Thursday, July 30, 2015

01.31 – பொது - (திருமுக்கால்)

01.31பொது - (திருமுக்கால்)



2008-05-07
பொது
---------------
(12 பாடல்கள்)
(திருமுக்கால் அமைப்பில்)
(திருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.97.1 - 'திடமலி மதிளணி சிறுகுடி மேவிய')



1)
கொல்லையில் கிளிகளும் மறைபயில் குளிர்நகர்
தில்லையில் திருநடத் தீரே
தில்லையில் திருநடத் தீருமைத் தெளிபவர்க்(கு)
எல்லையில் இன்பமும் எளிதே.



கொல்லை - தோட்டம்; முல்லைநிலம்;
மறை - வேதம்;
பயிலுதல் - சொல்லுதல் (to speak, utter, tell, talk); ஒலித்தல் (to utter indistinct sounds, as birds; to sound); கற்றல்;
குளிர்நகர் - வினைத்தொகை - குளிர்ந்த நகரம்; (குளிர்தல் - குளிர்ச்சியுறுதல் (to be cool, refreshing); கண்முதலிய பொறிகளுக்கு இனியதாதல் (to be pleasant to the sense of touch, sight or hearing); )
தெளிதல் - ஆராய்தல் (to consider, investigate); அறிதல் (to know, understand, perceive, experience);
எல்லை இல் - அளவு இல்லாத;
(சம்பந்தர் தேவாரம் - திருமுறை 2.61.2 -
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப்
பாதம் பன்னாள் பணியும் அடியார் தங்கள்மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
வேதத்(து) ஒலியால் கிளிசொல் பயிலும் வெண்காடே. )


(திருமுறை 9.20.3 - கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா -
"முத்தீயாளர் .... ஓதிய நான்மறையைத்
தெத்தே என்று வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள் ...")



2)
கருப்புவில் லொடுவரும் காமனை எரிக்கிற
நெருப்புமிழ் கண்ணுடை யீரே
நெருப்புமிழ் கண்ணுடை யீருமை நித்தலும்
விருப்பொடு தொழவினை விடுமே



கருப்பு வில் - கரும்பினால் ஆன வில்;
நித்தலும் - நாள்தோறும்;



3)
பாலன தாருயிர் பறித்திட வருகிற
காலனை உதைத்தருள் வீரே
காலனை உதைத்தருள் வீருமைக் கைதொழும்
சீலருக் கிடர்இலை திடமே.



பாலனது ஆருயிர் - மார்க்கண்டேயரது உயிர்;



4)
திங்களும் அரவமும் திகழ்கிற சடையினில்
கங்கையைக் கரந்தருள் வீரே
கங்கையைக் கரந்தருள் வீருமைக் கருதிட
மங்கிடும் பழவினை மலையே.



அரவம் - பாம்பு;
கரத்தல் - மறைத்தல்; ஒளித்தல்; கொடாது இருத்தல்;
கருதுதல் - எண்ணுதல்; விரும்புதல்;
மங்குதல் - கெடுதல் (to decay; to be ruined);



5)
அப்பெருஞ் சிலைதனில் அழல்திகழ் கணைகொடு
முப்புரங் களைஎரித் தீரே
முப்புரங் களைஎரித் தீருமை மொழிபவர்
எப்பழி இடர்களும் இலரே



அப்பெருஞ் சிலைதனில் - அந்தப் பெரிய மலையாகிய வில்லில்; (சிலை – மலை; வில்);
அழல் திகழ் கணைகொடு - நெருப்புத் திகழ்கின்ற அம்பால்;



6)
கானினை நடமிடும் களமெனக் கொண்டொரு
மானினைக் கரமுடை யீரே
மானினைக் கரமுடை யீருமை வணங்கிட
வானினை ஆள்நிலை வருமே



கான் - சுடுகாடு;
களம் - இடம்; சபை;
வான் - வானுலகம்;



7)
படையென மழுவினைப் பற்றிய கரத்தொடு
விடையினில் எழுந்தருள் வீரே
விடையினில் எழுந்தருள் வீருமை விரும்புவார்க்(கு)
இடர்தரும் இருவினை இறுமே.



படை - ஆயுதம்;
விடை - இடபம்; எருது;
இறுதல் - அழிதல்;



8)
இருவரை எடுக்கிற இலங்கையன் செருக்கற
ஒருவிரல் கொடுநெரித் தீரே
ஒருவிரல் கொடுநெரித் தீருமை உள்கிட
அருவினைத் தொடருடன் அறுமே.



இரு வரை - பெரிய மலை - கயிலை மலை;
செருக்கு அற - கர்வம் அழிய;
ஒரு விரல்கொடு - ஒரு விரலால்; (கொடு - கொண்டு);
உள்குதல் - உள்ளுதல் - நினைதல்;
உடன் அறும் - உடனே அற்றுவிடும்;



9)
நான்முகன் மாலிவர் நாணிட எரியென
வான்கடந் தன்றுயர்ந் தீரே
வான்கடந் தன்றுயர்ந் தீருமை வாழ்த்திட
மேன்மையும் வெற்றியும் மிகுமே.



மால் - திருமால்;
எரி - தீ;
வான் கடந்து அன்று உயர்ந்தீர் - அண்டங்களையெல்லாம் தாண்டி ஓங்கினீர்;



10)
பொய்களில் புரள்கிற புல்லருக் கரியராய்
ஐவகைத் தொழில்புரி வீரே
ஐவகைத் தொழில்புரி வீருமை அடைந்தவர்
உய்வகை தனில்நிலை உளரே.



புல்லன் - அறிவீனன் (ignorant person); இழிந்தவன்;
அரியர் - அடைய இயலாதவர்;
ஐவகைத் தொழில் - பஞ்சகிருத்தியம் - சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரகம் என்ற கடவுளின் ஐந்தொழில்;
அடைதல் - சரண்புகுதல்;
உய் வகை - உய்யும் உபாயம்;


(அப்பர் தேவாரம் - திருமுறை 4.66.7 -
"வஞ்சகர்க்(கு) அரியர் போலும் மருவினோர்க்(கு) எளியர் போலும்" )



11)
சிரமலி மாலையைத் திருமுடி மிசைஅணிந்(து)
அரையினில் அரவசைத் தீரே
அரையினில் அரவசைத் தீருமை அனுதினம்
உரைசெய நலமிக உறுமே.



சிரம் மலி மாலையைத் திருமுடிமிசை அணிந்து - தலைக்குத் தலைமாலை (மண்டையோடுகளால் ஆன மாலை) அணிந்து;
அரையினில் அரவு அசைத்தீரே - அரையில் பாம்பைக் கட்டியவரே; (அசைத்தல் - கட்டுதல்);
அரையினில் அரவு அசைத்தீர் உம்மை அனுதினம் உரைசெய நலம் மிக உறுமே - இடுப்பில் பாம்பைக் கட்டிய்யிருக்கும் உங்களைத் தினந்தோறும் துதித்தால் நன்மைகள் மிகும்; (உறுதல் - அடைதல்; பெறுதல்);


(சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.4.1 -
"தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே"
சிவபிரான், தலைமாலையை மார்பில் அணிதலே அன்றித் தலையிலும் அணிந்துள்ளான். இது தலையில் அணியும் உருத்திராக்கம் போல்வதாம்.)



12)
கமழலர்க் கணைதொடு காமனைக் காய்ந்துகந்(து)
உமையொரு கூறுடை யீரே
உமையொரு கூறுடை யீருமை ஓதிட
அமருல காளலாம் அவரே.



கமழ் அலர்க்கணை தொடு காமனைக் காய்ந்து உகந்து உமை ரு கூறு டையீரே - வாச மலர்க்கணை தொடுத்த மன்மதனை எரித்து, விரும்பி உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே;
அமருலகு - அமரர் உலகு அமருலகு ஆயிற்று.
(சம்பந்தர் தேவாரம் - 1.63.12 - “...பல்பெயர்ப் பத்தும்வல்லார்க்(கு) அடையாவினைகள் உலகில்நாளும் அமருல(கு) ஆள்பவரே”);



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பாடல்கள் தேவாரத்தில் திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பில் உள்ளன. இவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறை". என்று கருதலாம். (முதல் அடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடி).



திருமுக்கால் பாடல் அடிகளின் அமைப்பு:
தானன தானன தானன தானன
தானன தானன தானா
தானன தானன தானன தானன
தானன தானன தானா



தானன வரும் இடத்தில் தனதன வரலாம். அதேபோல் தானா வரும் இடத்தில் தனனா வரலாம்.
தானன / தனதன – இச்சீர்கள் எல்லாம் குறில் / குறில்+ஒற்று என்ற ஒலியில் முடியும்.
1, 3-ஆம் அடிகளின் ஈற்றில் உள்ள தானன என்பது தானனா என்றும் ஒரோவழி (சில சமயம்) வரலாம்.



இப்பாடல்களில் இரண்டாம் அடி மீண்டும் மூன்றாம் அடியில் வரும். (இடைமடக்கு).



(சம்பந்தர் தேவாரம் - 3.97.1 - (திருமுக்கால்) -
திடமலி மதிளணி சிறுகுடி மேவிய
படமலி யரவுடை யீரே
படமலி யரவுடை யீருமைப் பணிபவர்
அடைவது மமருல கதுவே

)

1 comment: