Friday, August 27, 2021

P.269 - வேட்களம் (திருவேட்களம்) - இசைமலிந்த இணையடியை

2015-01-19

P.269 - வேட்களம் (திருவேட்களம்)

-----------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")


1)

இசைமலிந்த இணையடியை ஏத்தியதிங் களைச்சடையின்

மிசையணிந்த சிவபெருமான் விரைமலர்த்தாள் மனத்திருத்தித்

திசையனைத்தும் இருள்சூழ்ந்த செறிகானில் தவம்செய்த

விசயனுக்குப் படையீந்த வேடனிடம் வேட்களமே.


இசை மலிந்த இணையடியை ஏத்திய திங்களைச் சடையின்மிசைணிந்த சிவபெருமான் - புகழ் மிக்க இருதிருவடிகளைத் துதித்த சந்திரனைச் சடையின்மேல் சூடிய சிவபெருமான்; (இசை - புகழ்); (மிசை - மேல்);

விரைமலர்த்தாள் மனத்து இருத்தித் - வாசம் மிக்க மலர் போன்ற திருவடியை மனத்தில் வைத்து; (விரை - வாசனை);

திசை அனைத்தும் இருள் சூழ்ந்த செறி-கானில் தவம் செய்த - எல்லாத் திசைகளிலும் இருள் சூழும் அடர்ந்த காட்டில் தவம் செய்த; (செறிதல் - அடர்தல்); (கான் - காடு);

விசயனுக்குப் படை ஈந்த வேடன் இடம் வேட்களமே - அர்ஜுனனுக்குப் பாசுபாதாஸ்திரத்தை அருளிய வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்; (விசயன் - விஜயன்); (படை - அஸ்திரம்; ஆயுதம்); (வேடன் - வேட்டுவன்; வேடதாரி);


2)

அல்லேந்து கண்டத்தன் அடியிணையை மறவாது

சொல்லேந்து தமிழ்பாடித் துதிப்போர்க்குத் துணையாவான்

மல்லேந்து திரள்தோளன் விசயற்கு வரம்நல்க

வில்லேந்திக் கானிற்செல் வேடனிடம் வேட்களமே.


அல் ஏந்து கண்டத்தன் அடியிணையை மறவாது சொல் ஏந்து தமிழ் பாடித் துதிப்போர்க்குத் துணை ஆவான் - இருள் தங்கும் கண்டத்தை உடையவனது இருதிருவடிகளை மறத்தல் இன்றி என்றும் சிறந்த சொற்களைத் தாங்கும் பாமாலைகளைப் பாடி ஏத்தும் அன்பர்களைக் காக்கும் துணைவன் ஆனவன்; (அல் - இருள்);

மல் ஏந்து திரள்-தோளன் விசயற்கு வரம் நல்க - வலிமை மிக்க திரண்ட தோள்களை உடையவனான அர்ஜுனனுக்கு வரம் அருள; (மல் - வலிமை);

வில் ஏந்திக் கானில் செல் வேடன் இடம் வேட்களமே - வில்லை ஏந்திக் காட்டில் சென்ற வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்;


3)

செங்கோலன் மனுவுக்குத் திருவருள்செய் ஆரூரன்

கங்காளன் கரிகாடன் கலவமயில் மடமாது

பங்காளன் தவஞ்செய்த பார்த்தனுக்குப் படைநல்க

வெங்கானிற் கேழலெய்த வேடனிடம் வேட்களமே.


செங்கோலன் மனுவுக்குத் திருவருள்செய் ஆரூரன் - நீதி தவறாது ஆட்சி செய்த மனுநீதிச் சோழன்ணுக்கு அருள்செய்த திருவாரூர்ப் பெருமான்;

கங்காளன் - எலும்பை அணிந்தவன்;

கரிகாடன் - சுடுகாட்டில் இருப்பவன்; (கரிகாடு - சுடுகாடு);

கலவமயில் மடமாது பங்காளன் - ஏழை பங்காளன் - அர்த்தநாரீஸ்வரன்; (கலவமயில் - கலாபமயில் - தோகையுடைய மயில்); (மடமாது - அழகிய பெண்);

தவம் செய்த பார்த்தனுக்குப் படை நல்க - தவம் செய்த அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருள;

வெங்கானில் கேழல் எய்த வேடன் இடம் வேட்களமே - கொடிய காட்டில் பன்றியை அம்பால் எய்த வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்; (கேழல் - பன்றி);


4)

ஆண்டுபதி னாறாயிற்(று) என்றடைந்த அடற்கூற்றே

மாண்டுவிட உதைத்தருளி மார்க்கண்டர் உயிர்காத்தான்

பாண்டுமகன் பார்த்தனுக்குப் பரிந்தன்று பன்றியெய்து

வேண்டுபடை தந்தருளும் வேடனிடம் வேட்களமே.


ஆண்டு பதினாறு ஆயிற்று என்று அடைந்த அடல்-கூற்றே மாண்டுவிட உதைத்தருளி மார்க்கண்டர் உயிர் காத்தான் - மார்க்கண்டேயருக்குப் பதினாறு வயது ஆயிற்று என்று அவரைக் கொல்ல நெருங்கிய வலிய எமனே மாளும்படி எமனை உதைத்து மார்க்கண்டேயர் உயிரைக் காத்தவன்; (அடல் - வலிமை; கொலை); (கூற்று - இயமன்);

பாண்டுமகன் பார்த்தனுக்குப் பரிந்து - பாண்டுவின் மகனாகிய அர்ஜுனனுக்கு இரங்கி;

அன்று பன்றி எய்து, வேண்டு-படை தந்தருளும் வேடன் இடம் வேட்களமே - முன்பு ஒரு பன்றியை அம்பால் எய்து, அர்ஜுனன் விரும்பிய பாசுபதாஸ்திரத்தை அருளிய வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்;


5)

பண்ணமரும் தமிழ்பாடிப் பரவடியார் தமக்குவினை

நண்ணலிலா நன்னிலையை நல்கியருள் நம்பெருமான்

கண்ணமரும் நெற்றியினான் கானகத்தே கருங்குழலி

வெண்ணகையா ளோடடைந்த வேடனிடம் வேட்களமே.


பண் அமரும் தமிழ் பாடிப் பரவு அடியார் தமக்கு - இசையோடு பாடும் தேவாரம் பாடித் துதிக்கும் பக்தர்களுக்கு;

வினை நண்ணல் இலா நன்னிலை நல்கியருள் நம் பெருமான் - வினைகள் நெருங்காத நற்கதியைக் கொடுக்கும் நம் பெருமான்;

கண்மரும் நெற்றியினான் - நெற்றிக்கண்ணன்;

கானகத்தே கருங்குழலி வெண்ணகையாளோடு அடைந்த வேடன் இடம் வேட்களமே - கரிய குழலும் வெண்பற்களும் உடைய உமாதேவியுடன் வேடன் கோலத்தில் காட்டில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்; (கானகம் - காடு); (குழல் - கூந்தல்);


6)

வஞ்சியவள் வெருவுறவே வந்தெதிர்ந்த மலைபோன்ற

குஞ்சரத்தை உரிசெய்து போர்வையெனக் கொண்டுகந்தான்

அஞ்செழுத்தே நினைந்திருந்த அருச்சுனனுக் கருள்செய்ய

வெஞ்சரத்தாற் கேழலெய்த வேடனிடம் வேட்களமே.


வஞ்சியவள் வெருவுறவே வந்து எதிர்ந்த மலை போன்ற குஞ்சரத்தை உரிசெய்து போர்வைனக் கொண்டு-கந்தான் - உமை அஞ்ச, வந்து போர்செய்த மலை போன்ற யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்தவன்; (வஞ்சி - பெண்); (வெரு - அச்சம்); (எதிர்தல் - எதிர்த்தல்); (குஞ்சரம் - யானை);

அஞ்செழுத்தே நினைந்திருந்த அருச்சுனனுக்கு அருள்செய்ய - திருவைந்தெழுத்தையே தியானித்துத் தவம் செய்த அர்ஜுனனுக்கு அருள்புரிய;

வெஞ்சரத்தால் கேழல் எய்த வேடன் இடம் வேட்களமே - கொடிய அம்பால் பன்றியை எய்த வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்; (சரம் - அம்பு); (கேழல் - பன்றி);


7)

வாரத்தால் தொழுவார்தம் வல்வினைகள் எல்லாமே

தீரத்தான் அருள்புரியும் சிவபெருமான் மார்பிலரா

ஆரத்தான் அடர்கானில் அருச்சுனனோ டமர்செய்த

வீரத்தான் ஈர(ம்)மிகு வேடனிடம் வேட்களமே.


வாரத்தால் தொழுவார்தம் வல்வினைகள் எல்லாமே தீரத்தான் அருள்புரியும் சிவபெருமான் - அன்போடு தொழும் பக்தர்களது வலிய வினையெல்லாம் தீரவே அருளும் சிவபெருமான்; (வாரம் - அன்பு);

மார்பில் அரா-ஆரத்தான் - மார்பில் பாம்பு-மாலை அணிந்தவன்; (அரா - பாம்பு); (ஆரம் - மாலை);

அடர்-கானில் அருச்சுனனோடு அமர்செய்த வீரத்தான் - அடர்ந்த காட்டில் அர்ஜுனனோடு போரிட்ட வீரம் மிக்கவன்; (அமர்செய்தல் - போரிடுதல்); (சுந்தரர் தேவாரம் 7.66.4 - "வீரத்தால் ஒரு வேடுவனாகி விசைத்தொர் கேழலைத் துரந்துசென் றணைந்து");

ஈரம் மிகு வேடன் இடம் வேட்களமே - தயை மிக்க வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்; (ஈரம் - தயை);


8)

குன்றையெறி இலங்கைக்கோன் கோலமுடி பத்துமிற

அன்றுவிரல் ஒன்றூன்றி ஆரருள்கள் செய்தபிரான்

பன்றியதன் பின்சென்று பார்த்தற்குப் பரிந்தபரன்

வென்றிவிடை ஒன்றுடைய வேடனிடம் வேட்களமே.


குன்றை எறி இலங்கைக்கோன் கோலமுடி பத்தும் இற - கயிலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணனது அழகிய கிரீடம் அணிந்த பத்துத்தலைகளும் நசுங்கும்படி; (குன்று - கயிலைமலை); (கோலம் - அழகு);

அன்று விரல் ஒன்று ஊன்றி ஆரருள்கள் செய்த பிரான் - முன்பு திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கிப் பின் அவனுக்குப் பேரருள் செய்த பெருமான்; (ஆரருள்கள் - பேரருள்); (அப்பர் தேவாரம் - 4.57.10 - "உலப்பிலா விரலால் ஊன்றி ஒறுத்து அவற்கு அருள்கள் செய்து");

பன்றிஅதன்பின் சென்று பார்த்தற்குப் பரிந்த பரன் - பன்றிப்பின் போய் அர்ஜுனனுக்கு இரங்கி அருளிய பரமன்;

வென்றி-விடை ஒன்றுடைய வேடன் இடம் வேட்களமே - வெற்றியை உடைய இடபத்தை வாகனமாக உடைய, வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்; (வென்றி - வெற்றி);


9)

வளைகோடு திகழ்கேழல் வானிலுயர் அன்னமிவர்

தளர்வாகிக் கழல்போற்றத் தழலாகி நின்றபிரான்

தளையேதும் இலன்முன்னம் தனஞ்சயனோ டமர்செய்து

விளையாடிப் படையருள்செய் வேடனிடம் வேட்களமே.


வளை-கோடு திகழ் கேழல் - வளைந்த கொம்பு உடைய பன்றி - பன்றி வடிவில் சென்ற திருமால்; (கோடு - பன்றி, யானை இவற்றின் தந்தம்); (கேழல் - பன்றி);

வானில் உயர் அன்னம் - வானில் பறந்து சென்ற அன்னப்பறவை - அன்னவடிவில் சென்ற பிரமன்;

இவர் தளர்வாகிக் கழல்போற்றத் தழலாகி நின்ற பிரான் - இவ்விருவரும் அடிமுடி காணாமல் தளர்ந்து திருவடியை வணங்குமாறு ஜோதி வடிவில் ஓங்கிய தலைவன்;

தளை ஏதும் இலன் - மும்மலக்கட்டு இல்லாதவன்; (தளை - பந்தம்);

முன்னம் தனஞ்சயனோடு அமர்செய்து விளையாடி - முன்பு அர்ஜுனனோடு போரிட்டுத் திருவிளையாடல் புரிந்து; (அமர் - போர்);

படைருள்செய் வேடன் இடம் வேட்களமே - அர்ஜுனன் விரும்பிய பாசுபதாஸ்திரத்தை அருளிய வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்;


10)

வாட்டமறு மறைநெறியை மருவாத மதியீனர்

காட்டுவழி மதியேன்மின் கண்ணுதலான் கழல்மனத்தில்

நாட்டிவழி படுவார்க்கு நல்லவன்பாண் டவனுக்கு

வேட்டுவனாய்ச் சென்றருள்செய் வேடனிடம் வேட்களமே.


வாட்டம் அறு மறைநெறியை மருவாத - துன்பத்தைத் தீர்க்கின்ற வேதநெறியைப் பின்பற்றாத; (மருவுதல் - தழுவுதல்);

மதியீனர் காட்டுவழி மதியேன்மின் - அறிவற்றோர் காட்டுகின்ற நெறியை நீங்கள் மதிக்கவேண்டா; (காட்டுவழி - 1. காட்டுகின்ற வழி; 2. நல்வழி இருக்கக், காட்டின் வழியே செல்லும் ஆபத்தான வழி); (மதியேன்மின் - மதியேல்+மின் - எதிர்மறைப் பன்மை ஏவல் - மதியாதீர்);

கண்ணுதலான் கழல் மனத்தில் நாட்டி வழிபடுவார்க்கு நல்லவன் - நெற்றிக்கண்ணன் தன் திருவடியை மனத்தில் வைத்து வழிபடும் பக்தர்களுக்கு நன்மை செய்பவன்;

பாண்டவனுக்கு வேட்டுவனாய்ச் சென்று அருள்செய் வேடன் இடம் வேட்களமே - அர்ஜுனனுக்கு வேடனாகச் சென்று அருளிய கோலம் உடையவன் உறையும் தலம் திருவேட்களம்; (வேடன் - கோலம் உடையவன்);


11)

கரும்புதனை வளைத்தமர்செய் காமனைக்காய் கயிலாயன்

சுரும்புமுரல் கொன்றையொடு தூமதியும் புனைமுடியன்

பெரும்புகழே பேசியடி பேணுகின்ற அடியார்கள்

விரும்புவரம் தந்தருளும் வேடனிடம் வேட்களமே.


கரும்புதனை வளைத்து அமர்செய் காமனைக் காய்- கயிலாயன் - கரும்பை வில்லாக வளைத்துப் (பஞ்சபாணங்களை எய்து) போர்செய்யும் காமனை எரித்த கயிலைமலைநாதன்; (அமர் - போர்); (காய்தல் - கோபித்தல்; எரித்தல்);

சுரும்பு முரல் கொன்றையொடு தூ-மதியும் புனை முடியன் - வண்டுகள் ரீங்காரம் செய்யும் கொன்றைமலரையும் வெண்திங்களையும் முடிமேல் அணிந்தவன்; (சுரும்பு - வண்டு);

பெரும்-புகழே பேசி அடி பேணுகின்ற அடியார்கள் விரும்பு-வரம் தந்தருளும் வேடன் இடம் வேட்களமே - ஈசனது பெரிய புகழையே பேசித் திருவடியைப் போற்றும் பக்தர்கள் விரும்பிய வரங்களைத் தந்தருளும் கோலம் உடையவன் உறையும் தலம் திருவேட்களம்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

Thursday, August 26, 2021

P.268 - கோயில் (சிதம்பரம்) - கட்டத் தொடர்தீர

2015-01-04

P.268 - கோயில் (சிதம்பரம்)

-----------------------

(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")


1)

கட்டத் தொடர்தீரக் கையால் மலர்தூவி

இட்டத் தொடுநாளும் ஏத்திப் பணிகின்ற

சிட்டர்க் கருள்வானைச் சிற்றம் பல(ம்)மேய

நட்டப் பெருமானை நம்பித் தொழுவோமே.


கட்டத்-தொடர் தீரக், கையால் மலர் தூவி, இட்டத்தொடு நாளும் ஏத்திப் பணிகின்ற சிட்டர்க்கு அருள்வானைச் - துன்பத்தொடர் தீரக், கைகளால் பூக்களைத் தூவி, அன்போடு தினமும் துதித்து வணங்குகின்ற சிரேஷ்டர்களுக்கு அருள்பவனை; (கட்டத்தொடர் - கஷ்டத்தொடர்); (இட்டம் - விருப்பம்); (சிட்டர் - உயர்ந்தோர்);

சிற்றம்பல(ம்) மேய நட்டப் பெருமானை - சிற்றம்பலத்தில் உறையும் கூத்தப்பெருமானை; (நட்டம் - கூத்து);

நம்பித் தொழுவோமே - விரும்பி வழிபாடு செய்வோம்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்);


2)

ஓடும் புனல்திங்கள் உரகம் அணிகொன்றை

சூடும் முடியானைச் சுண்ணப் பொடியானை

மாடு வளர்தில்லை மன்றில் திருநட்டம்

ஆடும் கழலானை அன்பால் தொழுவோமே.


ஓடும் புனல் திங்கள் உரகம் அணிகொன்றை சூடும் முடியானைச் - பாய்கின்ற கங்கைநதி, பிறை, பாம்பு, அழகிய கொன்றைமலர் இவற்றையெல்லாம் திருமுடிமேல் அணிந்தவனை; (உரகம் - பாம்பு); (அணி - அழகு);

சுண்ணப் பொடியானை - திருநீற்றைப் பூசியவனை; திருநீற்றையே நறுமணப் பொடியாகப் பூசிக் கொள்பவனை; (சுண்ணம் - வாசனைப்பொடி);

மாடு வளர் தில்லை மன்றில் திருநட்டம் ஆடும் கழலானை - செல்வம் உயர்கின்ற தில்லை அம்பலத்தில் கூத்தாடும் திருப்பாதனை; (மாடு - செல்வம்); (கழல் - கழல் அணிந்த திருவடி); (சம்பந்தர் தேவாரம் - 1.80.5 - "செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலமேய செல்வன்");

அன்பால் தொழுவோமே - அன்போடு வணங்குவோம்;


3)

முடிக்குத் தலைமாலை முளைவெண் மதிசூடி

வெடிக்கும் துடியேந்தி விண்ணின் றிழியாற்றைக்

குடிக்கும் சடையானைக் தில்லைக் குடியானை

நடிக்கும் பெருமானை நம்பித் தொழுவோமே.


முடிக்குத் தலைமாலை முளைவெண் மதிசூடி - தலைக்குத் தலைமாலையும் இளவெண்திங்களையும் அணிந்து;

வெடிக்கும் துடி ஏந்தி - வெடி போலப் பெருத்த ஓசையோடு அதிரும் உடுக்கையைக் கையில் ஏந்தி; (4.73.6 - "வெடிபடு தமருகம் கை தரித்ததோர் கோல");

விண்ணின்று இழி ஆற்றைக் குடிக்கும் சடையானைக் - வானிலிருந்து இறங்கிய கங்கையை உள்ளடக்கிய சடையை உடையவனை; (நின்று - ஐந்தாம்வேற்றுமை உருபு);

தில்லைக் குடியானை - தில்லையில் நீங்காது உறைபவனை; (குடி - உறைவிடம்);

நடிக்கும் பெருமானை - நடராஜனை;

நம்பித் தொழுவோமே - விரும்பி வழிபாடு செய்வோம்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்);


4)

பார்த்தற் கருள்செய்யப் பன்றிப் பின்சென்ற

மூர்த்தம் உடையானை முடிவில் புகழானைத்

தீர்த்தச் சடையானைச் சிற்றம் பல(ம்)மேய

கூத்தப் பெருமானைக் கூறி மகிழ்வோமே.


பார்த்தற்கு அருள்செய்யப் பன்றிப்பின் சென்ற மூர்த்தம் உடையானை - அர்ஜுனனுக்கு அருள்செய்ய ஒரு பன்றியைத் துரத்திச் சென்ற வேடன் கோலம் உடையவனை; (பார்த்தற்கு - பார்த்தனுக்கு); (மூர்த்தம் - வடிவம்); (கிராதர் - வேட்டுவ வடிவம் - மாஹேஸ்வர மூர்த்தங்களுள் ஒன்று);

முடிவு இல் புகழானைத் - என்றும் இருக்கும் (/ எல்லையற்ற) புகழ் உடையவனை;

தீர்த்தச் சடையானைச் - கங்கைச்சடையானை; (தீர்த்தம் - நீர்; தூய்மை);

சிற்றம்பல(ம்) மேய கூத்தப் பெருமானைக் - சிற்றம்பலத்தில் உறையும் கூத்தனை;

கூறி மகிழ்வோமே - போற்றிப் பாடி மகிழ்வோம்;


5)

சனித்துத் தரைமீது தவிக்கும் நிலைமாற்றி

இனித்தொல் வினைநண்ணா இன்ப நிலைநல்கும்

தனித்தன் மையினானைக் கனக சபைதன்னில்

குனித்தல் உடையானைக் கூறி மகிழ்வோமே.


சனித்துத் தரைமீது தவிக்கும் நிலை மாற்றி - பிறந்து மண்ணுலகில் வாடும் துன்பநிலையை நீக்கி; (சனித்தல் - ஜனித்தல் - பிறத்தல்);

இனித் தொல்வினை நண்ணா இன்பநிலை நல்கும் - இனிமேல் பழவினைகள் அணுகாத பேரின்பத்தை வழங்கும்; (நண்ணுதல் - நெருங்குதல்); (நல்குதல் - அளித்தல்);

தனித்தன்மையினானைக் - ஒப்பற்ற தன்மை உடையவனை; (தனி - ஒப்பற்ற);

கனகசபைதன்னில் குனித்தல் உடையானைக் - பொன்னம்பலத்தில் ஆடும் கூத்தனை; (கனகசபை - பொன்னம்பலம்); (குனித்தல் - ஆடுதல்);

கூறி மகிழ்வோமே - போற்றிப் பாடி மகிழ்வோம்;


6)

தலையின் மிசைநாகம் தண்வெண் மதியோடு

குலவும் பெருமானைக் கூடார் புரமெய்த

சிலைவில் உடையானைச் சிற்றம் பல(ம்)மேய

அலகில் நடத்தானை அன்பால் தொழுவோமே.


தலையின்மிசை நாகம் தண்-வெண்-மதியோடு குலவும் பெருமானை - திருமுடிமேல் பாம்பு குளிர்ந்த வெண்திங்களோடு விளங்குகின்ற பெருமானை; (குலவுதல் - விளங்குதல்; மகிழ்தல்; உலாவுதல்);

கூடார் புரம் எய்த சிலைவில் உடையானை - பகைவர்களது முப்புரங்கள்மேல் கணையைச் செலுத்தி அழித்த, மலையை வில்லாக உடையவனை; (கூடார் - பகைவர்); (சிலை - மலை);

சிற்றம்பலம் மேய அலகு இல் நடத்தானை - தில்லையில் சிற்றம்பலத்தில் உறைகின்ற, அளவில்லாத திருக்கூத்து ஆடுபவனை; (அலகு - அளவு); (நடம் - கூத்து);

அன்பால் தொழுவோமே - பக்தியோடு வழிபடுவோம்.


7)

பருக்கைம் மதமாவைப் பற்றி உரிசெய்தான்

இருக்கை மொழிநாவன் ஏத்தும் அடியார்வான்

இருக்க அருள்செய்து தில்லை எழில்மன்றில்

நிருத்தம் புரிவானை நித்தம் நினைவோமே.


பருக்-கைம்-மதமாப் பற்றி உரிசெய்தான் - பருத்த துதிக்கையை உடைய ஆண்யானையைப் பிடித்து அதன் தோலை உரித்தவன்; (மதமா - ஆண்யானை);

இருக்கை மொழி நாவன் - வேதத்தை மொழிந்தவன்; (இருக்கு - ரிக்வேதம் - வேதம்);

ஏத்தும் அடியார் வான் இருக்க அருள்செய்து - துதிக்கும் பக்தர்களுக்குச் சிவலோக-வாழ்வை அருளி;

தில்லை எழில்மன்றில் நிருத்தம் புரிவானை - அழகிய தில்லை அம்பலத்தில் ஆடுபவனை; (நிருத்தம் - ஆடல்);

நித்தம் நினைவோமே - எப்பொழுதும் நினைப்போம்; (நித்தம் - அனவரதம்);


8)

தடந்தோள் வலியுன்னித் தருக்கிக் கயிலாயம்

இடந்தான் முடிபத்தை இறுத்த விரலானை

மடந்தை பிரியானைத் தில்லை மணிமன்றில்

நடஞ்செய் பெருமானை நம்பித் தொழுவோமே.


தடம்-தோள் வலி உன்னித் தருக்கி - தன் பெரிய புஜங்களின் வலிமையை எண்ணிக் கருவத்தோடு;

கயிலாயம் இடந்தான் முடி பத்தை இறுத்த விரலானை - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்துத் தலைகளையும் (ஊன்றி நசுக்கி)அழித்த திருப்பாதவிரல் உடையவனை;

மடந்தை பிரியானைத் - உமைபங்கனை; (மடந்தை - பெண்);

தில்லை மணிமன்றில் நடம் செய் பெருமானை - அழகிய தில்லை அம்பலத்தில் ஆடுபவனை; (மணி - அழகு);

நம்பித் தொழுவோமே - விரும்பி வணங்குவோம்;


9)

பன்றி அடிநேடப் பறவை முடிநேட

அன்று வரையின்றி நின்ற அழலானைத்

துன்றி அடியார்கள் துதிக்க அணிதில்லை

மன்றில் நடிகோனை வாழ்த்தி மகிழ்வோமே.


பன்றி அடி நேடப், பறவை முடி நேட, அன்று வரை இன்றி நின்ற அழலானைத் - பன்றி (திருமால்) திருவடியைத் தேட, அன்னப்பறவை (பிரமன்) திருமுடியைத் தேட, அன்று எல்லையின்றி ஓங்கிய ஜோதியை; (பன்றி - பன்றி உருக்கொண்ட திருமால்); (பறவை - அன்ன உருக்கொண்ட பிரமன்);(நேடுதல் - தேடுதல்); (வரை - எல்லை; அளவு); (அழலான் - அழல் வடிவினன்; அழல் - நெருப்பு);

துன்றி அடியார்கள் துதிக்க அணி-தில்லை மன்றில் நடி-கோனை - நெருங்கி அடியார்கள் துதிக்க அழகிய தில்லை அம்பலத்தில் கூத்தாடும் அரசனை; (துன்றுதல் - நெருங்குதல்); (நடி கோன் - நடிக்கின்ற தலைவன் - நடராஜன்);

வாழ்த்தி மகிழ்வோமே - வாழ்த்தி இன்புறுவோம்;


10)

வருத்தம் மிகவாக்கும் வழிகள் தமில்நின்று

பொருத்தம் இலசொல்லும் பொய்யர்க் கருளானைத்

திருத்தம் உடையானைச் சிற்றம் பல(ம்)மேய

நிருத்தப் பெருமானை நித்தம் நினைவோமே.


வருத்தம் மிகக்கும் வழிகள்-தமில் நின்று, பொருத்தம் இல சொல்லும் பொய்யர்க்கு அருளானைத் - மிகுந்த துன்பம் தரும் நெறிகளில் ஒழுகித், தகாத வார்த்தைகள் பேசும் பொய்யர்களுக்கு அருளாதவனை; (வழிகள்தமில் - வழிகள்தம்மில் - வழிகளில்; நெறிகளில்); (நின்று - நின்றுகொண்டு; ஒழுகி); ("வருத்தம் மிக ஆக்கும் பொய்யர்; வழிகள்தமில் நின்று, பொருத்தம் இல சொல்லும் பொய்யர்" என்றும் இயைக்கலாம்);

திருத்தம் உடையானைச் - புனிதனை / கங்காதரனை; (திருத்தம் - புனிதம்; தீர்த்தம்);

சிற்றம்பல(ம்) மேய நிருத்தப் பெருமானை - சிற்றம்பலத்தில் உறைகின்ற கூத்தப்பெருமானை; (நிருத்தம் - நடனம்);

நித்தம் நினைவோமே - எப்பொழுதும் தியானிப்போம்;


11)

மட்டு மலிபூவார் மாலை தமிழ்மாலை

இட்டு மனமார ஏத்தின் வினையென்ற

கட்டைக் களைவானைக் கனக சபைமேய

நட்டப் பெருமானை நம்பித் தொழுவோமே.


மட்டு மலி பூ ஆர் மாலை - தேனும் வாசனையும் மிகுந்த பூக்கள் நிறைந்த மாலை; (மட்டு - தேன்; வாசனை); (மலிதல் - மிகுதல்; நிறைதல்); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);

தமிழ்மாலை - தமிழ்ப் பாமாலை;

மட்டு மலி பூ ஆர் மாலை தமிழ்மாலை இட்டு மனமார ஏத்தின் - வாசப்-பூமாலையும் மணம் கமழும் பாமாலையும் சூட்டி மனம் மகிழ்ந்து துதித்தால்; (மட்டு - வாசனை; தேன்); ("மட்டு மலி" இந்த அடைமொழியைப் பூமாலைக்கும் தமிழ்மாலைக்கும் தனித்தனியே இயைக்கலாம்); (இடுதல் - அணிவித்தல்); (ஆர்தல் - நிறைதல்);

வினை என்ற கட்டைக் களைவானைக் - பழவினைப் பந்தத்தைத் தீர்ப்பவனை;

கனகசபை மேய நட்டப் பெருமானை - பொன்னம்பலத்தில் உறைகின்ற நடராஜனை; (நட்டம் - கூத்து);

நம்பித் தொழுவோமே - விரும்பி வணங்குவோம்; (நம்புதல் - விரும்புதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------  

Wednesday, August 25, 2021

P.267 - சிக்கல் - தக்கன் வேள்வியில்

2014-12-28

P.267 - சிக்கல்

-----------------------

(வஞ்சித்துறை - மா விளம் - வாய்பாடு) (திருவிருக்குக்குறள் அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே")

(சம்பந்தர் தேவாரம் - 3.40.1 - "கல்லால் நீழல்")


1)

தக்கன் வேள்வியில்

துக்கம் செய்தவன்

நக்கன் சிக்கலைப்

புக்குப் போற்றுமே.


தக்கன் செய்த வேள்வியை அழித்தவனும் திகம்பரனுமான சிவபெருமான் உறையும் சிக்கலை அடைந்து போற்றுங்கள்; (நக்கன் - திகம்பரன்); (புக்கு - புகுந்து);


2)

அல்லில் ஆடுவான்

கொல்லை ஏறமர்

செல்வன் சிக்கலைச்

சொல்லி உய்ம்மினே.


இருளில் கூத்தாடுபவனும் இடபவாகனம் உடைய செல்வனுமான சிவபெருமான் உறையும் சிக்கலைப் போற்றி உய்யுங்கள்; (அல் - இருள்); (கொல்லை ஏறு - கொல்லேறு - போர்செய்யவல்ல எருது);


3)

காவ லார்புரம்

வேவ நக்கமா

தேவன் சிக்கலிற்

கோவைக் கூறுமே.


காவல் ஆர் புரம் - காவல் பொருந்திய முப்புரங்கள்; (சம்பந்தர் தேவாரம் - 1.100.6 - "கடியரண் மூன்றும்");

வேவ நக்க மாதேவன் - வெந்து அழியச் சிரித்த மகாதேவன்; (நகுதல் - சிரித்தல்);

சிக்கலிற் கோவைக் கூறுமே - சிக்கலில் உறையும் தலைவனைப் புகழுங்கள்; (கோ - தலைவன்);


4)

தையல் பங்கமர்

செய்யன் சிக்கலில்

ஐயன் தாள்தொழ

உய்யல் திண்ணமே.


தையல் பங்கு அமர் செய்யன் - உமாதேவியை ஒரு பங்காக விரும்பும் செம்மேனிப் பெருமான்;

சிக்கலில் ஐயன் - சிக்கலில் உறையும் தலைவன்;

தாள் தொழ உய்யல் திண்ணமே - அவனது திருவடியைத் தொழுதால் உய்தி நிச்சயம்;


5)

கொக்கின் தூவலார்

செக்கர் அஞ்சடைச்

சிக்க லானடி

துக்கம் நீக்குமே.


கொக்கிறகை அணிந்த அழகிய செஞ்சடையை உடைய, சிக்கலில் உறையும் பெருமான் திருவடி நம் துக்கத்தைப் போக்கும்; (தூவல் - இறகு); (கொக்கிறகு - 1. ஒரு பூவின் பெயர்; 2. கொக்கு வடிவுடைய குரண்டாசுரனை அழித்த அடையாளம்); (செக்கர் - சிவப்பு); (அஞ்சடை - அம் சடை - அழகிய சடை);


6)

கண்ணில் தீயினன்

விண்ணி னார்தொழும்

அண்ணல் சிக்கலை

நண்ணல் நன்மையே.


தீ உமிழும் நெற்றிக்கண்ணனும், தேவர் தொழும் தலைவனுமான சிவபெருமான் உறையும் சிக்கலை அடைந்தால் நன்மை கிட்டும்; (நண்ணல் - நண்ணுதல் - அடைதல்);


7)

வாசப் பூவினால்

தேசன் சிக்கலில்

ஈசன் தாள்தொழ

நாசம் பாவமே.


("தேசன், சிக்கலில் ஈசன் தாள் வாசப் பூவினால் தொழப் பாவம் நாசமே" - என்று இயைக்க).

ஒளிவடிவினனும் சிக்கலில் உறைபவனுமான ஈசனது திருவடியை மணம் மிக்க பூக்கள் தூவி வணங்கினால் நம் பாவங்கள் அழியும்; (தேசன் - ஒளியுருவினன்);


8)

மலையெ டுத்தவன்

அலற ஊன்றிய

தலைவன் சிக்கலை

வலம்வந் துய்ம்மினே.


கயிலையைப் பெயர்த்த இராவணனை அவன் அலறும்படி ஒரு திருப்பாதவிரலை ஊன்றி நசுக்கிய சிவபெருமான் உறையும் சிக்கலை வலம்செய்து உய்யுங்கள்;


9)

அரிய யன்தொழும்

பெரியன் ஆலமர்

குரவன் சிக்கலை

உரைசெய் துய்ம்மினே.


அரி அயன் தொழும் பெரியன் - திருமாலும் பிரமனும் வணங்கும் பெரியவன்;

ஆல் அமர் குரவன் - கல்லால-மரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தி;

சிக்கலை உரைசெய்துய்ம்மினே - அப்பெருமான் உறையும் சிக்கலைப் போற்றி உய்யுங்கள்;


10)

சைவன் தாள்தொழாக்

கையர் சொல்விடும்

மெய்யன் சிக்கலை

எய்தி உய்ம்மினே.


சைவன் தாள் தொழாக் கையர் சொல் விடும் - சிவபெருமான் திருவடியைத் தொழாத கீழோர்களது (வஞ்சகர்களது) சொற்களை மதியாமல் நீங்குங்கள்; (சைவன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று); (கையர் - கீழோர்; வஞ்சகர்);

மெய்யன் சிக்கலை எய்தி உய்ம்மினே - மெய்ப்பொருளாக உள்ள சிவபெருமானது சிக்கலை அடைந்து உய்யுங்கள்;


11)

நிகரி லான்பொழில்

திகழும் சிக்கலில்

பகவன் தாள்தொழ

மிகவும் நன்மையே.


நிகர் இலான் - ஒப்பற்றவனும்;

பொழில் திகழும் சிக்கலில் பகவன் - சோலை சூழ்ந்த சிக்கலில் உறைகின்ற பகவானுமான;

தாள் தொழ மிகவும் நன்மையே - சிவபெருமானது திருவடியைத் தொழுதால் பேரின்பம் கிட்டும்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------