Thursday, August 13, 2015

01.43 – அண்ணாமலை - (திருவண்ணாமலை)

01.43அண்ணாமலை - (திருவண்ணாமலை)



2008-12-08
திருவண்ணாமலை
"நெஞ்சே மறவாதே”
-------------------------------
(கலிவிருத்தம் - “விளம் மா விளம் மா" என்ற வாய்பாடு)



1)
மருள்மிக வாகி மாலயன் தேட
நெருப்பென நின்றான் நினைப்பவர்க் கெளிதில்
அருள்புரி அண்ணா மலையனை வாழ்த்த
இருள்கெடும் நெஞ்சே இறைமற வாதே.



மருள் - மயக்கம் (bewilderment of mind, confusion); delusion; வியப்பு (wonder);
மால் அயன் - விஷ்ணுவும் பிரமனும்;
இருள் - அஞ்ஞானம்; மயக்கம்; துன்பம்;
இறை - இறைவன்; / சிறிது; - சிறிதும்; (உம்மைத்தொகை);
இறை மறவாதே - இறைவனை மறவாதே; / சிறிதும் மறவாதே;



2)
கருமுகில் வண்ணன் கடிமலர் மேலான்
திருவடி யோடு திருமுடி தேடும்
அரும்சுடர் அண்ணா மலையனை வாழ்த்த
வரும்திரு நெஞ்சே இறைமற வாதே.



கருமுகில் வண்ணன் - மேகவர்ணன் - விஷ்ணு;
கடி மலர் மேலான் - வாச மலரான தாமரை மேல் இருக்கும் பிரமன்;
திரு - செல்வம்;



3)
பன்றியாய் அன்னப் பறவையாய்ச் சென்றும்
வென்றிகா ணாது வியர்த்தவர் வாட
அன்றுயர் அண்ணா மலையனை வாழ்த்த
நன்றுதான் என்றும் இறைமற வாதே.



வென்றி - வெற்றி;
வேர்த்தல் - அஞ்சுதல் (to be afraid);
வியர்த்து அவர் வாட - அஞ்சி விஷ்ணுவும் பிரமனும் வாட;
வாடுதல் - பொலிவு அழிதல்; மனம் அழிதல்; மெலிதல்;


4)
அலைக்கிடந் தோனும் அலர்மிசை யோனும்
அலைந்துதி ரிந்தும் அடிமுடி காணா
அலகிலா அண்ணா மலையனை வாழ்த்த
இலைதுயர் நெஞ்சே இறைமற வாதே.



அலைக் கிடந்தோன் - கடலில் துயிலும் திருமால்;
அலர் மிசையோன் - தாமரைப் பூவின்மீது இருக்கும் பிரமன்;
அலகு இலா - அளவு இல்லாத;
இலை துயர் - துயர் இல்லை;
(அப்பர் தேவாரம் - 5.95.11 - "செங்கணானும் பிரமனும் தம்முளே எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார்..")



5)
உலகுகள் தாண்டி உயர்கிற சோதி
நிலமகழ் மால்நான் முகன்இவர் நேடி
அலந்திடும் அண்ணா மலையனை வாழ்த்த
இலைஇடர் நெஞ்சே இறைமற வாதே.



நிலம் அகழ் - நிலத்தை அகழ்ந்த;
நான்முகன் - பிரமன்;
நேடுதல் - தேடுதல்;
அலத்தல் - துன்பமுறுதல்;



6)
திருமகள் கேள்வன் திசைமுகன் தேடி
வருந்திடு மாறு வளர்எரி ஆன
அருமணி அண்ணா மலையனை வாழ்த்த
வரும்புகழ் நெஞ்சே இறைமற வாதே.



கேள்வன் - நாயகன்; கணவன்;
திசைமுகன் - பிரமன்;
வளர் எரி - வளர்கிற தீ;
(சம்பந்தர் தேவாரம் - 3.75.9 - "நீலவரை ... மாலுமல ரானுமறி யாமைவளர் தீயுருவ மானவரதன் ...");
அருமணி - அரிய மணி போன்ற;
(சம்பந்தர் தேவாரம் - 3.105.6 -
துறைவளர் கேதகை மீதுவாசஞ் சூழ்வான் மலிதென்றல்
கறைவள ருங்கடல் ஓதமென்றுங் கலிக்குங் கலிக்காமூர்
மறைவள ரும்பொருள் ஆயினானை மனத்தால் நினைந்தேத்த
நிறைவள ரும்புகழ் எய்தும்வாதை நினையா வினைபோமே
----- சிவபெருமானை மனத்தால் நினைந்து போற்ற எக்காலத்தும் அழியாத புகழ் வந்து சேரும். துன்பம் வந்து சேர நினையாது. அத்துன்பத்திற்குக் காரணமான வினைகளும் நீங்கும்.);



7)
அரவணை யானும் அலரவன் தானும்
அரண்டடி போற்ற அழலுரு ஆன
அரன்தனை அண்ணா மலையனை வாழ்த்த
வரம்மிக ஈவான் இறைமற வாதே.



அரவு அணையான் - பாம்புப் படுக்கை மேல் பள்ளிகொள்ளும் விஷ்ணு;
அலரவன் - தாமரை மலர் மேல் இருக்கும் பிரமன்;
அரள்தல் - துணுக்குறுதல் (to be startled, struck with fear, shocked);
அழல் உரு - சோதி வடிவம்;


(சம்பந்தர் தேவாரம் - 1.47.9 -
"மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே ....");



8)
அரக்கனை அன்று நெரித்தருள் வோனைப்
பரமெவர் என்று முரணியோர் காணா
வரையிலா அண்ணா மலையனை வாழ்த்த
இரங்குவான் நெஞ்சே இறைமற வாதே.



அரக்கன் - இராவணன்;
முரணுதல் - மாறுபடுதல் (to be opposed; to disagree, differ; to be discordant; to be in contrast);
பரம் எவர் என்று முரணியோர் = தங்கள் இருவருள் எவர் பரம்பொருள் என்று வாதிட்ட திருமால், பிரமன்;
வரை இலா - அளவு இல்லாத; எல்லை அற்ற;
இரங்குதல் - கருணைசெய்தல்; அருள்புரிதல்;
"அண்ணா மலையனை வாழ்த்த இரங்குவான்" - "அவன் இரங்குவான்" என்பதில் "அவன்" என்பது தொக்கு நிற்கிறது.



9)
மறையவ னோடு மணிவணன் தேடிப்
பறந்தகழ்ந் தோடிப் பணிசுட ரோனை
அறவனை அண்ணா மலையனை வாழ்த்தி
இறைஞ்சிடு நெஞ்சே இறைமற வாதே.



மறையவன் - பிரமன்;
மணிவணன் - மணிவண்ணன் - விஷ்ணு (Vishnu, as sapphire-colored);
பணி சுடரோன் - பணிந்த சோதியை;
அறவன் - அற வடிவினன்; (தர்மரூபி);
வாழ்த்துதல் - துதித்தல்;
இறைஞ்சுதல் - வணங்குதல்;



10)
புறவழி யோர்சொல் புறனுரை எல்லாம்
அறவுரை அல்ல அரும்பெரும் சோதி
மறைமொழி அண்ணா மலையனை வாழ்த்தி
நிறைமகிழ் வெய்தி நிலைபெற லாமே.



புறனுரை - பழிச்சொல் (slander); வெற்றுரை (meaningless utterance);
அறவுரை - தருமோபதேசம்;
மறை - வேதம்;
நிறை மகிழ்வு - நிறைந்த மகிழ்ச்சி;
நிலைபெறுதல் - துன்பமற்றநிலையை அடைதல்;
(திருவாசகம் - திருவெம்பாவை - 1 - "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை")



11)
தருக்கிய மாலும் தாமரை யானும்
செருக்கறு மாறு செந்தழ லாய்நீள்
உருக்கொளும் அண்ணா மலையனை ஓதக்
கருக்கெடும் நெஞ்சே கணம்மற வாதே.



தருக்குதல் - அகங்காரம் கொள்ளுதல்;
செருக்கு - ஆணவம்;
செந்தழல் ஆய் நீள் உரு - ஒளிப்பிழம்பு ஆகி அளவின்றி நீண்ட வடிவம்;;
உருக்கொள்ளுதல் - வடிவெடுத்தல் (to take shape);
ஓதுதல் - பாடுதல்;
கருக் கெடும் - பிறவித்தொடர் அழியும்; (கரு - பிறப்பு)
கணம் - கணமும் - உம்மைத்தொகை - நொடிப்பொழுதும்;



அன்புடன்,

வி. சுப்பிரமணியன் 

No comments:

Post a Comment