Saturday, April 30, 2016

03.01-21 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)

03.01 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)



01-23 Dec 2006
அண்ணாமலை அந்தாதி
--------------------------------------
(வெண்பா)
21)
ஒளியாது நஞ்சினை உண்டாய்! அடியார்க்
கெளியாய்! அரிஅயனுக் கெட்டா ஒளியானாய்!
உண்ணா முலையாள் உடன்ஆக வீற்றிருக்கும்
அண்ணா மலையாய், அருள்!



ஒளியாது நஞ்சினை உண்டாய்! - ஓடி ஒளித்துக்கொள்ளாது விடத்தை உண்டவனே; (ஒளியாது - ஓடி ஒளியாமல்);
அடியார்க்கு எளியாய்! - அடியவர்களுக்கு எளியவனே;
அரி அயனுக்கு எட்டா ஒளி ஆனாய்! - விஷ்ணுவுக்கும் பிரமனுக்கும் அடைய ஒண்ணாத சோதி ஆனவனே;
உண்ணாமுலையாள் உடன்ஆக வீற்றிருக்கும் அண்ணாமலையாய், அருள்!



22)
அருள்புரிவாய் அண்ணா மலையாய்! அளவில்
பொருள்நீயே! உன்டியைப் போற்றி உருகுவார்
உள்ளத்தில் நீங்கா துறைவோனே! என்வினையைத்
தள்ளி அடியேனைத் தாங்கு.



அருள்புரிவாய் அண்ணாமலையாய்!
அளவு இல் பொருள் நீயே! (அளவு இல் - அளவு இல்லாத; எல்லை இல்லாத);
உன் அடியைப் போற்றி உருகுவார் உள்ளத்தில் நீங்காது உறைவோனே!
என் வினையைத் தள்ளி, அடியேனைத் தாங்கு.



23)
தாங்கினாய் ஆற்றைச் சடையில்! தழல்என
ஓங்கினாய்! பிட்டுக்கா ஓர்அடி வாங்கினாய்!
ஏங்கினேன் உன்னடி எய்தவே; ஈசனே!
நீங்கிடா தென்னெஞ்சில் நில்.



தாங்கினாய் ஆற்றைச் சடையில்!
தழல் என ஓங்கினாய்!
பிட்டுக்கா ஓர் அடி வாங்கினாய்! (பிட்டுக்கா - பிட்டுக்காக - கடைக்குறை விகாரம்);
ஏங்கினேன் உன்டி எய்தவே; ஈசனே!
நீங்கிடாது என் நெஞ்சில் நில்.



24)
நில்லா மனமும் நிலைகொள்ளும்; சேர்த்துவைத்த
பொல்லா வினைகளும் போய்விடும்; எல்லா
மறைகளும்போற்ண்ணா மலையான் கழலை
இறைஞ்சுவார் துன்பம் இலர்.



நில்லா மனமும் நிலைகொள்ளும்; - (அலைபாயும் மனமும் அமைதி பெறும்);
சேர்த்துவைத்த பொல்லா வினைகளும் போய்விடும்; - பல பிறவிகளாகச் செய்து குவித்த தீய வினைகளும் நீங்கும்;
எல்லா மறைகளும் போற்று அண்ணா மலையான் கழலை இறைஞ்சுவார் துன்பம் இலர் - நால்வேதங்களும் போற்றுகின்ற அண்ணாமலை அண்ணல் திருவடியை வணங்குபவர்கள் துன்பம் இல்லாதவர்கள் ஆவார்கள்;



25)
துன்பமிலர், பாவமிலர், தொண்டுசெய் பத்தர்கள்
இன்பமே எந்நாளும் எய்துவர் என்பதால்
என்னெஞ்சே, எல்லையே இல்லாத சோதிஅவன்
பொன்னடியில் தஞ்சம் புகு.



துன்பம் இலர், பாவம் இலர்,
தொண்டு செய் பத்தர்கள் இன்பமே எந்நாளும் எய்துவர் என்பதால்
என் நெஞ்சே, எல்லையே இல்லாத சோதிஅவன் பொன்னடியில் தஞ்சம் புகு.


( சம்பந்தர் தேவாரம் - திருமுறை: 3.125.3
அன்புறு சிந்தைய ராகி யடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின்
றின்புறு மெந்தை யிணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.
)



26)
புகச்செய்வாய் உன்தொண்டில்; பொய்யேன்கல் நெஞ்சை
நெகச்செய்வாய்; நின்மலா! நின்தாள் அகத்திருக்க
அண்டுமோ வல்வினைகள்! அண்ணா மலையாய்!கார்க்
கண்டனே! நல்வழி காட்டு!



புகச் செய்வாய் உன் தொண்டில்; - உன் திருத்தொண்டில் என்னைப் புகுமாறு செய்;
பொய்யேன் கல் நெஞ்சை நெகச் செய்வாய்; - என் கல் போன்ற மனத்தை நெகிழச் செய்;
நின்மலா! நின் தாள் அகத்து இருக்க, அண்டுமோ வல்வினைகள்! - நின்மலனே, உன் திருவடி மனத்தில் இருந்தால், வல்வினைகள் நெருங்குமோ?
அண்ணாமலையாய்! கார்க்கண்டனே! நல்வழி காட்டு! - அண்ணாமலையானே, நீலகண்டனே, நல்ல வழியைக் காட்டு;



27)
காட்டினால் அன்றிஉன்னைக் காண்பாரார்? பாமாலை
சூட்டிநான் தாள்பணிந்தேன்; சூலனே! ஓட்டுவாய்
என்வினையை; அண்டங்கள் எல்லாம் கடந்தவனே!
நன்மைசெய் நாத!வரம் நல்கு.



காட்டினால் அன்றி உன்னைக் காண்பார்ர்?
பாமாலை சூட்டி நான் தாள் பணிந்தேன்;
சூலனே! ஓட்டுவாய் என் வினையை;
அண்டங்கள் எல்லாம் கடந்தவனே!
நன்மைசெய் நாத! வரம் நல்கு.


(நன்மை செய்பவன் - சங்கரன்;
நல்கு - அளி; கொடு;)


(திருநாவுக்கரசர் தேவாரம் - 6.95.3 -
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
.. அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
.. உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
.. பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
.. காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே)



28)
வரம்நல்கும் அண்ணா மலையாய்!ஓர் அம்பால்
புரமெரித்தாய்! உன்டி போற்றிக் கரம்குவிக்கும்
பத்தன் எனது பழவினை சுட்டெரிப்பாய்!
இத்தனையே வேண்டும் எனக்கு.



வரம் நல்கும் அண்ணாமலையாய் - வரங்கள் கொடுக்கும் அண்ணாமலையானே;
ஓர் அம்பால் புரம் எரித்தாய்! - ஒரு கணையால் முப்புரங்களையும் எரித்தவனே;
உன் அடி போற்றிக் கரம் குவிக்கும் பத்தன் எனது பழவினை சுட்டு எரிப்பாய்! - உன் திருவடியைக் கைகூப்பி வணங்கும் பக்தனான என் பழைய வினைகளையெல்லாம் சாம்பலாக்குவாய்;
இத்தனையே வேண்டும் எனக்கு - இதுவே எனக்கு வேண்டும்;



29)
எனக்கும் இரங்கிறைவா! என்னே கருணை
உனக்குன் திருவடி ஒன்றே மனக்கவலை
மாற்றுவழி; அண்ணா மலையாய்! அதைநாளும்
போற்றுவேன்; நீயே புகல்.



எனக்கும் இரங்கு இறைவா! என்னே கருணை உனக்கு! - எனக்கும் இரங்குகின்ற ஈசனே! உன் கருணைதான் என்னே!
உன் திருவடி ஒன்றே மனக்கவலை மாற்று வழி; - உன் திருவடியே மனத்தில் உள்ள கவலையைத் தீர்க்கும் வழி;
அண்ணாமலையாய்! அதை நாளும் போற்றுவேன்; நீயே புகல். - அண்ணாமலையானே! உன் திருவடியைத் தினமும் துதிப்பேன்; நீயே துணை; (புகல் - துணை; பற்றுக்கோடு; சரண்;)



30)
புகலேன் எழுத்தஞ்சை; பொய்யைவிட் டென்றும்
அகலேன்நான்; அண்ணா மலையாய்! பகரஒண்ணாக்
கள்ளமே செய்தென்றும் காரிருள் சூழுமென்
உள்ளத்தில் காட்டாய் ஒளி.



புகலேன் எழுத்து அஞ்சை; பொய்யைவிட்டு என்றும் அகலேன் நான்;
அண்ணா மலையாய்!
பகர ஒண்ணாக் கள்ளமே செய்து என்றும் காரிருள் சூழும் என் உள்ளத்தில் காட்டாய் ஒளி.


(புகல்(லு)தல் - சொல்லுதல்;
எழுத்து அஞ்சு - நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்து மந்திரம்;
பகர்தல் - சொல்லுதல்;
ஒண்ணுதல் - இயலுதல்; ஒண்ணா = இயலாத;
கள்ளம் - வஞ்சனை; பொய்; குற்றம்;
காரிருள் - மிக்க இருள்;)



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



No comments:

Post a Comment