Sunday, August 30, 2015

02.18 – திருவாலங்காடு - (அப்பனிடம் ஆலங்காடு)

02.18 – திருவாலங்காடு - (அப்பனிடம் ஆலங்காடு)



2011-05-06
திருவாலங்காடு
"அப்பனிடம் ஆலங்காடு"
-------------------------------------
(எண்சீர் விருத்தம் - "விளம் விளம் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.8.1 - “புண்ணியர் பூதியர் பூத நாதர்”)



1)
கோலவெண் டிங்களுங் கோள ராவுங்
.. கொக்கிற குங்குரா மலருஞ் சூடி
ஏலவெண் பொடியணி மார்பன் முன்னம்
.. இன்னமு தடைந்திடு வோமென் றெண்ணி
வேலையை வெற்பினை மத்தாக் கொண்டு
.. விண்ணவர் கடைந்தபோ தங்கெ ழுந்த
ஆலம துண்டருள் செய்த வெங்கள்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



பதம் பிரித்து:
கோல வெண் திங்களும், கோள் அராவும்,
.. கொக்கிறகும், குரா மலரும் சூடி,
ஏல வெண் பொடி அணி மார்பன்; முன்னம்
.. இன் அமுது அடைந்திடுவோம் என்று எண்ணி
வேலையை வெற்பினை மத்தாக் கொண்டு
.. விண்ணவர் கடைந்தபோது அங்கு எழுந்த
ஆலம் அது உண்டு அருள் செய்த எங்கள்
.. அப்பன் இடம் திருவாலங்காடே.


கோல - அழகிய;
கோள் அரா - கொடிய பாம்பு;
கொக்கிறகு - கொக்கிறகம்பூ; கொக்கினது இறகு; (சுந்தரர் தேவாரம் - 7.94.3 - "கோல அரவுங் கொக்கின் இறகும்" - சிவபெருமான் கொக்குருவம் கொண்ட குரண்டாசுரன் என்ற அசுரனை அழித்து, அதன் அடையாளமாகக் கொக்கிறகைச் சடையில் அணிந்தமையைக் கந்தபுராணத்துட் காண்க. இனி, 'கொக்கிறகு' என்பதொரு மலரும் உண்டு.)
ஏல வெண் பொடி - வாசம் கமழ் திருநீறு;
வேலை - கடல்;
வெற்பு - மலை;


2)
கருமணி மிடற்றினன் எழுத்தஞ் சோதிக்
.. கைதொழும் பத்தரைக் காத்த வர்க்குத்
தருவென வேண்டுவ ரங்கள் எல்லாம்
.. தந்தருள் செய்பவன் தன்னொப் பில்லான்
அருவமும் உருவமும் ஆணும் பெண்ணும்
.. ஆகிய அற்புதன் ஆலின் கீழே
அருமறை நால்வருக் குரைக்கும் எங்கள்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



கருமணி மிடற்றினன் - நீலகண்டன்; (மிடறு - கண்டம்);
எழுத்து அஞ்சு ஓதி - திருவைந்தெழுத்தை ஓதி;
பத்தரைக் காத்து அவர்க்குத் தரு ன வேண்டு வரங்கள் எல்லாம் தந்தருள் செய்பவன் - பக்தர்களைக் காத்து அவர்களுக்குக் கற்பகமரம் போல் வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவன்; (தரு - கற்பக மரம்);
தன்னொப்பில்லான் - தனக்கு ஓர் ஒப்பு இல்லாதவன்;





3)
கானையும் மன்றெனக் கருதி ஆடும்
.. கண்ணுத லான்தொழும் அன்பர் கட்குத்
தேனையும் பாலையும் ஒத்தி னிப்பான்
.. தெளிவினைத் தந்திரு வினையைத் தீர்ப்பான்
மானையும் மழுவையும் கையில் ஏந்தி
.. மால்விடை மேல்வரும் மாதோர் பாகன்
ஆனையின் ஈருரி போர்த்த எங்கள்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



கான் - காடு - சுடுகாடு;
மன்று - சபை;
கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்;
ருவினையைத் தீர்ப்பான் - எல்லா வினைகளையும் தீர்ப்பவன்;
ஈர் உரி - உரித்த தோல்;



4)
குழைமனத் தொடுதொழும் அம்மைக் காகக்
.. குவிகரத் திடைப்பழந் தன்னை ஈவான்
மழவிடை யாயருள் என்று வாழ்த்தி
.. மலரடி வழிபடும் அன்பர் தங்கள்
பழவினை தீர்த்தருள் பரமன் சுற்றும்
.. பல்கணப் படைபல பறைகள் ஆர்ப்ப
அழலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



அம்மை - காரைக்கால் அம்மையார்;
மழ விடையாய் - இளமைவாய்ந்த இடபத்தை, வாகனமாக உடையவனே;
ஆர்த்தல் - ஒலித்தல்;
அழல் எரி - அழல்கிற தீ; (வினைத்தொகை); (அழல்தல் - எரிதல்; பிரகாசித்தல்);



5)
கனைகடல் தனைக்கடை நாளெ ழுந்த
.. கரியவி டந்தனை உண்ட கண்டன்
சினமறு சிந்தையர் ஆகி என்றும்
.. சேவடி தனைநினை சீலர் தங்கள்
முனைவினை தீர்த்தருள் முக்கண் அண்ணல்
.. முளைமதி சூடிக ணங்கள் சூழ
அனலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



கனைகடல்தனைக் கடை நாள் எழுந்த - பாற்கடலைக் கடைந்த நாளில் தோன்றிய;
சினம் அறு சிந்தையர் - சினத்தை நீங்கிய மனத்தினர்;
முனைவினை - முன்னை வினை;
முளைமதி சூடி - பிறையைச் சூடியவன்;
அனல் எரி - அனலும் எரி; (வினைத்தொகை);



6)
சங்கர பேயுருத் தருக வென்று
.. தாள்பணிந் தம்மையார் வேண்ட ஆங்கே
அங்கருள் புரிந்தவன் அன்பர்க் கன்பன்
.. அயன்சிரம் அதிற்பலி தேரும் ஐயன்
கங்குலிற் பூதக ணங்கள் சூழக்
.. கரடிகை துடியொடு பறைமு ழங்க
அங்கியைக் கையினில் ஏந்தி ஆடும்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



சங்கர - அண்மை விளி - சங்கரனே;
ஆங்கு - அப்படி;
அங்கு - அவ்விடம்;
பலி தேர்தல் - பிச்சை எடுத்தல்;
கங்குல் - இரவு;
கரடிகை, துடி, பறை - பலவிதப் பறைவாத்தியங்கள்;
அங்கி - நெருப்பு;



7)
மணிமிட றன்மலை தலையால் ஏறும்
.. மாண்புகண் டவரையன் றம்மை யென்றான்
பணிபவர்க் கருங்கனி ஒத்தி ருப்பான்
.. பழவினைத் தொகுதியைப் பறைத்த ருள்வான்
துணிமதி முடிமிசைச் சூடி அல்லில்
.. சுற்றிலும் பூதக ணங்கள் ஆர்ப்ப
அணிகுழல் மலைமகள் காண ஆடும்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



மணிமிடறன் - நீகண்டன்;
தலையால் ஏறும் - தலையால் நடத்தலாவது, தலைதாழ இருகைகளையும் தரையில் ஊன்ற வைத்து நடப்பதாம்;
மாண்பு கண்டு அவரை ன்று அம்மை என்றான் - அவரது பக்தியை மெச்சி அவரை அன்று அம்மையே என்றவன்;
அரும் கனி - அரிய பழம்; ('கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி' - அப்பர் தேவாரம் - 6.32.1); ('கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்' - திருவிசைப்பா - 9.5.1)
பறைத்தல் - அழித்தல்;
துணிமதி - பிறைச்சந்திரன்; (வினைத்தொகை)
அல் - இரவு;
ஆர்ப்ப - ஒலிக்க;
அணிகுழல் - அழகிய கூந்தல்;


(பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார் புராணம் - பாடல் 58 -
வருமிவள் நம்மைப் பேணும் அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்.)



8)
பேர்க்கமு யன்றவ ரக்கன் தன்னைப்
.. பெருமலை மேல்விரல் இட்ட டர்த்தான்
நாக்குகள் பத்தினால் பாடக் கேட்டு
.. நாளொடு வாளையும் நல்கு நாதன்
பூக்கமழ் சடைமிசைத் திங்கள் சூடி
.. பூதக ணம்புடை சூழ மொந்தை
ஆர்க்கநள் ளிருளினில் நட்டம் ஆடும்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



பேர்க்க முயன்ற அரக்கன் - கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணன்;
நாளொடு வாளையும் - நீண்ட ஆயுளையும் சந்திரஹாசம் என்ற வாளையும்;
மொந்தை - ஒருகட்பறைவகை (A drum with one face);
ஆர்க்க - ஒலிக்க;



9)
போதியல் பிரமனும் புள்ளூர் மாலும்
.. பொன்னடி முடியிவை காண வொண்ணாச்
சோதியன் தொழுமடி யார்கட் கென்றும்
.. துணையவன் தூயவன் அஞ்சொல் மாதோர்
பாதியன் பூரணன் வடியார் சூலப்
.. படையினன் பாரெலாம் படைத்தொ டுக்கும்
ஆதியன் அனலினை ஏந்தி ஆடும்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



போது இயல் பிரமன் - தாமரை மலரில் உறையும் நான்முகன்; (போது - பூ; இயல்தல் - தங்குதல்);
புள் ஊர் மால் - பறவைமேல் செல்லும் திருமால்; (புள் - பறவை; ஊர்தல் - செல்லுதல்);
போது இயல் பிரமனும் புள் ஊர் மாலும் பொன்னடி முடி இவை காண ஒண்ணா - ஈசன் முடியைப் பிரமனும், ஈசன் அடியை மாலும் தேடியது எதிர்நிரல்நிறையாக வந்தது;
அஞ்சொல் மாது - அழகிய சொல்லையுடைய பார்வதி;
பாதியன் பூரணன் - முரண்தொடை;
வடி ஆர் சூலப் படை - கூரான சூலாயுதம்; (வடி - கூர்மை);
ஒடுக்குதல் - லயிக்கச்செய்தல்; சம்ஹாரம் செய்தல்;
ஆதியன் - முதல்வன்;



10)
கங்குலை ஒத்திருள் நிலவும் நெஞ்சர்
.. கருத்தனை அறிகிலார் கண்ணி லாரே
திங்களும் நாகமும் சேர்ந்து லாவும்
.. சென்னியன் சேவடி போற்றும் மாணி
சங்கர னேயருள் என்னக் காலன்
.. தனையுதைத் தடியரின் உயிரைக் காத்த
அங்கணன் அனலினை ஏந்தி ஆடும்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



கங்குல் - இரவு;
கருத்தன் - கர்த்தா - கடவுள் (God, as Creator);
மாணி - அந்தணச் சிறுவன் - மார்க்கண்டேயர்;
என்ன - என்று வேண்ட;
அங்கணன் - அழகிய அருட்கண்ணன் - சிவன்;



11)
பேரழ குடலெனக் கெதற்கென் றன்று
.. பேயுரு வேண்டிய டைந்த அம்மை
சீரடிக் கீழமர்ந் தினிது பாடத்
.. திருவருள் புரிந்தவன் தேவ தேவன்
நீரடை சடையுடை நிமலன் கண்ணார்
.. நெற்றியன் பாரிடம் முழவொ லிக்க
ஆரழல் அங்கையில் ஏந்தி ஆடும்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



பதம் பிரித்து:
"பேர் அழகு உடல் எனக்கு எதற்கு" என்று அன்று
.. பேய் உரு வேண்டி அடைந்த அம்மை
சீர் அடிக்கீழ் அமர்ந்து இனிது பாடத்
.. திருவருள் புரிந்தவன்; தேவ தேவன்;
நீர் அடை சடையுடை நிமலன்; கண் ஆர்
.. நெற்றியன்; பாரிடம் முழவு ஒலிக்க,
ஆர் அழல் அங்கையில் ஏந்தி ஆடும்
.. அப்பன் இடம் திருவாலங்காடே.


அம்மை - காரைக்கால் அம்மையார்;
சீர் அடி - சிறந்த திருவடி;
தேவ தேவன் - தேவர்கட்குத் தேவன்;
பாரிடம் - பூதம்;
ஆர் அழல் - அரிய நெருப்பு - பொறுத்தற்கரிய தீ, பண்புத்தொகை; ஆர்ந்த அழல் என வினைத்தொகையுமாம்;


(பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார் புராணம் - பாடல்கள் 60 & 61 -
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்.


கூடுமா றருள்கொ டுத்துக் குலவுதென் திசையில் என்றும்
நீடுவாழ் பழன மூதூர் நிலவிய ஆலங் காட்டில்
ஆடுமா நடமும் நீகண் டானந்தஞ் சேர்ந்தெப் போதும்
பாடுவாய் நம்மை என்றான் பரவுவார் பற்றாய் நின்றான்.)



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :



1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு :
ண்சீர் விருத்தம் - 'விளம் விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு.
காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் இவ்வமைப்பு என்று கருதுகின்றேன்.
இவ்வமைப்பு ஓரளவிற்குக் கீழ்க்காணும் சம்பந்தர் பதிக அமைப்பை ஒத்துள்ளது.



2) சம்பந்தர் தேவாரம் - 1.8.1 -
புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார் திங்கட்
கண்ணிய ரென்றென்று காத லாளர் கைதொழு தேத்த விருந்த வூராம்
விண்ணுயர் மாளிகை மாட வீதி விரைகமழ் சோலை சுலாவி யெங்கும்
பண்ணியல் பாடல றாத வாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடு நாவே.



தானன தானன தான தான" என்ற அரையடிச் சந்தம்.
தானன வரும் இடத்தில் தான (தேமா) / தானான (தேமாங்காய்) வரலாம். அப்படித் தான (தேமா) வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.



3) காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் - 11.2.9 -
துத்தம்,கைக் கிள்ளை, விளரி, தாரம்,
.. உழை,இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,
.. தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
.. தமருகம், குடமுழா, மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும் எங்கள்
.. அப்ப னிடம்திரு ஆலங் காடே 



4) திருவாலங்காடு - வடாரண்யேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=115

-------------- --------------

No comments:

Post a Comment