Thursday, August 20, 2015

01.65 – சிராப்பள்ளி - (திருச்சிராப்பள்ளி)

01.65 – சிராப்பள்ளி - (திருச்சிராப்பள்ளி)



2010-03-18
திருச்சிராப்பள்ளி
"சிராப்பள்ளி சேர்”
----------------------
(இன்னிசை வெண்பா)



1)
சுற்றும் வினைக்கட்டால் துன்புறல் ஏன்அதை
முற்றும் அறுக்கும் முறைகருதில் நெஞ்சமே
சுற்றும் புரமூன்றைச் சுட்டவனூர், பொன்னியலை
தெற்றும் சிராப்பள்ளி சேர்.



சுற்றும் வினைக்கட்டால் - சூழ்ந்திருக்கும் பழவினைகளால்;
துன்புறல் ஏன் - எதற்குத் துன்பப்படவேண்டும்;
அதை முற்றும் அறுக்கும் முறை - அப்பழவினைகளை அடியோடு நீக்கும் உபாயம்;
கருதில் - கருதினால் - எண்ணினால்; விரும்பினால்;
நெஞ்சமே - மனமே;
சுற்றும் புரம் மூன்றைச் சுட்டவன் ஊர் - விண்ணில் திரியும் முப்புரங்களை எரித்த சிவபெருமான் உறையும் ஊரான;
பொன்னி அலை தெற்றும் - காவிரியின் அலை மோதுகிற;
சிராப்பள்ளி சேர் - திருச்சிராப்பள்ளி சென்று அடைவாயாக;

2)
தருவார் அவரென்று தாரார்பால் சென்று
பெருவாதை கொள்வதேன் பேதை மனமே
தருவாகித் தாயின் உருவாய் வருவான்
திருவார் சிராப்பள்ளி சேர்.



* தாயுமானவன் - திருச்சிராப்பள்ளியில் சிவன் திருநாமம்;
தருவார் அவரென்று தாரார்பால் சென்று - அவர் தருவார் இவர் தருவார் என்று கொடாதவர்களிடம் போய்;
பெருவாதை கொள்வது ஏன் - ஏன் பெரும் துன்பம்; அடைவது;
தரு ஆகி - கற்பகமரம் ஆகி;
தாயின் உருவாய் வருவான் - தாயின் உருவும் ஆகி வரும் சிவபெருமான் உறையும்;;
திருவார் - திரு ஆர் - நன்மை பொருந்திய;



3)
வல்வினை தீர்ந்து வளங்கள் வருகிற
நல்வழி தன்னை நயப்பாயேல் நன்னெஞ்சே
மெல்லிடை மாதொடு வெல்விடை மேல்வரும்
செல்வன் சிராப்பள்ளி சேர்.



நயப்பாயேல் - நீ விரும்பினால்;
மெல்லிடை மாதொடு - சிற்றிடை உடைய உமையோடு;
வெல்விடைமேல் வரும் செல்வன் - வெற்றியுடைய இடபத்தின்மேல் வரும் செல்வனான சிவபெருமான்;



4)
எவரே புரப்பார் எனநீ மயங்கேல்
கவலா திருக்கக் கருதில் மனமே
அவம்தீர் வழியாய் அடியார்க் கருளும்
சிவனார் சிராப்பள்ளி சேர்.



எவரே புரப்பார் என நீ மயங்கேல் - யார் நம்மைக் காப்பார் என்று நீ மயங்காதே; (மயங்குதல் - கலக்கமுறுதல்; மருளுதல்);
கவலாது ருக்கக் கருதில் மனமே - கவலைப்படாமல் இருக்க விரும்பினால், மனமே;
அவம் தீர் வழியாய் - கேட்டைப் போக்கும் நெறி ஆகி; / கேட்டைப் போக்கும் நெறியை ஆயும்;
அடியார்க்கு அருளும் சிவனார் சிராப்பள்ளி சேர் - பக்தர்களுக்கு அருள்புரியும் சிவபெருமானார் உறையும் திர்ச்சிராப்பள்ளி சென்று அடைவாயாக;



5)
தீவல் வினையெல்லாம் தீர்ந்து சிறப்புற
ஆவல் உனக்குள தாயின் மடநெஞ்சே,
காவலன், கண்ணுதலான், கண்டத்தில் நஞ்சொளித்த
தேவன் சிராப்பள்ளி சேர்.



தீ வல் வினை - வலிய தீய வினைகள்;
ஆவல் - ஆசை;
உளது ஆயின் - இருந்தால்;
காவலன் - காப்பவன்;
கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்;



6)
விலகா வினைகள் விடுமென்றும் இன்ப
நிலையே பெறலாம் நினைநீ மனமே
அலைமூ வெயில்கள் அழித்த பொருப்புச்
சிலையான் சிராப்பள்ளி சேர்.



விலகா வினைகள் விடும்; என்றும் இன்ப நிலையே பெறலாம் - நீங்காத வல்வினைகள் நீங்கி, அழியாத இன்பம் அடையலாம்;
நினை நீ மனமே - மனமே, நீ எண்ணுவாயாக;
அலை மூ எயில்கள் அழித்த - திரியும் முப்புரங்களை எரித்த;
பொருப்புச் சிலையான் - மலையை வில்லாக ஏந்தியவன்;



7)
புலம்பும் நிலைதரும் பொல்லா வினைபோய்
நலம்பெற எண்ணுதியேல் நன்னெஞ்சே இன்றே
அலம்பும் புனற்சடை அப்பன் கயிலைச்
சிலம்பன் சிராப்பள்ளி சேர்.



எண்ணுதியேல் - நீ எண்ணினால்;
அலம்பும் புனற்சடை அப்பன் - ஒலிக்கிற கங்கையைச் சடையில் உடைய தந்தை;;
கயிலைச் சிலம்பன் - கயிலைமலையான் - சிவன்; (சிலம்பு - மலை);



8)
சேர்த்தவினை தீரநெஞ்சே தேர்செல்ல வெற்பினைப்
பேர்த்தெறிவேன் என்று பெருங்குரலோ டோடிமுயல்
தூர்த்தனின் நாலைந்து தோள்வலியை ஓர்விரலால்
தீர்த்தான் சிராப்பள்ளி சேர்.



பதம் பிரித்து:
சேர்த்த வினை தீர நெஞ்சே, 'தேர் செல்ல வெற்பினைப்
பேர்த்(து) எறிவேன்' என்று பெருங்குரலோ(டு) ஓடி முயல்
தூர்த்தனின் நாலைந்து தோள் வலியை ஓர் விரலால்
தீர்த்தான் சிராப்பள்ளி சேர்.


வெற்பு - மலை;
பேர்த்தல் - பிடுங்குதல்;
தூர்த்தன் - கொடியவன்;
நாலைந்து தோள் - இருபது புஜங்கள்;
தீர்த்தான் - அழித்தவன்;
வலி - வலிமை; பலம்;



9)
இகழும் நிலைநீங்கி இவ்வுல கெல்லாம்
புகழும் நிலையும் பொருளுமுற நெஞ்சே
அகழ்மால் அயனார்க் கரிய நெருப்பாய்த்
திகழ்ந்தான் சிராப்பள்ளி சேர்.



உறுதல் - அடைதல்;
அகழ் மால் அயனார்க்கு அரிய நெருப்பாய்த் திகழ்ந்தான் - நிலத்தை அகழ்ந்து தேடிய திருமாலுக்கும் பிரமனுக்கும் அடைய இயலாத சோதியாக விளங்கிய சிவபெருமான்;



10)
திட்டித் திரியும் சிறுநெறியார், தீப்புகும்
விட்டில் அனையவர்; வீடுபெற வேண்டினெஞ்சே,
நட்டன், நதிச்சடையன், நால்வர்க் கறம்சொல்லும்
சிட்டன் சிராப்பள்ளி சேர்.



தீப்புகும் விட்டில் அனையவர் - தீயில் விழும் விட்டில் பூச்சியைப் போல்பவர்கள்;
வீடுபெற வேண்டினெஞ்சே - வீடு பெற வேண்டில் நெஞ்சே - உய்தி பெற விரும்பினால் மனமே;
நட்டன் - நடம் செய்பவன்; கூத்தன்;
நதிச்சடையன் - கங்கையைச் சடையில் அடைத்தவன்;
சிட்டன் - சிரேஷ்டன் - உயர்ந்தவன்; மேலானவன்;
நால்வர்க்கு அறம் சொல்லும் சிட்டன் - தட்சிணாமூர்த்தி;



11)
தீரா வினையெல்லாம் தீர்ந்தினி ஓர்பிறவி
வாரா வழியைக் கருதில் மனமேநீ
காரார் மிடற்றண்ணல் காரிகையோர் பங்கனூர்
சீரார் சிராப்பள்ளி சேர்.



தீரா வினை ல்லாம் தீர்ந்து - தீராத வினைகள் எல்லாம் நீங்கி;
இனி ஓர் பிறவி வாரா வழியைக் கருதில் மனமே நீ - மறுபிறப்பு இல்லாமற் செய்யும் நெறியை விரும்பினால், மனமே, நீ;
கார் ஆர் மிடற்று அண்ணல் - கருமை பொருந்திய கழுத்தை உடைய கடவுள் - நீலகண்டன்;
காரிகை ஓர் பங்கன் ஊர் - பார்வதியை ஒரு பங்காக உடைய சிவபெருமானின் ஊரான;
சீர் ஆர் சிராப்பள்ளி சேர் - நன்மை பொருந்திய திருச்சிராப்பள்ளி சென்று அடைவாயாக;



அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment