Monday, July 6, 2015

01.25 – நாகேச்சரம் - போற்றி-3


01.25 –
நாகேச்ரம் - போற்றி-3



2008-03-07
திருநாகேச்ரம் - போற்றி-3 - (திருநாகேஸ்வரம்)
நாகவீச்சரவனே போற்றி
-------------------------------
(எண்சீர் விருத்தம் - "விளம் விளம் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு. 1-5 சீர்களில் மோனை)



1)
கடலினில் எழுவிடக் கண்டா போற்றி
.. காத்திடும் கருணைமா கடலே போற்றி
இடம்ஒரு கூறுமை ஏற்றாய் போற்றி
.. ஏற்றினில் வருகிற எந்தாய் போற்றி
உடல்எரி இடம்அதில் ஆடீ போற்றி
.. ஒன்றெனப் பலவென உள்ளாய் போற்றி
நடலையில் லார்தொழும் மெய்யே போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



உடல் எரி இடம் - சுடுகாடு;
ஆடீ - 'ஆடி' என்பதன் விளி; (ஆடி - ஆடுபவன்);
ஒன்று எனப் பல என - "ஏகன் அநேகன்";
நடலை - வஞ்சனை; பொய்ம்மை;



2)
கடுத்திடும் கங்கையைக் கரந்தாய் போற்றி
.. கச்செனப் பாம்பினை அசைத்தாய் போற்றி
அடுத்திடும் வினைகளை அழிப்பாய் போற்றி
.. அரும்பெரும் சோதியாய் ஆனாய் போற்றி
இடுக்கண கற்றிடும் இறைவா போற்றி
.. இசையுடன் இன்தமிழ் உகப்பாய் போற்றி
நடுக்கம கற்றிடும் புகலே போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



கடுத்தல் - விரைந்து ஓடுதல்;
கரத்தல் - மறைத்தல் (to conceal, hide, disguise); கொடாதிருத்தல் (to withhold; to refuse to give);
கச்சு - அரைப்பட்டிகை (belt, sash);
அசைத்தல் - கட்டுதல் (to tie, bind, fasten);
இடுக்கணகற்றிடும் - இடுக்கண் அகற்றிடும் - துன்பத்தை நீக்கும்;
புகல் - சரண்; அடைக்கலம்;
இன் தமிழ் - இனிய தமிழ் (தேவாரம், திருவாசகம், முதலியன);
உகத்தல் - விரும்புதல்;
நடுக்கம் அகற்றிடும் - அச்சத்தை நீக்கும்;



3)
தகுதிமி எனநடம் செய்வாய் போற்றி
.. தனக்கொரு தலைவனி லாதாய் போற்றி
மிகுதிறல் அரக்கனை அடர்த்தாய் போற்றி
.. வில்லென வெற்பினைப் பிடித்தாய் போற்றி
நெகும்அடி யவர்க்கருள் நேயா போற்றி
.. நெற்றியோர் கண்ணுடை நீற்றா போற்றி
நகுதலை யில்பலி ஏற்பாய் போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



தகுதிமி - ஆடல் ஒலிக்குறிப்பு; (திருப்புகழ் - "அகரமும் ஆகி ....தகுதிமி தோதி திமியென ஆடும்...");
மிகு திறல் - மிகுந்த வலிமை;
அடர்த்தல் - நசுக்குதல்;
வெற்பு - மலை;
நெகுதல் - கரைதல்; உருகுதல்;
நேயம் - அன்பு; நேயன் - அன்பன்;
நீற்றன் - திருநீறு பூசியவன்;
நகு தலை - வெற்றெலும்பாய்ச் சிரிப்பதுபோலக் காணப்படும் மண்டையோடு - பிரமனது மண்டையோடு;
பலி - பிச்சை;
(அப்பர் தேவாரம் - 6.60.4 - "நற்றவனைப் புற்றரவ நாணி னானை நாணாது நகுதலையூண் நயந்தான் தன்னை...");



4)
மறுவிலா எம்பெரு மானே போற்றி
.. மற்றொரு நிகர்இலா மைந்தா போற்றி
அறுமுக வேலவன் அப்பா போற்றி
.. அன்றெயில் மூன்றெரி அரனே போற்றி
குறுமுனிக் கருளிய கூத்தா போற்றி
.. கொடியினில் விடையினைக் கொண்டாய் போற்றி
நறுமலர் சூடிய நம்பா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



மறு - குற்றம் (stigma, blemish, fault);
மற்று - ஓர் அசைச்சொல்; பிறிதுப்பொருட் குறிப்பு (a term meaning other, another);
மைந்தன் - வீரன்; இளைஞன்;
குறுமுனி - அகத்தியர்;
எயில் - கோட்டை;
விடை - எருது;



5)
மயக்கம றுத்திடும் ஒளியே போற்றி
.. மதியணி கிறபெரு மானே போற்றி
பயக்கிற கற்பகத் தருவே போற்றி
.. பழவினை அறுக்கிற பரமா போற்றி
வியக்கிற வாறெழு சோதீ போற்றி
.. விட்டுணு பிரமனுக் கரியாய் போற்றி
நயப்பவர் நலிவினைக் களைவாய் போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



மயக்கம் - அறிவின் திரிபு (mental delusion; stupor, bewilderment; aberration of mind, as from ignorance, fascination, etc); அறியாமை;
அறுத்தல் - தீர்த்தல்; இல்லாமற் செய்தல் (to root out, exterminate);
பயத்தல் - கொடுத்தல்;
சோதீ - சோதி என்பதன் விளி;
விட்டுணு - விஷ்ணு;
அரியாய் - அரியவனே;
நயத்தல் - விரும்புதல்;
நலிவு - துன்பம்;



6)
ஈட்டிய வினைகளை எரிப்பாய் போற்றி
.. எங்குமி ருக்கிற இறைவா போற்றி;
சாட்டியக் குடியுறை தாதாய் போற்றி
.. தண்தமிழ் தனைமிக உகப்பாய் போற்றி
பூட்டிய கதவினைத் திறப்பாய் போற்றி
.. பொழில்மிகு தில்லையம் பொன்னே போற்றி
நாட்டியம் ஆடிடும் அரசே போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



சாட்டியக்குடி - திருச்சாட்டியக்குடி - ஒரு தலத்தின் பெயர் (திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது); (கருவூர்த்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பா - திருமுறை 9.15 பதிகம் காண்க);
தாதாய் - தாதை என்பதன் விளி - தந்தையே;
அம் பொன் - அழகிய பொன்;
பூட்டிய கதவினைத் திறப்பாய் - திருமறைக்காட்டில் அப்பர் பாடக் கோயில் கதவைத் திறந்தருளியதைச் சுட்டியது. - திருநாவுக்கரசர் தேவாரம் - திருமுறை - 5.10.1
"பண்ணின் நேர்மொழி யாள்உமை பங்கரோ
மண்ணி னார்வலம் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னால்உமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே".)



7)
ஆகமம் அருமறை அளித்தாய் போற்றி
.. அகத்தமை கோயிலில் களித்தாய் போற்றி
ஏகமும் ஆய்எலாம் ஆனாய் போற்றி
.. இடுபலி ஏற்கிற கோனே போற்றி
வேகமு டைப்பெரு விடையாய் போற்றி
.. வெண்மதி திகழ்கிற சடையாய் போற்றி
நாகம ரைக்கசைத் தவனே போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



ஆகமம் - சிவபெருமான் அருளிச்செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு;
மறை - வேதம்;
அகத்து அமை கோயில் - மனத்தில் அமைத்த கோயில் - பெரியபுராணத்தில் பூசலார் நாயனார் வரலாற்றைக் காண்க;
ஏகமும் ஆய் எலாம் ஆனாய் - ஒன்றாகிப் பல ஆனவனே; (திருவாசகம் - சிவபுராணம் - “ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க”);
இடுபலி - இடுகிற பிச்சை;
வேகம் - விரைவு; கோபம்;
விடை - எருது; இடபம்;
அசைத்தல் - கட்டுதல்;
நாகம் அரைக்கு அசைத்தவன் - பாம்பைத் தனது இடையில் கட்டியவன்; (சுந்தரர் தேவாரம் - 7.48.6 - "ஆடு பாம்ப தரைக்க சைத்த அழகனே");



8)
வான்நவில் மணிமிட(று) உடையாய் போற்றி
.. மாமுனி வர்க்கறம் உரைப்பாய் போற்றி
கான்நவில் நடனமு கப்பாய் போற்றி
.. கழல்தொழும் அன்பரைக் காப்பாய் போற்றி
வானவில் வாழ்க்கையை ஒழிப்பாய் போற்றி
.. மாணியை நிலைபெற வைத்தாய் போற்றி
நாநவில் அஞ்செழுத் தானாய் போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



வானவில் - வான் நவில் / வான வில்;
கானவில் - கான் நவில்;
நவிலுதல் - சொல்லுதல்; பாடுதல்; செய்தல் (to perform, as a dance);
வான் நவில் மணி மிடறு உடையாய் - தேவர்கள் போற்றிப் பாடுகிற திருநீலகண்டனே;
மா முனிவர்க்கு அறம் உரைப்பாய் - சிறந்த முனிவர்களுக்குத் தட்சிணாமூர்த்தியாக ஞானம் போதிப்பவனே;
கான் நவில் நடனம் உகப்பாய் - சுடுகாட்டில் செய்யும் திருநடனத்தை விரும்புபவனே;
வானவில் வாழ்க்கை ஒழிப்பாய் - வானவில் போல் நிலையற்ற வாழ்வை ஒழிப்பவனே;
மாணியை நிலைபெற வைத்தாய் - மார்க்கண்டேயரை என்றும் இறப்பின்றி இருக்க வைத்தவனே;
நா நவில் அஞ்செழுத்து ஆனாய் - நாவினால் சொல்கிற 'நமச்சிவாய்' என்ற திருவைந்தெழுத்து ஆனவனே;
நாநவில் = நாம் நவில் / நா நவில்;



9)
ஆயகி லாதவர்க்(கு) அரியாய் போற்றி
.. அன்புடை யார்களுக்(கு) எளியாய் போற்றி
போயக லாவினை தீர்ப்பாய் போற்றி
.. பொருளொடு போகமும் ஈவாய் போற்றி
சேயக லாதநல் தாயே போற்றி
.. சேவினில் வருகிற சிவனே போற்றி
நாயகன் ஆகிய நம்பா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



கில்தல்[கிற்றல்] - ஆற்றல்கொள்ளுதல் (to be able);
ஆய கிலாதவர்க்கு அரியாய் - (திருவடியைச்) சிந்தியாதவர்களுக்கு அடைய இயலாதவனே;
போய் அகலா வினை - விட்டு நீங்காத வினைகள்;
பொருளொடு போகமும் ஈவாய் - (சுந்தரர் தேவாரம் - 7.59.1 -
"பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
.. போகமும் திருவும் புணர்ப்பானைப்.....")
சேய் அகலாத நல் தாயே - பிள்ளையை விட்டு நீங்காது உடன் இருக்கும் சிறந்த தாய் ஆனவனே;
சே - காளை; எருது;
நாயகன் - தலைவன்; கடவுள்;
நம்பன் - கடவுள்; (விரும்பப்படுபவன்);



10)
தேவரை எரிவிடம் உண்டாய் போற்றி
.. திரிபுரம் மூன்றையும் எரித்தாய் போற்றி
மூவரை உயிருடன் வைத்தாய் போற்றி
.. முழுமுதல் ஆகிய பொருளே போற்றி
ஓர்வரை இலாதுயர் ஒளியே போற்றி
.. உள்கிடா இருவருக்(கு) அரியாய் போற்றி
நாவரை யர்தொழு நாதா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



மூவரை உயிருடன் வைத்தாய் - முப்புரங்களை எரித்தபொழுது, சிவபக்தர்களான மூன்று அசுரர்களையும் காத்து அருள்செய்தவனே;
ஓர் வரை இலாது உயர் ஒளியே - ஓர் எல்லை இன்றி உயர்ந்த பேரொளியே;
உள்கிடா இருவருக்கு - நினையா திருமாலுக்கும் பிரமனுக்கும்; (உள்குதல் - நினைத்தல்);
அரையன் - அரசன்;
நாவரையர் - நா அரையர் - நாவரசர் - திருநாவுக்கரசர்;


குறிப்பு: முப்புரம் எரித்தபொழுது மூவருக்கு அருள்புரிந்தது:
சுந்தரர் தேவாரம் - 7.55.8 -
மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
.. இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என் றேவிய பின்னை
.. ஒருவன் நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
.. மணிமு ழாமுழக் கவருள் செய்த
தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
.. செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.


(தருமை ஆதீன உரையிலிருந்து: "தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி" என்னும் தலைவர் உட்படத் திரிபுரத்தில் இருந்தவர் அனைவரும் புத்தன் போதனையால் சிவநெறியைக் கைவிடவும், "சுதன்மன், சுசீலன், சுபுத்தி" என்னும் மூவர்மட்டும் முன்போலவே சிவநெறியில் மாறாது நின்று சிவபிரானிடத்து அன்புபூண்டு ஒழுகினமையால், சிவபெருமான் அவர்களைமட்டும் அழியாது காத்து, மேற் சொல்லியவாறு திருவருள் செய்தனன் என்க.)



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
நாகேச்ரம் - திருநாகேஸ்வரம்- கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=918
தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=164 )



No comments:

Post a Comment