Sunday, August 23, 2015

01.80 – புள்ளிருக்கு வேளூர் - (வைத்தீஸ்வரன் கோயில்)

01.80 – புள்ளிருக்கு வேளூர் - (வைத்தீஸ்வரன் கோயில்)



2010-09-23
புள்ளிருக்கு வேளூர் - (வைத்தீஸ்வரன் கோயில்)
-----------------------------------------
(அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' என்ற அரையடி வாய்பாடு)
(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - 'மருவார் கொன்றை மதிசூடி')
(தலப்பெயர்க்குறிப்பு: புள்ளிருக்கு வேளூர் - சம்பாதி, சடாயு, என்ற கழுகு அரசர்கள் இருவரும், வேதங்களும், முருகக்கடவுளும், பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலம் ஆதலால் இப்பெயர் பெற்றது. இது இக்காலத்தில் வைத்தீசுவரன்கோயில் என்று வழங்கப் பெறுகின்றது.)



1)
மூக்கு வாய்கண் செவியுடலாய்
.. மூன்றொ டிரண்டு புலன்சுற்றித்
தாக்கும் போது தமர்தம்மைத்
.. தாயின் மிக்க கருணையொடு
காக்கும் கடவுள் கண்ணுதலான்
.. கான கத்துக் கரியினுரி
போர்க்கும் பெருமான் அமர்கோயில்
.. புள்ளி ருக்கு வேளூரே.



மூன்றொடு இரண்டு புலன் - ஐம்புலன்கள்;
தமர் - சுற்றத்தார்; அடியவர்;
தாயின் மிக்க கருணையொடு - தாயைவிட அதிகப் பரிவோடு;
கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்;
கானகத்துக் கரியின் உரி - காட்டில் வாழும் யானையின் தோல்;
அமர் கோயில் - மகிழ்ந்துறையும் கோயில்;
புள்ளிருக்கு வேளூர் - வைத்தீஸ்வரன் கோயில்;



2)
வாக்கின் மன்னர் நவில்தமிழால்
.. மலர்த்தாள் தன்னை வணங்குகிற
ஆர்க்கும் அருளும் முக்கண்ணன்
.. அடியார் தம்மை வினைவந்து
தாக்கும் புன்மை வாராமல்
.. தாயைப் போல நின்றுதுயர்
போக்கும் பெருமான் அமர்கோயில்
.. புள்ளி ருக்கு வேளூரே.



வாக்கின் மன்னர் நவில் தமிழால் - திருநாவுக்கரசர் பாடியருளிய தேவாரப் பாடல்களால்;
மலர்த்தாள் தன்னை வணங்குகிற ஆர்க்கும் - மலர் போன்ற திருவடிகளை வணங்கும் எவர்க்கும்;



3)
நீர்க்கும் மதிக்கும் பாம்பிற்கும்
.. நிமிர்புன் சடைமேல் இடம்தந்தான்
ஆர்க்கும் கடல்சூழ் உலகிற்கும்
.. அமரர் கட்கும் பதியாவான்
வாக்கும் மனமும் கடந்துநின்ற
.. மாண்பி னான்தான் அமர்கோயில்
பூக்கும் பொழில்சூழ்ந் தழகாரும்
.. புள்ளி ருக்கு வேளூரே.



நிமிர் புன் சடை - நீண்ட செஞ்சடை; (நிமிர்தல் - உயர்தல்; நீளுதல்; பரத்தல்;)
ஆர்க்கும் கடல் - ஒலிக்கும் கடல்;
உலகு - ஆகுபெயராய் உலகில் வாழும் உயிர்களைச் சுட்டியது;
அமரர்கட்கும் - தேவர்களுக்கும்;
வாக்கும் மனமும் கடந்து நின்ற மாண்பினான் - மனத்திற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவன்;
தான் - அவன்;
அழகு ஆரும் - அழகு பொருந்திய; அழகு மிகுந்த;



4)
ஆரே எனினும் அஞ்செழுத்தை
.. அன்போ டுரைக்கில் அருள்செய்வான்
காரேய் கண்டன் கண்மூன்று
.. காட்டும் ஐயன் கடுகிவந்த
நீரே றுஞ்செஞ் சடையின்மேல்
.. நிலவும் சூடும் எம்பெருமான்
போரே றேறி அமர்கோயில்
.. புள்ளி ருக்கு வேளூரே.



ஆரே எனினும் அஞ்செழுத்தை அன்போடு ரைக்கில் அருள்செய்வான் - எத்தகைய பாவம் செய்தவர்களே ஆயினும், 'நமச்சிவாய' என்று பக்தியோடு சொன்னால் அவர்களுக்கு அருள்வான்; (திருஞான சம்பந்தர் அருளிய நமச்சிவாயப் பதிகப் பாடல்களைக் காண்க –
சம்பந்தர் தேவாரம் - 3.49.5 -
கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே.)
கார் ஏய் கண்டன் - மேகம் போன்ற மிடற்றை உடையவன் - நீலகண்டன்; (கார் - மேகம்; ஏய்தல் - ஒத்தல்);
கடுகி - விரைந்து;
போர் ஏறு ஏறி - போரிடும் காளையின்மேல் ஏறி வருபவன்;



5)
காவாய் என்று காதலொடு
.. கைகள் கூப்பும் அடியார்கள்
ஆவா என்று வினைக்கடலுள்
.. ஆழா வண்ணம் கைகொடுத்து
வாவா என்று காத்தருள்வான்
.. மங்கை பங்கன் மணங்கமழும்
பூவார் சடையன் அமர்கோயில்
.. புள்ளி ருக்கு வேளூரே.



காவாய் - காத்தருள்வாயாக;
ஆவா - ஆஆ - ஓர் இரக்கக்குறிப்பு;
மங்கைபங்கன் - உமைபங்கன்;
பூ ஆர் சடையன் - பூக்கள் பொருந்திய சடையை உடையவன்;



6)
வாதை தீர்க்கும் மருந்தாகி
.. வாரா வழியில் சேர்த்தருள்வான்
வேதப் பொருளான் வெண்பொடியார்
.. மேனி தன்னில் ஒருகூறு
மாதை உடையான் வளர்சடைமேல்
.. மதியம் சூடும் மாதேவன்
பூதப் படையான் அமர்கோயில்
.. புள்ளி ருக்கு வேளூரே.



வாதை - துன்பம்; நோய்;
வாரா வழி - மீண்டும் உலகில் பிறவி அடையாத நெறி;
வெண்பொடி ஆர் மேனி தன்னில் - திருநீறு பூசிய திருமேனியில்;
வளர்சடை - நீண்ட சடை;
மதியம் - சந்திரன்;
மாதேவன் - மகாதேவன்;
பூதப் படை - பூதகணங்கள்;



7)
நேற்றும் இன்றும் நாளையுமாய்
.. நிற்கும் ஈசன் ஐந்தொழில்கள்
ஆற்றும் ஐயன் அஞ்சடைமேல்
.. அரவும் ஆறும் அம்புலியின்
கீற்றும் புனைவான் நாள்தோறும்
.. கீதம் பாடி அடியார்கள்
போற்றும் பெருமான் அமர்கோயில்
.. புள்ளி ருக்கு வேளூரே.



நேற்றும் இன்றும் நாளையுமாய் நிற்கும் ஈசன் - காலத்தைக் கடந்த பெருமான்;
ஐந்தொழில்கள் - பஞ்சகிருத்தியம் - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்;
அம் சடை - அழகிய சடை;
அம்புலியின் கீற்று - பிறைச் சந்திரன்;



8)
வன்மை யாலே மலையெறிய
.. வந்த மூட இராவணனை
மென்மை யான விரலொன்றை
.. வெற்பின் மேலிட் டழவைத்தான்
நன்மை செய்யும் நம்பெருமான்
.. நம்பி நாளும் அடிதொழுவார்
புன்மை தீர்ப்பான் அமர்கோயில்
.. புள்ளி ருக்கு வேளூரே.



வன்மை - வலிமை;
மூட இராவணனை - அறிவற்ற இராவணனை;
வெற்பு - மலை - இங்கே கயிலைமலை;
நன்மை செய்யும் நம் பெருமான் - சங்கரன்;
நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்;
புன்மை - துன்பம்; குற்றம்;



9)
வாதித் திருந்த மலரவனும்
.. மாலும் காணா வண்ணமொரு
சோதிப் பிழம்பாய் உயர்பெருமான்
.. தோணி புரத்தில் கவுணியர்க்கு
மாதி னோடும் வந்தருள்வான்
.. மறையின் பொருளை ஆலின்கீழ்ப்
போதித் திருப்பான் அமர்கோயில்
.. புள்ளி ருக்கு வேளூரே.



வாதித்திருந்த மலரவனும் மாலும் - வாது செய்த பிரமனும் விஷ்ணுவும்;
தோணிபுரம் - சீகாழியின் பன்னிரு பெயர்களுள் ஒன்று;
கவுணியர் - கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தர்;
மாதினோடும் - பார்வதியோடும்;
ஆலின்கீழ் - கல்லால மரத்தின் கீழ்;



10)
மாசு சேர்ந்த மனத்தார்கள்
.. வஞ்சத் தோடு வழிதிருப்பப்
பேசும் சொல்லை மதியாமல்,
.. பிறையொன் றணியும் பெருமானின்
வாச மலர்த்தாள் தொழுவார்க்கு
.. வானம் அளிப்பான் திருநீறு
பூசும் மார்பன் அமர்கோயில்
.. புள்ளி ருக்கு வேளூரே.



மாசு - அழுக்கு; குற்றம்;
வழி - மார்க்கம்;
திருநீறு பூசும் மார்பன் - திருநீற்றைப் பூசிய மார்பினன்;



11)
வேண்டார் அறிய இயலாதான்
.. வேண்டும் அன்பர்க் கெளிதாவான்
மாண்டார் உடலம் எரிகானில்
.. மகிழ்ந்து நடஞ்செய் பெருமான்பெண்
ஆண்டான் ஆவான் சடைமேலே
.. ஆறு புனைவான் அரவத்தார்
பூண்டான் இனிதே அமர்கோயில்
.. புள்ளி ருக்கு வேளூரே.



வேண்டார் - வணங்காதவர்க்கு; (வேண்டுதல் - விரும்புதல்; பிரார்த்தித்தல்);
வேண்டும் அன்பர்க்கு - இறைஞ்சும் பக்தர்களுக்கு;
மாண்டார் உடலம் எரி கானில் - இறந்தவர்கள் உடலை எரிக்கும் சுடுகாட்டில்;
பெண் ஆண் தான் ஆவான் - அர்த்தநாரீஸ்வரன்; (ஆண்டான் - ஆண்+தான்);
அரவத் தார் பூண்டான் - பாம்பு மாலையை அணிந்தவன்;



அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment