Sunday, July 5, 2015

01.16 – ஆரூர் - (திருவாரூர்)


01.16 –
ஆரூர் - (திருவாரூர்)



2008-01-01
திருவாரூர்
-------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)



1)
கண்ணிருந்தும் குருடனெனக் காலத்தைக் கழிப்பதற்கே
எண்ணுகிற என்மனமே; இருவிழியும் இல்லாது
மண்ணகழ்ந்து குளம்வெட்டி மகிழ்தண்டிக்(கு) எம்பெருமான்
தண்ணருள்செய் தலம்ஆரூர் தன்னையடைந்(து) உய்வாயே.



பதம் பிரித்து:
கண் இருந்தும் குருடன் எனக் காலத்தைக் கழிப்பதற்கே
எண்ணுகிற என் மனமே; இரு விழியும் இல்லாது
மண் அகழ்ந்து குளம் வெட்டி மகிழ் தண்டிக்கு எம்பெருமான்
தண் அருள்செய் தலம் ஆரூர்தன்னை அடைந்து உய்வாயே.


தண்டி - தண்டிடிகள் நாயனார்; (தண்டியடிகள் வரலாற்றைப் பெரிய புராணத்திற் காண்க);
தண் அருள் - குளிர்ந்த திருவருள்; (சம்பந்தர் தேவாரம் - திருமுறை 2.75.11 - 'கண்ணு மூன்று....தண்ணருள் பேணி....');
ஆரூர்தன்னை - திருவாரூரை;





2)
இளம்பெண்டிர் பொருள்இவற்றின் ஈர்ப்பினிலே உழன்றுழன்று
தளர்கின்ற மடநெஞ்சே; தன்கண்கள் காணாதும்
குளம்வெட்டும் தண்டிக்குக் கொன்றையணி முக்கண்ணன்
அளப்பரிய அருள்செய்த ஆரூரை அடைவாயே.



ஈர்ப்பு - இழுப்பு;
உழலுதல் - அலைதல்; நிலைகெடுதல்;
தளர்தல் - சோர்ந்து போதல்;
மட நெஞ்சே - பேதை மனமே;
தன்கண்கள் காணாதும் - தன்னுடைய கண்கள் பார்வையில்லாதபோதும்;
கொன்றை அணி முக்கண்ணன் - கொன்றை மலர் அணிகின், மூன்று கண்கள் உடைய சிவன்;
அளப்பு அரிய அருள் - அளவு இல்லாத அருள் - பேரருள்;



3)
புலனாசை மிகவாகிப் பொல்லாங்கே புரிந்துபெற்ற
பலன்யாது; கண்களிலே பார்க்கின்ற திறன்சிறிதும்
இலர்ஆன தண்டிசெய்த இறைபணியை ஏற்றுவிழி
நலம்ஆக்கும் ஈசனுறை நல்ஆரூர் அடைநெஞ்சே.



பதம் பிரித்து:
புலன் ஆசை மிக ஆகிப் பொல்லாங்கே புரிந்து பெற்ற
பலன் யாது; கண்களிலே பார்க்கின்ற திறன் சிறிதும்
இலர் ஆன தண்டி செய்த இறை பணியை ஏற்று, விழி
நலம் ஆக்கும் ஈசன் உறை நல் ஆரூர் அடை நெஞ்சே.


பொல்லாங்கு - தீமை; கேடு;
யாது - என்ன?
இறைபணி - திருத்தொண்டு;



4)
உயிர்வளர்க்கும் வழிஒன்றும் உணராமல் தீவினையாம்
பயிர்வளர்க்கும் மடநெஞ்சே; பலர்சிரித்தும் கண்ணின்றிக்
கயிறுகட்டிக் குளம்வெட்டிக் கைங்கரியம் செய்தண்டிக்(கு)
எயில்எரித்தான் அருள்புரிந்த இடம்ஆரூர் அடைவாயே.



உயிர் - ஆன்மா;
ஆம் - An appositional particle – ஆகிய;
கைங்கரியம் செய் தண்டிக்கு - திருத்தொண்டு செய்த ண்டியடிகளுக்கு;
எயில் எரித்தான் - முப்புரங்கள் எரித்த சிவன்;



5)
பெண்டிர்க்கும் பொருளுக்கும் பித்தாகி உடல்பெருக்கும்
உண்டிக்கே தினந்தோறும் உழல்கின்ற மடநெஞ்சே;
தண்டிக்குக் கண்ணிரண்டும் தந்தசிவன் உறைகின்ற
எண்டிக்கும் போற்றுகிற எழில்ஆரூர் அடைவாயே.



உண்டி - உணவு;
தண்டி - தண்டி அடிகள் நாயனார்;
எண்டிக்கும் - எண் திக்கும் - எட்டுத் திசைகளும் - உலக மக்கள் எல்லாம்;



6)
உய்கின்ற வழிஉணரா(து) ஓயாமல் உழன்றுழன்று
தொய்கின்ற மடநெஞ்சே; தொட்டுணர்ந்து குளம்வெட்டி
நைகின்ற தண்டிக்கு நம்பெருமான் இன்னருள்கள்
செய்கின்ற தலமான திருவாரூர் அடைவாயே.



தொய்கின்ற - சோர்கின்ற;
தொட்டு உணர்ந்து - பார்வை இல்லாததால் கயிற்றைத் தொட்டு உணர்ந்து செல்லுதல்;
நைகின்ற - மனம் உருகுகின்ற;
இன் அருள்கள் - இனிய அருள்கள்;
(அப்பர் தேவாரம் - திருமுறை 6.49.10 - 'கையாற் கயிலை யெடுத்தான் தன்னைக்..... மீண்டே அவற்குஅருள்கள் நல்கி னான்காண்....');



7)
அழிகின்ற உடல்மேலே ஆசையுற்றுத் தீவினைசெய்(து)
இழிகின்ற என்மனமே; இருவிழியும் இல்லாதும்
கழியூன்றிக் கைப்பணிசெய் தண்டியடி களுக்கருளும்
விழிமூன்று காட்டுசிவன் ஆரூரை விழைவாயே.



கழி ஊன்றி - கோலை நட்டு;
கைப்பணி - கையால் செய்யும் தொண்டு; (காரைக்கால் அம்மையார் - அற்புதத் திருவந்தாதி - 11.4.72 - “கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்”);
விழி மூன்று காட்டு சிவன் - மூன்று கண்கள் உடைய சிவன்;
விழைதல் - விரும்புதல்;



8)
விதிஎல்லாம் எளிதாக வென்றுவிடும் வழிஉண்டே
மதியில்லா இராவணனை மலையின்கீழ் நெரித்தவனே
கதிநீயே என்றிருந்த தண்டிக்குக் கண்தந்த
பதிஆகும் ஆரூர்போய்ப் பணிவாயே மடநெஞ்சே.



உரைநடை:
மட நெஞ்சே! விதி எல்லாம் எளிதாக வென்றுவிடும் வழி உண்டே;
'மதி இல்லா இராவணனை மலையின்கீழ் நெரித்தவனே! கதி நீயே!' என்று இருந்த தண்டிக்குக் கண் தந்த பதி ஆகும் ஆரூர் போய்ப் பணிவாயே.


பதி - தலம்;



9)
மண்ணுக்கும் விண்ணுக்கும் அப்பாலாய் மால்பிரமன்
கண்ணுக்குத் தெரியாத கழல்முடியை உடையசெந்தீ
வண்ணத்தன், வந்திக்கும் தண்டிக்கின் னருள்செய்த
அண்ணிக்கும் அரன்உறையும் ஆரூரை அடைநெஞ்சே.



செம் தீ வண்ணத்தன் - சிவந்த தீ உரு ஆனவன்;
வந்தித்தல் - போற்றுதல்;
அண்ணித்தல் - தித்தித்தல்;



மண்ணுக்கும் விண்ணுக்கும் அப்பால் ஆய் - எல்லா அண்டங்களையும் கடந்து நின்று;
மால் பிரமன் கண்ணுக்குத் தெரியாத கழல் முடியை உடைய செம் தீ வண்ணத்தன் - திருமாலாலும் பிரமனாலும் காண இயலாத திருவடியையும் திருமுடியையும் உடைய சிவந்த தீ உரு ஆனவன்;
வந்திக்கும் தண்டிக்கு இன் அருள்செய்த – வணங்கிய தண்டி அடிகளுக்கு இனிய அருள்புரிந்த;
அண்ணிக்கும் அரன் உறையும் ஆரூரை அடை நெஞ்சே - (பக்தர்களுக்குத்) தித்திக்கும் சிவன் உறைகிற திருவாரூரைச் சென்று அடை மனமே.



10)
மறைநெறியைத் துறந்தெங்கள் வழியேற்று வருகவென்னும்
புறநெறிகள் புகல்கின்ற பொய்களிலே மயங்காமல்
அறநெறியில் நிற்பவர்கள் அன்பன்தண் டிக்கருளும்
இறையவன்முக் கண்ணனுறை எழில்ஆரூர் எய்துவரே.



பதம் பிரித்து:
மறை நெறியைத் துறந்(து) எங்கள் வழி ஏற்று வருக என்னும்
புற நெறிகள் புகல்கின்ற பொய்களிலே மயங்காமல்
அற நெறியில் நிற்பவர்கள், அன்பன் தண்டிக்(கு) அருளும்
இறையவன் முக்கண்ணன் உறை எழில் ஆரூர் எய்துவரே.


மறை நெறி - வேதநெறி;
புற நெறி - பரசமயங்கள்;
அற நெறி - தர்ம மார்க்கம் (Path of virtue);
அன்பன் - பக்தன்;
எழில் ஆரூர் - அழகிய திருவாரூர்;
எய்துதல் - அடைதல்;



11)
நேர்வழியிற் செல்வதற்கு நினையா மடநெஞ்சே
நீர்வழியும் சடையுடைய நிமலன்தாள் போற்றிவந்த
பார்வையிலாப் பத்தன்தண் டிக்கருளும் பரமனுறை
ஊர்வளங்கள் மலிகின்ற ஆரூர்சென் றுய்வாயே.



பதம் பிரித்து:
நேர் வழியில் செல்வதற்கு நினையா மட நெஞ்சே;
நீர் வழியும் சடை உடைய நிமலன் தாள் போற்றி வந்த
பார்வை இலாப் பத்தன் தண்டிக்(கு) அருளும் பரமன் உறை
ஊர், வளங்கள் மலிகின்ற ஆரூர் சென்(று) உய்வாயே.


நிமலன் - மலம் இல்லாதவன் - சிவன்;
நினையாத – எண்ணாத;
தாள் - திருவடி;
பரமன் உறை ஊர் - வினைத்தொகை - பரமன் உறைகின் ஊர்;
மலிகின்ற - மிகுந்து இருக்கின்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:

திருவாரூர் - கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=598 )

No comments:

Post a Comment