Thursday, September 25, 2025

P.462 - இடையாறு - புனிதன் கழலும்பர்

2018-12-25

P.462 - இடையாறு

-------------------------

(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")


1)

புனிதன் கழலும்பர் போற்ற ஒருகுன்றைக்

குனிவில் எனவேந்திக் கூடார் புரமெய்தான்

தனியன் உமைபங்கன் தாளை மறவாதார்க்

கினியன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


புனிதன் - தூயவன்;

கழல் உம்பர் போற்ற ஒரு குன்றைக் குனி-வில் என ஏந்திக் கூடார்-புரம் எய்தான் - திருவடியைத் தேவர்கள் வழிபட, அவர்களுக்கு இரங்கி ஒரு மலையை வளைக்கின்ற வில்லாக ஏந்திப் பகைவர்களது முப்புரங்களை எய்தவன்; (உம்பர் - தேவர்கள்); (குனித்தல் - வளைத்தல்); (கூடார் - பகைவர்);

தனியன், உமைபங்கன் - ஒப்பற்றவன், உமையை ஒரு பங்கில் உடையவன்;

தாளை மறவாதார்க்கு இனியன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - தன் திருவடியை எப்பொழுதும் நினைந்து போற்றும் பக்தர்களுக்கு இனிமை பயக்கின்ற சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;


2)

மறையின் பொருள்நால்வர் மகிழ விரிசெய்தான்

அறையும் கடல்நஞ்சை ஆர்ந்த அருளாளன்

பறையின் ஒலியோங்கப் படுகா னிடையாடும்

இறைவன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


மறையின் பொருள் நால்வர் மகிழ விரி-செய்தான் - வேதப்பொருளைச் சனகாதியர் நால்வருக்கு உபதேசித்தவன்;

அறையும் கடல் நஞ்சை ஆர்ந்த அருளாளன் - ஒலிக்கின்ற கடலில் எழுந்த விடத்தை உண்ட (/உண்டு அணிந்த) அருளாளன்; (ஆர்தல் - உண்தல்; அணிதல்);

பறையின் ஒலி ஓங்கப் படுகானிடை ஆடும் - பறையின் ஓசை பெருகச் சுடுகாட்டில் ஆடுகின்ற;

இறைவன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;


3)

அம்மால் தொழுதேத்த ஆழி அருள்செய்தான்

கைம்மா உரிபோர்த்தான் கசியும் அடியார்தம்

வெம்மா வினையெல்லாம் வீட்டி நலம்நல்கும்

எம்மான் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


அம்-மால் தொழுதேத்த ஆழி அருள்செய்தான் - விஷ்ணு செய்த வழிபாட்டிற்கு மகிழ்ந்து சக்கராயுதத்தை ஈந்தவன்; (- பண்டறிசுட்டு); (ஆழி - சக்கரம்);

கைம்மா உரி போர்த்தான் - யானைத்தோலைப் போர்த்தவன்; (கைம்மா - யானை); (உரி - தோல்);

கசியும் அடியார்தம் வெம்-மா-வினையெல்லாம் வீட்டி நலம் நல்கும் - உள்ளம் கசிந்து வழிபடும் பக்தர்களது கொடிய பெரிய வினைகளையெல்லாம் அழித்து நன்மை புரிகின்ற; (வீட்டுதல் - அழித்தல்);

எம்மான் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - எம்பெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;


4)

கந்த மலர்சூடும் கற்றைச் சடையின்மேல்

இந்து தனைவைத்த ஈசன் இளவேற்றன்

அந்தம் முதலில்லான் அடியார் மிடிதீர்க்கும்

எந்தை உறைகோயில் எழில்கொள் இடையாறே.


கந்தமலர் சூடும் கற்றைச்-சடையின்மேல் - வாசமலர்களைச் சூடிய கற்றைச்சடைமீது;

இந்துதனை வைத்த ஈசன் இள-ஏற்றன் - சந்திரனை வைத்த ஈசன், இளைய எருதை வாகனமாக உடையவன்; (இந்து - சந்திரன்);

அந்தம் முதல் இல்லான் - முதலும் முடிவும் இல்லாதவன்;

அடியார் மிடி தீர்க்கும் எந்தை உறை-கோயில் எழில்கொள் இடையாறே - பக்தர்களது துன்பத்தைத் தீர்க்கும் சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;


5)

ஆய்ந்த மலரைந்தை அம்பா உடையானைக்

காய்ந்த நுதல்நாட்டம் காட்டும் இறைகங்கை

பாய்ந்த சடையண்ணல் பலிதேர்ந் துழல்கின்ற

ஏந்தல் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


ஆய்ந்த மலர் ஐந்தை அம்பா உடையானைக் காய்ந்த நுதல்-நாட்டம் காட்டும் இறை - சிறந்த பூக்கள் ஐந்தை அம்பாக உடைய மன்மதனைச் சுட்டெரித்த நெற்றிக்கண் காட்டும் இறைவன்; (அம்பா - அம்பாக; கடைக்குறை விகாரம்); (நுதல் - நெற்றி); (நாட்டம் - கண்);

கங்கை பாய்ந்த சடை அண்ணல் - கங்கையைச் சடையில் தரித்தவன்;

பலி தேர்ந்து உழல்கின்ற ஏந்தல் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - பிச்சையேற்றுத் திரிகின்ற தலைவனான சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்; (பலி - பிச்சை);


6)

கூற்றைக் குமைகாலன் கூனற் பிறைசூடும்

ஆற்றுச் சடையண்ணல் அங்கை மழுவாளன்

போற்றித் தொழுதார்தம் பொல்லா வினைதீர்க்கும்

ஏற்றன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


கூற்றைக் குமை காலன் - நமனை அழித்த காலகாலன்; (குமைத்தல் - அழித்தல்);

கூனல்-பிறை சூடும் ஆற்றுச்-சடைண்ணல் - வளைந்த பிறையைக் கங்கை பாயும் சடையின்மேல் சூடிய தலைவன்; (கூனல் - வளைவு);

அங்கை மழுவாளன் - கையில் மழுவை ஏந்தியவன்;

போற்றித் தொழுதார்தம் பொல்லா-வினை தீர்க்கும் - போற்றி வணங்கும் அன்பர்களது தீவினைகளைத் தீர்க்கின்ற;

ஏற்றன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - இடபவாகனனான சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;


7)

நெய்தேன் தயிராடும் நிமலன் மணிபோல

மைதான் திகழ்கண்டன் மலரோன் சிரமொன்றைக்

கொய்தான் மலைவில்லாக் கொண்டு புரமூன்றை

எய்தான் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


நெய் தேன் தயிர் ஆடும் நிமலன் - நெய், தேன், தயிர் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறும் தூயவன்;

மணி போல மைதான் திகழ் கண்டன் - ஆலகாலம் ஒரு மணி போலக் கண்டத்தில் திகழ்கின்றவன்;

மலரோன் சிரம் ஒன்றைக் கொய்தான் - பிரமனது தலைகளில் ஒன்றைக் கிள்ளியவன்;

மலை வில்லாக் கொண்டு புரமூன்றை எய்தான் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எய்த சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்; (வில்லா - வில்லாக);


8)

தொட்டு மலைபேர்த்த துட்டன் அழவூன்று(ம்)

நட்டன் நரையேற்றன் நல்ல இசைகேட்டு

மட்டில் வரமீந்த வள்ளல் மலைமங்கை

இட்டன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


தொட்டு மலைபேர்த்த துட்டன் அழன்று(ம்) நட்டன் - கைகளால் பற்றிக் கயிலைமலையைப் பெயர்த்த துஷ்டனான இராவணன் வலியால் துடித்து அழும்படி பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கிய கூத்தன்; (நட்டன் - கூத்தன்);

நரையேற்றன் - வெண்மையான எருதை வாகனமாக உடையவன்; (நரை - வெண்மை);

நல்ல இசை கேட்டு மட்டு-இல் வரம் ஈந்த வள்ளல் - பின் அவன் பாடிய இனிய கீதத்தைக் கேட்டு அவனுக்கு அளவற்ற வரம் தந்த வள்ளல்; (மட்டு இல் - அளவு இல்லாத);

மலைமங்கை இட்டன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - மலைமகளுக்கு நேயனான சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்; (இட்டன் - இஷ்டன்);


9)

பிரமன் அரிநேடிப் பிறகு துதிசெய்ய

வரையில் எரியென்ற வடிவில் வருநாதன்

பரவை விடமுண்ணி பல்லில் தலையேந்தும்

இரவன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


பிரமன் அரி நேடிப் பிறகு துதிசெய்ய வரை-இல் எரி என்ற வடிவில் வரும் நாதன் - பிரமனும் திருமாலும் தேடிப் பின்னர்ப் போற்றி வணங்கும்படி எல்லையில்லாத ஜோதி என்ற உருவில் வந்த தலைவன்; (நேடுதல் - தேடுதல்); (வரை - எல்லை); (எரி - தீ);

பரவை-விடம் உண்ணி - கடல்விடத்தை உண்டவன்; (பரவை - கடல்);

பல் இல் தலை ஏந்தும் இரவன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - பற்கள் உதிர்ந்த மண்டையோட்டைக் கையில் ஏந்தி யாசிக்கின்ற சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்; (இரவன் - பிச்சை இரப்பவன்); (அப்பர் தேவாரம் - 4.41.3 - "பல்லில்வெண்தலை கையேந்திப் பல்லிலம் திரியும் செல்வர்"); (சம்பந்தர் தேவாரம் - 1.51.4 - "பல்லிலோடு கையிலேந்தி"); (அப்பர் தேவாரம் - 5.34.2 - "இரவனை இடுவெண்தலை ஏந்தியை");


10)

ஏசு மொழிபேசும் எத்தர் தமைநீங்கும்

வாச மலர்தூவி வாழ்த்தும் அடியார்க்கு

நேசன் சுடுநீற்றன் நித்தன் நடமாடும்

ஈசன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


ஏசு-மொழி பேசும் எத்தர்தமை நீங்கும் - பழித்துப் பேசும் வஞ்சகர்களை நீங்குங்கள்; (எத்தர் - ஏமாற்றுபவர்);

வாசமலர் தூவி வாழ்த்தும் அடியார்க்கு நேசன் - மணம் கமழும் மலர்களைத் தூவி வணங்கும் பக்தர்களுக்கு அன்பு உடையவன்;

சுடுநீற்றன், நித்தன் - வெந்த வெண்ணீற்றைப் பூசியவன், அழிவற்றவன்;

நடம் ஆடும் ஈசன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - கூத்தாடும் ஈசனான சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;


11)

கல்லால் தொழுதாலும் கடியார் மலராக்கொள்

நல்லான் தமிழ்பாடி நம்பி அடைவார்கட்கு

எல்லாம் அருள்கின்ற எந்தை கரவென்றும்

இல்லான் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


கல்லால் தொழுதாலும் கடி ஆர் மலராக்கொள் நல்லான் - கல்லை எறிந்து வழிபட்டாலும் வாசமலராக ஏற்று அருளும் நல்லவன்; (* சாக்கியநாயனார் வரலாற்றைக் காண்க);

தமிழ் பாடி நம்பி அடைவார்கட்கெல்லாம் அருள்கின்ற எந்தை - தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகளைப் பாடி விரும்பி அன்போடு சரணடைந்தவர்களுக்கெல்லாம் அருள்செய்யும் எம் தந்தை; (நம்பி அடைவார்கட் கெல்லாம் அருள்கின்ற = 1. அடி அடைந்தவர்கள் எத்தகையவரே ஆயினும் அருள்கின்ற; 2. அடி அடைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய எல்லா வரங்களையும் அருள்கின்ற);

கரவு என்றும் இல்லான் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - வஞ்சமின்றி வழங்குகின்ற சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்; (கரவு - ஒளித்தல்; வஞ்சம்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment