Saturday, August 29, 2015

02.16 – வட திருமுல்லைவாயில்

02.16 – வட திருமுல்லைவாயில்



2011-04-17
வட திருமுல்லைவாயில்
"மாசிலாமணியைத் தொழு நெஞ்சமே"
--------------------------------------------
(எழுசீர் விருத்தம் - 'மா விளம் மா விளம் மா விளம் விளம்' என்ற வாய்பாடு)
(சுந்தரர் தேவாரம் - 7.34.1 - தம்மையே புகழ்ந்து)

1)
இன்னற் கடலிடை இளைக்கும் நெஞ்சமே
.. இதனின் றுய்வழி இயம்பினேன்
மின்னற் சடையினன் வெள்ளை விடையினன்
.. வெந்த பொடியணி மார்பினன்
அன்ன நடையுடை உமையோர் கூறினன்
.. அன்பின் உருவினன் அண்டமாள்
மன்னன் வடமுல்லை வாயில் மாசிலா
.. மணியைத் தொழவினை மாயுமே.



இளைத்தல் - மெலிதல்; சோர்தல்; வருந்துதல்;
மின்னற் சடையினன் - மின்னல் போன்ற சடையை உடையவன்;
வெந்த பொடி - சாம்பல்; திருநீறு:
கூறினன் - கூறு உடையவன்;
அண்டம் ஆள் மன்னன் - விசுவேசுவரன் (Lord of the Universe);



2)
கொந்த ளிக்கிற துயரக் கடலிடைக்
.. குமையும் நெஞ்சமே கூறினேன்
சந்தி ரன்தனைச் சடையில் வைத்தவன்
.. தனிய னாய்த்துணை யாயினான்
முந்தி இமையவர் இறைஞ்ச ஒருசிறு
.. முறுவல் கொண்டெயில் மூன்றெரி
மைந்தன் வடமுல்லை வாயில் மாசிலா
.. மணியைத் தொழவினை மாயுமே.



குமைதல் - வருந்துதல்;
தனியன் - தனியாக இருப்பவன்; ஒப்பற்றவன்;
துணை - உதவி; காப்பு; கூட்டாய் இருப்பவன்; இரண்டு; கணவன்;
சிறு முறுவல் - புன்னகை;
எயில் - கோட்டை;
மைந்தன் - வீரன்; அழகன்; இளைஞன்;



3)
அஞ்சி வாழ்கிற அவலம் போய்நலம்
.. ஆக வழியிது நெஞ்சமே
அஞ்செ ழுத்தினை ஓதி வழிபடும்
.. அன்பர் பாலடை காலனின்
நெஞ்சில் ஓருதை தந்த தாளினான்
.. நிலவை நீள்சடை மேலணி
மஞ்சன் வடமுல்லை வாயில் மாசிலா
.. மணியைத் தொழவினை மாயுமே.



பால் - அருகு; பக்கம்;
மஞ்சன் - மைந்தன் என்பதன் போலி - வீரன்; அழகன்; இளைஞன்;



4)
நரக வேதனை கோள்கள் நல்கிடா
.. நல்ல வழியிது நெஞ்சமே
திரைகள் ஆர்புனல் பாயும் சடைமிசைத்
.. திங்கள் கூவிளம் அணிந்தவன்
கரையி லாப்பெருங் கருணை வாரிதி
.. கரையும் பத்தரைப் புரக்கிற
வரதன் வடமுல்லை வாயில் மாசிலா
.. மணியைத் தொழவினை மாயுமே.



நரக வேதனை கோள்கள் நல்கிடா - கோள்கள் நரக வேதனை நல்கிடா - நவக்கிரகங்கள் இடர்கள் செய்யமாட்டா;; (நல்கிடா - நல்கமாட்டா; நல்காத);
திரை - அலை;
கூவிளம் - வில்வம்;
வாரிதி - கடல்;
புரத்தல் - காத்தல்;
வரதன் - வரம் அளிப்பவன்;
கரையும் பத்தரைப் புரக்கிற வரதன் - உள்ளம் உருகுகின்ற பக்தர்களைக் காக்கின்ற வரதன்;



5)
பொள்ளல் ஆக்கையை ஆவி நீங்குமுன்
.. போற்றி உய்ந்திடு நெஞ்சமே
துள்ளும் மானினை ஏந்து கையினன்
.. சுடலைப் பொடியணி சுந்தரன்
கள்ளம் ஒன்றிலன் கங்கை கரந்தவன்
.. கபாலத் திடுபலி ஏற்கிற
வள்ளல் வடமுல்லை வாயில் மாசிலா
.. மணியைத் தொழவினை மாயுமே.



பொள்ளல் ஆக்கை - ஓட்டை உடம்பு;
சுடலைப் பொடி - சுடுகாட்டுச் சாம்பல்;
கரத்தல் - ஒளித்தல்;
கபாலத்து இடு பலி - கபாலத்தில் இடும் பிச்சை;



6)
இல்லை இல்லையென் றேங்கும் நிலையற
.. எளிய வழியிது நெஞ்சமே
செல்லொ ணாவணம் கரியின் கால்களை
.. முல்லைக் கொடிகொடு பிணித்தவண்
நல்ல தொண்டைமாற் கருள்செய் முக்கணன்
.. ஞால மெலாம்படைத் தொடுக்கவும்
வல்லன் வடமுல்லை வாயில் மாசிலா
.. மணியைத் தொழவினை மாயுமே.



* தொண்டைமானின் யானை செல்ல இயலாதபடி அதன் கால்களை முல்லைக்கொடிகள் சுற்றிக்கொள்ள, அவன் அதை வாளால் வெட்டியபோது அங்கே இரத்தம் பீறிடச் சிவலிங்கம் இருக்கக்கண்டு வருந்திய அவனுக்கு அருள்புரிந்ததைச் சுட்டியது.
(சுந்தரர் தேவாரம் - 7.69.10:
"சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையாற் கட்டிட்(டு)
எல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட் டருளிய இறைவனே .... ")


செல்லொணா வணம் - செல்ல ஒண்ணா வண்ணம் - போக இயலாதபடி;
கரி - யானை;
அவண் - அவ்விடம்; அப்படி;
ஒடுக்குதல் - சங்காரம்;
வல்லன் - வல்லவன்;



7)
குளமார் கண்களோ டிறைஞ்சு நாவலர்
.. கோனின் நற்றமிழ்த் தொடையொடு
தளமார் பூவொடு தூய புனலொடு
.. தழல்சேர் மெழுகன மனத்தொடு
களமார் கண்டனே மாதோர் பங்கனே
.. கங்கைச் சடையனே காவென
வளமார் வடமுல்லை வாயில் மாசிலா
.. மணியைத் தொழவினை மாயுமே.



* சுந்தரர், சங்கிலியாரை மணப்பதன்முன் செய்த சூளுறவை மீறித், திருவொற்றியூரின் எல்லையைக் கடந்ததால் கண்ணிழந்து செல்லும்பொழுது, வழிப்போவார் வழிகாட்ட, வடதிருமுல்லைவாயில் சென்று இறைஞ்சித் திருப்பதிகம் பாடினார்.
(சுந்தரர் தேவாரம் - 7.69.2 -
"கூடிய இலயஞ் ... ... திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே")


ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்; ஒத்தல்;
நாவலர் கோன் - சுந்தரர்;
நல் தமிழ்த்தொடை - நல்ல தமிழ்ப்பாடல் - தேவாரம்;
தளம் - பூவிதழ்;
அன - அன்ன - போன்ற;
களம் - கறுப்பு;
பங்கம் - பங்கு;



8)
கதியி லோமெனக் கவலும் இந்நிலை
.. கழலும் வழியறி நெஞ்சமே
மதியி லாதரு மலையை ஆட்டிய
.. வல்ல ரக்கனை ஓர்விரல்
நுதியி னாலடர் ஈசன் நான்மறை
.. நுவலும் நாவினன் முடிமிசை
மதியன் வடமுல்லை வாயில் மாசிலா
.. மணியைத் தொழவினை மாயுமே.



கதி - புகலிடம்;
கவலுதல் - மனம் வருந்துதல்;
கழலுதல் - நீங்குதல்;
மதி - அறிவு; திங்கள்;
நுதி - நுனி;
அடர்த்தல் - நசுக்குதல்;
நுவல்தல் - சொல்லுதல்;
(சம்பந்தர் தேவாரம் - 3.24.5 - “அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே”);



9)
ஊண்ப ணம்புகழ் என்று நாடொறும்
.. உழன்றி டர்ப்படும் நெஞ்சமே
காண்பொ ணாவெரி யாகிப் பிரமனும்
.. கரியா னுந்தொழ நின்றவன்
ஆண்பெண் ணாயவன் ஆல நீழலில்
.. அமர்ந்து மறைப்பொருள் விரிக்கிற
மாண்பன் வடமுல்லை வாயில் மாசிலா
.. மணியைத் தொழவினை மாயுமே.



ஊண் - உணவு;
நாடொறும் - நாள்தொறும்;
காண்பு ஒணா எரி - (அடிமுடி) காண இயலாத சோதி;
கரியான் - திருமால்;
விரித்தல் - விளக்குதல்;
மாண்பு - பெருமை;



10)
எத்தை நாள்தொறும் புரிந்து மக்களை
.. ஏமாற் றீனரின் சொற்களில்
சத்தொன் றில்லையே பேய்த்தேர் வேட்கையைத்
.. தணிக்கு மோபுனல் தாங்கிய
அத்தன் கணைதொடு கருப்பு வில்லனின்
.. ஆகம் பொடிபட விழித்தவன்
மத்தன் வடமுல்லை வாயில் மாசிலா
.. மணியைத் தொழவினை மாயுமே.



எத்து - வஞ்சனை;
ஏமாற்று ஈனர் - ஏமாற்றும் இழிந்தவர்கள்;
சத்து - உண்மை;
பேய்த்தேர் வேட்கையைத் தணிக்குமோ - கானல்நீர் தாகத்தைத் தீர்க்குமோ? (பேய்த்தேர் - கானல்நீர் - mirage);
புனல் தாங்கிய அத்தன் - கங்கையை முடிமேல் தாங்கிய நம் தந்தை;
கணை தொடு - கணையைத் தொடுத்த - அம்பு எய்த;
கருப்பு வில்லன் - கரும்பை வில்லாக ஏந்தும் மன்மதன்;
ஆகம் - உடல்;
மத்தன் - ஊமத்த மலரைச் சூடியவன்; உன்மத்தன்;



11)
வாதே புரிகிற மனமே வாதைபோய்
.. மகிழ்வு வரும்வழி சொல்லுகேன்
காதார் குழையினன் கண்மூன் றுடையவன்
.. கண்டங் கரியவன் கங்கையைப்
போதார் முடிமிசை ஏற்ற பொற்பினன்
.. பொன்னார் மேனியன் பூதியன்
மாதார் வடமுல்லை வாயில் மாசிலா
.. மணியைத் தொழவினை மாயுமே.



வாது - சண்டை; தருக்கம்;
வாதை - துன்பம்;
சொல்லுகேன் - சொல்லுவேன்; ('க்' - ககர ஒற்று எதிர்காலம் காட்டும் இடைநிலை);
ஆர் - பொருந்திய;
போது - பூ;
பொற்பு - அழகு; தன்மை;
பூதியன் - திருநீறு பூசியவன்
மாது - அழகு; பெருமை; பெண்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :



1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு :
எழுசீர் விருத்தம் - 'மா விளம் மா விளம் மா விளம் விளம்' என்ற வாய்பாடு.
இவ்வமைப்பைப் பெரிதளவும் ஒத்த தேவாரப் பதிகங்களைக் கீழ்க்காண்க :



2) “தான தானன தான தானன தான தானன தானனா" என்ற சந்தத்தில் சம்பந்தர், சுந்தரர் பதிகங்கள் உள்ளன.
சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - “மானி னேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெருந் தேவிகேள்”;
சுந்தரர் தேவாரம் - 7.34.8 - "எள்வி ழுந்திடம் பார்க்கு மாகிலும் ஈக்கும் ஈகில னாகிலும்";



வடதிருமுல்லைவாயில் - மாசிலாமணீஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=15

-------------- --------------

No comments:

Post a Comment