Tuesday, August 18, 2015

01.53 – பொது - (யாழ்முரி )

01.53 – பொது - (யாழ்முரி )



2009-11-04 – 2009-11-13
பொது
("யாழ்முரி” அமைப்பில்)
சிவன் பெயர் தினம் நினை மனமே
---------------------------------------------
("தானன தானன தானன தானன தானன
தன தன தன தன தனதன தனனா"
என்ற சந்தம். இப்பாடல்கள் சம்பந்தரின் 'யாழ்முரி' பதிகப் பாடல் அமைப்பில் உள்ளவை.
பாடல்தோறும் ஈற்றடியின் கடைசி இரு சீர்கள் - “தனதன தனனா” என்றில்லாமல் “தனதன தானதனா” என்று அமையும். அங்கே சற்று நிறுத்திப் பாடுமாறு அமையும்.)
(சம்பந்தர் தேவாரம் - 1.136.1 - "மாதர்ம டப்பிடியும் மட அன்னமும்”)



1) உனை விழை மனம் அருள்வாய்
------------------------------------------
நெஞ்சினில் ஆசைகள் வெற்பைநி கர்த்துநி றைந்தவை
.. நிதம் மதம் மிகும் இழி நிலைதர அதனால்
வெஞ்சின னாய்மிகு தீவினை செய்துழ லாதரு
.. வினை கெட அனை உனை விழைமனம் அருள்வாய்
நஞ்செழ அஞ்சிய விண்ணவர் வந்தழ அன்பொடு
.. நனி இனி கனி என நலமளி அமுதா
அஞ்சன வேல்விழி அம்மையும் அஞ்சிட உண்டவ
.. அணி மணி பணி துணி மதிதிகழ்அங் கணனே.



பதம் பிரித்து:
நெஞ்சினில் ஆசைகள் வெற்பை நிகர்த்து நிறைந்(து), அவை
.. நிதம் மதம் மிகும் இழி நிலை தர அதனால்,
வெஞ்சினனாய் மிகு தீவினை செய்(து) உழலா(து), அரு
.. வினை கெட அனை உனை விழை மனம் அருள்வாய்;
நஞ்(சு) எழ, அஞ்சிய விண்ணவர் வந்(து) அழ, அன்பொடு
.. நனி இனி கனி என நலம் அளி அமுதா,
அஞ்சன வேல் விழி அம்மையும் அஞ்சிட உண்டவ;
.. அணி மணி பணி துணி மதி திகழ் அங்கணனே.


மதம் - செருக்கு; வெறி;
அனை - அன்னை;
நனி இனி - மிகவும் இனிக்கும்;
அணி - அழகிய;
பணி - நாகம்;
துணி மதி - பிறைச்சந்திரன் (திருவாசகம் - அச்சப் பத்து - பிணியெலாம் ....துணிநிலா அணியினான்தன்..);


நெஞ்சினில் ஆசைகள் வெற்பை நிகர்த்து நிறைந்(து) - மனத்தில் ஆசைகள் மலையைப் போல நிறைந்து;
அவை நிதம் மதம் மிகும் இழி நிலை தர அதனால் - அவை தினந்தோறும் செருக்கும் வெறியும் மிகுகிற இழிந்த நிலையைத் தர அதனால்;
வெஞ்சினனாய் மிகு தீவினை செய்(து) உழலா(து) - கொடிய சினத்தை உடைவனாகிப், பல தீவினைகள் செய்து நான் உழலாமல்;
அரு வினை கெட அனை உனை விழை மனம் அருள்வாய் - கொடிய வினைகளெல்லாம் அழியும்படி அன்னை உன்னை விரும்பும் எண்ணத்தைத் தந்தருள்வாயாக;
நஞ்(சு) எழ, அஞ்சிய விண்ணவர் வந்(து) அழ - (பாற்கடலைக் கடைந்தபொழுது) விஷம் தோன்ற, அதைக் கண்டு பயந்த தேவர்கள் உன்னிடம் வந்து அழுது தொழ;
அன்பொடு நனி இனி கனி என நலம் அளி அமுதா - அன்போடு, மிகவும் இனிக்கும் பழம் என அதை நன்மை கொடுக்கும் அமுதாக;
அஞ்சன வேல் விழி அம்மையும் அஞ்சிட உண்டவ - மை அணிந்த வேல் போன்ற விழி உடைய பார்வதியும் அஞ்சும்படி உண்டவனே;
அணி மணி பணி துணி மதி திகழ் அங்கணனே - (அதனால் கழுத்தில்) அழகிய மணியும், பாம்பும், பிறைச் சந்திரனும் திகழ்கிற, அருள் நோக்கு உடைய சிவபெருமானே!
------------------



2) மனமே நினை சடையன் கழலே
------------------------------------------
என்பொருள் என்னிடம் என்குடி என்றெழும் இச்சையால்
.. இழி வழி உழி பழி இடர்மிகு[ம்] மனமே
முன்புரி தீவினை தீர்ந்துயர் வான்பெற நீநினை
.. முரண் அரண் எரி பரன் முடிவிலி பெருமான்
மென்மட வாளொரு பங்கினன் எந்தைமி டற்றினில்
.. விடம் அடை விடை யுடை விழிநுதல் விமலன்
அன்புரு வானவன் நாதனி லாதவன் வண்டுகள்
.. அறை நறை நிறை மலர் அணிசடையன் கழலே.



பதம் பிரித்து:
என் பொருள், என் இடம், என் குடி என்(று) எழும் இச்சையால்
.. இழி வழி உழி பழி இடர் மிகும் மனமே;
முன் புரி தீவினை தீர்ந்(து) உயர் வான் பெற நீ நினை;
.. முரண் அரண் எரி பரன்; முடிவிலி; பெருமான்;
மென் மடவாள் ஒரு பங்கினன்; எந்தை; மிடற்றினில்
.. விடம் அடை, விடையுடை, விழிநுதல் விமலன்;
அன்(பு) உரு ஆனவன்; நாதன் இலாதவன்; வண்டுகள்
.. அறை நறை நிறை மலர் அணி சடையன் கழலே.


என் பொருள், என் இடம், என் குடி என்(று) எழும் இச்சையால் - என்னுடைய பொருள், என் இடம், என் குடும்பம் என்று எழுகிற ஆசைகளால்;
இழி வழி உழி பழி இடர் மிகும் - இழிந்த வழியில் அலையும் பழியும் இடர்களும் பெருகும்;
மனமே - (அதனால்) மனமே!
முன் புரி தீவினை தீர்ந்(து) உயர் வான் பெற நீ நினை - முன்பு செய்த பாவங்கள் எல்லாம் தீர்ந்து, உயர்ந்த கதியைப் பெறுவதற்கு நீ சிந்திப்பாயாக;
முரண் அரண் எரி பரன்; முடிவிலி; பெருமான் - பகைமை கொண்ட மூன்று மதில்களையும் எரித்த பரமன்; அழிவில்லாதவன்; சிவபெருமான்;
மென் மடவாள் ஒரு பங்கினன்; எந்தை - மென்மையான பார்வதியைத் தன் பாதியாக உடையவன்;
மிடற்றினில் விடம் அடை, விடையுடை, விழிநுதல் விமலன் - கழுத்தில் விஷம் தங்குகிற, இடப வாகனத்தை உடைய, நெற்றிக்கண் இருக்கும், மலமற்றவன்;
அன்(பு) உரு ஆனவன்; நாதன் இலாதவன்; - அன்பின் வடிவமாகத் திகழ்பவன்; தனக்கு ஒரு தலைவன் இல்லாதவன்;
வண்டுகள் அறை நறை நிறை மலர் அணி சடையன் கழலே - வண்டுகள் ஒலிக்கும், தேன் நிறைந்த பூவை அணிந்த சடையை உடையவனின் திருவடிகளையே.
-------------------------------



3) மதி அணியும் சிவன்
---------------------------
பார்த்திப னோடமர் செய்கிற வேடுவ னாயொரு
.. படை தர அடை அரன் அடிதொழு பவரின்
ஆர்த்தெழு தொல்வினை யோடவை நல்குபி றப்புகள்
.. அற அருள் இறை இருள் அடைமணி மிடறன்
வார்த்தைக ளாலுரை செய்யவொ ணாதவன் மேனியில்
.. வரை மகள் அரை என மகிழ்கிற பெருமான்
கூத்தமர் கோன்எரி நேத்திரன் ஆற்றுடன் உச்சியில்
.. குளிர் மலர் ஒளிர் வளர் மதியணியும் சிவனே.



பதம் பிரித்து:
பார்த்திபனோ(டு) அமர் செய்கிற வேடுவனாய் ஒரு
.. படை தர அடை அரன்; அடி தொழுபவரின்
ஆர்த்(து) எழு தொல் வினையோ(டு) அவை நல்கு பிறப்புகள்
.. அற அருள் இறை; இருள் அடை மணி மிடறன்;
வார்த்தைகளால் உரைசெய்ய ஒணாதவன்; மேனியில்
.. வரைமகள் அரை என மகிழ்கிற பெருமான்;
கூத்(து) அமர் கோன்; எரி நேத்திரன்; ஆற்றுடன் உச்சியில்
.. குளிர் மலர், ஒளிர் வளர் மதி அணியும் சிவனே.


அமர் - சண்டை; யுத்தம்;
அமர்தல் - விரும்புதல்;
ஆர்த்தல் - ஒலித்தல்;
வரைமகள் - மலைமகள் - பார்வதி;
ஒளிர்தல் - பிரகாசித்தல்;
வளர் மதி - பிறைச்சந்திரன்;


பார்த்திபனோ(டு) அமர் செய்கிற வேடுவனாய் ஒரு படை தர அடை அரன் - அர்ஜுனனோடு சண்டையிடுகிற வேடன் ஆகிப் பாசுபதாஸ்திரத்தைத் தரச் செல்கிற ஹரன்;
அடி தொழுபவரின் ஆர்த்(து) எழு தொல் வினையோ(டு) அவை நல்கு பிறப்புகள் அற அருள் இறை - தன் திருவடியைத் தொழுபவர்களின் ஆரவாரம் செய்துவரும் பழவினைகளும் அவை கொடுக்கும் பிறவிகளும் இல்லாமல் போக அருள்கிற இறைவன்;
இருள் அடை மணி மிடறன் - கருமை நிறம் பொருந்தும் அழகிய கழுத்தை உடையவன் (நீலகண்டன்);
வார்த்தைகளால் உரைசெய்ய ஒணாதவன் - சொல்லுக்கு அப்பாற்பட்டவன்;
மேனியில் வரைமகள் அரை என மகிழ்கிற பெருமான் - தன் திருமேனியில் மலைமகள் (பார்வதி) ஒரு பாதியென விரும்பி ஏற்ற பெருமான்;
கூத்(து) அமர் கோன்; எரி நேத்திரன் - திருநடனம் விரும்பி ஆடும் தலைவன்; நெருப்பை உமிழும் நெற்றிக்கண்ணன்;
ஆற்றுடன் உச்சிமேல் குளிர் மலர், ஒளிர் வளர் மதி அணியும் சிவனே - திருமுடிமேல் கங்கையோடு, குளிர்ச்சி பொருந்திய பூக்களையும், ஒளி வீசும் பிறைச்சந்திரனையும் சூடும் சிவபெருமான்;
('அவனைத் தொழுவாயாக' என்பது குறிப்பு)
--------------------



4) பாதமலர் ஏத்து நெஞ்சமே
----------------------------------
நீதயை செய்யென நீறணி மேனிய ராயரன்
.. நிழல் திகழ் கழல் புகழ் அடியவர் வினையின்
தீதற வும்திரு வாகிட வும்தரு வாய்வரும்
.. திரை பிறை இரை பணி செழுமலர் அணிவோன்
தாதையும் அன்னையு மாய்உல கங்களை ஈன்றவன்
.. தழல் உமிழ் விழி கொடு மதனழி தலைவன்
பாதம லர்தனை நாள்தொறும் ஏத்திடு நெஞ்சமே
.. படும் இடர் விடும் உடன் உயர்கதியும் திடமே.



பதம் பிரித்து:
"நீ தயை செய்" என நீ(று) அணி மேனியராய் அரன்
.. நிழல் திகழ் கழல் புகழ் அடியவர் வினையின்
தீ(து) அறவும், திரு ஆகிடவும், தருவாய் வரும்
.. திரை பிறை இரைபணி செழுமலர் அணிவோன்;
தாதையும் அன்னையுமாய் உலகங்களை ஈன்றவன்;
.. தழல் உமிழ் விழிகொடு மதன் அழி தலைவன்
பாதமலர்தனை நாள்தொறும் ஏத்திடு நெஞ்சமே;
.. படும் இடர் விடும் உடன் உயர்கதியும் திடமே.


தயை - கருணை;
நிழல் - ஒளி;
தீது - தீமை; குற்றம்;
தரு - கற்பக மரம்;
திரை - அலை; நதி;
இரை பணி - இரைக்கிற பாம்பு - சீறும் பாம்பு;
தாதை - தந்தை;
மதன் - காமன்;


"நீ தயை செய்" என நீ(று) அணி மேனியராய் - "நீ அருள்செய்வாயாக" என்று திருநீறு பூசிய உடம்பினர் ஆகி;
அரன் நிழல் திகழ் கழல் புகழ் - சிவனாரின் ஒளி திகழும் கழலடியைப் புகழ்கிற;
அடியவர் வினையின் தீ(து) அறவும், திரு ஆகிடவும் - பக்தர்களின் வினையின் தீமை அழியவும், (அவர்களுக்கு) நன்மை விளையவும்;
தருவாய் வரும், திரை பிறை இரைபணி செழுமலர் அணிவோன் - கற்பக மரம் போல் வருபவன், கங்கையையும் பிறைச்சந்திரனையும் சீறும் பாம்பையும் அழகிய பூக்களையும் சூடுகிற சிவபெருமான்;
தாதையும் அன்னையுமாய் உலகங்களை ஈன்றவன் - அவன் தந்தையும் தாயும் ஆகி எல்லா உலகங்களையும் பெற்றவன்;
தழல் உமிழ் விழிகொடு மதன் அழி தலைவன் - தீயை உமிழும் நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்த தலைவன்;
பாதமலர்தனை நாள்தொறும் ஏத்திடு நெஞ்சமே - மனமே! அவன் திருவடித் தாமரையைத் தினந்தோறும் போற்றுவாயாக!
படும் இடர் விடும் உடன் உயர்கதியும் திடமே - நீ படுகிற துன்பங்கள் எல்லாம் விலகும்; அது மட்டுமன்றி, நற்கதி அடைதலும் நிச்சயமே.
--------------------------



5) நீலகண்டன் அடித்தலம் உன்னுவாய்
---------------------------------------------
பாலையில் நீருள தென்றுநி னைந்துழி நெஞ்சமே
.. பலன் இலை புலன் அலை படுதுயர் தருமே
காலையும் மாலையும் நாள்தொறும் அக்கரம் அஞ்சொடு
.. கனை கழல் இணை நினை அடியவர் மகிழ
மேலைவி னைக்கடல் வற்றிடு மாறருள் செய்பவன்
.. மிளிர் மதி குளிர் நதி விரைமலர் அணிவான்
வேலைவி டந்திகழ் கண்டன டித்தலம் உன்னுவாய்
.. வெடி படு துடி பிடி விடையவனம் புகலே.



பதம் பிரித்து:
பாலையில் நீர் உள(து) என்று நினைந்(து) உழி நெஞ்சமே;
.. பலன் இலை; புலன் அலை படு துயர் தருமே;
காலையும் மாலையும் நாள்தொறும் அக்கரம் அஞ்சொடு
.. கனை கழல் இணை நினை அடியவர் மகிழ,
மேலை வினைக்கடல் வற்றிடுமா(று) அருள் செய்பவன்;
.. மிளிர் மதி, குளிர் நதி, விரை மலர் அணிவான்;
வேலை விடம் திகழ் கண்டன் அடித்தலம் உன்னுவாய்;
.. வெடிபடு துடி பிடி விடையவன் நம் புகலே.


பாலை - பாலைவனம்;
அக்கரம் அஞ்சு - திருவைந்தெழுத்து;
வேலை விடம் - கடல் விஷம்;
அடித்தலம் - திருவடித் தானம்;
உன்னுதல் - நினைத்தல்;
வெடிபடு துடி - வெடி போன்ற ஒலியை உண்டாக்கும் உடுக்கை; (அப்பர் தேவாரம் - 4.73.6 - "விரித்தபல் ....வெடிபடுதமருகம்.....");


பாலையில் நீர் உள(து) என்று நினைந்(து) உழி நெஞ்சமே - பாலைவனத்தில் தண்ணீர் உள்ளது என்று எண்ணி அலையும் மனமே!
பலன் இலை; புலன் அலை படு துயர் தருமே - (அதனால்) பலன் இல்லை; புலன்களின் அலை மிகுந்த துயரைத் தரும்; ('அலைபுலன்' என்றும் கொள்ளலாம் - அலைகிற புலன்கள் / அலைக்கிற புலன்கள்);
காலையும் மாலையும் நாள்தொறும் அக்கரம் அஞ்சொடு கனை கழல் இணை நினை அடியவர் மகிழ - தினமும் காலையிலும் மாலையிலும் திருவைந்தெழுத்தை ஓதி, ஒலிக்கின்ற கழல் அணிந்த இரு திருவடிகளைத் தியானிக்கும் பக்தர்கள் மகிழும்படி;
மேலை வினைக்கடல் வற்றிடுமா(று) அருள் செய்பவன் - (அவர்களது) வினைக்கடல் வற்றும்படி அருள்பவன்;
மிளிர் மதி, குளிர் நதி, விரை மலர் அணிவான் - மிளிர்கிற திங்களையும், குளிர்ந்த நீர் உடைய கங்கையையும், மணம் வீசும் பூக்களையும் சூடுபவன்;
வேலை விடம் திகழ் கண்டன் அடித்தலம் உன்னுவாய் - கடல்விடம் திகழும் நீலகண்டனின் திருவடியை நினைப்பாயாக!
வெடிபடு துடி பிடி விடையவன் நம் புகலே - வெடி போன்ற ஒலி எழுப்பும் உடுக்கையை ஏந்தும் இடபவாகனன் நமக்கு அடைக்கலம் அளிப்பான்.
--------------------------



6) பாதமலர் நினை நெஞ்சமே
------------------------------------
காதலி பார்வதி தான்பிரி யாதிணை மேனியன்
.. கதிர் மதி குதி நதி களியொடு புனைவான்
வேதமு ரைக்கிற மெய்ப்பொருள் அக்கரன் உத்தமன்
.. விரை மிகு நிரை மலர் அரவணி விகிர்தன்
மேதகு முத்தினை ஒத்தவன் நீலமி டற்றினன்
.. விரை எமன் விழ உதை விடுகிற பெருமான்
பாதம லர்தனை நீநினை என்மட நெஞ்சமே
.. பகை என மிகை புரி பழவினையும் படுமே.



பதம் பிரித்து:
காதலி பார்வதி தான் பிரியா(து) இணை மேனியன்;
.. கதிர் மதி, குதி நதி களியொடு புனைவான்;
வேதம் உரைக்கிற மெய்ப்பொருள்; அக்கரன்; உத்தமன்;
.. விரை மிகு நிரை மலர், அர(வு) அணி விகிர்தன்;
மேதகு முத்தினை ஒத்தவன்; நீல மிடற்றினன்;
.. விரை எமன் விழ உதை விடுகிற பெருமான்;
பாதமலர்தனை நீ நினை என் மட நெஞ்சமே;
.. பகை என மிகை புரி பழவினையும் படுமே.


களி - மகிழ்ச்சி;
அர - அரவு - பாம்பு;
அக்கரன் - அக்ஷரன் - அழிவில்லாதவன்;
விகிர்தன் - மாறுபட்ட செயலினன்;
மேதகுதல் - மேன்மையாதல்;
விடு - ஒரு துணைவினை (An auxiliary verb having the force of certainty, intensity, etc.);
மிகை - துன்பம் (Sorrow, affliction); கேடு (Destruction);
படுதல் - அழிதல்;


காதலி பார்வதி தான் பிரியா(து) இணை மேனியன் - அன்புகொண்ட பார்வதியைத் தான் பிரியாமல் சேர்ந்திருக்கிற அர்த்தநாரீஸ்வரன்;
கதிர் மதி, குதி நதி களியொடு புனைவான் - ஒளிவீசும் நிலவையும் பாய்கிற கங்கை ஆற்றையும் மகிழ்வோடு சூடுபவன்;
வேதம் உரைக்கிற மெய்ப்பொருள்; அக்கரன்; உத்தமன் - வேதம் சொல்லும் உண்மைப்பொருள்; அழிவில்லாதவன்; மேலானவன்;
விரை மிகு நிரை மலர், அர(வு) அணி விகிர்தன் - மணம் மிகுந்த மலர்ச்சரமும் பாம்பும் அணிகிற விகிர்தன்;
மேதகு முத்தினை ஒத்தவன்; நீல மிடற்றினன் - மேன்மையான முத்தைப் போன்றவன்; நீலகண்டன்;
விரை எமன் விழ உதை விடுகிற பெருமான் - (மார்க்கண்டேயரிடம்) விரைந்த காலனே விழும்படி அவனை உதைத்த பெருமான்;
பாதமலர்தனை நீ நினை என் மட நெஞ்சமே - என் பேதை மனமே! நீ அச்சிவனாரின் மலர்ப்பாதத்தை நினைப்பாயாக!
பகை என மிகை புரி பழவினையும் படுமே - பகையாக வந்து தீங்கு செய்யும் பழவினைகள் எல்லாம் அழியும்.
---------------------



7) அடி தொழ அருள்
-----------------------
மூன்றொடி ரண்டென வந்துகெ டுக்கிற கள்வரென்
.. முடை யுடை உடல் உளர் முழுமுதல் உனதாள்
நான்றொழ எண்ணிலு டன்மிகு வஞ்சனை கொண்டவர்
.. நலி வினை மலி வழி நசையது தருவார்
மான்றிகழ் கையினன் ஆன்மிசை ஊர்கிற மாண்பினன்
.. மறை அறை இறை என மகிழ்வொடு தினமும்
ஆன்றவர் வந்தனை செய்கிற முக்கண நான்நிதம்
.. அலர் மலர் பல வுடன் அடிதொழுதற் கருளே.



பதம் பிரித்து:
மூன்றொ(டு) இரண்(டு) என வந்து கெடுக்கிற கள்வர் என்
.. முடை உடை உடல் உளர்; முழுமுதல் உன தாள்
நான் தொழ எண்ணில், உடன் மிகு வஞ்சனை கொண்(டு) அவர்
.. நலி வினை மலி வழி நசை அது தருவார்;
"மான் திகழ் கையினன், ஆன்மிசை ஊர்கிற மாண்பினன்;
.. மறை அறை இறை" என மகிழ்வொடு தினமும்
ஆன்றவர் வந்தனை செய்கிற முக்கண! நான் நிதம்
.. அலர் மலர் பலவுடன் அடிதொழுதற்(கு) அருளே.


முடை - துர்நாற்றம்;
உன - உன் + - உன்னுடையவான ( - ஆறன் உருபு )
நலி வினை மலி வழி - வருத்தும் வினைகள் பெருகும் வழி
நசை - ஆசை;
ஆன் - எருது;
அறைதல் - சொல்லுதல்;
ஆன்றவர் - ஞானியர்; பெரியோர்;


மூன்றொ(டு) இரண்(டு) என வந்து கெடுக்கிற கள்வர் என் முடை உடை உடல் உளர் - ஐவராகி வந்து தீமை செய்யும் கள்வர்கள் துர்நாற்றம் உடைய என் உடலில் உள்ளனர்;
முழுமுதல் உன தாள் நான் தொழ எண்ணில் - முழுமுதல் பொருளாகிய உன் திருவடியை நான் வணங்க எண்ணினால்;
உடன் மிகு வஞ்சனை கொண்(டு) அவர் நலி வினை மலி வழி நசை அது தருவார் - உடனே மிகுந்த வஞ்சனையோடு அவர்கள் வருத்துகிற வினை பெருகும் வழியில் ஆசை எழச் செய்வார்;
"மான் திகழ் கையினன், ஆன்மிசை ஊர்கிற மாண்பினன்; மறை அறை இறை" என - "மானை ஏந்தும் கையை உடையவன்; இடபவாகனன்; வேதம் மொழியும் இறைவன்" என்று;
மகிழ்வொடு தினமும் ஆன்றவர் வந்தனை செய்கிற முக்கண - ஞானியர் மகிழ்ச்சியோடு தினமும் போற்றுகிற முக்கண்ணனே!
நான் நிதம் அலர் மலர் பலவுடன் அடிதொழுதற்(கு) அருளே - அடியேன் தினமும் அலர்ந்த பூக்கள் பல கொண்டு உன் அடியைத் தொழுவதற்கு அருள்வாயாக!
---------------------



8) கழல்நிழல் விழை
-----------------------
தேர்செல எண்ணிய ரன்மலை ஆட்டமு யன்றவன்
.. சிரம் உரம் இற விரல் சிறிதிடும் ஒருவர்
பேர்பல நாவொடு சொல்லவும் நாளொடு வாள்தரும்
.. பிடி நடை துடி இடை உடையுமை பிரியார்;
கார்முகில் அன்னமி டற்றினர் வெண்ணிறக் காளையர்
.. கழல் நிழல் விழை மழை பொழிவிழி யுடனே
சேர்கரம் மேலெழ நின்றுவ ணங்கடி யார்அவர்
.. திரு உறும் மறு அறும் நிலைபெறுதல் திடமே.



பதம் பிரித்து:
தேர் செல எண்ணி அரன் மலை ஆட்ட முயன்றவன்
.. சிரம் உரம் இற விரல் சிறி(து) இடும் ஒருவர்;
பேர் பல நாவொடு சொல்லவும் நாளொடு வாள் தரும்,
.. பிடி நடை துடி இடை உடை உமை பிரியார்;
கார் முகில் அன்ன மிடற்றினர்; வெண்ணிறக் காளையர்;
.. கழல் நிழல் விழை, மழை பொழி விழியுடனே
சேர் கரம் மேல் எழ நின்று வணங்(கு) அடியார் அவர்
.. திரு உறும் மறு அறும் நிலைபெறுதல் திடமே.


உரம் - வலிமை;
இறுதல் - முரிதல்; அழிதல்;
பிடி - பெண் யானை;
துடி - உடுக்கை;
நிழல் - ஸ்தானம்; இடம்;
மறு - குற்றம்;


(சம்பந்தர் தேவாரம் - 3.49.1 - "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி"
சம்பந்தர் தேவாரம் - 3.49.6 -
"மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு[ம்] மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.")


தேர் செல எண்ணி அரன் மலை ஆட்ட முயன்றவன் சிரம் உரம் இற விரல் சிறி(து) இடும் ஒருவர் - (தன்) தேரை ஓட்ட எண்ணிச், சிவன் உறையும் கயிலை மலையைப் பெயர்க்க முயன்ற இராவணனின் தலைகள் முரிய, வலிமை அழிய, கால் விரலைச் சற்று வைத்த ஒப்பற்றவர்;
பேர் பல நாவொடு சொல்லவும் நாளொடு வாள் தரும், பிடி நடை துடி இடை உடை உமை பிரியார் - (பின் இராவணன் பல காலம்) பல திருப்பெயர்களைப் பாடித் தொழவும், அவனுக்கு நீண்ட ஆயுளும் சந்ததிரஹாம் என்ற வாளும் கொடுத்தவர்; பெண்யானையைப் போன்ற நடையும் உடுக்கையைப் போன்ற இடையும் உடைய பார்வதியைப் பிரியாதவர்;
கார் முகில் அன்ன மிடற்றினர்; வெண்ணிறக் காளையர் - கருமேகம் போன்ற கழுத்தை உடையவர்; வெள்ளை எருதை வாகனமாகக் கொண்டவர்;
கழல் நிழல் விழை, மழை பொழி விழியுடனே - அவருடைய திருவடித் தலத்தை விரும்புகிற, பக்திப் பெருக்கால் நீர்பொழியும் கண்களை உடைய;
சேர் கரம் மேல் எழ நின்று வணங்(கு) அடியார் - கரங்களைச் சேர்த்துத் தலையின்மேல் உயர்த்தி நின்று தொழுகிற அடியவர்கள்;
அவர் திரு உறும் மறு அறும் நிலைபெறுதல் திடமே - (சிவபெருமான் அருளால்), அவர்கள், குற்றங்கள் எல்லாம் நீங்கப்பெற்று மிகுந்த நன்மை அடையும் கதியைப் பெறுவது நிச்சயம்.
----------------------------



9) நாமம் உரை நெஞ்சமே
------------------------------
முன்பொரு நாள்பரம் ஆரென வாதிடு மாலயன்
.. முயல் உயர் அழல் என வருகிற முதல்வன்
அன்பொடு தாளிணை மீதலர் தூவிடு பத்தரின்
.. அகம் மகிழ் வகை நிகழ் அளிமிகும் எளியன்
இன்புரு வானவன் என்பணி வானவன் ஈறிலன்
.. இடம் மடம் உடை உமை இணைகிற இறைவன்
பொன்புரை மேனியன் நாமமு ரைத்திடு நெஞ்சமே
.. புகழ் மிகும் இகல் வினை பொடிபடுதல் திடமே.



பதம் பிரித்து:
முன்(பு) ஒரு நாள் பரம் ஆர் என வாதிடு[ம்] மால் அயன்
.. முயல் உயர் அழல் என வருகிற முதல்வன்;
அன்பொடு தாளிணை மீ(து) அலர் தூவிடு பத்தரின்
.. அகம் மகிழ் வகை நிகழ், அளி மிகும் எளியன்;
இன்(பு) உரு ஆனவன்; என்(பு) அணி வானவன்; (று) இலன்;
.. இடம் மடம் உடை உமை இணைகிற இறைவன்;
பொன் புரை மேனியன் நாமம் உரைத்திடு நெஞ்சமே;
.. புகழ் மிகும், இகல் வினை பொடிபடுதல் திடமே.


அழல் - நெருப்பு;
அலர் - பூ;
நிகழ்தல் - தங்குதல்;
அளி - அன்பு; அருள்;
இன்பு - இன்பம்;
என்பு - எலும்பு;
மடம் - அழகு; மென்மை;
புரை - போன்ற;
இகல் வினை - பகையாக இருக்கும் வினை;


முன்(பு) ஒரு நாள் பரம் ஆர் என வாதிடு[ம்] மால் அயன் முயல் உயர் அழல் என வருகிற முதல்வன் - முன் ஒரு சமயத்தில் தம்முள் யார் பெரியவர் என்று வாதிட்ட திருமாலும் பிரமனும் தேட முயன்ற உயர்ந்த தீ என வருகிற முதல் பொருள் சிவன்;
அன்பொடு தாளிணை மீ(து) அலர் தூவிடு பத்தரின் அகம் மகிழ் வகை நிகழ், அளி மிகும் எளியன் - அன்போடு திருவடிகளில் பூவைத் தூவும் பக்தர்களின் மனம் மகிழும் வண்ணம் (அங்கு) உறைகிற, அருள்மிகுந்தவன்; பக்தர்களால் எளிதில் அடையப்படுபவன்;
இன்(பு) உரு ஆனவன் - ஆனந்த வடிவானவன்;
என்(பு) அணி வானவன் - எலும்பை அணிகிற தேவன்;
(று) இலன் - முடிவு இல்லாதவன்;
இடம் மடம் உடை உமை இணைகிற இறைவன் - இடப்பக்கம் அழகிய பார்வதி இணைகிற இறைவன்;
பொன் புரை மேனியன் நாமம் உரைத்திடு நெஞ்சமே - மனமே! பொன் போன்ற திருமேனியை உடைய அப்பெருமான் திருப்பெயரைச் சொல்வாயாக!
புகழ் மிகும், இகல் வினை பொடிபடுதல் திடமே - (அப்படிச் செய்தால்) புகழ் பெருகும்; தீமை செய்யும் வினைகள் எல்லாம் அழிதல் நிச்சயமே.
--------------



10) சிவன் பெயர் தினம் நினை மனமே
---------------------------------------------
புன்வழி போவது தாமறி யாதவர் நாவொடு
.. புரை நிறை புறன் உரை புரிபவர் அடையார்
முன்னவ னாய்மிகு பின்னவ னாயுள ஒண்பொருள்
.. முளை மதி களை மிக முடிமிசை அணிவான்
இன்னவன் என்றறி தற்கரி யான்அடி யார்உளம்
.. இறை உறை அறை என இனிதருள் புரிவான்
தென்னவன் ஆயிழை யாளொடு சேவினில் ஊர்பவன்
.. சிவன் அவன் உயர் பெயர் தினம்நினையென் மனமே.



பதம் பிரித்து:
புன் வழி போவது தாம் அறியாதவர், நாவொடு
.. புரை நிறை புறன் உரை புரிபவர் அடையார்;
முன்னவனாய், மிகு பின்னவனாய் உள ஒண்பொருள்,
.. முளை மதி களை மிக முடிமிசை அணிவான்;
இன்னவன் என்(று) அறிதற்(கு) அரியான்; அடியார் உளம்
.. இறை உறை அறை என இனி(து) அருள்புரிவான்;
தென்னவன்; ஆயிழையாளொடு சேவினில் ஊர்பவன்;
.. சிவன்; அவன் உயர்பெயர் தினம் நினை என் மனமே.


புன்மை - இழிவு; சிறுமை; குற்றம்; (புன்வழி - சிறுநெறி)
புரை - குற்றம்; பொய்;
புரிதல் - செய்தல்; விரும்புதல்;
புறன் உரை - பழிச்சொல்; வெற்றுரை (Meaningless utterance);
ஒண் பொருள் - ஒளிமிகுந்த மெய்ப்பொருள்;
களை - அழகு;
உளம் - உள்ளம்;
அறை - வீடு; ('சரக்கறை - கருவூலம்' என்றும் கொள்ளலாம்)
தென்னவன் - இனிமையானவன்;
ஆயிழையாள் - பெண்; இங்கே பார்வதி;
(அப்பர் தேவாரம் - திருமுறை - 6.5.2 - "பாட்டுக்கும் .... உள்குவா ருள்ளத் துறைவாய் போற்றி ....";
அப்பர் தேவாரம் - திருமுறை - 4.111.1 - "விடையும் .... சடையும் இருக்கும் சரக்கறையோ என் தனிநெஞ்சமே";)


புன் வழி போவது தாம் அறியாதவர், நாவொடு புரை நிறை புறன் உரை புரிபவர் அடையார் - சிறுநெறியில் தாம் செல்வதை உணராமல், தம் நாவினால் குற்றம் நிறைந்த பழிச்சொற்களைப் பேசுபவர்கள் அடையமாட்டார்கள்;
முன்னவனாய், மிகு பின்னவனாய் உள ஒண்பொருள் - எல்லாவற்றிற்கும் முற்பட்டவனாகவும், எல்லாம் முடிந்தபின்னும் இருப்பவனாகவும் ள் ஒளிமிகுந்த மெய்ப்பொருள்;
முளை மதி களை மிக முடிமிசை அணிவான் - பிறைச்சந்திரனை அழகுறத் தன் திருமுடிமேல் அணிபவன்;
இன்னவன் என்(று) அறிதற்(கு) அரியான் - இத்தகையவன் என்று அறிய ஒண்ணாதவன்;
அடியார் உளம் இறை உறை அறை என இனி(து) அருள்புரிவான் - பக்தர்களது நெஞ்சே இறைவன் உறையும் இடம் என்று ஆக இன்னருள் செய்பவன்;
தென்னவன்; ஆயிழையாளொடு சேவினில் ஊர்பவன் - இனியவன்; பார்வதியோடு காளைமேல் செல்பவன்;
சிவன்; அவன் உயர்பெயர் தினம்நினையென் மனமே - என் மனமே! அச்சிவபெருமானின் உயர்ந்த நாமத்தைத் தினமும் எண்ணுவாயாக!
-------------------



11) சங்கரன் நற்பெயர் நினை
---------------------------------
சூழ்கிற பேர்முக மன்பல சொல்லம கிழ்ந்தொரு
.. சுழி விழு வழி விழை துரிசுடை மனமே
வாழ்வினில் இவ்வழி யாலடை கின்றஇ டும்பைகள்
.. வரை இல விரை திரை எனநிதம் வருமே
ஊழ்வினை என்கினும் உய்வழி ஒன்றுள தென்றுணர்
.. உரி கரி உரி தரி எரிநிற உருவன்
தாழ்சடை யான்திரு நீறணி சங்கரன் நற்பெயர்
.. தனை நினை முனை வினை அறும்அடையும் திருவே.



பதம் பிரித்து:
சூழ்கிற பேர் முகமன் பல சொல்ல மகிழ்ந்(து), ஒரு
.. சுழி விழு வழி விழை துரி(சு) உடை மனமே;
வாழ்வினில் இவ்வழியால் அடைகின்ற இடும்பைகள்
.. வரை இல; இரை திரை என நிதம் வருமே;
ஊழ்வினை என்கினும் உய் வழி ஒன்(று) உள(து) என்(று) உணர்;
.. உரி கரி உரி தரி, எரி நிற உருவன்;
தாழ் சடையான்; திருநீ(று) அணி சங்கரன் நற்பெயர்
.. தனை நினை; முனை வினை அறும்; அடையும் திருவே.


முகமன் - புகழ்; முகஸ்துதி;
சுழி - நீர்ச்சுழி (whirl); பூச்சியம் (zero);
துரிசு - குற்றம்;
இடும்பை - துன்பம்;
வரை - எல்லை; அளவு;
வரைஇல விரைதிரை - வரை இல இரை திரை / வரை இல விரை திரை;
திரை - அலை; கடல்;
இரை திரை - ஒலிக்கும் அலை; (இரைதல் - ஒலித்தல்);
விரை திரை - விரைந்து வரும் அலை; (விரைதல் - வேகமாதல் - To be speedy, swift, rapid);
நிதம் - தினமும்;
உரி கரி உரி தரி - உரித்த யானைத்தோலைத் தரிக்கும்; (அப்பர் தேவாரம் - 4.89.8 - விரித்த சடையினன் ..... உரித்த கரியுரி மூடி ......");


சூழ்கிற பேர் முகமன் பல சொல்ல மகிழ்ந்(து) - சுற்றி உள்ளோர் முகஸ்துதி செய்ய அதனால் மகிழ்ந்து,
ஒரு சுழி விழு வழி விழை துரி(சு) உடை மனமே - ஒரு சுழியில் விழும் வழியை விரும்பும் குற்றமுள்ள மனமே!
வாழ்வினில் இவ்வழியால் அடைகின்ற இடும்பைகள் வரை இல - வாழ்க்கையில் இவ்வழியில் சென்றால் பெறும் துன்பங்கள் அளவற்றன;
இரை திரை என நிதம் வருமே - (துன்பமானது) ஆரவாரித்து விரைந்து வரும் கடல் அலை போல முடிவின்றி வரும்;
ஊழ்வினை என்கினும் உய் வழி ஒன்(று) உள(து) என்(று) உணர் - இது ஊழ்வினையால் விளைவது என்றாலும், இதிலிருந்து உய்வு பெறும் உபாயம் ஒன்று உள்ளது என்று உணர்;
உரி கரி உரி தரி, எரி நிற உருவன் - உரித்த யானைத்தோலைப் போர்த்திய, தீப்போன்ற செந்நிற மேனிகொண்ட ஒப்பற்ற சிவபெருமான்;
தாழ் சடையான் - தாழும் சடையை உடையவன்;
திருநீ(று) அணி சங்கரன் நற்பெயர்தனை நினை - திருநீறு பூசும் சங்கரனாரின் நல்ல நாமத்தை எண்ணு;
முனை வினை அறும்; அடையும் திருவே - (அப்படி எண்ணினால்) முன்வினை எல்லாம் ஒழியும்; நற்கதியும் வந்தடையும்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
"தானன தானன தானன தானன தானன
தன தன தன தன தனதன தனனா"
என்ற சந்தம்.
  • இப்பாடல்கள் சம்பந்தரின் 'யாழ்முரி' பதிகப் பாடல் அமைப்பில் உள்ளவை.
  • அடிகளின் பிற்பகுதியில் முடுகு ஓசை அமையும்..
  • அடிகளின் பிற்பகுதியில் வரும் முதல் 4 நிரை அசைகள் தனித்தனியே நிறுத்தி இசையோடு பாடுமாறு அமையும். அவற்றுள் ஒலிநயமும் இருக்கும்.
  • பாடல்தோறும் ஈற்றடியின் கடைசி இரு சீர்கள் - “தனதன தனனா” என்றில்லாமல் “தனதன தானதனா” என்று அமையும். அங்கே சற்று நிறுத்திப் பாடுமாறு அமையும்.

சம்பந்தர் தேவாரம் - 1.136.1 -
மாதர்ம டப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படைநின் றிசை பாடவும் ஆடுவர்
அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசைபா டுவர் ஆழ்கடல் வெண்டிரை
இரைந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே
தாதவிழ் புன்னைதயங் கும லர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.


இத்தேவாரப் பாடலின் பொருளுக்கு: http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=11360&padhi=136&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

'மாதர் மடப்பிடியும்' பதிகத்தைப் பற்றிச் சில குறிப்புகளை இங்கே காணலாம்:



1) திருமுறை இசையில் அழகியல் மாற்றம் - - முனைவர் கோ.. முத்துக்குமாரசுவாமி :
http://www.tamilhindu.com/2009/07/thirumurai-isai/



2)
http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513552.htm
யாழ்முரி
திருஞானசம்பந்தர் தந்த அற்புதமான சந்த அமைப்புப் பதிகங்களில் ஒன்று யாழ் முரியாகும். இது காரைக்கால் அடுத்துள்ள தருமபுரத்தில் பாடப்பட்டது. மேகராகக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்ததாகும். இதனை நீலாம்பரி இராகத்தில் பாட வேண்டும். ஆனால் தற்காலத்தில் இதனை அடாணா இராகத்தில் பாடி வருகின்றனர். யாழ் முரியைச் சிலர் பண்ணாகவும் கூறுவர். இது தவறு. இது பண்ணன்று , பதிகப் பெயர் என்பது பலரின் முடிவு.

இது முரி என்ற இசை வகைக்குரிய பாடலாகும். எடுத்த இயலும் இசையும் முரித்துப் பாடுதலின் இது முரியாயிற்று. இசையின் உள்ளோசைகள் நிறைந்த பதிகமாகும். தற்காலத்தில் இசைவாணர்கள் பாடிவரும் பல்லவி பாடும் முறைக்கு இப்பதிகம் முன்னோடியான பதிகமாகும். திருமுறைகண்ட புராணம் இதற்குத் தனிக் கட்டளை கூறவில்லை. இது மேகராகக் குறிஞ்சியின் கட்டளையின் பாற்படும்.
தான தனத்தனனா - தன - தானன தானனா
தனா - தனா - தனா - தனா - தனதன தனனா

மாதர் மடப்பிடியும் மட அன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படைநின் றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர்
(1.136.1)
இதில்
தான - 1
தனத்தனனா
- 1
தன - 1
தானன - 1
தானனா - 1
தனா - 4
தனதன - 1
தனனா - 1


----- 11 -----
இதில் சந்தம் முரிந்து வருகிறது.

3)
தருமை ஆதீனம் வெளியிட்ட முதல் திருமுறை உரைநூலில் காணும் குறிப்பு: (http://www.thevaaram.org/katturai/1a.html ):
இவற்றுள் "மாதர் மடப்பிடியும்" என்ற பதிகம் யாழ்முரி என்றிருந்த போதிலும், அதுவும் மேகராகக் குறிஞ்சிப் பண்ணேயாகும். யாழை முரிக்கத் துணை நின்றதால் யாழ்முரி என்று பெயர் பெற்றதே அன்றி அது தனிப் பண்ணல்ல என்பதும் அறிக.”

------------------- 

No comments:

Post a Comment