Monday, August 17, 2015

01.52 – பொது - (ஸ்ரக்விணீ )

01.52 – பொது - (ஸ்ரக்விணீ )



2009-10-17
பொது
"தாள்தொழாய் நெஞ்சமே" - 2
-------------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - “தானனா தானனா தானனா தானனா" என்ற சந்தம்)
(சமஸ்கிருதத்தில் 'ஸ்ரக்விணீ ' - स्रग्विणी - என்னும் அமைப்பு - “அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்")
(சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்")



1)
நாளையென் றெண்ணியே நாளைநீ ஓட்டினாய்
தாளவொண் ணாத்துயர்ச் சாகரத் தாழ்கிறாய்
காளைமேற் செல்பவன் கண்ணுமோர் மூன்றினான்
காளகண் டன்கழல் கைதொழாய் நெஞ்சமே.



பதம் பிரித்து:
நாளை என்(று) எண்ணியே நாளை நீ ஓட்டினாய்;
தாள ஒண்ணாத் துயர்ச் சாகரத்(து) ஆழ்கிறாய்;
காளைமேல் செல்பவன், கண்ணும் ஓர் மூன்றினான்,
காளகண்டன் கழல் கைதொழாய் நெஞ்சமே.


தாள ஒண்ணாத் துயர்ச் சாகரத்து ஆழ்கிறாய் - தாங்க முடியாத துன்பக் கடலில் மூகுகின்றாய்;;
காளகண்டன் - நீலகண்டன்;
கழல் - கழல் அணிந்த திருவடி;
கைதொழாய் - கையால் தொழுவாயாக; வணங்குவாயாக;



2)
நேற்றுமாய் இன்றுமாய் நாளையாய் நிற்பவன்
போற்றுமன் பர்க்கெனக் கூற்றுமாய் கொள்கையான்
நீற்றினைப் பூசுவான் நேரிலாச் சோதியான்
மாற்றிலாப் பொன்னவன் தாள்தொழாய் நெஞ்சமே.



நேற்றுமாய் இன்றுமாய் நாளையாய் நிற்பவன் - காலத்தைக் கடந்தவன்;
போற்றும் அன்பர் - வணங்குகின் பக்தர் - இங்கே மார்க்கண்டேயர்;
கூற்று மாய் கொள்கையான் - காலனைக் கொல்லும் தன்மை உடையவன்;
நேர் இலாச் சோதி - ஒப்பற்ற ஒளி;
மாற்று இலாப் பொன் - உரைத்து மாற்றுக் காணுதற்கரிய, மிக உயர்ந்த பொன்;
(அப்பர் தேவாரம் - 5.60.5 - "சாற்றிச் சொல்லுவன் ..... மாற்றிலாச் செம்பொன் ஆவர் மாற்பேறரே");



3)
காய்நுதற் கண்ணினாற் காமனைச் சுட்டவர்;
மாய்நமன் மாளவோர் தாளினாற் செற்றவர்;
பாய்நதிச் சென்னிமேற் பாம்பையும் வைத்தவர்;
போய்நிதம் பொற்கழல் போற்றுவாய் நெஞ்சமே.



காய் நுதற் கண்ணினால் - எரிக்கும் நெற்றிக்கண்ணால்;
மாய்நமன் - வினைத்தொகை - கொல்லும் நமன்;
பாய்நதிச் சென்னி - கங்கை பாயும் திருமுடி;
பொற்கழல் - பொன்னடி;



4)
வம்பரோ டாடியிவ் வாழ்வினிற் கண்டதென்?
துன்பமே; நெஞ்சமே, "தூமதிக் கண்ணியா!
அம்புமால் ஆகமுன் மும்மதில் சுட்டவா!
என்பொனே!" என்றுநீ ஏத்தினால் இன்பமே.



பதம் பிரித்து:
வம்பரோடு ஆடி இவ்வாழ்வினில் கண்டது என்?
துன்பமே; நெஞ்சமே, "தூமதிக் கண்ணியா!
"அம்பு மால் ஆக, முன் மும்மதில் சுட்டவா!
என் பொனே!" என்று நீ ஏத்தினால் இன்பமே.


வம்பரோடு ஆடுதல் - வீணர்களோடு கூடி உழலுதல்;
இவ்வாழ்வினில் கண்டது என் - இந்த வாழ்க்கையில் அடைந்தது என்ன?
தூமதிக் கண்ணியான் - தூய பிறைச்சந்திரனைத் தலைமாலையாக அணிபவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);
(அப்பர் தேவாரம் - 4.3.6 - "தண்மதிக் கண்ணியி னானை...");
பொனே - பொன்னே என்பது இடைக்குறையாக வந்தது;



5)
நல்லறஞ் சொல்லுவார் நால்வருக் காலமர்
செல்வனார் சேவினிற் செல்லுவார் அன்பினாற்
கல்லையும் பூவெனக் கொள்ளுவார் தாள்தொழ
எல்லையில் வல்வினைக் கட்டொழிந் தின்பமே.



பதம் பிரித்து:
நல் அறம் சொல்லுவார் நால்வருக்(கு) ஆல் அமர்
செல்வனார்; சேவினில் செல்லுவார்; அன்பினால்
கல்லையும் பூ எனக் கொள்ளுவார் தாள் தொழ,
எல்லை இல் வல்வினைக்கட்(டு) ஒழிந்(து) இன்பமே.


* 3-ம் அடி சாக்கிய நாயனார் வரலாற்றைச் சுட்டியது.
ஆல் அமர் செல்வன் - கல்லால மரத்தின் கீழ் அமரும் தட்சிணாமூர்த்தி;
சே - எருது;
எல்லை இல் வல்வினைக்கட்டு - அளவில்லாத தீவினையின் கட்டு;

6)
ஆண்டவன் மாண்டவர் நீறணிந் தென்பையும்
பூண்டவன் பொற்பதம் போற்றிவா னோர்பலர்
வேண்டவன் னஞ்சுதான் உண்டவன் தில்லையில்
தாண்டவன் சங்கரன் தாள்தொழாய் நெஞ்சமே.



பதம் பிரித்து:
ஆண்டவன்; மாண்டவர் நீறு அணிந்து என்பையும்
பூண்டவன்; பொற்பதம் போற்றி வானோர் பலர்
வேண்ட, வன் நஞ்சுதான் உண்டவன்; தில்லையில்
தாண்டவன்; சங்கரன் தாள்தொழாய் நெஞ்சமே.
மாண்டவர் - இறந்தவர்; (மாண்டவர் நீறு அணிந்து - சுடலைப்பொடி பூசி);
என்பு - எலும்பு;
(சுந்தரர் தேவாரம் - 7.46.1 - ".. செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்..");
வன் நஞ்சு - கொடிய விஷம்;
தாண்டவன் - கூத்தன்;



7)
ஆசைகள் வந்துவந் தல்லலே செய்வதால்
பூசைகள் செய்துனைப் போற்றவல் லேனலேன்
நீசனேன் தன்னையும் வாசமார் செய்யதாள்
நேசனாச் செய்கவே நீலமார் கண்டனே.



போற்ற வல்லேன் அலேன் - நான் போற்றவல்லவன் அல்லேன்;
நீசனேன் - இழிந்த நான்; (நீசனேன் தன்னையும் - இழிந்தவனான என்னையும்);
வாசம் ஆர் செய்ய தாள் - மணம் கமழும் சிவந்த திருவடி;
நேசனா - நேசனாக – அன்பு உடையவனாக;
நீலம் ஆர் கண்டன் - நீலநிறம் பொருந்திய கண்டத்தை உடையவன்;


இலக்கணக் குறிப்பு: 'ஏன்' - 1. First person singular suffix (a) of a verb, as in வந்தேன்: (b) of a noun, as in அடியேன்; தன்மை ஒருமைப் பெயர், வினைகளில் வரும் விகுதி.



8)
வேகமாய்ப் போயரன் வெற்பசைத் தோனுரம்
போகவோர் மெல்விரல் வைத்தவன் போற்றநாள்
ஏகமாய் ஈந்தவர் பாகமோர் மங்கையார்
நாகமார் கச்சினர் நம்மிடர் தீர்ப்பரே.



பதம் பிரித்து:
வேகமாய்ப் போய் அரன் வெற்(பு) அசைத்தோன் உரம்
போக ஓர் மெல்விரல் வைத்து, அவன் போற்ற, நாள்
ஏகமாய் ஈந்தவர்; பாகம் ஓர் மங்கையார்;
நாகம் ஆர் கச்சினர்; நம் இடர் தீர்ப்பரே.


வேகமாய் - கோபம் உடையவன் ஆகி; (வேகம் - கோபம்);
அரன் வெற்பு - சிவன் உறையும் கயிலைமலை;
உரம் - வலிமை;
மெல் விரல் - மென்மையான விரல்;
நாள் - வாழ்நாள்;
ஏகமாய் - மிகுதியாக;
பாகம் ஓர் மங்கையார் - பார்வதியை ஒரு கூறாகக் கொண்டவர்;
நாகம் ஆர் கச்சினர் - பாம்பை அரையில் கச்சாக அணிந்தவர்;



9)
பங்கயன் மாலிவர் காணொணாப் பண்பினீர்
செங்கயல் போல்விழிப் பெண்ணினர் சிந்தையால்
உங்கழல் வாழ்த்திடா ஊமையே னாயினேன்
இங்கழுந் தாதவா றின்னருள் செய்விரே.



பதம் பிரித்து:
பங்கயன் மால் இவர் காணொணாப் பண்பினீர்;
செங்கயல்போல் விழிப் பெண்ணினர் சிந்தையால்,
உம் கழல் வாழ்த்திடா ஊமையேன் ஆயினேன்
இங்கு அழுந்தாதவாறு இன்னருள் செய்விரே.


காணொணா - காண்பதற்கு ஒண்ணாத - அறிய இயலாத;
பண்பினீர் - பண்பு உடையவரே;
பங்கயன் - பிரமன்;
செங்கயல் - செந்நிறக் கயல் மீன்;
ஊமையே னாயினேன் - ஊமையேன் ஆயினேன்; ("ஊமையேன் நாயினேன்" என்றும் பிரிக்கலாம்);
ஊமையேன் - ஊமை போன்ற நான்;
அழுந்துதல் - அமிழ்தல்; (To sink, to be immersed, drowned);
செய்விர் - செய்வீர்;


இலக்கணக் குறிப்புகள்:
1 - இர், ஈர் -- இவை முன்னிலைப் பன்மைக்குரிய வினைமுற்று விகுதிகள்.
2 - ஈர் -- அர் / ஆர் என்று முடியும் பெயர்கள் விளியில் ஈர் என்று ஆகும். (- டு. பார்ப்பார், கூத்தர், உடையர் என்பன பார்ப்பீர், கூத்தீர், உடையீர் என வரும்).



10)
ஏசுவார் நேசமில் லாதநீ சர்சிலர்
மாசுசேர் நெஞ்சினார் வார்த்தைமெய் அல்லவே
பாசுரம் பாடியன் பாயரன் சீரையே
பேசுவார் இன்பமே பெற்றிருப் பார்களே.



பதம் பிரித்து:
ஏசுவார் நேசம் இல்லாத நீசர் சிலர்;
மாசு சேர் நெஞ்சினார் வார்த்தை மெய் அல்லவே;
பாசுரம் பாடி அன்பாய் அரன் சீரையே
பேசுவார் இன்பமே பெற்றிருப்பார்களே.


ஏசுவார் - இகழ்வார்;
நேசம் - அன்பு (Love, affection, piety);
நீசர் - கீழோர்; அறிவிலார்;
பாசுரம் - திருப்பாடல் (Sacred poem);
அன்பாய் - காதலாகி - அன்பு உடையவர் ஆகி;
சீர் - புகழ்;
பேசுவார் - பேசுபவர்கள்;



11)
பாலனாய்க் காளையாய்ப் பாவைமார் மேற்பெரும்
மாலனாய் ஐம்புலன் மாயையால் வாழ்வினில்
சாலநாள் போக்கிவிட் டேனையும் சங்கரா
காலனார் கொள்ளுமுன் காத்தருள் செய்கவே.



பாலன் - பாலகன் - சிறுவன்;
காளை - இளைஞன்;
பாவைமார் - பெண்கள்;
மால் - ஆசை; மயக்கம்; (மாலன் - மால் உடையவன்)
மாயை - வஞ்சகம் (Deception, fraud, trick);
சால நாள் - பல நாள்கள்; பல காலம்;
(அப்பர் தேவாரம் - 4.67.9 - 'பாலனாய்க் கழிந்த நாளும்.....");



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - “தானனா தானனா தானனா தானனா" என்ற சந்தம்.
சமஸ்கிருதத்தில் 'ஸ்ரக்விணீ ' - स्रग्विणी - என்னும் அமைப்பு.
அடிக்கு 4 முறை 'குரு-லகு-குரு' அமைப்புப் பெற்று வந்து, 4 அடிகளால் ஆவது.
பலரும் அறிந்த அச்சுதாஷ்டகம் இவ்வமைப்பில் அமைந்த பாடல்.
அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்
க்ருஷ்ணதா மோதரம் வாசுதே வம்ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்
ஜானகீ நாயகம் ராமசந்த் ரம்பஜே)



சம்பந்தர் தேவாரம் - 3.35.7 -
கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்
வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடம்
தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை
தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.



No comments:

Post a Comment