் கருதிக்
குணமில் செயலால் குழியில் விழலேன்
மணமா மலரால் மதிசூ டிறைவன்
இணையார் அடிபோற் றிடுவாய் மனமே.



பதம் பிரித்து:
பணமே பெரிதாய்ப் பல நாள் கருதிக்,
குணம் இல் செயலால் குழியில் விழல் ஏன்?
மண மா மலரால் மதி சூ(டு) இறைவன்
இணை ஆர் அடி போற்றிடுவாய் மனமே.


பணமே பெரிது ஆய்ப் பல நாள் கருதி - பணமே பிரதானம் ஆகி, அவ்வாறே நெடுங்காலம் எண்ணி;
குணம் இல் செயல் - குணமற்ற செயல்கள்:
விழல் - விழுதல்;
மண மா மலர் - வாசம் மிகுந்த சிறந்த பூக்கள்;
இணை ஆர் அடி - இரண்டாகிய அரிய திருவடியை;



2)
அகலா வினையும் இகலைம் புலனும்
பகலோன் கதிரிற் பனியொத் தொழியும்
புகலாய் உளநம் புனிதன் கழலைப்
பகலோ டிரவாய்ப் பணியாய் மனமே.



பதம் பிரித்து:
அகலா வினையும் இகல் ஐம்புலனும்
பகலோன் கதிரில் பனி ஒத்(து) ஒழியும்;
புகலாய் உள நம் புனிதன் கழலைப்
பகலோ(டு) இரவாய்ப் பணியாய் மனமே.


அகல்தல் - நீங்குதல்;
இகல்தல் - மாறுபடுதல் (be inimical);
ஐம்புலன் - புலனாசைகள்;
வினையும்மிகலைம் - 'வினையும் இகல் ஐம்' என்பது சந்தத்திற்காக மகர ஒற்று விரித்தல் பெற்றுவந்தது.
பகலோன் - சூரியன்;
புகல் - சரண் (refuge); அடைக்கலம்;



3)
தணியா நசையாற் றகவில் செயலாற்
பிணிதீ வினையாற் பெறுதுன் பமற
அணிமா துமையாள் அகலாப் பெருமான்
மணிகண் டனைநீ மறவேல் மனமே.



பதம் பிரித்து:
தணியா நசையால் தகவு இல் செயலால்
பிணி தீவினையால் பெறு துன்பம் அற,
அணி மாது உமையாள் அகலாப் பெருமான்
மணிகண்டனை நீ மறவேல் மனமே.


நசை - விருப்பம்;
தகவு இல் - தகாத;
பிணி தீவினை - பிணிக்கும் தீயவினை;
அணி - அழகிய;
மணிகண்டன் - நீலகண்டன்;
மறவேல் - மறவாதே (நினைவாய்);



4)
கனைவா ரிதிபோல் இனலைத் தருதீ
வினைகள் விடவே நினையாய் மனமே
சினமா விடையான் புனலார் சடையான்
கனலேந் துகரன் கழலைத் தினமே.



பதம் பிரித்து:
கனை வாரிதி போல் இனலைத் தரு தீ
வினைகள் விடவே, நினையாய் மனமே,
சின மா விடையான், புனல் ஆர் சடையான்,
கனல் ஏந்து கரன் கழலைத் தினமே.


கனை வாரிதி - ஒலிக்கும் கடல்;
இனல் - இன்னல் (இடைக்குறை விகாரம்);
கனல் ஏந்து கரன் - தீயை ஏந்தும் கரத்தை உடையவன்;



5)
நிலவைத் தலைமேல் அணிவான் நிமலன்
உலகிற் பலிகொண் டுழலும் பெருமான்
அலகில் புகழான் அடியைத் தொழுதால்
விலகாப் பழியும் விடுமே மனமே.



பதம் பிரித்து:
நிலவைத் தலைமேல் அணிவான்; நிமலன்;
உலகில் பலி கொண்(டு) உழலும் பெருமான்;
அல(கு) இல் புகழான்; அடியைத் தொழுதால்
விலகாப் பழியும் விடுமே மனமே.


நிமலன் - மலமற்றவன்;
பலி - பிச்சை;
அலகு இல் புகழான் - அளவற்ற புகழ் உடையவன்;


6)
நதிசேர் சடையான் நடனம் புரிவான்
பதினா றுபசா ரமதால் பணியும்
மதியுள் ளவருள் மகிழும் சிவனைத்
துதியாய் மனமே துயரே தினியே.



பதம் பிரித்து:
நதி சேர் சடையான்; நடனம் புரிவான்;
பதினா(று) உபசாரம் அதால் பணியும்
மதி உள்ளவர் உள் மகிழும் சிவனைத்
துதியாய் மனமே, துயர் ஏ(து) இனியே.


பதினா(று) உபசாரம் அதால் - ஷோடசோபசாரங்களால்;
(“அதால்” என்ற பிரயோக உதாரணம்: - (சம்பந்தர் தேவாரம் - 3.113.3 - “பாதம தாற்கூற் றுதைத்தனனே”);
மதி - அறிவு;
உள் - மனது;


(ஆறுமுக நாவலர் எழுதிய 'இந்துமத இணைப்பு விளக்கம்' என்ற நூலிலிருந்து:
பதினாறு உபசாரம் - சோடசோபசாரங்கள் - 1. ஆவாகனம்; 2. ஸ்தாபனம்; 3. சந்திதானம்; 4. சந்நிரோதனம்; 5. அவகுண்டம்; 6. அபிஷேகம்; 7. பாத்யம்; 8. ஆசமநீயம்; 9. அர்க்கியம்; 10. மாலை சாத்தல்; 11. தூபம்; 12. தீபம்; 13. நைவேத்தியம்; 14. பாநீயம்; 15. ஜபசமர்ப்பணம்; 16. தீப ஆராதனை.


தீப ஆராதனை பதினாறு வகைப்படும். 1. தூபம்; 2. புஷ்பதீபம்; 3. நாக்தீபம்; 4. விருஷதீபம்; 5. மேகதீபம்; 6. புருஷாமிருகதீபம்; 7. கும்பதீபம்; 8. ஆரத்திரிகம்; 9. நக்ஷத்திரதீபம்; 10. கற்பூரதீபம்; 11. பஸ்மோபசரம்; 12. கண்ணாடிகாட்டல்; 13. குடைபிடித்தல்; 14. கொடிகட்டுதல்; 15. சாமரம் வீசுதல் 16. விசிறிவீசுதல்.)



7)
அருளைப் பொழிவான் அடியைப் பணிவார்
இருளைக் களைவான் இடபக் கொடியான்
விருதா அலையா தொருவன் கழலைக்
கருதாய் மனமே வருமே சுகமே.



பதம் பிரித்து:
அருளைப் பொழிவான்; அடியைப் பணிவார்
இருளைக் களைவான் இடபக் கொடியான்;
விருதா அலையாது ஒருவன் கழலைக்
கருதாய் மனமே; வருமே சுகமே.


இருள் - அறியாமை;
விருதா - வீணாய்; பயனின்றி:
ஒருவன் - ஒப்பற்றவன்;



8)
அறிவற் றருமா மலையாட் டியவன்
வெறிகெட் டழவோர் விரலிட் டருளும்
மறிமான் உடையான் மதிசேர் சடையான்
வெறியார் கழலே விழைவாய் மனமே



பதம் பிரித்து:
அறி(வு) அற்(று) அரு மா மலை ஆட்டியவன்
வெறி கெட்(டு) அழ ஓர் விரல் இட் (டு) அருளும்,
மறி மான் உடையான், மதி சேர் சடையான்,
வெறி ஆர் கழலே விழைவாய் மனமே.


அரு மா மலை - கயிலை மலை;
வெறி - பேதைமை (ignorance); பைத்தியம்; கோபம்; வாசனை;
மறி மான் - மான் கன்று;
வெறி ஆர் கழல் - வாசம் மிக்க திருவடி;



9)
அலைமேல் திருமால் அலரோன் அறியார்
அலமந் தருளாய் எனவோர் அழலாய்
இலகும் பெருமான் எழிலார் கழலே
மலமா சகலத் துதியாய் மனமே.



பதம் பிரித்து:
அலைமேல் திருமால், அலரோன் அறியார்;
அலமந்(து) "அருளாய்" என ஓர் அழலாய்
இலகும் பெருமான் எழில் ஆர் கழலே
மல மா(சு) அகலத் துதியாய் மனமே.


அலரோன் - தாமரைப்பூவில் உறையும் பிரமன்;
அலமருதல் - வருந்துதல் (To be vexed, distressed);
அழல் - தீ;
இலகுதல் - விளங்குதல் (to shine, glisten, glitter);
எழில் ஆர் கழல் - அழகு வாய்ந்த திருவடி;
மல மாசு - மும்மலங்கள்;



10)
ஒருதத் துவமும் தெரியார் உளறும்
பொருளில் மொழிகள் மருளைத் தருமே
திருவைப் பெறநீ தினமும் துதிசெய்
கருணைக் கடலாம் உமைகோன் கழலே.



ஒரு தத்துவமும் தெரியார் - (சம்பந்தர் தேவாரம் - 1.52.10 - "...தத்துவம் ஒன்றறியார்…");
பொருள் இல் மொழிகள் - அர்த்தமற்ற பேச்சு;
மருள் - மயக்கம் (confusion; delusion);



11)
முடியா முதலே முடிமேல் பிறையாய்
அடியார் மனமே குடியா உடையாய்
அடியேற் கருளாய் அரனே எனநம்
மிடிபோய் வருமே விலகாத் திருவே.



பதம் பிரித்து:
"முடியா முதலே; முடிமேல் பிறையாய்;
அடியார் மனமே குடியா உடையாய்;
அடியேற்(கு) அருளாய்; அரனே" என நம்
மிடி போய், வருமே விலகாத் திருவே.


முடியா முதல் - அழிவில்லாத முதல்வன்;
முடி மேல் பிறையாய் - திருமுடி மீது பிறைச்சந்திரனை உடையவனே;
குடியா - குடியாக - உறைவிடமாக;
அடியேற்கு - அடியேனுக்கு;
மிடி - வறுமை; துன்பம்;
விலகா - நீங்காத;
திரு - செல்வம்; பாக்கியம்; சிறப்பு;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு:
தோடகம் என்பது சமஸ்கிருத பாடல் அமைப்புகளுள் ஒன்று.
தோடகத்தின் இலக்கணம்: Thotakam Meter
4 அடிகள். அடிக்கு 4 "தனனா" -- “லகு-லகு-குரு" இருக்கும்.
லகு = குறில்.
குரு = நெடில்/நெடில்+ஒற்று/குறில்+ஒற்று. அடி ஈற்றுக் குறிலும் 'குரு' எனக் கருதப்படும்).
(For more details on Sanskrit prosody: https://en.wikipedia.org/wiki/Sanskrit_prosody )



No comments:

Post a Comment