Sunday, July 5, 2015

01.15 – ஆரூர் - (திருவாரூர்)


01.15 –
ஆரூர் - (திருவாரூர்)



2007-12-28
திருவாரூர்
திருவாரூரினைச் சென்றடை மனமே
--------------------------------------------
(எண்சீர் விருத்தம் - 'மா கூவிளம் விளம் மா' என்ற அரையடி வாய்பாடு).
(சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.68.1
"செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்
.. கரிய கண்டனை மாலயன் காணா")



1)
முன்னைச் செய்ததீ வினைகளின் தொகுதி
.. மூடி அல்லலில் ஆழ்வழி தன்னில்
உன்னை உய்த்திடும் நிலைஅடை யாமுன்
.. உய்யும் மார்க்கமு ரைக்கிறேன் கேள்நீ
அன்னை யின்னருள் பொழிகிற பெம்மான்
.. அகில நாயகன் அவனுறை கின்ற
தென்னை ஆர்பொழில் வயல்புடை சூழ்ந்த
.. திருவா ரூரினைச் சென்றடை மனமே.



பதம் பிரித்து:
முன்னைச் செய்த தீவினைகளின் தொகுதி
.. மூடி, அல்லலில் ஆழ்வழிதன்னில்
உன்னை உய்த்திடும் நிலை அடையாமுன்
.. உய்யும் மார்க்கம் உரைக்கிறேன் கேள் நீ;
அன்னை, இன் அருள் பொழிகிற பெம்மான்,
.. அகில நாயகன், அவன் உறைகின்ற
தென்னை ஆர் பொழில் வயல் புடை சூழ்ந்த
.. திருவாரூரினைச் சென்று அடை மனமே.


முன்னைச் செய்ததீ வினைகளின் தொகுதி மூடி - பழவினைகளால் மூடப்பெற்று;
(சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.83.1 - 'அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம் சொல்லி முந்தி எழும் பழைய வல்வினை மூடாமுன்');
அல்லலில் ஆழ் வழிதன்னில் உன்னை உய்த்திடும் நிலை அடையாமுன் - துன்பத்தில் ஆழ்கின்ற வழியில் உன்னைச் செலுத்துவதன் முன்னமே;
அன்னையின்னருள் பொழிகிற பெம்மான் - அன்னை, இன்னருள் பொழிகிற பெம்மான்; "அன்னையினும் அருள் பொழிகிற பெம்மான்" என்றும் பொருள்கொள்ளலாம்;
தென்னை ஆர் பொழில் - தென்னந்தோப்புகள்;
புடை சூழ்ந்த – சுற்றி இருக்கின்ற;

2)
போனாய் புன்வழி களில்அத னாலே
.. பொல்லா வல்வினை மிக்கிடர் உற்றாய்
ஏனாய் கின்றிலை இயந்திர மோநீ
.. ஏதம் தீர்வழி சொல்கிறேன் கேளாய்
தானாய் அண்டமெ லாம்படை தாயாய்த்
.. தனது பத்தரின் நெஞ்சினில் என்றும்
தேனாய் நிற்கிற சிவனுறை கின்ற
.. திருவா ரூரினைச் சென்றடை மனமே.



பதம் பிரித்து:
போனாய் புன் வழிகளில்; அதனாலே
.. பொல்லா வல்வினை மிக்கு இடர் உற்றாய்;
ன் ஆய்கின்றிலை; இயந்திரமோ நீ?
.. ஏதம் தீர்வழி சொல்கிறேன் கேளாய்;
தான் ஆய், அண்டம் எலாம் படை தாய் ஆய்த்,
.. தனது பத்தரின் நெஞ்சினில் என்றும்
தேனாய் நிற்கிற சிவன் உறைகின்ற
.. திருவாரூரினைச் சென்று அடை மனமே.


புன் வழி - தகாத வழி;
ஏன் ஆய்கின்றிலை- ஏன் (இடர் உற்றோம்) என்று நீ ஆராய்வது இல்லை;
ஏதம் தீர்வழி - குற்றங்கள் தீர்கின்ற வழி;
தான் ஆய் - ஊழிக் காலத்தில் தான் ஒருவனாக இருந்து;
அண்டம் எலாம் படை தாய் ஆய் - எல்லா உலகங்களையும் படைக்கும் தாய் ஆகி;



3)
தொல்லை வல்வினை பிறவிகள் தோறும்
.. தொடரும் இவ்விழி நிலையினி என்றும்
இல்லை என்றொரு நிலையினை அடைய
.. இங்கு நல்வழி சொல்கிறேன் கேள்நீ
கல்லை வீசிய சாக்கியர் அன்பால்
.. கமலம் போலதை ஏற்றருள் செய்தான்
தில்லை அம்பல வன்மகிழ்ந் துறையும்
.. திருவா ரூரினைச் சென்றடை மனமே.



பதம் பிரித்து:
தொல்லை வல்வினை பிறவிகள் தோறும்
.. தொடரும் இவ் ழி நிலை னி என்றும்
இல்லை என்றொரு நிலையினை அடைய
.. இங்கு நல்வழி சொல்கிறேன் கேள் நீ;
கல்லை வீசிய சாக்கியர் அன்பால்
.. கமலம் போல் அதை ஏற்று அருள் செய்தான்,
தில்லை அம்பலவன் மகிழ்ந்து உறையும்
.. திருவாரூரினைச் சென்று அடை மனமே.


தொல்லை - பழைய;
இழிநிலை - இழிந்த நிலைமை;
என்றொரு - என்ற ஒரு; (என்ற என்பதில் ஈற்று அகரம் தொகுத்தல் விகாரம்);
கல்லை வீசிய சாக்கியர் அன்பால் - கல்லை எறிந்து வழிபட்ட சாக்கிய நாயனாரின் அன்பால்;
கமலம் - தாமரைப் பூ;



4)
இன்று வாலிப வயதென மயங்கி
.. இறைவன் சேவடி தொழுவதற் கெண்ணாய்
என்று கூட்டினை விடுதினம் அறியோம்
.. இன்பம் மன்னிட எண்ணுதி யேல்நீ
அன்று தாள்தொழு பத்தரின் உயிரை
.. அழிக்க வந்தடை காலனை உதைக்கச்
சென்ற செஞ்சடை யானுறை கின்ற
.. திருவா ரூரினைச் சென்றடை மனமே.



பதம் பிரித்து:
இன்று வாலிப வயது எ மயங்கி
.. இறைவன் சேவடி தொழுவதற்கு எண்ணாய்;
என்று கூட்டினை விடு தினம் அறியோம்;
.. இன்பம் மன்னிட எண்ணுதியேல் நீ
அன்று தாள் தொழு பத்தரின் உயிரை
.. அழிக்க வந்து அடை காலனை உதைக்கச்
சென்ற செஞ்சடையான் உறைகின்ற
.. திருவாரூரினைச் சென்று அடை மனமே.


கூட்டினை விடு தினம் - சாகும் நாள்; (கூடு - உடல்);
இன்பம் மன்னிட எண்ணுதியேல் நீ - இன்பம் நிலைத்திட எண்ணினால் நீ; (மன்னுதல் - நிலைத்து இருத்தல்);
தாள் தொழு பத்தர் - திருவடியை வணங்கும் பக்தர் - இங்கே மார்க்கண்டேயர்;
(சம்பந்தர் தேவாரம் - திருமுறை 2.99.1 - 'இன்றுநன்று நாளைநன்று என்றுநின்ற இச்சையால்';



5)
அனந்த கோடியே ஆசைகள் அவற்றால்
.. அடையும் அல்லலும் அடுத்தடுத் தலைபோல்
தினந்தி னம்வரும் இடர்க்கடல் கடந்து
.. செல்ல நல்வழி சொல்கிறேன் கேள்நீ
முனங்க ருப்புவில் கொண்டுபூங் கணையை
.. முதல்வன் மேல்விடும் மன்மதன் அழியச்
சினந்த கண்ணுத லானுறை கின்ற
.. திருவா ரூரினைச் சென்றடை மனமே.



பதம் பிரித்து:
அனந்த கோடியே ஆசைகள்; அவற்றால்
.. அடையும் அல்லலும் அடுத்தடுத்து அலை போல்
தினம் தினம் வரும்; இடர்க் கடல் கடந்து
.. செல்ல நல் வழி சொல்கிறேன் கேள் நீ;
முனம் கருப்பு வில் கொண்டு பூங் கணையை
.. முதல்வன்மேல் விடும் மன்மதன் அழியச்
சினந்த கண்ணுதலான் உறைகின்ற
.. திருவாரூரினைச் சென்று அடை மனமே.


அனந்த கோடி - கணக்கற்ற கோடி; (limitless, infinite);
இடர்க்கடல் - துன்பக்கடல்;
முனம் - முன்னம்; முன்பு;
கருப்பு வில் - கரும்பால் ஆகிய வில்;
பூங்கணை - மலர் அம்பு;
முதல்வன் - அனைத்துக்கும் ஆதி ஆகிய சிவபெருமான்;
சினந்த – கோபித்த;
கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்; (நுதல் - நெற்றி);



6)
எரிக்கும் தீயெனச் சுடுவினை தாக்கா
.. தினிது காக்கிற கவசமாய் நீற்றைத்
தரிக்கும் அன்பர்கள் போற்றிடும் தலைவன்
.. தனது தாளினை இட்டிர தத்தை
முரிக்கும் முக்கணன் திரிதரு புரங்கள்
.. மூன்றும் ஓர்நொடிப் போதினில் வேவச்
சிரிக்கும் சேவகன் தானுறை கின்ற
.. திருவா ரூரினைச் சென்றடை மனமே.



பதம் பிரித்து:
எரிக்கும் தீ எனச் சுடு வினை தாக்காது
.. னிது காக்கிற கவசமாய் நீற்றைத்
தரிக்கும் அன்பர்கள் போற்றிடும் தலைவன்;
.. தனது தாளினை இட்டு இதத்தை
முரிக்கும் முக்கணன்; திரிதரு புரங்கள்
.. மூன்றும் ஓர் நொடிப் போதினில் வேவச்
சிரிக்கும் சேவகன் தான் உறைகின்ற
.. திருவாரூரினைச் சென்று அடை மனமே.


நீற்றை - திருநீற்றை;
தரித்தல் - அணிதல்;
(திருமந்திரம் - ஆறாம் தந்திரம் - திருநீறு - 10.6.10.1 - “கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே);
தனது தாளினை இட்டு இதத்தை முரிக்கும் - (தேவர்கள் செய்த) தேரில் அதன் அச்சு முரியும்படி ஏறியவன்; (முரித்தல் - ஒடித்தல்; அழித்தல்);
திரிதரு புரங்கள் - திரிந்த புரங்கள்; (தரு - ஒரு துணைவினை);
சேவகன் - வீரன்;



7)
தேவை ன்றொரு பசுவுரி போர்த்துத்
.. திரியும் ஐம்புலன் அவாப்புலிக் கூட்டம்
யாவை யும்புற முதுகிடச் செய்ய
.. யானோர் நல்வழி சொல்கிறேன் கேள்நீ
பாவை மேனியில் ஒருபுறம் சேரும்
.. பரமன் ஆற்றையும் பிறையையும் சூடும்
தேவன் செஞ்சடை யானுறை கின்ற
.. திருவா ரூரினைச் சென்றடை மனமே.



பதம் பிரித்து:
தேவை ன்றொரு பசு உரி போர்த்துத்
.. திரியும் ஐம்புலன் அவாப் புலிக் கூட்டம்
யாவையும் புறமுதுகிடச் செய்ய
.. யான் ஓர் நல்வழி சொல்கிறேன் கேள் நீ;
பாவை மேனியில் ஒருபுறம் சேரும்
.. பரமன்; ஆற்றையும் பிறையையும் சூடும்
தேவன்; செஞ்சடையான் உறைகின்ற
.. திருவாரூரினைச் சென்று அடை மனமே.


தேவை ன்றொரு சு உரி போர்த்துத் திரியும், ஐம்புலன் அவாப் புலிக் கூட்டம் - பசுத்தோல் போர்த்திய புலிக்கூட்டத்தைப்போல் 'தேவை' என்ற ஒரு போர்வையால் மூடிக்கொண்டுநம் மேல் பாயும் ஐம்புலன் ஆசைகள் எல்லாம் நம்மை ஏமாற்றும்; (உரி - தோல்; அவா - ஆசை);
புறமுதுகிடல் - தோற்று ஓடுதல்;
பாவை - பெண்; பார்வதி;



8)
விருப்பு வர்ப்புகள் என்கிற வலையில்
.. விழுந்து வெவ்வினைத் தொகுதியை என்றும்
பெருக்கிப் பேரிடர் படுகிறாய் இன்பம்
.. பெற்று வாழ்ந்திட நல்வழி கேள்நீ
செருக்கு மிக்கவல் லிராவணன் ஓடிச்
.. சென்று மாமலை அசைக்கவும் நெரித்துத்
திருத்தி இன்னிசை கேட்டவன் உறையும்
.. திருவா ரூரினைச் சென்றடை மனமே.



பதம் பிரித்து:
விருப்பு உவர்ப்புகள் என்கிற வலையில்
.. விழுந்து வெவ்வினைத் தொகுதியை என்றும்
பெருக்கிப் பேர் இடர் படுகிறாய்; இன்பம்
.. பெற்று வாழ்ந்திட நல்வழி கேள் நீ;
செருக்கு மிக்க வல் ராவணன் ஓடிச்
.. சென்று மா மலை அசைக்கவும் நெரித்துத்
திருத்தி இன்னிசை கேட்டவன் உறையும்
.. திருவாரூரினைச் சென்று அடை மனமே.


விருப்பு உவர்ப்புகள் - விருப்பு வெறுப்புகள்; (உவர்ப்பு - வெறுப்பு);
செருக்கு - கர்வம்; ஆணவம்;
நெரித்து - நசுக்கி;
திருத்தி - இராவணனைச் செம்மைசெய்து;



9)
பேயாய்க் காசினைப் பேணுவ தன்றிப்
.. பிறரி ரக்கினும் சிறிதள வேனும்
ஈயாய் எப்பொருள் உடன்வரும் உய்ய
.. இங்கு நல்வழி சொல்கிறேன் கேள்நீ
வாயால் வாதுசெய் மாலயன் மண்ணில்
.. வானிற் சென்றடி மேலினைக் காணாத்
தீயாய் ஓங்கிய சிவனுறை செல்வத்
.. திருவா ரூரினைச் சென்றடை மனமே.



பதம் பிரித்து:
பேய் ஆய்க் காசினைப் பேணுவது அன்றிப்,
.. பிறர் இரக்கினும் சிறிது அளவேனும்
ஈயாய்; எப்பொருள் உடன் வரும்? உய்ய
.. இங்கு நல்வழி சொல்கிறேன் கேள் நீ;
வாயால் வாதுசெய் மால் அயன் மண்ணில்
.. வானில் சென்று அடி மேலினைக் காணாத்
தீயாய் ஓங்கிய சிவன் உறை செல்வத்
.. திருவாரூரினைச் சென்று அடை மனமே.


காசினைப் பேணுவது அன்றி - பணத்தைக் காப்பதைத் தவிர;
இரக்கினும் - யாசித்தாலும்;
ஈயாய் - ஈயமாட்டாய்; தரமாட்டாய்;
உடன் - கூடவே;
மால் அயன் மண்ணில் வானில் சென்று அடி மேலினைக் காணா - விஷ்ணுவும் பிரமனும் நிலத்தை அகழ்ந்து சென்றும் வானில் பறந்து சென்றும் அடியும் முடியும் அறியாத;

செல்வத் திருவாரூர் - வளம் பொருந்திய திருவாரூர்;
(சம்பந்தர் தேவாரம் - திருமுறை 1.11.5 - 'ஆயாதன.....செல்வத் திருவாரூர் மேயான்...');

10)
வெங்கள் உண்டவர் போல்வெறி கொண்டு
.. வேத நன்னெறி னைப்பழி பேச்சே
தங்கள் மூச்செனக் கொண்டுழல் கின்ற
.. தருக்கர் தங்களுக் கறியவொண் ணாதான்
கங்கை பாய்சடைச் சங்கரன் நெற்றிக்
.. கண்ணன் அன்பருக் கெளியவன் கீற்றுத்
திங்கள் சூடிய சிவனுறை கின்ற
.. திருவா ரூரினைச் சென்றடை மனமே.



பதம் பிரித்து:
வெம் கள் உண்டவர் போல் வெறி கொண்டு,
.. வேத நல் நெறினைப் பழி பேச்சே
தங்கள் மூச்சு எனக் கொண்டு உழல்கின்ற
.. தருக்கர் தங்களுக்கு அறிய ண்ணாதான்;
கங்கை பாய் சடைச் சங்கரன்; நெற்றிக்
.. கண்ணன்; அன்பருக்கு எளியவன்; கீற்றுத்
திங்கள் சூடிய சிவன் உறைகின்ற
.. திருவாரூரினைச் சென்று அடை மனமே.


வெம்மை - கடுமை (severity, harshness; cruelty);
வெங்கள் - வெம்மை + கள் - மிகவும் மயக்கம் தரும் கள் (highly intoxicating liquor);
வேத நல் நெறி - வேதநெறி - வைதிக சமயம்;
தருக்கர் - தருக்கு உடையவர்கள் - ஆணவம் மிக்கவர்;
அறிய ஒண்ணாதான் - அறிவதற்கு முடியாதவன்;
பாய் சடை - வினைத்தொகை - பாய்கிற சடை;
நெற்றிக் கண்ணன் - நெற்றிக்கண் உடையவன்;
அன்பருக்கு எளியவன் - பக்தர்களால் எளிதில் அடையப்படுபவன்;
கீற்றுத் திங்கள் - பிறைச் சந்திரன்;

11)
பார்க்கும் பல்பொருள் வேண்டுமென் றாசைப்
.. ட்டுச் சேர்த்தனை இருப்பினும் என்றும்
ஆர்க்கும் ன்றையும் அளித்திட எண்ணாய்
.. அழிவில் அத்தனை யும்பெற லாம்நீ
ஈர்க்கும் செந்தமிழ் மாலைகள் பாட
.. இரங்கித் தீவினை தீர்த்துயர் வானிற்
சேர்க்கும் செஞ்சடை யானுறை செல்வத்
.. திருவா ரூரினைச் சென்றடை மனமே.



பதம் பிரித்து:
பார்க்கும் பல் பொருள் வேண்டும் என்று ஆசைப்
.. ட்டுச் சேர்த்தனை; இருப்பினும் என்றும்
ஆர்க்கும் ன்றையும் அளித்திட எண்ணாய்;
.. அழிவு இல் அத்தனையும் பெறலாம் நீ,
ஈர்க்கும் செந்தமிழ் மாலைகள் பாட
.. இரங்கித் தீவினை தீர்த்து யர் வானில்
சேர்க்கும் செஞ்சடையான் உறை செல்வத்
.. திருவாரூரினைச் சென்று அடை மனமே.


பார்க்கும் பல் பொருள் - கண்ணிற்படும் பல பொருள்கள்;
ஆர்க்கும் - யார்க்கும்;
அழிவு இல் அத்தனையும் பெறலாம் - என்றும் அழியாத தந்தையையும் அடையலாம்; (அத்தன் - தந்தை);
ஈர்க்கும் செந்தமிழ் மாலைகள் பாட - மனத்தை இழுக்கும், (சிவபெருமான் செவிகளை ஈர்க்கும்) தேவாரம், திருவாசகம் முதலிய பாமாலைகளைப் பாடினால்;
யர் வானில் சேர்க்கும் - சிவலோகத்தில் சேர்க்கும்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
திருவாரூர் - கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=598 )






No comments:

Post a Comment