Friday, August 28, 2015

02.10 – பொது - (ஏகபாதம்)

02.10 – பொது - (ஏகபாதம்)


2011-01-14 – 2011-01-30
பொது
"ஏகபாதம்"
-------------------------
2011-01-14
ஏகபாதம் - 1 (திருவிடைமருதூர்)
---------------
தேரோடு திகழ்திரு விடைமரு தூரையே
தேரோடு திகழ்திரு விடைமரு தூரையே
தேரோடு திகழ்திரு விடைமரு தூரையே
தேரோடு திகழ்திரு விடைமரு தூரையே.



பதம் பிரித்து:
தேரோடு திகழ் திருவிடைமருதூரையே
தேர்; ஓடு திகழ், திருவிடைமருதூர் ஐயே
தேர்; ஓடு, திகழ் திருவிடைமருதூர்; ஐ ஏது;
ஏரோடு திகழ்; திருவிடைமருதூர் ஐயே.


தேர் - 1) இரதம்;
தேர்தல் - சிந்தித்தல்; ஆராய்தல்; அறிதல்; தேடுதல்; கொள்ளுதல்;
ஓடு - 1) மூன்றாம் வேற்றுமை உருபு; 2) மண்டையோடு / பிச்சைப்பாத்திரம்; 3) ஓடுதல்;
- 1) இரண்டாம் வேற்றுமை உருபு; 2) தலைவன்; கடவுள்; 3) வியப்பு; 4) அழகு;
ஏர் - அழகு; நன்மை;


தேரோடு திகழ் திருவிடைமருதூரையே தேர் - தேரோடு விளங்கும் திருவிடைமருதூரையே சிந்திப்பாயாக;
ஓடு திகழ், திருவிடைமருதூர் ஐயே தேர் - (கையில் பிரமனின்) மண்டையோடு விளங்கும் திருவிடைமருதூர்த் தலைவனையே ஆராய்வாயாக;
ஓடு, திகழ் திருவிடைமருதூர் - விளங்கும் திருவிடைமருதூர்க்கு விரைவாயாக;
ஐ ஏது; ஏரோடு திகழ் - வியப்பு ஏது! நன்மைபெற்று விளங்குவாய்;
திருவிடைமருதூர் ஐயே - திருவிடைமருதூர் அழகே!
-----------------------------------------------------------------------------------
2011-01-17
ஏகபாதம் - 2
-------------
மானினையும் பாத கமல மொழிவோ
மானினையும் பாத கமல மொழிவோ
மானினையும் பாத கமல மொழிவோ
மானினையும் பாத கமல மொழிவோ.



பதம் பிரித்து:
மால் நினையும் பாத கமலம் மொழிவோம்;
ஆனின் ஐ உம் பாது; அக மலம் ஒழிவோமால்;
நினை, உம் பாதக மலம் ஒழிவோமால்;
நினையும்; பாதகம் அலம் ஒழிவோ?


இலக்கணக் குறிப்பு : தனிக்குறிலைச் சாராது வரும் ஈற்று 'ல்' + நகரம் - வரும் இடத்து, 'ல்' கெட்டு, நகரம் னகரமாகத் திரியும்.
மால் - திருமால்;
ஆன் - பசு;
- தலைவன்;
ஆனின் ஐ - பசுபதி;
பாது - காவல் (Protection, watch);
அகம் - மனம்;
மலம் - அழுக்கு; மாசு; மும்மலங்கள்;
ஆல் - ஓர் அசைநிலை (Poet. expletive affixed to nouns and finite verbs);
பாதகம் - பெரும்பாவம்;
அலம் - துன்பம்; (Distress, pain, misery);
ஒழிதல் - தீர்தல்; நீங்குதல்;
ஒழிவு - முடிவு; (End, termination);


மால் நினையும் பாத கமலம் மொழிவோம் - திருமால் நினைந்து போற்றும் திருவடித்தாமரையைப் பாடிப் பரவுவோம்;
ஆனின் ஐ உம் பாது - பசுபதி உமக்குக் காவல்;
அக மலம் ஒழிவோமால் - மன அழுக்குகளை நீங்குவோம்;
நினை, உம் பாதக மலம் ஒழிவோமால் - எண்ணு, உம்மைப் பற்றியிருக்கும் பெரும்பாவங்களை நீங்குவோம்;
நினையும், பாதகம் அலம் ஒழிவோ? - எண்ணுங்கள், துன்பம் தீர்வது குற்றமோ?
-----------------------------------------------------------------------------------
2011-01-17
ஏகபாதம் - 3 (ஆவூர்)
-------------
வான்மதி யோடு நீர்சேர் மின்சடை யானாவூர்
வான்மதி யோடு நீர்சேர் மின்சடை யானாவூர்
வான்மதி யோடு நீர்சேர் மின்சடை யானாவூர்
வான்மதி யோடு நீர்சேர் மின்சடை யானாவூர்.



பதம் பிரித்து:
வான்மதியோடு நீர் சேர் மின்சடையான், ஆ ஊர்வான்;
மதி, ஓடுநீர் சேர் மின்சடையான் ஆவூர்;
வான் மதியோடு நீர் சேர்மின்; சடையான் நா ஊர்
வால் மதி ஓடும்; நீர் சேர்மின் சடையான் ஆவூர்.


வான்மதி - வால் மதி / வான் மதி;
வான் - வானம்; நன்மை; அழகு; பெருமை;
வால் - தூய்மை; மிகுதி; வெண்மை;
மதி - சந்திரன்; அறிவு; மதித்தல்/கருதுதல்;
நீர் - கங்கை; நீங்கள்;
மின் - மின்னல்;
- பசு; இடபம்;
ஆவூர் - தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று; (தலத்தின் பெயர் ஆவூர்; கோயிலின் பெயர் பசுபதீச்சரம்.)
ஊர்தல் - ஏறுதல்;
ஓடுதல் - விரைதல்; பொருந்துதல் (To be endowed with);
(திருவாசகம் - திருக்கோத்தும்பி - 1 -
"பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் .... "
நா ஏறு செல்வி - எல்லார் நாவிலும் சென்று தங்கும் அரசி; கலைமகள்);


வான் மதியோடு நீர் சேர் மின்சடையான், ஆ ஊர்வான் - வானத்தில் திகழும் சந்திரனோடு கங்கையும் சேரும் மின்னற் சடையான் காளையின்மேல் ஏறுவான்;
மதி, ஓடுநீர் சேர் மின்சடையான் ஆவூர் - ஓடுகிற கங்கை சேரும் மின்னற் சடையானின் ஆவூரைப் போற்றுவீர்;
வான் மதியோடு நீர் சேர்மின் - நல்ல அறிவோடு (அவ்வூரை) நீங்கள் சென்றடையுங்கள்;
சடையான் நா ஊர் வால் மதி ஓடும் - சடையுடைய சிவபெருமான் (உம்) நாவில் ஏறும் தூய அறிவு பொருந்தும்;
நீர் சேர்மின் சடையான் ஆவூர் - (ஆதலால்) நீங்கள் சிவபெருமானின் ஆவூரைச் சென்றடைவீராக.
-----------------------------------------------------------------------------------
2011-01-18
ஏகபாதம் - 4
-------------
யாராயி னுமைசேர் கண்டரே சுந்தர ரென்பரே
யாராயி னுமைசேர் கண்டரே சுந்தர ரென்பரே
யாராயி னுமைசேர் கண்டரே சுந்தர ரென்பரே
யாராயி னுமைசேர் கண்டரே சுந்தர ரென்பரே.



பதம் பிரித்து:
"யாராயினும், மை சேர் கண்டரே சுந்தரர் என்பரே?
ஆராயின், நும் மை சேர் கண்டர் ஏசும் தரர்" என்பர்
ஏயார் ஆயின்; உமை சேர் கண்டரே சுந்தரர் என்பர்
ஏய் ஆர் ஆயினும்; ஐ சேர் கண்டரே சுந்தரர், என்பரே.


ஆயின் - ஆய்ந்தால்; ஆனால்;
மை - கருமை;
கண்டம் - கழுத்து;
கண்டர் - நீலகண்டர் என்பதன் ஏகதேசம்;
என்பர் - என்று சொல்வர்; எலும்பை அணிந்தவர்; (என்பு - எலும்பு);
- வினா ஏகாரம்; ஈற்றசை ஏகாரம்;
தரம் - தகுதி; (தரன் - தரத்தினன்);
ஏய்தல் - பொருந்துதல்; தகுதல்;
ஆர் - யார்;
ஆய்தல் - ஆராய்தல்; ஆலோசித்தல்;
- அழகு;


இலக்கணக் குறிப்புகள் :
1) ஆராயின் நும் மை - ஆராயினும்மை - 'ஆராயினுமை' என்று செய்யுள் விகாரம் அடைந்து வந்தது.
2) நிலைமொழியில் இகர, ஈகார, ஐகார ஈறுகள் வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய்) யகர உடம்படுமெய் தோன்றும். பிற உயிர்கள் இருப்பின் (வ்) வகர உடம்படுமெய் தோன்றும். ஏகாரம் இருப்பின் யகரம் வகரம் ஆகிய இரண்டு உடம்படுமெய்களும் தோன்றும்.


"யாராயினும், மை சேர் கண்டரே சுந்தரர் என்பரே? - எவரேனும் கருமை சேர் கழுத்தினரை அழகர் என்று சொல்வார்களா?
ஆராயின், நும் மை சேர் கண்டர் ஏசும் தரர்" என்பர் ஏயார் ஆயின் - ஈசனைப் பொருந்தாதவர்களானால் , "ஆராய்ந்தால், உம் நீலகண்டர் இகழத் தக்கவர்" என்று சொல்வார்கள்;
உமை சேர் கண்டரே சுந்தரர் என்பர் ஏய் ஆர் ஆயினும் - ஈசனைப் பொருந்தும் எவரும், "பார்வதியை ஒரு கூறாகக் கொண்ட நீலகண்டரே அழகர்" என்பார்கள்;
ஐ சேர் கண்டரே சுந்தரர், என்பரே - அழகு சேரும் கண்டத்தை உடையவரே அழகர், எலும்பை அணிந்தவர்.
-----------------------------------------------------------------------------------
2011-01-18
ஏகபாதம் - 5 (திருவையாறு)
-----------------------------
புகழ்வரா லடைசெய்யார் பதியை யாற்றுச் சடையனையே
புகழ்வரா லடைசெய்யார் பதியை யாற்றுச் சடையனையே
புகழ்வரா லடைசெய்யார் பதியை யாற்றுச் சடையனையே
புகழ்வரா லடைசெய்யார் பதியை யாற்றுச் சடையனையே.



பதம் பிரித்து:
புகழ்வர், ஆல் அடை, செய் ஆர் பதி, ஐயாற்றுச் சடையனையே;
புகழ்வர், ஆல் அடை, செய் ஆர் பதியை, ஆற்றுச் சடையனையே;
புகழ், வரால் அடை செய் ஆர் பதி ஐயாற்றுச் சடையனையே;
புகழ்வரால்; அடை, செய் ஆர் பதி ஐயாற்றுச் சடையனையே.


ஆல் - விஷம்; நீர்; ஓர் அசைச் சொல்;
அடைதல் - சேர்தல்; அடைக்கலம் புகுதல்;
அடைத்தல் - தடுத்தல்;
செய் - சிவப்பு; வயல்;
ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்;
பதி - தலம்; தலைவன்;


(சுந்தரர் தேவாரம் - 7.34.1 -
"தம்மையே புகழ்ந்து .... எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதருஞ் சோறுங் கூறையும் ஏத்தல் ஆம் இடர் கெடலும் ஆம் ...."
- புலவர்காள், எம் தந்தையாகிய சிவபிரான், தன்னையே பாடுவார்க்கு இம்மையிற்றானே நல்ல உண்டியும், ஆடையும், பிறவும் தந்து புரப்பான்; அதனால், புகழும் மிகும்; துன்பங் கெடுதலும் உண்டாம். )


புகழ்வர், ஆல் அடை, செய் ஆர் பதி, ஐயாற்றுச் சடையனையே - நீரை (கங்கையைச் சடையுள்) அடைத்த செம்மேனித் தலைவன், திருவையாற்றில் எழுந்தருளும், சடையுடைய ஈசனை அன்பர்கள் போற்றுவார்கள்;
புகழ்வர், ஆல் அடை, செய் ஆர் பதியை, ஆற்றுச் சடையனையே - விஷத்தை (கண்டத்துள்) அடைத்த செம்மேனித் தலைவனைக், கங்கைச்சடையனையே அன்பர்கள் போற்றுவார்கள்;
புகழ், வரால் அடை செய் ஆர் பதி ஐயாற்றுச் சடையனையே - (நீயும்) வரால் மீன்கள் சேரும் வயல் திகழும் தலமான திருவையாற்றுச் சிவனைத் துதிப்பாயாக;
புகழ்வரால்; அடை, செய் ஆர் பதி ஐயாற்றுச் சடையனையே - (எல்லாரும் உன்னைப்) புகழ்வார்கள்; ஆதலால், நீ வயல் திகழும் திருவையாற்றுச் சிவனைச் சென்று அடைவாயாக!



-----------------------------------------------------------------------------------
2011-01-19
ஏகபாதம் - 6 (திருவாரூர்)
-----------------------------
தென்றிரு வாரூ ரேகா வன்மன மேகலியே
தென்றிரு வாரூ ரேகா வன்மன மேகலியே
தென்றிரு வாரூ ரேகா வன்மன மேகலியே
தென்றிரு வாரூ ரேகா வன்மன மேகலியே.



பதம் பிரித்து:
தென் திரு வார் ஊர் ஏகா வன் மனமே, கலியே;
தென் திரு ஆர் ஊர் ஏகா வன் மனமே, கலியே;
தென் திருவாரூரே காவல் மனமே; கலி
ஏது என்று இரு; ஆரூர் ஏகு ஆவல் மனம் மே கலியே.


தென் - இனிமை; அழகு;
திரு - செல்வம்; சிறப்பு;
ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்;
கலி - துன்பம்; வறுமை; தழைக்கை (Flourishing, thriving, prospering) - பெருமை, பொலிவு, எழுச்சி;
வார்த்தல் - சொரிதல்; ஊற்றுதல்;
மே - மேம்பாடு (Excellence);


தென் திரு வார் ஊர் ஏகா வன் மனமே, கலியே - இனிய, செல்வம் சொரியும் ஊருக்குச் செல்லாத கல் மனமே; வறுமைதான்;
தென் திரு ஆர் ஊர் ஏகா வன் மனமே, கலியே - அழகிய சிறப்புப் பொருந்திய ஊருக்குச் செல்லாத கல் மனமே; துன்பந்தான்;
தென் திருவாரூரே காவல் மனமே - மனமே! இனிய திருவாரூரே உனக்குப் பாதுகாவல்;
கலி ஏது என்று இரு - துன்பமும் வறுமையும் இன்றி இருப்பாய்;
ஆரூர் ஏகு ஆவல் மனம் மே கலியே - ஆரூருக்குச் செல் விருப்பம் உள்ள மனத்தர்க்கு மேம்பாடும் பெருமையுமே.
-----------------------------------------------------------------------------------
2011-01-21
ஏகபாதம் - 7
-------------
வணங்கு வாரார் தனமாளு மலைவி லாரே
வணங்கு வாரார் தனமாளு மலைவி லாரே
வணங்கு வாரார் தனமாளு மலைவி லாரே
வணங்கு வாரார் தனமாளு மலைவி லாரே.



பதம் பிரித்து:
வணங்குவார் ஆர்? தனம் ஆளும் அலைவு இலாரே;
அணங்கு, வார் ஆர் தனம் ஆளும் மலை விலாரே
வணங்குவார், ஆர் தனம் மாளும் மலைவு இலாரே;
அணங்கு வாரார், தனம் ஆளும், மலைவு இலாரே.


ஆர் - யார்;
ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்;
தனம் - செல்வம்; முலை;
அலைவு - சஞ்சலம் (Mental agitation, trouble, distress);
அணங்கு - பெண்; வருத்தம்;
வார் - முலைக்கச்சு;
மலைவு - மயக்கம் (Delusion, confusion of mind); போர் (Opposition, contention);
அலைவு - சஞ்சலம் (Mental agitation, trouble, distress);


இலக்கணக் குறிப்பு : இலார், விலார் - இல்லார், வில்லார் என்பன இடைக்குறையாக வந்தன;


வணங்குவார் ஆர்? தனம் ஆளும் அலைவு இலாரே - யார் தொழுவார்கள்? பணம் (தம்மை) ஆள்கிற சஞ்சலம் இல்லாதவர்களே;
அணங்கு, வார் ஆர் தனம் ஆளும் மலை விலாரே வணங்குவார் - கங்கைக்கும், கச்சு அணிந்த முலையினள் பார்வதிக்கும் தலைவனான, மலையை வில்லாக ஏந்திய சிவபெருமானையே தொழுவார்கள்;
ஆர் தனம் மாளும் மலைவு இலாரே - நிறைந்த செல்வம் அழியுமோ என்ற மயக்கம் இல்லாதவர்கள்;
அணங்கு வாரார், தனம் ஆளும், அலைவு இலாரே - (அவர்கள்) வருத்தம் வாராதவர்கள்; செல்வத்தை ஆள்வார்கள்; (தனம் ஆளும் அலைவு இலார் - பொருளுக்கு அடிமையாகும் சஞ்சலம் இல்லாதவர்கள் - அவர்களைத் தனம் ஆளாது. அவர்கள் செல்வத்தை ஆள்வார்கள்);
("அணங்கு வாரார் தனம் ஆளும், லைவு இலாரே" என்றும் பிரித்துப் பொருள்கொள்ளலாம் - அவர்கள், பொருளுக்கு அடிமையாகும் துன்பம் அடையாதவர்கள்; எதிரிகள் இல்லாதவர்கள்);
-----------------------------------------------------------------------------------
2011-01-22
ஏகபாதம் - 8
-----------------
பத்து முகந்தானோ வோவென விட்டான்
பத்து முகந்தானோ வோவென விட்டான்
பத்து முகந்தானோ வோவென விட்டான்
பத்து முகந்தானோ வோவென விட்டான்.



பதம் பிரித்து:
பத்து; முகந்து ஆல் நோ ஓவு என இட்டான்;
பத்துமுகந்தான் ஓஓ என இட்டான்;
பத்தும் உகந்தான் நோவு ஓவு என விட்டான்;
பத்துமுகந்தான் ஓஓ என இட்டான்.


பத்து - பற்று; (பற்றுக் கோடு - Support; அன்பு - Love, devotion; பிடிக்கை - Grasp, grip, seizure;); பக்தி; 10 என்ற எண்;
முகத்தல் - தாங்கியெடுத்தல் (To lift, take up); நிரம்பப்பெறுதல் (To obtain in full measure); விரும்புதல் (To desire, like);
ஆல் - ஆலகால விஷம்;
நோ, நோவு - வலி; துன்பம்;
ஓவுதல் - நீங்குதல்; முடிதல்; நீக்குதல்;
இடுதல் - வைத்தல்; கொடுத்தல் (To give, grant, bestow, as alms);
பத்து முகம் - தசமுகம் - இராவணனைச் சுட்டியது;
ஓஓ - ஓலம்; மகிழ்ச்சிக்குறிப்பு;
உகத்தல் - மகிழ்தல்; விரும்புதல்;
விடுதல் - போகவிடுதல் (To let go); பந்தம் விடுத்தல் (To liberate, set free, release); சொல்லுதல்;


இலக்கணக் குறிப்பு : 'பத்துமுகத்தான்' என்பது 'பத்துமுகந்தான்' என்று மெலித்தல் விகாரம் பெற்று வந்தது.


பத்து; முகந்து ஆல் நோ ஓவு என இட்டான் - பற்றுக்கோடாயிருப்பவன் சிவன்; (தேவர்கள் வேண்ட), ஆலகாலம் தரும் துன்பம் நீங்குக என்று அதை அள்ளிக் கண்டத்தில் வைத்தான்;
பத்துமுகந்தான் ஓஓ என இட்டான் - (மலையெடுத்த இராவணனின்) பத்து முகங்களும் ஓலமிட விரலை வைத்தான்;
பத்தும் உகந்தான் நோவு ஓவு என விட்டான் - பின், (இராவணன் பாடித் தொழ), அவன் பக்தியை மெச்சித், 'துன்பம் தீர்ந்துபோ' என விடுவித்தான்;
பத்துமுகந்தான் ஓஓ என இட்டான் - இராவணன் மிகவும் மகிழ வரங்கள் கொடுத்தான்.
-----------------------------------------------------------------------------------
2011-01-22
ஏகபாதம் - 9
--------------
மான்மல ரான்கா ணாரிவ ரடிகளே
மான்மல ரான்கா ணாரிவ ரடிகளே
மான்மல ரான்கா ணாரிவ ரடிகளே
மான்மல ரான்கா ணாரிவ ரடிகளே.



பதம் பிரித்து:
மால் மலரான் காணார் இவர் அடிகளே;
மால் மலரான் காண்; ஆர் இவர்? அடிகளே;
மால் மலர் ஆன் காண்; ஆர் இவர் அடிகள் ஏம்;
மான் மலரான் காண்; ஆர், இவர் அடிகளே.


மால் - திருமால்; மயக்கம்; அறியாமை; காமம்; பெருமை;
மலரான் - தாமரையில் இருக்கும் பிரமன்; தோன்றாதவன்
காண்(ணு)தல் - ஆராய்தல் (To consider, investigate); பார்த்தல்; அறிதல்; வணங்குதல் (To worship, venerate, reverence);
காண் - முன்னிலையில்வரும் ஓர் உரை அசை (Expletive of the 2nd pers. meaning behold);
அடிகள் - திருவடிகள்; கடவுள்;
மலர்தல் - தோன்றுதல் (To appear; to rise to view); எதிர்தல்/சம்பவித்தல் (To happen, befall); மிகுதல் (To abound, become full);
ஆர் - யார்; அரிய (அருமை);
ஆர்தல் - பொருந்துதல்;
ஆன் - இடபம்; மூன்றாம் வேற்றுமை உருபு (An instr. ending, as in மண்ணானியன்ற குடம்);
ஏம் - இன்பம்;
மான் - மான் என்ற விலங்கு (Deer); பெரியோன் (Great person or being);


இலக்கணக் குறிப்பு : 'மலரான்' (தோன்றாதவன்) என்று ஒருமையில் சொல்லிப் பின் 'இவர்; என்று பன்மையில் சொன்னது 'ஒருமை பன்மை மயக்கம்'.


மால் மலரான் காணார் இவர் அடிகளே - திருமாலும் பிரமனும் இவர் திருவடிகளைக் காணமாட்டார்;
மால் மலரான் காண்; ஆர் இவர்? அடிகளே - அறியாமையும் காமமும் தோன்றாதவன்; இவர் யார்? ஈசனே;
மால் மலர் ஆன் காண்; ஆர் இவர் அடிகள் ஏம் - பெருமை மிகும் இடபம் இருக்கும்; அரிய இவர் திருவடிகள் இன்பம்;
மான் மலரான் காண்; ஆர், இவர் அடிகளே - பெரியோன்; மானும் மலரும் உடையவன்; ஆதலால், மலரால் வணங்கு; இவர் திருவடிகளைப் பொருந்துவாயாக.
-----------------------------------------------------------------------------------
2011-01-23
ஏகபாதம் - 10
----------------
கண்டத்த னிடந்தான் பேரன்போ டுற்றான்
கண்டத்த னிடந்தான் பேரன்போ டுற்றான்
கண்டத்த னிடந்தான் பேரன்போ டுற்றான்
கண்டத்த னிடந்தான் பேரன்போ டுற்றான்.



பதம் பிரித்து:
கண்டத்தன் இடம் தான் பேரன்போடு உற்றான்;
கண் தத்தன் இடந்தான், பேர் அன்போடு; உற்றான்
கண்டத்தன்; இடம் தான் பேர் அன்பு, ஓடு உற்றான்
கண்டு, அத்தனிடம் தான் பேர் அன்போடு உற்றான்.


கண்டத்தன் - நீலகண்டன்;
இடம் - தானம் (Place, situation); இடப்பக்கம் (Left side); ஏழாம் வேற்றுமை உருபு (part. Sign of the locative, as in அவனிடம்);
தத்தம் - கொடை; (தத்தன் - கொடை கொடுப்பவன்);
பேர் - பெரும்; பெயர்; புகழ்;
பேர்த்தல் - பெயர்த்தல்;
அன்பு - பக்தி;
ஓடு - மூன்றாம் வேற்றுமை உருபு; மண்டையோடு;
அத்தம் - பாதி (அருத்தம்); பொருள்;
அத்தன் - தந்தை; பெரியோன்:
உறுதல் - சார்ந்திருத்தல் (To be attached, devoted to); பொருந்துதல் (To join, associate with); சம்பவித்தல் (To happen, occur, befall, as good or evil); தங்குதல் (To dwell, reside);
அடைதல் (To approach, gain access to, reach); அனுபவித்தல் (To suffer, gather experience);


குறிப்பு: 4-ம் அடியில் 'கண்டு' என்ற சொல்லை அடுத்து, 'அருள' என்று ஒரு சொல் வருவித்துக்கொள்க.
இலக்கணக் குறிப்பு : அவாய்நிலை - ஒரு பதம் தன்னொடு பொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொரு பதத்தை வேண்டி நிற்கும் நிலை ((Gram.) Syntactical expectancy consisting in the need of one word for another such as பயனிலை for எழுவாய், ellipsis).
('ellipsis' - the omission from a sentence or other construction of one or more words that would complete or clarify the construction).


கண்டத்தன் இடம் தான் பேரன்போடு உற்றான் - நீலகண்டனின் கோயிலை அவன் மிகுந்த காதலோடு அடைந்தான்;
கண் தத்தன் இடந்தான், பேர் அன்போடு; உற்றான் கண்டத்தன்; - கண்ணைக் கொடுப்பவன், பெயர்க்கும் அன்போடு தன் கண்ணைத் தோண்டினான்; நீலகண்டன் (அக்கண்ணைப்) பெற்றான்;
இடம் தான் பேர் அன்பு, ஓடு உற்றான் கண்டு, - (பின்னர் ஈசனின் இடக்கண்ணிலும் குருதி வரக்கண்டு), தன் இடக்கண்ணையும் தோண்டச்செல்லும் பக்தியைப், பிரமனின் மண்டையோடு உடையவன் பார்த்து அருள,
அத்தனிடம் தான் பேர் அன்போடு உற்றான் - ஈசனிடம் அவன் 'கண்ணப்பன்' என்ற பெயரை அன்போடு பெற்றான். ஈசனின் இடத்தை (சிவலோகத்தை) அவன் மிகுந்த அன்போடு அடைந்தான்.


(பெரிய புராணம்:
செங்கண்வெள் விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திருக்கா ளத்தி அற்புதர் திருக்கை ன்பர்
தங்கண்முன் டக்கும் கையைத் தடுக்கமூன் றடுக்கு நாக
கங்கணர் அமுத வாக்குக் கண்ணப்ப நிற்க ன்றே.


பேறினி யிதன்மேல் உண்டோ பிரான்திருக் கண்ணில் வந்த
ஊறுகண் டஞ்சித் தங்கண் இடந்தப்ப உதவும் கையை
ஏறுயர்த் தவர்தம் கையால் பிடித்துக்கொண் டென்வ லத்தில்
மாறிலாய் நிற்க ன்று மன்னுபே ரருள்பு ரிந்தார். )
-----------------------------------------------------------------------------------
2011-01-30
ஏகபாதம் - 11 (தில்லை - சிதம்பரம்)
----------------
மகிழ்வா னாடு வனத்தில் லையே
மகிழ்வா னாடு வனத்தில் லையே
மகிழ்வா னாடு வனத்தில் லையே
மகிழ்வா னாடு வனத்தில் லையே.



பதம் பிரித்து:
மகிழ்வு ஆன் ஆடு வனத்து இல்லையே
மகிழ்வான் ஆடுவன் அத் தில்லையே
மகிழ் வான் நாடு வனத் தில்லையே
மகிழ்வால் நாடு வனத் தில்லையே.


மகிழ் / மகிழ்வு - இன்பம் (Joy, exhilaration);
மகிழ்தல் - அகங்களித்தல் (To joy, rejoice, exult); விரும்புதல் (To wish, desire);
மகிழ்வால் - விருப்போடு; (சுந்தரர் தேவாரம் - 7.94.9 - "இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு" - இலையாலாயினும் அன்போடு துதிக்கின்ற அவர்கட்கு);
ஆன் - எருமை, பெற்றம், மரை இவற்றின் பெண் (Female of the buffalo, ox or deer); இடபம் (Ox); மூன்றாம் வேற்றுமை உருபு;
ஆடு - ஒரு விலங்கு வகை (sheep, goat, etc.);
ஆடுதல் - கூத்தாடுதல் (to dance); சஞ்சரித்தல்;
வனம் - 1) காடு; சோலை; 2) அழகு;
அன் - 1. Verb-ending: (a) of the rational class in the 3rd pers. sing. masc. as in அவன் வருவன்; ஆண்பால் வினைவிகுதி; (b) of the 1st pers. sing. as in யான் வருவன்; தன்மை யொருமை வினைவிகுதி. 2. Noun suff. (a) of the rational class masc. sing. as in மலையன், ஆண்பாற் பெயர் விகுதி; (b) of a participial noun, masc. sing. as in வருபவன்; ஆண்பால் வினையாலணையும் பெயர் விகுதி.
வான் - தேவருலகு; அழகு; பெருமை (Greatness; largeness);
நாடு - தேசம்; இடம்; உலகம்;
நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; கிட்டுதல் (To reach, approach);


மகிழ்வு ஆன் ஆடு வனத்து இல்லையே - இன்பம் விலங்குகள் இருக்கும் காட்டில் இல்லை;
மகிழ்வான் ஆடுவன் அத் தில்லையே - இன்பன் (சிவபெருமான்) தில்லைத்தலத்தில் ஆடுகின்றனன்; ('ஆடுபவன் - நடராசன் - அத் தில்லையையே விரும்புவான்' என்றும் பொருள்கொள்ளலாம்);
மகிழ் வான் நாடு வனத் தில்லையே - இன்புறுகிற தேவலோகம் அழகிய தில்லையே; ('வானளாவு சோலைகள் சூழும் தில்லையே இன்பம்' என்றும் பொருள்கொள்ளலாம்);
மகிழ்வால் நாடு வனத் தில்லையே - (ஆதலால்), தில்லை வனத்தை விருப்போடு அடைவாயாக.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :

இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு :

1) இப்பதிகப் பாடல்களில் சில கலிவிருத்தம் (அடிதோறும் 4 சீர்கள்), சில கலித்துறை (அடிதோறும் 5 சீர்கள்).

2) ஏகபாதம் :
சி.கே.சுப்பிரமணிய முதலியார் எழுதிய 'திருத்தொண்டர் புராண உரை' நூலிற் காண்பது:
2174.
செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்க ளான்மொழி மாற்று
வந்தசொற் சீர்மாலை மாற்று வழிமொழி யெல்லா மடக்குச்
சந்தவி யமகமேக பாதந் தமிழிருக் குக்குறள் சாத்தி
எந்தைக் கெழுகூற் றிருக்கை யீரடி யீரடி வைப்பு,


இப்பெரியபுராணப் பாடலுக்கு C.K.சுப்பிரமணிய முதலியார் கொடுத்துள்ள விளக்க உரையிலிருந்து:
எல்லாம் மடக்குச் சந்த இயமகம் ஏகபாதம் - அடிதோறும் எல்லாச் சீர்களும் மீண்டும் மடக்கி வருதலாகிய சந்தம் பெற்ற இயமகமாகிய திரு ஏகபாதம் என்க; அடிமுழுதுமாகிய எல்லாச் சீர்களும் மடக்கி வருதலாகிய சிறப்புடைய தென்பார் எல்லா மடக்குச் சந்தவியமகம் என்று விசேடித்தார். மடக்கு - தமிழ்ப் பெயர். இயமகம் - வடமொழி; மரபு விளக்கவும் இயல்பு குறிக்கவும் இரண்டுங் கூறினார். "உற்றுமை சேர்வது" என்னும் திருவியமகப் பதிகம் பின்னர் அருளியது. புரா - 954 பார்க்க. ஏகபாதமும் இயமக வகையுட் சேர்வதாயினும் எல்லாச் சீர்களும் மடங்கி வரும் சிறப்புடையது.

3) திருஞானசம்பந்தர் அருளிய ஏகபாதப் பதிகம் - 1.127.
1.127.1
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.



C.K.சுப்பிரமணிய முதலியார் கொடுத்துள்ள பதிகக் குறிப்பு:
ஒரு அடிபோலவே எல்லா அடிகளும் வருதலால் இது ஏகபாதம் எனப்படும். இயமகம் அடிதோறும் ஒன்றும் பலவுமாகிய சீர்கள் மடக்கி வருவது; இஃது அதனுட் சிறப்புவகை என்பார் "எல்லா மடக்குச், சந்த வியமகம்" என்று இதன் இலக்கணத்தை ஆசிரியர் காட்டியருளினர்; (2174). சீகாழிப் பன்னிரு பெயர்களையும் சார்த்தி இறைவர் புகழ்களைப் போற்றுவது.”

-------------------------------- -------------------------------

1 comment: