Thursday, August 20, 2015

01.67 – ஆலவாய் - (மதுரை)

01.67 – ஆலவாய் - (மதுரை)



2010-04-21
திருஆலவாய் (மதுரை)
"ஆலவாய் அண்ணல் - 2"
------------------------------------------------------------------
(கட்டளைக் கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்.
இப்பதிகத்தின் யாப்பு அமைப்பைப் பிற்குறிப்பிற் காண்க)



1)
நரிக ளெல்லாம் பரிகளும் ஆக்குவான்
இரியும் வானவர் ஏத்த விடந்தனைப்
பரிவொ டுண்பான் பணியா தவர்களுக்(கு)
அரியன் ஆலவாய் மேவிய அண்ணலே.



நரிகளெல்லாம் பரிகளும் ஆக்குவான் - நரியைப் பரி ஆக்கியதைத் திருவிளையாடற் புராணாத்திற் காண்க;
இரியும் வானவர் ஏத்த விடந்தனைப் பரிவொடு ண்பான் - அஞ்சி ஓடிய தேவர்கள் வேண்ட, இரங்கி விஷத்தை உண்டவன்; (இரிதல் - அஞ்சி ஓடுதல்);
பணியாதவர்களுக்கு அரியன் - தொழாதவர்களால் அடையப்படாதவன்;



2)
அன்பன் வேண்ட அடிமாறி ஆடுவான்
முன்பும் பின்பும் நடுவுமாம் முக்கணன்
அம்பொன் றால்புரம் மூன்றையும் அட்டவன்
என்பொன் ஆலவாய் மேவிய ஈசனே.



அடி மாறி ஆடுவான் - மதுரையில் பாண்டியன் வேண்டக் கால் மாறி நடம் ஆடியவன்;
முன்பும் பின்பும் நடுவும் ஆம் - (திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8.20.8 – "முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்" - எப்பொருளுக்கும் முற்பட்ட முதலும், நடுவும் முடிவும் ஆனவனே);
ட்டவன் - அழித்தவன்; (அடுதல் - அழித்தல்);
என் பொன் - என் பொன் போன்றவன்;



3)
தோற்ற மொன்றிலாச் சுந்தரன் தூமதிக்
கீற்றைச் செஞ்சடை ஏற்றவன் கேடிலான்
நோற்ற அன்பர்க்காக் கூற்றையும் செற்றவன்
ஏற்றில் ஏறுமெம் ஆலவாய் ஈசனே



தோற்றம் - தொடக்கம்; பிறப்பு;
சுந்தரன் - சொக்கன்; அழகன்;
கேடு இலான் - அழிவு இல்லாதவன்;
நோற்ற அன்பர்க்கா - வழிபட்ட மார்க்கண்டேயருக்காக;
கூற்றையும் செற்றவன் - எமனையும் உதைத்தவன்; (செறுதல் - கோபித்தல்; வெல்லுதல்; அழித்தல்);



4)
விறகு விற்றவன்; வெவ்விடம் உண்டதன்
பிறகும் நிற்கிற பெற்றியன்; ஓர்கொக்கின்
இறகும் சூடினான்; அன்பர் இருவினை
அறவந் தேத்துமெம் ஆலவாய் அண்ணலே.



விறகு விற்றவன் - திருவிளையாடற்புராணத்தில் காண்க;
வெவ்விடம் உண்டு அதன் பிறகும் நிற்கிற பெற்றியன் - கொடிய நஞ்சை உண்டும் அழியாது இருக்கும் பெருமை உடையவன்; (பெற்றி - தன்மை; பெருமை);
கொக்கின் இறகு - பகன் என்னும் அசுரன் (குரண்டாசுரன் - குரண்டம் - கொக்கு) கொக்கு வடிவில் தீங்கு செய்யச் சிவபிரான் அவனை அழித்துச் சிறகை அணிந்து தேவர் துயரைத் தீர்த்தனர். (இவ் வரலாற்றைக் கந்த புராணமும், உபதேச காண்டமும் கூறுதல் காண்க).
(அப்பர் தேவாரம் - 5.55.4 - "கொக்கின் தூவலுங் கூவிளங் கண்ணியும்" - தூவல் - தூவி - இறகு; கொக்கின் வடிவமாய் வந்த அசுரனை அழித்து அவன் இறகைச் சூடியவன் இறைவன்).



5)
கல்லால் நீழலில் நல்லார்கள் நால்வர்க்குச்
சொல்லா தேயறம் சொல்பவன்; தாள்தொழப்
பொல்லா வல்வினை போக்கி அடியவர்க்(கு)
எல்லாம் நல்குவான் ஆலவாய் ஈசனே.



கல்லால் நீழலில் - கல்லால மரத்தடியில்;
நல்லார்கள் நால்வர் - சனகாதி முனிவர்கள்;
சொல்லாதே அறம் சொல்பவன் - மௌனமாக உபதேசிக்கும் தட்சிணாமூர்த்தி;



6)
எதிர்த்த ஆனையின் ஈருரி போர்த்தவர்,
கொதித்த நஞ்சினைக் கண்டத்தில் கொண்டவர்,
குதிக்கும் நீர்சேர் சடையர், குரைகழல்
துதித்த வர்துயர் தீர்ஆல வாயரே.



ஈர் உரி - வினைத்தொகை - உரித்த தோல். (ஈர்த்தல் - உரித்தல்; உரி - தோல்);
குதித்தல் - பாய்தல்; நீர்முதலியன எழும்பிவிழுதல் (To splash);
குரைகழல் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடி;



7)
மேலை நாள்செய் வினையின் தொடர்ச்சியால்
ஆலை வாய்க்கரும் பைப்போல் அலத்தலேன்?
காலை மாலை கழல்தொழக் காப்பரே
ஆல வாய்உறை அங்கண் அடிகளே.



மேலை நாள் செய் வினை - முன்பு செய்த வினை;
ஆலைவாய்க் கரும்பைப் போல் அலத்தல் ஏன் - ஆலையின்கண் நசுக்கப்பெறும் கரும்பு போல ஏன் துன்புறுவது? (ஆலை - Sugar-cane press; கரும்பாலை); (அலத்தல் - துன்பமுறுதல்);
அங்கண் - அருட்கண்; (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.17 - "அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை" - அழகிய கருணை நோக்குடைய மன்னனை);
அடிகள் - கடவுள்;



8)
செல்லாத் தேரைச் செலுத்த மலைபேர்க்க
வல்லேன் என்ற மதியில் அரக்கனை
மெல்லோர் தாள்விரல் கொண்டு மிதித்தவன்
நல்லார் போற்றும்நம் ஆலவாய் நாதனே.



மலை பேர்க்க வல்லேன் - கயிலைமலையைப் பெயர்த்தெறிவேன்;
மதி இல் அரக்கனை - அறிவற்ற இராவணனை;
மெல் ஓர் பாதவிரல்கொண்டு - மிருதுவான ஒரு பாதவிரலால்;



9)
மால யற்கிடை மாஅழ லாயுயர்
நீல கண்டனை நெற்றியிற் கண்ணனைச்
சூல பாணியைத், தொண்டர் அகத்தனை,
ஆல வாய்அர னைத்தொழு நெஞ்சமே.



மால் அயற்கு இடை - திருமாலுக்கும் பிரமனுக்கும் இடையே;
மா அழல் ஆய் உயர் - பெரிய சோதி ஆகி உயர்ந்த;
தொண்டர் அகத்தனை - பக்தர் நெஞ்சில் குடிகொள்பவனை;



10)
கூவிப் பொய்யுரை கொள்கையர் ஈறிலாத்
தீவி னைக்குழி வீழும் சிதடரே
நாவி னால்அரன் நாமம் நவிற்றில்நம்
ஆவி காப்பவன் ஆலவாய் அண்ணலே.



பொய் உரை கொள்கையர் - வினைத்தொகை - பொய்களே உரைக்கின்ற கொள்கை உடையவர்கள்;
ஈறு இலா - முடிவற்ற;
சிதடன் - குருடன்; அறிவிலி;
நவிற்றில் - நவிற்றினால் - சொன்னால்; (நவிற்றுதல் - சொல்லுதல்);
நம் ஆவி காப்பவன் - நம் உயிருக்குத் துணை ஆகின்றவன்;



(அப்பர் தேவாரம் - 5.72.7
கல்லினோடு எனைப் பூட்டி மண் கையர்
ஒல்லை நீர் புக நூக்க, ன் வாக்கினால்
நெல்லு நீள் வயல் நீலக்குடி ரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே.)



11)
சீரார் நாமத்தைச் செப்பிடும் பத்தரின்
தீராத் தீவினை தீர்த்தவர் மீண்டிங்கு
வாரா வண்ணம் வழிதந் தருள்கிற
ஆரா இன்னமு தாலவாய் அண்ணலே.



தீவினை தீர்த்தவர் மீண்டிங்கு - தீவினை தீர்த்து, அவர் மீண்டு இங்கு;

நன்மைமிகும் திருப்பெயரைச் சொல்லும் பக்தர்களின் தீராத தீய வினைகளையெல்லாம் தீர்த்து, அவ்வடியவர்கள் மறுபடியும் உலகில் பிறவாதபடி நல்வழி கொடுத்து அருளும் தெவிட்டாத இன்னமுது ஆவான் திருஆலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
கட்டளைக் கலிவிருத்தம் - திருநாவுக்கரசர் தேவாரத்தில் உள்ள திருக்குறுந்தொகை அமைப்பில்.
ஒவ்வோர் அடியிலும்:
  • முதல் சீர் 'மா'.
  • இரண்டாம் சீர் நேரசையில் தொடங்கும்.
  • 2-3-4 சீர்களுக்கிடையே வெண்டளை பயின்று வரும்.
  • நேர் அசையில் தொடங்கினால் அடிக்குப் 11 எழுத்துகள். நிரை அசையில் தொடங்கினால் அடிக்குப் 12 எழுத்துகள்.

------- --------

No comments:

Post a Comment