Monday, August 17, 2015

01.50 – ஆலவாய் (மதுரை) - "ஆலவாய் அண்ணல்"

01.50 – ஆலவாய் (மதுரை) -  "ஆலவாய் அண்ணல்"



2009-09-12
திருஆலவாய் (மதுரை)
"ஆலவாய் அண்ணல்"
----------------------------------------------------------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்.)



1)
ஏறு காட்டும் கொடியான், எழிலுமை
கூறு காட்டும் குழகன், சடைதனுள்
ஆறு காட்டும் அமலன், அடிதொழப்
பேறு கூட்டும் பிரான்ஆல வாயனே.



குழகன் - அழகன்; இளைஞன்;
அமலன் - மும்மலமும் இல்லாதவன்;
கூட்டுதல் - இணைத்தல் (To unite, join, combine, connect); அதிகப்படுத்துதல்;
பிரான் - தலைவன்;


காளைக்கொடி உடையவன்; அழகிய பார்வதியை ஒரு கூறாகக் கொண்ட அழகன்; சடையுள் கங்கையை வைத்த தூயவன்; தன் திருவடியைத் தொழும் அன்பர்களுக்குப் பேறு அளிக்கும் தலைவன், திரு ஆலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்.


(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும் .... விடைகாட்டுங் கொடியானே.")



2)
கடுத்து வந்தகங் கைப்புனல் செஞ்சடைத்
தடுத்து வைத்தவன், நாளும் சரங்களைத்
தொடுத்துப் போற்றும்நல் தொண்டர்க்கு வானினைக்
கொடுக்கும் ஆலவாய் மேவிய கூத்தனே.



கடுத்தல் - விரைந்து ஓடுதல்;
சரம் - மாலை - பூமாலை, பாமாலை;
வான் - வானகம் - வீடுபேறு;
மேவுதல் - விரும்புதல்; அமர்தல் (To abide, dwell);
கொடுக்கும் - கொடுப்பான்;
இலக்கணக் குறிப்பு: செய்யும் என்னும் வாய்ப்பாட்டுத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள், படர்க்கையிடத்தனவாகிய ஐம்பால்களுக்குள்ளே பலர்பாலொழிந்த நான்கு பால்களுக்கும் பொதுவாக வரும். உதாரணம்: அவன் உண்ணும், அவள் உண்ணும், அது ண்ணும், அவை ண்ணும்)
வானினைக் கொடுக்கும் ஆலவாய் மேவிய கூத்தனே - (அப்பர் தேவாரம் - 5.51.6 -
"விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும்
மண்ணினார் மறவாது சிவாய ன்று
ண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
பண்ணினார் அவர் பாலைத்துறையரே.")



3)
வேண்டும் வேண்டுமென் றெண்ணுமென் நெஞ்சமே,
மாண்டு விட்டால் வருவதும் என்னவோ?
யாண்டும் இன்புற லாம்அர வம்பல
பூண்ட ஆலவாய் அண்ணலைப் போற்றவே.



யாண்டும் - எப்பொழுதும்;
பூண்ட - அணிந்த;



4)
பால னாரின் உயிர்கொளப் பாய்கிற
கால னார்விழக் காலால் உதைத்தவன்,
வேலை வாய்எழும் நஞ்சினை உண்டவன்,
ஆல வாய்அமர் கண்ணுதல் அண்ணலே.



பாலனார் - மார்க்கண்டேயர்;
வேலைவாய் - கடலில்; (வாய் - ஏழாம் வேற்றுமை உருபு);
அமர்தல் - விரும்புதல்; இருத்தல்;
கண்ணுதல் - நெற்றிக்கண்;



5)
திரியும் முப்புரம் சேர்கிற நாள்அவை
எரியு மாறு நகைசெய்த ஈசனார்,
கரிய கண்டர், கடிய விடையினர்,
அரிவை பாகர்எம் ஆலவாய் அண்ணலே.



கடிய – வேகத்தையுடைய;
விடையினர் - இடபத்தை வாகனமாக உடையவர்;
அரிவை பாகர் - உமை பங்கன்;



6)
வந்தி பிட்டுக்கு மண்ணைச் சுமந்தவன்;
வந்திப் பார்கள் மகிழ்வுறத், தீயினுள்
பந்தன் பாடலைப் பச்சையாய் வைத்தவன்;
அந்தண் ஆலவாய் மேவிய அண்ணலே.



வந்தி - மதுரையில் வாழ்ந்த பிட்டு வாணிச்சி; ஈசன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற வரலாற்றைத் திருவிளையாடற் புராணத்திற் காண்க;
வந்திப்பார்கள் - அடியவர்கள்; (வந்தித்தல் - வணங்குதல்);
பந்தன் - திருப்பெயர்ச் சுருக்கம் - ஞானசம்பந்தன்; (ஏகதேசம் - ஒருபுடை - Partial);
அந்தண் - அம் தண் - அழகிய குளிர்ந்த;


வந்தி என்ற பக்தை அளித்த பிட்டுக்காகக் கூலியாளாக வந்து மண் சுமந்தவன்; தன்னை வணங்குவோர் மகிழும்படி, அனல்வாதத்தின்போது திருஞான சம்பந்தர் நெருப்பினுள் இட்ட தேவார ஏடு எரியாமல் பசுமையாக இருக்க அருளியவன்; அழகிய குளிர்ந்த திரு ஆலவாயில் எழுந்தருளிருக்கும் சிவபெருமான்.



7)
அந்தி வான்போல் அழகிய மேனிமேல்
வெந்த நீறு மிளிர விடையினில்
வந்தென் சிந்தை கவர்ந்த மணாளனார்,
அந்தண் ஆலவாய் மேவிய அண்ணலே.



அந்தி வான்போல் அழகிய மேனி - மாலைநேரத்துச் செவ்வானம் போல நிறம் உடைய அழகிய திருமேனி;
சிந்தை - உள்ளம்;
மணாளன் - தலைவன்;
அந்தண் - அம் தண் - அழகிய குளிர்ந்த;



8)
ஆயா தோடி மலையை அசைத்தவன்
வாயால் கத்த மலர்விரல் வைத்தவர்;
தூயா என்று தொழுகிற அன்பரைத்
தாயாய்க் காப்பவர் ஆலவாய்த் தந்தையே.



ஆயாது ஓடி மலையை அசைத்தவன் - சிந்தியாமல் விரைந்து சென்று கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணன்; (ஆய்தல் - சிந்தித்தல்; ஆலோசித்தல்; ஆராய்தல்);
தூயா - தூயவனே;



9)
அந்தம் ஆதி அயன்அரி தேடியே
வந்து பாதம் வணங்கும் வளர்எரி;
சிந்தை செய்யடி யார்துயர் தீர்ப்பவர்;
அந்தண் ஆலவாய் மேவிய அண்ணலே.



அந்தம் ஆதி - முடியும் அடியும்; "அந்தமும் ஆதியும் ஆகியவன்” என்றும் பொருள்கொள்ளலாம்;
அயன் அரி - பிரமனும் திருமாலும்;
வளர் எரி - வினைத்தொகை - ஓங்கிய சோதி; (வளர்தல் - பெரிதாதல்; நீளுதல்); (எரி = தீ; சோதி);



10)
தேவி னைத்தெளி யாமல் தினந்தொறும்
கூவி நிற்பவர் கூற்றினை விட்டொழி;
பூவி னாலடி போற்றருள் நல்குவான்
சேவில் ஏறும் திருஆல வாயனே.



தேவினை - தெய்வத்தை; (தே / தேவு - தெய்வம்);
தெளிதல் - அறிதல்; ஆராய்தல்;
கூற்று - பேச்சு; சொற்கள்;
அடி போற்றருள் நல்குவான் - 1) அடி போற்ற அருள் நல்குவான்; ("போற்ற அருள்" என்பதன் தொகுத்தல் விகாரம்); 2) "அடி போற்று; அருள் நல்குவான்” என்றும் பொருள்கொள்ளலாம்;
சே - இடபம்; காளை;



11)
கந்த மாமலர் கைக்கொடு நாள்தொறும்
சந்த மார்தமி ழாலடி போற்றுவார்
முந்தை வல்வினை முற்றிலும் தீர்த்திடும்
அந்தண் ஆலவாய் மேவிய அண்ணலே.



கந்த மா மலர் - மணம் மிக்க சிறந்த பூக்கள்; (கந்தம் - வாசனை);
கைக்கொடு - கைக்கொண்டு;
சந்தம் ஆர் தமிழ் - சந்தம் பொருந்திய தேவாரப் பாடல்கள்;
தீர்த்திடும் - தீர்ப்பவன்; (செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று);


தினமும் வாச மலர்களைக் கையில் ஏந்திச், சந்தப் பாடல்களான தேவாரப் பதிகங்களைப் பாடித் திருவடியை வணங்கும் பக்தர்களின் பழைய கொடியவினை அனைத்தையும் தீர்த்து அருள்புரிவான், அழகிய குளிர்ந்த திரு ஆலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
கட்டளைக் கலிவிருத்தம் - திருநாவுக்கரசர் தேவாரத்தில் உள்ள திருக்குறுந்தொகை அமைப்பில்.
ஒவ்வோர் அடியிலும்:
  • முதல் சீர் 'மா'.
  • இரண்டாம் சீர் நேரசையில் தொடங்கும்.
  • 2-3-4 சீர்களுக்கிடையே வெண்டளை பயின்று வரும்.
  • நேர் அசையில் தொடங்கினால் அடிக்குப் 11 எழுத்துகள். நிரை அசையில் தொடங்கினால் அடிக்குப் 12 எழுத்துகள்.



No comments:

Post a Comment