Monday, August 10, 2015

01.35 – பொது - (புஜங்கம்)

01.35பொது - (புஜங்கம்)



2008-08-13
பொது - புயங்கப் பெருமான் புஜங்கம் - 2
-------------------------------------------
(“தனானா தனானா தனானா தனானா” என்ற சந்தம்.
சமஸ்கிருதத்தில் உள்ள 'புஜங்கம்' என்ற பாடல் அமைப்பு.
4 அடிகள்; ஓர் அடிக்கு 4 "லகு-குரு-குரு" இருக்கும்);



1)
அராவோ லைக்கும் புனல்சேர் சடைக்குக்
குராப்பூ அதன்பால் குளிர்வெண் ணிலாவும்
விராவும் சிவன்தாள் மிகத்தான் விரும்பிப்
பராவப் பறக்கும் வினைப்பற் றறுந்தே.



அராவோடு அலைக்கும் புனல் - பாம்பும் கங்கையும்; (அரா - பாம்பு); (அலைத்தல் - அலைமோதுதல்);
குராப் பூ - குரவம் மலர்;
விராவுதல் - விரவுதல் - பொருந்துதல்; கலத்தல்; அடைதல்;
பராவுதல் - பரவுதல் - புகழ்தல்; வணங்குதல்;



2)
அடிக்கின்ற காற்றாய், அனல்கின்ற தீயாய்ப்,
படிக்கின்ற நூலாய்ப், பகர்கின்ற சொல்லாய்,
வடிக்கின்ற பாட்டாய், மறைந்துள்ள நாதன்
அடிக்கன்பு வைத்தால் அறுப்பான்பி றப்பே.



அனல்தல் - அழல்தல் - எரிதல்;
அன்பு வைத்தல் - பக்தி கொள்ளுதல்;



3)
கருப்போ சிவப்போ எனக்கேள் மறுப்போர்
தருக்கித் திருப்பார் சகத்தைப் படைத்தான்
விருப்போ டழைப்பார்க் குருக்கொண் டுவந்தே
வருத்தம் தவிர்ப்பான் மகாதே வனன்றே.



பதம் பிரித்து:
கருப்போ சிவப்போ எனக் கேள் மறுப்போர்
தருக்கித்(து) இருப்பார்; சகத்தைப் படைத்தான்,
விருப்போ(டு) அழைப்பார்க்(கு) உருக்கொண்டு வந்தே
வருத்தம் தவிர்ப்பான், மகாதேவன் அன்றே/நன்றே.


ருப்பு - "கறுப்பு" என்ற சொல் எதுகைக்காகக் "கருப்பு" எனத் திரிந்தது. (கறுப்பு - கருமை - கரிய நிறம்);
கேள்தல்(கேட்டல்) - வினாதல் (To ask, inquire, question, catechise);
கேள் மறுப்போர் - வினைத்தொகை - கேட்கிற நாத்திகர்;
(கேள் - நண்பன்; உறவு;
உற்ற துணையான இறைவனை மறுப்போர் என்றும் கொள்ளலாம்);
தருக்கித்தல் - வாதம் செய்தல்;
சகம் - ஜகத்;
வருத்தம் தவிர்த்தல் - துன்பத்தை நீக்குதல்;
மகாதேவனன்றே - மகாதேவன் அன்றே (மஹாதேவன் அல்லனோ) / மகாதேவன் நன்றே;



4)
அடைந்தோர் அவர்தம் பயம்போக் கியந்நாள்
கடல்வாய் விடத்தைக் கணத்தில் மடுத்தே
மிடற்றில் தடுத்தான் விரும்பித் துதிப்போர்
இடர்தீர் மருந்தாய் இருப்பான் அவர்க்கே.



பதம் பிரித்து:
அடைந்தோர் அவர்தம் பயம் போக்கி அந்நாள்
கடல்வாய் விடத்தைக் கணத்தில் மடுத்தே
மிடற்றில் தடுத்தான்; விரும்பித் துதிப்போர்
இடர் தீர் மருந்தாய் இருப்பான் அவர்க்கே.


அடைந்தோர் - சரண் புகுந்தவர்கள் - இங்கே தேவர்கள்;
கடல்வாய் விடம் - கடலிடைத் தோன்றிய விடம்;
டுத்தல் - உண்ணுதல் (To take food or drink);
மிடறு- கழுத்து;
மருந்து - அமிர்தம்; ஔஷதம்;



5)
அறம்சொல் வதற்கால் அதன்கீழ் அமர்ந்தான்
பறக்கும் புரம்தீப் படத்தான் சிரித்தான்
மறைக்காட் டரன்தாள் வணங்கித் துதிப்பாய்
சிறப்பாய் விடும்தீ வினைக்கட் டழிந்தே.



பதம் பிரித்து:
அறம் சொல்வதற்(கு) ஆல் அதன்கீழ் அமர்ந்தான்,
பறக்கும் புரம் தீப்படத் தான் சிரித்தான்,
மறைக்காட்(டு) அரன் தாள் வணங்கித் துதிப்பாய்;
சிறப்பாய்; விடும் தீ வினைக்கட்(டு) அழிந்தே.


ஆல் அதன்கீழ் அமர்ந்தான் - கல்லால மரத்தடியில் அமர்ந்தவன் - தட்சிணாமூர்த்தி;
மறைக்காட்டு அரன் தாள் - வேதாரண்யத்தில் உறையும் சிவன் திருவடி;
(சிறப்பாய் விடும்தீ வினைக்கட் டழிந்தே - "தீவினைக்கட்டு அழிந்து சிறப்பு ஆகிவிடும்" என்றும் பொருள்கொள்ளலாம்).



6)
புறங்காட் டிலாடும் புயங்கா உமைக்கோர்
புறம்தந் தலைக்கும் புனல்சூ டுமெந்தாய்
கறைக்கண் டனேஎன் றுரைத்துய்ந் திடாமல்
இறப்புப் பிறப்பென் றுழல்கின் றதேனோ.



பதம் பிரித்து:
"புறங்காட்டில் ஆடும் புயங்கா! உமைக்(கு) ஓர்
புறம் தந்(து) அலைக்கும் புனல் சூடும் எந்தாய்!
கறைக்கண்டனே!" என்(று) உரைத்(து) உய்ந்திடாமல்
இறப்புப் பிறப்(பு) என்(று) உழல்கின்ற(து) ஏனோ?


புறங்காடு - சுடுகாடு;
புறம் - பக்கம்;
அலைக்கும் புனல் - அலைமோதுகின்ற கங்கை;
கறைக்கண்டன் - நீலகண்டன்;



7)
வலம்செய்து நித்தல் வழுத்திப்ப ணிந்தால்
நலங்கள்கொ டுத்தே நமைக்காத்த ருள்வான்
கலங்கள்மி தக்கும் கனைக்கின்ற ஓதம்
அலைக்கின்ற ஒற்றித் தலத்தீச னன்றே.



பதம் பிரித்து:
வலம் செய்து நித்தல் வழுத்திப் பணிந்தால்
நலங்கள் கொடுத்தே நமைக் காத்(து) அருள்வான்,
கலங்கள் மிதக்கும் கனைக்கின்ற ஓதம்
அலைக்கின்ற ஒற்றித் தலத்(து) ஈசன் அன்றே.


நித்தல் - தினமும்;
வழுத்துதல் - வாழ்த்துதல்; துதித்தல்;
கலங்கள் மிதக்கும் கனைக்கின்ற ஓதம் - கலங்கள் மிதக்கும் ஓதம், கனைக்கின்ற ஓதம்;
கனைக்கின்ற ஓதம் - ஒலிக்கின்ற கடல்;
அலைத்தல் - அலைமோதுதல்;
ஒற்றி - திருவொற்றியூர்;


(சுந்தரர் தேவாரம் - 7.91.1:
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டுங் கலமும் திமிலும் கரைக்கே
ஓட்டும் திரைவாய் ஒற்றி யூரே.)
8)
உரந்தன்னை உன்னிப் பொருப்பைப்பெ யர்க்கும்
சிரம்பத்த ரக்கன் செருக்கைத்து டைத்தான்
விரல்வைத்த டர்த்தே மிகப்பாடி ஏத்த
வரங்கள்கொ டுத்தான் மலர்த்தாள்வ ணங்கே.



பதம் பிரித்து:
உரம்தன்னை உன்னிப் பொருப்பைப் பெயர்க்கும்
சிரம் பத்(து) அரக்கன் செருக்கைத் துடைத்தான்
விரல் வைத்(து) அடர்த்தே; மிகப் பாடி ஏத்த,
வரங்கள் கொடுத்தான் மலர்த்தாள் வணங்கே.


மனமே என்ற விளி தொக்கு நிற்கிறது.
உரம் - வலிமை;
உன்னுதல் - நினைத்தல்;
பொருப்பு - மலை- இங்கே கயிலை;
சிரம் பத்து அரக்கன் - இராவணன்;
செருக்கைத் துடைத்தான் - கர்வத்தை அழித்தவன்;
அடர்த்தல் - நசுக்குதல்;
மிகப் பாடி ஏத்த வரங்கள் கொடுத்தான் மலர்த்தாள் வணங்கு - இராவணன் பலகாலம் பாடித் துதிக்கவும் அவனுக்கு இரங்கி வரங்கள் கொடுத்த சிவபெருமானுடைய மலரடியை வணங்குவாயாக;



9)
செருக்கோ டயன்மால் அகழ்ந்தும் பறந்தும்
நெருங்கா தவாறோர் நெருப்பாய் உயர்ந்தான்
பெருங்கா தலோடே பிரானென் பவர்க்குக்
கரும்பாய் இனிப்பான் கழல்பா டுநெஞ்சே.



பதம் பிரித்து:
செருக்கோ(டு) அயன் மால் அகழ்ந்தும் பறந்தும்
நெருங்காதவா(று) ஓர் நெருப்பாய் உயர்ந்தான்,
பெரும் காதலோடே பிரான் என்பவர்க்குக்
கரும்பாய் இனிப்பான் கழல் பாடு நெஞ்சே.


செருக்கு - ஆணவம்;
அயன் மால் அகழ்ந்தும் பறந்தும் - எதிர்நிரல்நிறை அமைப்பில் வந்தது; - பிரமனும் திருமாலும் மேலே பறந்து சென்றும் கீழே அகழ்ந்து சென்றும்;
பிரான் - தலைவன்;
கரும்பாய் இனிப்பான் கழல் பாடு நெஞ்சே - மனமே! கரும்பைப் போல இனிமை கொடுக்கும் சிவன் திருவடியைப் பாடுவாயாக;



10)
புரட்டே உரைப்பார் புறங்கூ றிநிற்பார்
இருட்டில் கிடப்பார் இவர்சொல் விடுத்து
வெருட்டும் விடம்சேர் மிடற்றன் பிறப்பில்
ஒருத்தன் சிவன்பேர் உரைத்துய் யலாமே.



பதம் பிரித்து:
புரட்டே உரைப்பார், புறங்கூறி நிற்பார்,
இருட்டில் கிடப்பார், இவர் சொல் விடுத்து,
வெருட்டும் விடம் சேர் மிடற்றன், பிறப்(பு) இல்
ஒருத்தன், சிவன் பேர் உரைத்(து) உய்யலாமே.


புரட்டு - வஞ்சகம்;
புறங்கூறுதல் - பழித்துப் பேசுதல்;
இருட்டு - அஞ்ஞானம்;
இவர் சொல் விடுத்து - இவர்கள் பேசும் பேச்சைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டு;
வெருட்டும் விடம் சேர் மிடற்றன் - எல்லாரையும் அச்சுறுத்திய நஞ்சு பொருந்துகின்ற கண்டத்தை உடையவன் - நீலகண்டன்;
பிறப்பு இல் ஒருத்தன் - அனாதியான ஒப்பற்றவன்;



11)
மணக்கின்ற பொற்றாள் மறப்பின்றி வாழும்
குணம்கொண்ட மார்க்கண் டரைக்கொல்ல வந்தோன்
நிணம்சிந்த வைத்தான் நிலாச்சூடு மீசன்
அணங்கொன்று மத்தன் பதம்போற்று நெஞ்சே.



பதம் பிரித்து:
மணக்கின்ற பொற்றாள் மறப்(பு) இன்றி வாழும்
குணம் கொண்ட மார்க்கண்டரைக் கொல்ல வந்தோன்
நிணம் சிந்த வைத்தான் நிலாச் சூடும் ஈசன்,
அணங்(கு) ஒன்றும் அத்தன் பதம் போற்று நெஞ்சே.


பொற்றாள் - பொன் தாள் - பொன் போன்ற திருவடி;
மறப்பு இன்றி - மறவாமல்;
கொல்ல வந்தோன் - கொல்வதற்கு வந்த காலனை;
நிணம் - கொழுப்பு; மாமிசம் (flesh); ஊனீர் (serum);
அணங்கு - பெண் - பார்வதி;
ஒன்றுதல் - ஒன்றாதல் (To unite; to coalesce; to become one);
அத்தன் - தந்தை; பெரியோன்;
மத்தன் - ஊமத்த மலர் அணிந்தவன் - சிவன்;
அணங்கொன்றுமத்தன் - அணங்கு ஒன்றும் மத்தன்/அணங்கு ஒன்றும் அத்தன்;
அணங்கு ஒன்றும் அத்தன் - அம்மையப்பன்; அர்த்தநாரீஸ்வரன்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு:
புஜங்கம் என்பது சமஸ்கிருத பாடல் அமைப்புகளுள் ஒன்று.
புஜங்க அமைப்பின் இலக்கணம்:
4 அடிகள்; ஓர் அடிக்கு 4 "தனானா" - அதாவது - "லகு-குரு-குரு" இருக்கும்.
லகு = குறில்.
குரு = நெடில்/நெடில்+ஒற்று/குறில்+ஒற்று. அடி ஈற்றுக் குறிலும் 'குரு' எனக் கருதப்படும்



No comments:

Post a Comment