Thursday, August 27, 2015

02.02 – ஆனைக்கா - (எண்ணுருவன்)

02.02 – னைக்கா - (எண்ணுருவன்)


2010-10-21
திருவானைக்கா
"எண்ணுருவன் ஆனைக்கா"
-------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(எண்ணலங்காரம் அமைந்த பதிகம். ஒன்று முதல் பதினொன்று வரை உள்ள எண்களைக் குறிக்கும் சொற்களில் தொடங்கும் பாடல்கள்)
(சம்பந்தர் தேவாரம் - 2.43.1 - “கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்”);


1)
ஒருகுன்றை ஒத்திருக்கும் வினையெல்லாம் ஒழித்தின்பம்
அருள்கின்ற ஐயனவன் உமையோடும் அமருமிடம்
வருகின்ற பொன்னிநதி வாய்க்காலில் பாய்ந்துவளம்
தருகின்ற வயல்சூழும் தண்ஆனைக் காநகரே.


அமர்தல் - விரும்புதல்; உறைதல்;
பொன்னி - காவிரி;
தண் ஆனைக்கா - குளிர்ச்சி பொருந்திய திருவானைக்கா; (தண்மை - குளிர்ச்சி);


2)
இருநிலத்தில் பிறப்பெய்தி இளைக்கின்ற நிலையளிக்கும்
அருவினையின் வேரறுக்கும் அண்ணலவன் அமருமிடம்
பெருகிவரும் பொன்னிநதி பெருமானின் அடிபோற்ற
அருகடையும் அழகுடைய ஆனைக்கா நகர்தானே.


இருநிலம் - பூமி (vast expanse of earth);
இளைத்தல் - சோர்தல்; வருந்துதல்;


3)
முப்புரங்கள் எரிகொள்ள முன்னமொரு நகைசெய்த
அப்பணிந்த அப்பனவன் அம்மையொடும் அமருமிடம்
எப்புறமும் வெயில்நுழையா இரும்பொழில்கள் மிகுந்திருக்கும்
செப்பரிய எழிலாரும் திருவானைக் காநகரே.


நகைசெய்தல் - சிரித்தல்;
அப்பு அணிந்த அப்பன் - நீரை (கங்கையை) அணிந்த சிவபெருமான்; (அப்பு - நீர்);
வெயில் நுழையா இரும் பொழில் - சூரியனின் கதிர்கள் நுழையாத அடர்ந்த பெரிய சோலைகள்; (இருமை - Greatness, largeness, hugeness, eminence; பெருமை);
செப்பரிய எழில் ஆரும் - வர்ணிக்க இயலாத அழகு பொருந்திய; (செப்பரிய – செப்ப அரிய - சொல்லுதற்கு அருமையாக விளங்கும்);
4)
நால்வர்க்குக் கல்லாற்கீழ் நல்லறஞ்சொல் நம்பெருமான்
பால்வெண்ணீ றொளிர்மேனிப் பரமனவன் அமருமிடம்
கால்வாயின் வழியோடிக் காவிரிநீர் பாய்வயலில்
சேல்பாயும் வளம்சேரும் திருவானைக் காநகரே.


கல்லாற்கீழ் - கல்லால மரத்தின்கீழ்;
பால்வெண்ணீறு ஒளிர்மேனிப் பரமன் - பால் போன்ற வெண்மையான திருநீறு ஒளிர்கிற திருமேனி உடைய மேலானவன்;
சேல் பாயும் - சேல் மீன்கள் பாய்கிற;


5)
அஞ்சுவினை அவையெல்லாம் அடியோடு தீர்த்தருளித்
தஞ்சமென வந்தாரைத் தாங்குமரன் அமருமிடம்
அஞ்சனவேல் விழிமாதர் ஆடிமகிழ் பொன்னியயல்
மஞ்சடையும் பொழில்சூழும் மணிஆனைக் காநகரே.


அஞ்சுவினை - நாம் அஞ்சுகிற வினைகள்;
அஞ்சன வேல் விழி மாதர் - மைதீட்டிய, வேல் போன்ற கண் உடைய பெண்கள்;
ஆடுதல் - நீராடுதல்; குளித்தல்;
பொன்னி அயல் - காவிரி அருகே; (அயல் - Neighbourhood, adjacent place; அருகிடம்.)
மஞ்சு - மேகம்;
மணி - அழகு;
6)
அறுசமயப் பொருளாகி, அடிபோற்றும் அன்பர்க்கு
மறுபிறப்பை அறுக்கின்ற மாதேவன் அமருமிடம்
நறுமலரின் மதுவுண்ண நாடிவரும் வண்டினங்கள்
உறுபொழில்கள் மஞ்சுவரை உயர்ஆனைக் காநகரே.



அறுசமயம் - ஷண்மதங்கள்;
உறுதல் - இருத்தல்; அடைதல்;
பொழில்கள் மஞ்சுவரை உயர் - சோலைகள் மேகத்தைத் தீண்டுமாறு உயர்கின்ற;



7)
எழுபிறப்பும் உனக்கேஆள் என்றிருக்கும் அடியார்க்கு
விழுமியபே றளிக்கின்ற விண்ணவர்கோன் அமருமிடம்
செழுமலரில் தேனுண்டு சிறைவண்டு பண்பாடிக்
கெழுமுகிற பொழில்சூழும் கேடில்ஆ னைக்காவே.


எழு பிறப்பு - எழுகிற பிறப்பு - வரும் பிறவிகள்;
ஆள் - அடிமை;
விழுமிய பேறு - சிறந்த பேறு;
விண்ணவர்கோன் - தேவர்கள் தலைவன்;
செழுமலரில் - செழுமையுடைய நல்ல மலர்களில்; (செழுமை - செழிப்பு; அழகு; மாட்சிமை);
சிறைவண்டு - இறகுகளையுடைய வண்டு; (சிறை - இறகு - Wing, feather, plumage);
கெழுமுதல் - பொருந்துதல்; நிறைதல் (To be full, plenteous, abundant);
கேடு இல் - என்றும் நிலைத்திருக்கும்;



8)
எண்ணாத இராவணனின் இருபதுகை முடிபத்துப்
புண்ணாக விரலூன்றும் எண்ணுருவன் அமருமிடம்
நண்ணாது வினைமாயப் பண்ணோடு தமிழ்பாடி
மண்ணோர்கள் அடைகின்ற மணிஆனைக் காநகரே.


எண் உருவன் - எட்டு உரு உடையவன் - அட்டமூர்த்தி (ஐம்பூதமும் ஞாயிறும் மதியும் உயிருமாகிய எண்வகை வடிவு);
நண்ணுதல் - அடைதல்;
தமிழ் - தேவாரம் திருவாசகம் முதலியன;
மண்ணோர் - உலகமக்கள்;
மணி - அழகு;


9)
ஒன்பதுகோள் அவையென்றும் உதவுநிலை தந்தருள்வான்
முன்பிருவர் காண்பரியான் முக்கண்ணன் அமருமிடம்
இன்மதுவை நாடிவரும் வண்டினங்கள் இசைபாடும்
பன்மலர்ஆர் பொழில்சூழும் பழஆனைக் காநகரே.



ஒன்பது கோள் அவை என்றும் உதவு நிலை - நவக்கிரகங்களும் என்றும் நன்மையே செய்யும் நிலை;
முன்பு இருவர் காண்பு அரியான் - முன்னம் திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவனாய் நின்றவன்;
இன் மது - இனிய தேன்;
பன் மலர் ஆர் பொழில் - பல மலர்கள் நிறைந்த சோலைகள்;
பழ ஆனைக்கா - பழைய தலமான திருவானைக்கா;


10)
பத்துடையர் ஆகாமல் மறைவழியைப் பழித்துழலும்
எத்தரவர்க் கெட்டாத எம்பெருமான் அமருமிடம்
கொத்துமலர் நிறைந்திருக்கும் குளிர்பொழிலில் சுரும்பினங்கள்
தெத்தெனவென் றார்த்திருக்கும் திருவானைக் காநகரே.


பத்து உடையர் - பக்தர்; (பத்து - பற்று; பக்தி; / பத்து - அடியார்க்குரிய இலக்கணமாகிய பத்து. இவற்றைப், 'புறத்திலக்கணம் பத்து' எனவும், 'அகத்திலக்கணம் பத்து' எனவும் கூறுவர்);
(அப்பர் தேவாரம் - 4.18.10 - "பத்துக்கொலாம் அடியார் செய்கை தானே");
(திருவெம்பாவை - 3 - "பத்துடையீர் ஈசன் பழவடியீர்");
மறைவழி - வேதநெறி;
எத்தர் - ஏமாற்றுபவர்; தந்திரக்காரர்;
சுரும்பு இனங்கள் - வண்டுகள்;
தெத்தென - ஒலிக்குறிப்பு;
ஆர்த்தல் - ஒலித்தல்;


11)
பதினொருவர் அரிபிரமன் பலகோடி வானவரும்
துதிமிகச்செய் தடிபோற்றும் தூமதியன் அமருமிடம்
கதிர்நுழையாப் பொழில்களிலே கருவண்டு களிகொண்டு
பதிபுகழைப் பாடுகிற பழஆனைக் காநகரே.


பதினொருவர் - ஏகாதச உருத்திரர்கள்;
தூ மதியன் - ஞானஸ்வரூபி; வெண்திங்களைச் சூடியவன்;
கதிர் - சூரிய கிரணங்கள்;
களிகொண்டு - மகிழ்ச்சிகொண்டு; (களி = மகிழ்ச்சி; தேன்);
பதி - தலைவன்;

அன்போடு,
வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :
1)
எண்ணலங்காரம் - பாடலில் எண்களோ எண்களைச் சுட்டும் ஒலியுடைய சொற்களோ ஓர் ஒழுங்கில் அமையும் செய்யுள் அணி;



2)
எண்ணுருவன் = எண் உருவன் = எட்டு உருவங்கள் உடையவன் - அஷ்டமூர்த்தி; / அடியார்கள் எண்ணும் உருவம் ஏற்பவன்;
("எண் = இலக்கம் (number)” என்றும் பொருள்கொள்ளலாம். இப்பதிகப்பாடல்கள் ஒன்று முதல் பதினொன்று வரை உள்ள எண்களின் சொற்களில் தொடங்குவன);



3)
திருமுறை 11.8 - சேரமான் பெருமாள் நாயனார் அருளிய திருக்கைலாய ஞானஉலா -
"....
எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் - எவ்வுருவும்
தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான் ....."
எவர் ஒருவர் எந்த உருவத்தில் வைத்து உள்ளத்தில் இடையறாது தியானிக்கின்றார்களோ அவருக்கு அந்த உருவமாய்த் தோன்றியே அதன்வழி அருளற்பாலதாய அருளைச் சிவபெருமானே அருளுவான்.
இங்ஙனம் எந்த உருவத்தையும் தனது உருவமாகவே கொண்டு அருள்புரிகின்ற சிவபெருமான் பிறர் தனது உருவமாய் நின்றாராக எவரும் கண்டிலாத, காண வாராத நிலையை உடையவன்.
அத்தகைய அவனே எம் கடவுள்.)

----------------- ----------------

No comments:

Post a Comment