Friday, August 14, 2015

01.47 – பொது - (நீலகண்டனை ஏத்து மனமே)

01.47பொது - (நீலகண்டனை ஏத்து மனமே)



2009-05-16
பொது
"நீலகண்டனை ஏத்து மனமே"
-------------------------------------
எண்சீர்ச் சந்த விருத்தம் - “தானன தான தான தனதான தான தனதான தான தனனா" என்ற சந்தம்;
(சம்பந்தர் தேவாரம் - 2.85.1 - கோளறு பதிகம் - "வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி")
(அப்பர் தேவாரம் - 4.8.1 - "சிவனெனு மோசை யல்ல தறையோ உலகில் திருநின்ற செம்மை உளதே")



1)
ஊணுடை வீடு பெண்டிர் எனநாளும் ஓடி
.. ஒழியாத இன்னல் அதையே
காணுதல் அன்றி வேறு பலனென்ன எண்ணு;
.. கவலாத வாழ்வு கருதில்,
நாணொரு நாகம் ஆக மலைவில்லி னோடு
.. நகர்மூன்றெ ரித்த இறைவன்,
வாணுதல் மங்கை பங்கன், மணிநீல கண்டன்
.. மலர்த்தாளை ஏத்து மனமே.



* மூன்றாம் அடி மேரு மலையை வில்லாகவும் வாசுகியை அதன் நாணாகவும் கொண்டு முப்புரம் எரித்ததைச் சுட்டியது.
ஊண் உடை வீடு பெண்டிர் - உணவு, உடை, வீடு, குடும்பம்;
கவலாத - கவலைப்படுதல் இல்லாத;
கருதில் - கருதினால் - விரும்பினால்;
நகர் மூன்று - முப்புரங்கள்;
வாணுதல் (வாள் நுதல்) மங்கை - ஒளி பொருந்திய நெற்றியை உடைய பார்வதி;
மணி நீலகண்டன் - அழகிய மணி போல விடம் ஒளிரும் கழுத்தை உடையவன்;
ஏத்து - துதி; வணங்கு;



2)
பாதக மான முன்னை வினைவந்த டைந்து
.. பலவாறி டர்கள் தருமுன்
வேதனை யற்ற தான நலமான வாழ்வு
.. விளைக்கின்ற பாதை கருதில்,
யாதொரு தீங்கும் அற்ற அருளாளன், அன்பர்
.. அகம்கோயி லாக உடையான்,
மாதொரு பங்கன், எந்தை, மணிநீல கண்டன்
.. மலர்த்தாளை ஏத்து மனமே.



பாதகம் - பெரும்பாவம்;
விளைக்கின்ற பாதை - உண்டாக்கும் நெறி;
தீங்கு - தீமை; குற்றம்;
அன்பர் அகம் - பக்தர்களது மனம்;



3)
ஈறில தாகி வந்து துயர்நல்கு கின்ற,
.. இமயத்தை ஒத்த வினைகள்
பாறிட, என்றும் இன்பம் அகலாது நல்ல
.. படிவாழ எண்ணில், முடிமேல்
ஆறிள நாகம் கொன்றை மதிசூடும் எந்தை,
.. அடல்ஏறு தன்னில் வருவோன்,
மாறிலன், மங்கை பங்கன், மணிநீல கண்டன்
.. மலர்த்தாளை ஏத்து மனமே.



ஈறு - முடிவு;
இமயத்தை ஒத்த வினைகள் - மலை போன்ற பாவங்கள்;
பாறுதல் - அழிதல்;
அடல் ஏறு - வெற்றியுடைய/வலிமையுடைய எருது; (அடல் - வெற்றி; வலிமை);
மாறிலன் - மாற்றம் இல்லாதவன்; ஒப்பு இல்லாதவன்; (மாறு - வேறுபாடு (change); ஒப்பு);


4)
அலையென வந்து நாளும் அலைக்கின்ற ஆசை
.. அவைஏவ ஓடி அதனால்
பலவித மான பாவம் மலைபோலி ருந்தும்
.. பனிபோல ஒல்லை விலகும்;
தலையினில் ஆறு சூடி, விடையேறி, காடு
.. தனிலாடு கின்ற தலைவன்,
மலைமகள் பங்கன், எந்தை, மணிநீல கண்டன்
.. மலர்த்தாளை ஏத்து மனமே.



அலைத்தல் - வருத்துதல் (vex, trouble, torment); அலையச்செய்தல் (drive hither and thither);
ஒல்லை - சீக்கிரமாக;
சூடி - சூடுபவன்; ஏறி - ஏறுபவன்;
காடு தனில் - காடு தன்னில் - சுடுகாட்டில்;



5)
ஐவரின் ஏவல் செய்து முடிவற்ற துன்பம்
.. அதையேஅ டைந்து சிறிதும்
உய்வழி எண்ணி டாமல் உழல்கின்ற தென்ன?
.. ஒழியாத இன்பம் கருதில்,
கைதொழு பாலன் வாழ எமன்வீழு மாறு
.. கழலாலு தைத்த பரமன்,
மைவிழி மங்கை பங்கன், மணிநீல கண்டன்
.. மலர்த்தாளை ஏத்து மனமே.



* மூன்றாம் அடி மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்ததைச் சுட்டியது.
ஐவர் - ஐம்புலன்கள்;
உய்வழி - உய்கின்ற வழி;
கழல் - கழல் அணிந்த திருவடி;
மைவிழி மங்கை - கரிய விழியை உடைய பார்வதி;



6)
உடம்பினை ஓம்ப எண்ணி நிதம்தீய வற்றை
.. ஒழியாது செய்து துயரே
அடைந்திடும் இந்த வாழ்வில் வினைநீங்கி இன்பம்
.. அகலாதி ருக்க, முடிமேல்
படங்கொளும் நாகம் ஆறு மணம்வீசு கொன்றை
.. பனிவெண்ணி லாவும் அணிவோன்,
மடந்தையொர் பங்கன், எந்தை, மணிநீல கண்டன்
.. மலர்த்தாளை ஏத்து மனமே.



நிதம் - தினமும்;
படங்கொளும் நாகம் - படத்தை உடைய பாம்பு;
பனி வெண்ணிலா - குளிர்ந்த, வெண்மையான பிறைச்சந்திரன்;
அணிவோன் - அணிபவன்;
மடந்தை - பெண் - இங்கே பார்வதி;
ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்;



7)
அளவில தாய்ப்பி றப்பை அளிக்கின்ற பாவம்
.. அடியோடு தீர்ந்து மகிழ,
வளமிக வான வாழ்வு நிலைபெற்றி ருக்க
.. வழிஎன்ன என்று வினவில்,
உளமதில் ஈசர் கோயில் அமைபூச லாரை
.. உயர்வானி ருத்தும் ஒருவன்,
வளையணி மங்கை பங்கன், மணிநீல கண்டன்
.. மலர்த்தாளை ஏத்து மனமே.



* மூன்றாம் அடி பூசலார் நாயனாருக்கு அருள்புரிந்ததைச் சுட்டியது.
அளவு இலதாய்ப் பிறப்பை அளிக்கின்ற பாவம் - அளவற்றுப் பிறவிகளை அளிக்கின்ற தீவினைகள்;
அடியோடு - முழுவதும் (Completely);
வளமிக வான வாழ்வு - மிகுந்த வளமான வாழ்வு / நன்மை மிக விண்ணுலக வாழ்வு;
வினவில் - வினவினால்; (வினவுதல் - உசாவுதல் - To question, enquire);
உயர் வான் - உயர்ந்த விண்ணுலகம்;
ஒருவன் - ஒப்பில்லாதவன்;



8)
தினமிக ஆசை கோபம் முதலான ஆறு
.. சிறுமைக்கு ணங்கள் அவையால்
வினைமிக ஆகி வாடும் நிலைநீங்கி இன்பம்
.. விளைகின்ற ஆறு வினவில்,
முனமலை வீச எண்ணும் அவுணன்பு லம்ப
.. முடிபத்த டர்த்த முதல்வன்,
வனமுலை மங்கை பங்கன், மணிநீல கண்டன்
.. மலர்த்தாளை ஏத்து மனமே.



* மூன்றாம் அடி இராவணனது ஆணவத்தை அழித்துப் பின் அவனுக்கு அருள்புரிந்தததைச் சுட்டியது.
ஆறு சிறுமைக் குணங்கள் - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம்; (= ஆசை, கோபம், miserliness, infatuation, செருக்கு (arrogance), பொறாமை (Envy) );
(சம்பந்தர் தேவாரம் - 1.21.5 - "சினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய");
தினமிக - தினமும் மிகுந்த;
ஆறு - உபாயம் (Means); வழி (Way, road, path);
முன[ம்] மலை வீச எண்ணும் அவுணன் புலம்ப முடி பத்து அடர்த்த - முன்பு கயிலை மலையை எறிய எண்ணி முயன்ற இராவணன் ஓலமிட்டு அழும்படி அவனது பத்துத் தலைகளையும் நசுக்கிய;
வன முலை - அழகிய கொங்கை; (வனம் - அழகு);



9)
பொங்கலை ஆழி போல வினைசூழ ஆசைப்
.. புயல்வீச நாளும் அதனால்
இங்கிடர் உற்று ழன்று வருந்தாமல் என்றும்
.. இனிதான வாழ்வு பெறலாம்;
பங்கய னோடு மாலும் அறியாத சோதி,
.. பணிவார்கள் நெஞ்சில் உறைவோன்,
மங்கையொர் பங்கன், எந்தை, மணிநீல கண்டன்
.. மலர்த்தாளை ஏத்து மனமே.



பொங்குதல் - மேல் எழுதல்; மிகுதல்; கோபித்தல்; விரைதல்;
ஆழி - கடல்;
பங்கயன் - தாமரையில் இருக்கும் பிரமன்;
ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்;



10)
தேன்மொழி பேசி ஏய்த்துத் திசைமாறு மாறு
.. செயஎண்ணு வார்கள் அறியார்;
கான்வழி சென்று நாளும் இடரேமி குந்து
.. கதியின்றி வாழ்ந்து கெடலேன்?
வான்வழி காட்டி நிற்கும் மறையோதும் எந்தை,
.. மதிசூடு கின்ற பெருமான்,
மான்விழி மங்கை பங்கன், மணிநீல கண்டன்
.. மலர்த்தாளை ஏத்து மனமே.



தேன் மொழி - இனிய சொற்கள்;
திசை மாறுமாறு - வேறு வழியில் போகும்படி;
கான் வழி - காட்டுவழி;
வான் வழி - உயர்ந்த மார்க்கம்; நல்ல வழி; விண்ணுலகுக்கு வழி;



11)
பேர்பணம் என்று நாளும் மிகஆசை கொண்டு
.. பிழையேபு ரிந்து பொதியாய்ச்
சேர்கிற பாவம் எல்லாம் அடியோடு தீர்ந்து
.. திருவாக வேண்டில், முடிமேல்
நீர்தனை ஏற்ற எந்தை, பிறைசூடி, அன்பர்
.. நிழல்போல நிற்கும் நிமலன்,
வார்குழ லாளொர் பங்கன், மணிநீல கண்டன்
.. மலர்த்தாளை ஏத்து மனமே.



பேர் பணம் - புகழ், பணம்;
பொதி - மூட்டை (Pack, bundle; load); தொகுதி (Collection);
திரு ஆக வேண்டில் - நன்மை பெற விரும்பினால்;
நீர்தனை - கங்கையை;
வார் குழலாள் - நீண்ட கூந்தலை உடையவள் - இங்கே பார்வதி;
ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்;



அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

4 comments:

  1. மிக அருமையான பாடல்கள்! சிறப்பான யாப்பு! இனிமையான சொற்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருக! உங்கள் கருத்தினைக் கண்டு மகிழ்ந்தேன்.

      Delete
  2. தங்கள் இனிய கவிதையால் ஊக்கம் பெற்று, ஞான சம்பந்தரின் சமகாலத்தவரான திருமங்கை ஆழ்வாரைப் போற்றி நான் எழுதிய என் முதல் எண்சீர் சந்த விருத்தக் கவிதை :
    நாயகன் மங்கை வேந்தன் பரகாலன் நாலு
    கவிதேர்ந்த ஞானக் கவிஞன்
    ஆயிரம் பேரைச் சொல்லும் அடியார்கள் நெஞ்சில்
    அமுதூறச் செய்யும் புலவன்
    வாயுறு வார்த்தை யாவும் தமிழ்வேத மென்ன
    மனத்தின்னல் தீர்க்க மொழிவான்
    ஞாயிறு போல வந்த கலியன்பொற் பாதம்
    அதுநம்மை ஆளும் அரசே.

    இந்தக் கவிதையைப் பற்றிய தங்கள் கருத்துகளை எனக்குத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி,
    இமயவரம்பன்
    https://www.imayavaramban.com/ஆழ்வார்கள்/

    ReplyDelete
    Replies
    1. I appreciate your level of interest in Tamil and our heritage. I will send my feedback.

      Delete