Thursday, July 30, 2015

01.33 – பொது

01.33பொது



2008-06-21
பொது
-----------------
(ஆசிரிய இணைக்குறட்டுறை)
(1,3 அடிகளில் 4 சீர்களும், 2,4 அடிகளில் 3 சீர்களும் உள்ள அமைப்பு).
(சம்பந்தர் தேவாரம் - திருமுறை 1.58.5 - "பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்")



1)
முந்தைச் செய்வினை முற்றிலும் விட்டிடச்
சிந்தை செய்மட நெஞ்சமே,
வந்த காலனே மாளுமா(று) ஓர்உதை
தந்த சேவடி தன்னையே.



உதை தந்த சேவடி தன்னை - உதை கொடுத்த சிவந்த திருவடியை;
குறிப்பு: மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்த வரலாற்றைச் சுட்டியது.



2)
பாயும் காவிரிப் பக்கமோர் பக்தையின்
தாயும் ஆனவன், தன்னடி
ஆயும் அன்பருக்(கு) அன்பனை, நித்தலும்
நீயும் எண்ணுவாய் நெஞ்சமே.



பக்கம் - அருகு; இடம்; தேசம்;
ஓர்தல் - எண்ணுதல்; ஆராய்தல்;
ஓர் பக்தை - ஒரு பக்தை; / தியானிக்கும் பக்தை;
நித்தலும் - தினம்தோறும்;
குறிப்பு: திருச்சிக்கு அருகில் பக்தைக்காகத் தாய் உருவில் வந்து பிரசவம் பார்த்த வரலாற்றைச் சுட்டியது.



3)
இங்(கு)இன் புற்றிட, எண்ணுவாய் நெஞ்சமே,
செங்கல் பொன்னெனச் செய்பவன்,
பங்கில் இன்மொழிப் பாவையைக் கொண்டநம்
சங்க ரன்மலர்த் தாளையே.



இங்கு - இவ்வுலகில்;
பங்கில் இன்மொழிப் பாவையைக் கொண்ட - இனியமொழி பேசும் பார்வதியை ஒரு கூறாக உடைய;
சங்கரன் - நன்மை செய்பவன்;
குறிப்பு: திருப்புகலூரில், சுந்தரர் தலையணையாக வைத்திருந்த செங்கற்கள் பொன்னாக மாறிய வரலாற்றைச் சுட்டியது. சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.34.1 - "தம்மையே புகழந்து..."



4)
கலங்கும் நெஞ்சமே காணலாம் இன்பமே,
இலங்கும் வெண்பிறை சூடிய
நலம்செய் நாதனின் கோயிலை நாள்தொறும்
வலம்செய்(து) அன்பொடு வாழ்த்தவே.



இலங்குதல் - பிரகாசித்தல்;
நலம் செய் நாதன் - சங்கரன்;
அன்பு - பக்தி;



5)
கரிமு கத்தனைக் கந்தனைப் பெற்றவன்,
திரியும் முப்புரம் செற்றவன்,
பரிவொ(டு) ஆட்செயும் பத்தருக்(கு) உற்றவன்,
எரிவண் ணன்கழல் ஏத்துமே.



கரி முகத்தன் - ஆனை முகத்தன் - பிள்ளையார்;
செற்றவன் - அழித்தவன்;
பரிவு - அன்பு; பக்தி;
ஆட்செய்தல் - தொண்டுசெய்தல்;
உற்றவன் - சுற்றம்/நண்பன் - துணையாக இருப்பவன்;
எரி வண்ணன் - தீவண்ணன் - தீயைப் போன்ற நிறம் உடைவன் - சிவந்த மேனி உடைய சிவன்;
ஏத்தும் - ஏத்துங்கள் - துதியுங்கள்;



6)
பூவின் மாலைகள் போல்நிதம் செந்தமிழ்ப்
பாவின் மாலைகள் பாடுவார்
தீவி னைத்துயர் தீர்சிவன் தாள்நினை
நீவி ரும்பிஎன் நெஞ்சமே.



உரைநடை: "என் நெஞ்சமே, நீ விரும்பி நினை - பூவின் மாலைகள் ... தீர் சிவன் தாள்"


பாடுவார் தீவினைத்துயர் தீர்சிவன் - பாடுகிறவர்களுடைய தீவினை ஆகிய துன்பத்தைத் தீர்க்கும் சிவன்;



7)
கங்கை நாயகா, கண்ணுதல் ஈசனே,
திங்கள் சூடியே, தேவனே,
எங்கள் நாதனே, என்(று)அடி போற்றுவார்
தங்கள் மேல்வினை தங்குமோ.



மேல் வினை - முன்னை வினைகளாகிய சஞ்சிதமும், இப்பிறப்பில் ஈட்டப்படுகின்ற, இனி ஈட்டப்படுவதாகிய ஆகாமிய வினையும்;
அடி போற்றுவார் தங்கள் மேல் வினை தங்குமோ - திருவடியைத் தொழும் பக்தர்களது வினைகள் தங்காது அழியும்.



8)
மலையை ஆட்டுமி லங்கையர் மன்னனின்
தலைகள் பத்தையும் தாள்விரல்
மலர்போல் வைத்துநெ ரித்தவன் அன்பருக்(கு)
இலையே தீவினை இன்னலே.



மலையை ஆட்டும் இலங்கையர் மன்னனின் தலலகள் பத்தையும் - கயிலையைப் பெயர்க்க எண்ணி ஆட்டிய இராவணனின் பத்துத் தலைகளையும்;
தாள்விரல் மலர்போல் வைத்து நெரித்தவன் - தனது திருவடியின் விரல் ஒன்றை மலரைப் போல மென்மையாக வைத்து நசுக்கியவன்;
அன்பருக்(கு) இலையே தீவினை இன்னலே - (அச்சிவனின்) பக்தர்களுக்குத் தீவினைத் துன்பம் இல்லை.



9)
கழலாத் தீவினைக் கட்டுகள் விட்டிடக்
கழறாய் நெஞ்சமே கண்ணனும்
கழலார் சேவடி காண்கிலா வண்ணமோர்
தழலாய் நின்றவன் தன்னையே.



கழலுதல் - நீங்குதல்; நெகிழ்தல்;
கழறுதல் - சொல்லுதல்;
கழல் ஆர் சேவடி - கழல் பொருந்திய சிவந்த திருவடி;
தழல் - நெருப்பு;



10)
பாங்கில் லாமொழிப் பாவியர் பொய்களை
நீங்கிப், போற்றுவோம் நித்தலும்,
ஆங்குச் சென்னிமேல் ஆற்றுடன் திங்களைத்
தாங்கி னான்மலர்த் தாளையே.



பாங்கு இல்லா - நன்மையற்ற; பொருந்தாத;
நீங்குதல் - விலகிச்செல்லுதல்;
சென்னி - தலை;



11)
உய்ய வேண்டில்நீ உள்ளுவாய் நெஞ்சமே,
வையம் ஆளவும் வைத்திடும்
ஐயன், அன்(பு)உரு ஆனவன், பாதிஓர்
தையல் தாங்கினான் தாளையே.



உள்ளுதல் - நினைத்தல்;
வையம் - உலகம்;
பாதி ஓர் தையல் தாங்கினான் - அர்த்தநாரீஸ்வரன்;


(திருநாவுக்கரசர் தேவாரம் - திருமுறை 5.60.7 -
"ஐயனே அரனே என்று அரற்றினால்
உய்யலாம் உலகத்தவர் பேணுவர்
செய்ய பாதம் இரண்டும் நினையவே
வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே")



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பாடல்கள் ஓரளவு "திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பை ஒத்தன – ஆனால், திருமுக்காலுக்கும் இவற்றுக்கும் சில வித்தியாசங்கள்:
1) முதற்சீர் 'தான' என்று வரும் (திருமுக்காலில் முதற்சீர் தானன என்று வரும்);
2) இரண்டாம், மூன்றாம் அடிகள் மடக்கு இன்றி வருவன. (திருமுக்காலில் 2-ஆம் அடி அப்படியே 3-ஆம் அடியில் மீண்டும் வரும்);



இவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறை". என்று கருதலாம். (முதல் அடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடி).
(1,3 அடிகளில் 4 சீர்களும், 2,4 அடிகளில் முச்சீரும் உள்ள அமைப்பு.
மா + 3 கூவிளம்
மா + 2 கூவிளம்
மா + 3 கூவிளம்
மா + 2 கூவிளம்
என்ற அமைப்பு)



(சம்பந்தர் தேவாரம் - திருமுறை 1.58.5 -
பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்
விண்ணி னார்மதில் எய்தமுக்
கண்ணி னான்உறை யும்கர வீரத்தை
நண்ணு வார்வினை நாசமே.)



No comments:

Post a Comment