Thursday, July 30, 2015

01.32 – பொது - (ஈரடி)

01.32பொது - (ஈரடி)



2008-05-23
பொது
-----------------------------
"தான தானனா தான தானனா தான தானனா தான தானனா
தான தானனா தான தானனா தான தானதனா"
(தேவாரத்தில் "ஈரடி" என்ற அமைப்பு - குறள் தாழிசை)



(சம்பந்தர் தேவாரம் - 3.110.1 -
வரமதேகொளா வுரமதேசெயும் புரமெரித்தவன் பிரமநற்புரத்(து)
அரனனாமமே பரவுவார்கள்சீர் விரவுநீள் புவியே.)



1)
மாச கற்றிய நேச நெஞ்சினர் வாசப் பூவினால் ஈசன் சேவடி
பூசை செய்திட ஆசை யும்வினைப் பாச மும்விடுமே.



மாசு அகற்றிய - வஞ்சம் இல்லாத;



2)
கடையும் தேவரை அடையும் நஞ்சினை மிட டைத்தவன், இடம டந்தையை
உடைஅ ரன்கழல் அடைய வல்லவர் இடர்க ளேஇலரே.



நஞ்சினை மிடறு அடைத்தவன் - விடத்தைக் கண்டத்தில் அடைத்தவன்; (மிடற்று என்பது ஓசை கருதி மிடறு என்று வந்தது);
இடம் மடந்தையை உடை அரன் - இடப்பக்கம் பார்வதியை உடைய ஹரன்;



3)
யானைத் தோலுடன் ஏனக் கொம்ணி ஆனைக் காவனை, மானை ஏந்துமெம்
மானை, நெஞ்சினில் தேனைப் போல்இனிப் பானைப் பாடுதுமே.



ஏனக் கொம்பு - பன்றிக்கொம்பு;
ஆனைக்காவன் - திருவானைக்காவில் உறையும் சிவன்;
எம்மான் - எம் சுவாமி; எம் தந்தை;
பாடுதும் - பாடுவோம்; (திருவாசகம் - திருவம்மானை - 8.8.1 - “அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்”);



4)
ஆயும் பாலன(து) ஆயுள் ஆனது மாயும் நாள்எனப் பாயும் காலனைக்
காயும் காலனை, நோயும் தீர்ந்திட நீயும் சேர்மனமே.



ஆய்தல் - ஆராய்தல்; சிந்தித்தல்; (திருவடியைச் சிந்தித்தல்);
காயும் காலனை - உதைத்த காலை உடையவனை;
நோய் - பிறவி நோய்;



5)
வேத நாவினன் பூத நாயகன் மாதைப் பங்குடை நாதன் தாள்தனைக்
காத லால்நிதம் ஓதத் தீவினை ஏத மேஇலையே.



வேத நாவினன் - வேதம் ஓதும் திருநாவினன்;
பூத நாயகன் - உயிர்கட்கெல்லாம் தலைவன்;
காதல் - அன்பு;
நிதம் - தினந்தோறும்;
ஏதம் - துன்பம்; குற்றம்;



6)
புவன நாயகன் தவள நீறணி பவள மால்வரைச் சிவனை யேநினை;
கவலை, சூரியன் சுவற்றும் நுண்பனித் திவலை யாய்விடுமே.



புவன நாயகன் - உலகிற்கு இறைவன்;
தவள நீறு அணி - வெள்ளைத் திருநீற்றைப் பூசும்
பவள மால் வரை - பெரிய செம்பவள மலை - சிவந்த திருமேனி;
சுவற்றுதல் - வற்றச்செய்தல் (evaporate); முற்றும் அழித்தல் (to extirpate, destroy utterly);
திவலை - சிறிய நீர்த்துளி;



7)
மனித வாழ்வினில் நனிம கிழ்ந்திடக் "கனியின் சாற்றினும் இனியன்" என்றுநல்
முனிவர் கூறிடும் புனிதன் அஞ்செழுத்(து) இனி வில்மனமே;



நனி - மிகுந்த;
கனியின் சாற்றினும் இனியன் என்று நல் முனிவர் கூறிடும் புனிதன் - (அப்பர் தேவாரம் - 5.14.10 "கனியினும் கட்டிபட்ட கரும்பினும் ...இனியன் தன்னடைந்தார்க்கு இடைமருதனே");



8)
இலங்கை மன்னவன் மலையை ஆட்டவும் மலரைப் போல்விரல் நிலத்தில் வைத்(து),அவன்
அலறிப் பாட,வாள், அலகில் நாள்அருள் உலக நாயகனே.



அலகு இல் நாள் - அளவு இல்லாத ஆயுள் - நீண்ட ஆயுள்;



9)
செங்கண் மாலொடு பங்க யத்தவன் எங்கும் நேடிநின்(று) "எங்கள் நாயகா
சங்க ரா"வெனும் துங்கர் தாள்தொழ மங்கும் தீவினையே.



பங்கயத்தவன் - தாமரையில் இருக்கும் பிரமன்;
நேடி - தேடி;
துங்கர் - உயர்ந்தவர்; சிவன்;
மங்குதல் - அழிதல்;



10)
முந்தை நாள்முதல் வந்த நம்வழி நிந்தை செய்பவர் மந்த புத்தியர்;
எந்தை ஈசனை வந்திப் போர்வினை வெந்து போய்விடுமே.



முந்தை நாள் - பழங்காலம்;



11)
பெரிய தேர்அது முரிய ஏறியே திரியும் முப்புரம் எரிய ஓர்நகை
புரியும் ஈசனைப் பிரிய மாய்த்தொழப் பிரியும் வல்வினையே.



முரிய - ஒடிய;
நகை - சிரிப்பு;
பிரிதல் - நீங்குதல்; விட்டு விலகுதல்; கட்டு அவிழ்தல்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
தேவாரத்தில் "ஈரடி" என்ற அமைப்பு - குறள் தாழிசை.
முதல் அடி - எண்சீர் - "தான தானனா" x 4
இரண்டாம் அடி - அறுசீர் - "தான தானனா" x 2 + "தான தானதனா"
சில பாடல்களில் "தான" என்ற இடங்களில் "தனன" வரும்.



யாப்புக் குறிப்பு:
"சமயக் குரவர் காலத்தில் ஈரடிப் பாடல்கள் என்று கூறப்பட்டவை காரிகைக்காலத்தில் பெயர் மாற்றம் பெற்று "அந்தடி குறையும்' குறள் தாழிசைகளாக வகுக்கப்பட்டன.
முதலடி எண்சீர், இரண்டாமடி அறுசீர்.
ஆனால் கட்டளை பெற்று வருவன. (நேர் அசையில் தொடங்கினால் முதலடி 20 எழுத்துகளும் இரண்டாவது அடி 16 எழுத்துகளும் பெற்று நடக்கின்றன. நிரை அசையில் தொடங்கினால் முதலடி 24 எழுத்துகளும் இரண்டாவது அடி 19 எழுத்துகளும் பெற்று நடக்கின்றன).
இப்பாடல்களின் தனிச்சிறப்புச் சீர் எதுகை.”




No comments:

Post a Comment