Sunday, July 5, 2015

01.13 – பொது - "வேண்டுவன அருள்வான்"


01.
13
பொது - "வேண்டுவ ருள்வான்"



2007-12-10
பொது
வேண்டுவ தந்து அருள்வான்
------------------------------------------------------------
(அறுசீர் விருத்தம் - திருவிராகம் அமைப்பு - "தானதன தானதன தானதன தானதன தான தனனா" என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 3.71.1 - "கோழைமிட றாககவி கோளுமில வாகவிசை கூடும்வகையால்”)

1)
பாவையொரு பாதியென ஆகமகிழ் கோலமுள பண்பனுலகம்
யாவையுமு னாக்கியவன் ஈற்றினிலொ டுக்குபவன் அன்புமிகவே
சேவைபல செய்துநித முப்பொழுது நாமநினை சிந்தையுருகிச்
சேவடியை வாழ்த்துபவர் வேண்டுவ தந்தருள்செய் செல்வனவனே.



பதம் பிரித்து:
பாவை ஒரு பாதி என ஆகம் மகிழ் கோலம் உள பண்பன்; உலகம்
யாவையும் முன் ஆக்கியவன்; ஈற்றினில் ஒடுக்குபவன்; அன்பு மிகவே
சேவை பல செய்து நிதம் முப் பொழுதும் நாமம் நினை சிந்தை உருகிச்
சேவடியை வாழ்த்துபவர் வேண்டுவன தந்து அருள்செய் செல்வன் அவனே.


பாவை ஒரு பாதி என ஆகம் மகிழ் கோலம் உள பண்பன் - தன் திருமேனியில் உமையை ஒரு பாதி என விரும்பும் கோலம் உடைய குணம் உடையவன்; (ஆகம் - மேனி; மகிழ்தல் - விரும்புதல்; பண்பன் - குணம் உடையவன்);
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.42.7 - “பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்”);
நிதம் முப் பொழுதும் நாமம் நினை சிந்தை உருகிச் சேவடியை வாழ்த்துபவர் - நாள்தோறும் காலை நண்பகல் மாலை என்ற மூன்று வேளையிலும் திருநாமத்தை எண்ணுகின்ற மனம் உருகி, ஈசனின் சிவந்த திருவடியை வாழ்த்துகின்றவர்கள்;



2)
பன்னியடி பாடியவர் வாழநமன் மாளவொரு பாதமதனால்
முன்னமுதை செய்தபெரு மானுலகெ ரிக்குமென மூண்டவிடமே
இன்னமுதம் ஒத்ததென உண்டமணி கண்டனெரு தேறிவருவான்
பொன்னடியை வாழ்த்துபவர் வேண்டுவ தந்தருள்செய் புன்சடையனே.



பதம் பிரித்து:
பன்னி அடி பாடியவர் வாழ, நமன் மாள ஒரு பாதம் அதனால்
முன்னம் உதை செய்த பெருமான்; உலகு எரிக்கும் என மூண்ட விடமே
இன் அமுதம் ஒத்தது என உண்ட மணிகண்டன்; எருது ஏறி வருவான்
பொன் அடியை வாழ்த்துபவர் வேண்டுவ தந்து அருள்செய் புன் சடையனே.


பன்னி அடி பாடியவர் வாழ – மார்க்கண்டேயர் இறவாது வாழ; (பன்னுதல் - புகழ்தல்);
நமன் மாள ஒரு பாதம் அதனால் முன்னம் உதை செய்த பெருமான் - எமனே மடியுமாறு ஒரு பாதத்தால் அவனை முன்பு உதைத்த பெருமான்;
மணிகண்டன் - நீலகண்டன்;
புன்சடையன் - சஞ்சடை உடையவன்;



3)
வானவர்கள் வாழவிடம் உண்வனை வந்தனைசெய் மாணிவெருவ
ஆனதுன தாயுளென மேதிமிசை ஏறிவரும் அந்தகனுயிர்
தானழிய மார்பிலுதை மைந்தனெரு தேறிபுகழ் சந்தமிகுபாத்
தேனையுரை செய்கிறவர் வேண்டுவ தந்தருள்செய் செல்வனவனே.



பதம் பிரித்து:
வானவர்கள் வாழ விடம் உண்வனை வந்தனை செய் மாணி வெருவ
"ஆனது உனது ஆயுள்" என மேதிமிசை ஏறி வரும் அந்தகன் உயிர்
தான் அழிய மார்பில் உதை மைந்தன்; ருது ஏறி புகழ் சந்தம் மிகு பாத்
தேனை உரை செய்கிறவர் வேண்டுவ தந்து அருள்செய் செல்வன் அவனே.


வானவர்கள் வாழ விடம் உண்வனை வந்தனை செய் மாணி வெருவதேவர்கள் வாழ்வதற்காக விடத்தை உண்ட சிவபெருமானைப் போற்றிய மார்க்கண்டேயர் அஞ்சும்படி;
"ஆனது உனது ஆயுள்" என மேதிமிசை ஏறி வரும் அந்தகன் உயிர் தான் அழிய மார்பில் உதை மைந்தன் - “உன் ஆயுள் முடிந்தது" என்று சொல்லி எருமை வாகனத்தின்மேல் ஏறி வந்த யமனுடைய உயிரே அழியும்படி அவன் மார்பில் உதைத்த வீரன்;
ருது ஏறி புகழ் சந்தம் மிகு பாத் தேனை உரை செய்கிறவர் வேண்டுவ தந்து அருள்செய் செல்வன் அவனே - இடப வாகனனாகிய அவனைப் புகழ்கின்ற சந்தம் மிகுந்த தேன் போன்று இனிக்கும் தமிழ்ப்பாமாலைகளைச் சொல்லும் அடியவர்கள் வேண்டும் அனைத்தையும் தந்து அருளும் செல்வன் அப்பெருமான்;


வெருவுதல் - அஞ்சுதல் - To be afraid of; to be alarmed, frightened or startled;
மேதி - எருமை;
அந்தகன் - எமன்;
சந்தம் - அழகு; செய்யுளின் வண்ணம் (musical flow, rhythmic movement of verse);



4)
போதரவு துண்டமதி சூடிநடம் ஆடுகிற போதவடிவன்
வேதமுரை நாதனதி ஓடுகிற தாழ்சடையன் மேனியதனில்
மாதரையன் மாறுநிலை ஏதுமிலன் மாசுமிலன் வாழ்கவெனவே
பாதமலர் போற்றுபவர் வேண்டுவ தந்தருள்செய் பண்பனவனே.



பதம் பிரித்து:
போது, அரவு, துண்ட மதி சூடி நடம் ஆடுகிற போத வடிவன்;
வேதம் உரை நாதன்; நதி ஓடுகிற தாழ் சடையன்; மேனி அதனில்
மாது அரையன்; மாறு நிலை ஏதும் இலன்; மாசும் இலன்; "வாழ்க" எனவே
பாத மலர் போற்றுபவர் வேண்டுவ தந்து அருள்செய் பண்பன் அவனே.


போது - பூ;
அரவு - பாம்பு;
துண்ட மதி - துண்டாகிய சந்திரன் - பிறைச்சந்திரன்;
சூடி - சூடியவன்; சூடிக்கொண்டு என்றும் பொருள்கொள்ளலாம்;
போத வடிவன் - ஞானமே உரு ஆனவன்;
மேனி அதனில் மாது அரையன் - திருமேனியில் பாதியாகப் பார்வதியை உடையவன்;
மாறு நிலை ஏதும் இலன் - என்றும் மாறாது இருப்பவன்;
மாசும் இலன் - குற்றங்கள் இல்லாதவன்;
பாத மலர் - திருவடித் தாமரை;
பண்பன் - பண்பு உடையவன்;



5)
எக்கணமும் அந்தம்வரும் என்பதனை எண்ணிவிடை ஏறிகழலே
அக்கொடிய காலனிடர் வெல்லவொரு நல்லவழி ஆகுமெனவோர்
கொக்கிறகு கோலமதி வெள்ளமிகு கங்கையணி கோனைமிகவே
நெக்குருகி வாழ்த்துபவர் வேண்டுவ தந்தருள்செய் நேசனவனே.



பதம் பிரித்து:
எக் கணமும் அந்தம் வரும் என்பதனை எண்ணி, விடைஏறி கழலே
அக் கொடிய காலன் இடர் வெல்ல ஒரு நல்ல வழி ஆகும் என, ஓர்
கொக்கு இறகு, கோல மதி, வெள்ளம் மிகு கங்கை அணி கோனை மிகவே
நெக்குருகி வாழ்த்துபவர் வேண்டுவ தந்து அருள்செய் நேசன் அவனே.


எக் கணமும் - எந்நேரமும்;
அந்தம் - முடிவு; சாவு;
விடை ஏறி - இடபவாகனன்;
ஓர் கொக்கு இறகு, கோல மதி, வெள்ளம் மிகு கங்கை அணி கோனை - ஒரு கொக்கின் இறகு, அழகிய சந்திரன், கங்கை இவற்றை அணிகிற தலைவன் ஆன சிவனை;
(கொக்குவடிவில் இருந்ததால் 'குரண்டன்' எனப் பெயர்பெற்ற அசுரனை அழித்து, அவ்வடையாளமாக அவன் இறகைத் தலையிற் சிவபெருமான் அணிந்தான் என்பது புராணவரலாறு);
நெக்குருகி - நெகிழ்ந்து உருகி;
நேசன் - அன்புடையவன்;



6)
ஓடிமிகு காசதனை ஆசையொடு தேடியிடர் உற்றுமிகவே
வாடியுழல் மூடமன மேஅரனை எண்ணிவிடு வானவரெலாம்
கூடியழு தோலமென நஞ்சுதனை உண்டுகறை கொண்டமிடறன்
பாடியடி போற்றுபவர் வேண்டுவன தந்தருள்செய் பண்பனவனே.



பதம் பிரித்து:
ஓடி மிகு காசு அதனை ஆசையொடு தேடி இடர் உற்று, மிகவே
வாடி உழல் மூட மனமே; அரனை எண்ணிவிடு; வானவர் எலாம்
கூடி அழுது ஓலம் என, நஞ்சுதனை உண்டு கறைகொண்ட மிடன்;
பாடி அடி போற்றுபவர் வேண்டுவ தந்து அருள்செய் பண்பன் அனே.


ஓலம் - அபயம்வேண்டுங் குறிப்பு மொழி (Cry of lamentation, appeal; exclamation entreating succour in distress);
கறைகொண்ட மிடன் - நீலகண்டன்; (மிடன் - மிடற்றன் என்பது ஓசைக்காக இடைக்குறையாக வந்தது);



7)
நீதிநெறி தன்னைநினை யாதுநிதம் மேனிவளர் நேசமதனால்
தீதினைவி டாதுபுரி மூடமன மேவினைகள் தீரநினையாய்
காதிலொரு தோடணியும் ஈசவென நாளுமிகு காதலுடனே
ஓதியடி போற்றுபவர் வேண்டுவன தந்தருள்செய் உம்பனவனே.



பதம் பிரித்து:
நீதிநெறிதன்னை நினையாது நிதம் மேனி வளர் நேசம் அதனால்
தீதினை விடாது புரி மூட மனமே; வினைகள் தீர நினையாய்;
"காதில் ஒரு தோடு அணியும் ஈச" என நாளும் மிகு காதலுடனே
ஓதி அடி போற்றுபவர் வேண்டுவ தந்து அருள்செய் உம்பன் அவனே.


மேதினி - பூமி;
அறம் மீறி - தர்மத்தைப் புறக்கணித்து;
நீதிநெறி - நல்லொழுக்கம (Morality, moral conduct);
நிதம் - தினமும்;
மேனி வளர் நேசம் அதனால் - உடலைப் போற்றும் ஆர்வத்தால்; (வளர்த்தல் - விருத்தியாக்குதல்; பரிபாலித்தல்);
தீதினை விடாது புரி மூட மனமே - பாவத்தை எப்போதும் செய்கின்ற பேதை மனமே;
ஈச – ஈசனே என்ற விளி;
நாளும் - தினந்தோறும்;
உம்பன் - தேவன்- சிவன்; (அப்பர் தேவாரம் - 4.71.6 - “... ஞால மேத்தும்
உம்பனை யும்பர் கோனை ...”);



8)
மாகயிலை வெற்பையெறி வேன்எனநி னைந்தவன வாய்களலற
ஏகவிர லால்முடிகள் பத்துநெரி ஈசனதி ஏற்றசடையன்
நாகமணி நாதனரு ஞானமுரை போதனுள நைந்துதினமும்
வார்கழலை வாழ்த்துபவர் வேண்டுவன தந்தருள்செய் வள்ளலவனே.



பதம் பிரித்து:
மா கயிலை வெற்பை றிவேன் என நினைந்தவன வாய்கள் அலற,
ஏக விரலால் முடிகள் பத்து நெரி ஈசன்; நதி ஏற்ற சடையன்;
நாகம் அணி நாதன்; அரு ஞானம் உரை போதன்; ம் நைந்து தினமும்
வார் கழலைப் போற்றுபவர் வேண்டுவ தந்து அருள்செய் வள்ளல் அவனே.


மா கயிலை வெற்பை எறிவேன் என நினைந்தவன வாய்கள் அலற - பெரிய கயிலைமலையை வீசி எறிவேன் என்று நினைந்த இராவணனுடைய வாய்கள் அலறும்படி; ('' – ஆறாம் வேற்றுமை உருபு; நினைந்தவன வாய்கள் - நினைத்தவனுடைய வாய்கள்);
ஏக விரலால் முடிகள் பத்து நெரி ஈசன் - ஒரு விரலால் அவன் பத்துத் தலைகளையும் நசுக்கிய இறைவன்; (ஏகம் - ஒன்று);
நதி ஏற்ற சடையன் - கங்கையை ஏற்ற சடையினன்;
நாகம் அணி நாதன் - பாம்பை அணியும் தலைவன்;
அரு ஞானம் உரை போதன் - சிறந்த ஞானத்தைப் போதிக்கும் ஞானவடிவன் - தட்சிணாமூர்த்தி; (போதம் - ஞானம்; அறிவு; போதன் - அறிபவன்);
வார் கழல் - நீண்ட கழல் அணிந்த திருவடி;



9)
தற்பெருமை பேசுமயன் மாலிவர்மு யன்றுமுடி தாளடைகிலா
அற்புதவ ளப்பரிய சோதியென நீண்டபரன் அன்புடையராய்
அற்பமென அண்டமென ஆனபெரு மான்புகழ்சொல் நற்றமிழினால்
பொற்பதம்வ ழுத்துபவர் வேண்டுவன தந்தருள்செய் பொங்கரவனே.



பதம் பிரித்து:
தற்பெருமை பேசும் அயன் மால் இவர் முயன்றும் முடி தாள் அடைகிலா
அற்புத அளப்பு அரிய சோதி ன நீண்ட பரன்; அன்பு உடையர் ஆய்,
அற்பம் என அண்டம் என ஆன பெருமான் புகழ் சொல் நற்றமிழினால்
பொன் பதம் வழுத்துபவர் வேண்டுவ தந்து அருள்செய் பொங்கு அரவனே.


அளப்பு அரிய சோதி - அளவு இல்லாத ஜோதி;
அன்பு உடையர் ஆய் - பக்தி உடையவர்கள் ஆகி;
அற்பம் என அண்டம் என ஆன பெருமான் புகழ் சொல் நற்றமிழினால் - மிக நுண்ணியனும் மிகப் பெரியவனும் ஆன சிவபெருமானுடைய புகழைப் பாடும் நல்ல தமிழாகிய தேவாரம் திருவாசகம் இவற்றால்;
பொற்பதம் வழுத்துபவர் வேண்டுவன தந்தருள்செய் - பொன்னடியை வாழ்த்துபவர்கள் வேண்டும் அனைத்தையும் தந்தருளும்; (வழுத்துதல் - வாழ்த்துதல்; துதித்தல்);
பொங்கு அரவன் - படம் எடுக்கும் பாம்பை அணிந்தவன்;



10)
ஆழ்குழியில் வீழ்வழியை மார்க்கமென எண்ணுபவர் அல்வழிகள்நம்
ஊழ்வினையை வெல்வழிகள் அல்லமறை நாலுமுரை ஓரிறைவன்நீர்
வீழ்சடையன் மாவரண மூன்றையெரி மேருமலை வில்லிகழல்கள்
வாழ்கவென வாழ்த்துபவர் வேண்டுவன தந்தருள்செய் வள்ளலவனே.



பதம் பிரித்து:
ஆழ்குழியில் வீழ் வழியை மார்க்கம் என எண்ணுபவர் அல் வழிகள் நம்
ஊழ்வினையை வெல் வழிகள் அல்ல; "மறை நாலும் உரை ஓர் இறைவன், நீர்
வீழ் சடையன், மா ரணம் மூன்றை ரி மேருமலை வில்லி கழல்கள்
வாழ்க" என வாழ்த்துபவர் வேண்டுவ தந்து அருள்செய் வள்ளல் அவனே.


ஆழ்குழி - ஆழமான குழி;
வீழ்வழி - வீழ்கிற வழி;
அல் வழி - நெறியல்லாத நெறி (wrong path);
மா அரணம் மூன்றை எரி மேருமலை வில்லி கழல்கள் வாழ்க – பெரிய முப்புரங்களை எரித்த மேருவில்லை ஏந்தியவன் திருவடிகள் வாழ்க;



11)
ஊடியொளி மாதரவர் மீதுநசை யால்தொடரும் ஊழ்வினைகளால்
கேடிழிவு நாடுகிற மூடமன மேநினைதி கீற்றுமதியன்
ஈடிலிய ராவையணி ஈசனுமை கூறனெரு தேறியிரவில்
ஆடியடி போற்றுபவர் வேண்டுவன தந்தருள்செய் அன்பனவனே.



பதம் பிரித்து:
ஊடி ஒளி மாதர் அவர் மீது சையால், தொடரும் ஊழ்வினைகளால்
கேடு இழிவு நாடுகிற மூட மனமே, நினைதி; கீற்று மதியன்,
ஈடு இலி, அராவை அணி ஈசன், உமை கூறன், எருது ஏறி, ரவில்
ஆடி அடி போற்றுபவர் வேண்டுவ தந்து அருள்செய் அன்பன் அவனே.


ஊடி ஒளி மாதர் - ஊடி ஒளித்துக்கொள்ளும் பெண்கள்;
நசை - ஆசை;
கேடு இழிவு நாடுகிற - கேட்டையும் இழிவையும் தேடுகின்ற;
மூட மனமே, நினைதி - பேதை நெஞ்சே, எண்ணுவாயாக; (நினைதி - நினைவாய்);
கீற்று மதியன் - திங்களின் துண்டத்தை அணிந்தவன்;
ஈடு இலி - ஒப்பு இல்லாதவன்;
அராவை அணி ஈசன் - பாம்பை அணியும் இறைவன்;
உமை கூறன் - பார்வதியை ஒரு பங்காக உடையவன்,
எருது ஏறி - எருதின்மேல் ஏறுபவன் - இடபவாகனன்;
ரவில் ஆடி - நள்ளிரவில் ஆடுபவன்;
அடி போற்றுபவர் வேண்டுவ தந்து அருள்செய் அன்பன் அவனே - திருவடியை வணங்குபவர்கள் வேண்டும் எல்லா வரங்களையும் கொடுத்து அருளும் அன்பு உடையவன் அப்பெருமான்.



அன்போடு,

வி. சுப்பிரமணியன் 

No comments:

Post a Comment