Tuesday, July 15, 2025

P.425 - செங்கோடு (திருச்செங்கோடு) - பூவினால் நறுந்தூபத்தால்

2018-02-28

P.425 - செங்கோடு (திருச்செங்கோடு)

(தேவாரத்தில் - கொடிமாடச் செங்குன்றூர்)

---------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - வேதியா வேத கீதா)


முற்குறிப்பு - இப்பதிகத்தில் எல்லாப் பாடல்களிலும் அர்த்தநாரீஸ்வர வடிவம் கூறப்பெறுகின்றது.


1)

பூவினால் நறுந்தூ பத்தால் .. புனலினால் புரைதீர் செஞ்சொற்

பாவினால் போற்றும் அன்பர் .. பழவினை தீர்க்கும் பண்பன்

ஏவினால் முப்பு ரங்கள் .. எய்தவன் ஏற தேறி

தேவியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


பூவினால், றுந்-தூபத்தால், புனலினால், - பூக்களாலும் நறும்புகையினாலும், நீராலும்;

புரை தீர் செஞ்சொல் பாவினால் போற்றும் அன்பர் பழவினை தீர்க்கும் பண்பன் - குற்றமற்ற செந்தமிழ்ப் பாமாலைகளாலும் வழிபடும் அடியவர்களது பழைய வினைகளைத் தீர்க்கின்ற பண்பு உடையவன்; (புரை - குற்றம்);

ஏவினால் முப்புரங்கள் எய்தவன் - ஓர் அம்பினால் முப்புரங்களை எய்தவன்; (ஏ – அம்பு);

து ஏறி - இடபவாகனன்; (ஏறு - எருது; அது - பகுதிப்பொருள்விகுதி);

தேவி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (சேண் - உயரம்; ஆகாயம்);


2)

கல்வியின் பயன றிந்து .. கற்றவர் போற்றும் ஈசன்

சொல்விர(வு) இன்த மிழ்ப்பாச் .. சொல்லிய தொண்டர் தம்மை

வல்வினை தொடரா வண்ணம் .. மகிழ்ந்தருள் செய்ம்மா தேவன்

செல்வியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


கல்வியின் பயன் அறிந்து கற்றவர் போற்றும் ஈசன் - ;

சொல் விரவு இன்-தமிழ்ப்-பாச் சொல்லிய தொண்டர்-தம்மை - செஞ்சொற்கள் பொருந்திய இனிய தமிழ்ப்-பாமாலைகளைப் பாடி வழிபடும் தொண்டர்களை;

வல்வினை தொடரா-வண்ணம் மகிழ்ந்துஅருள் செய்ம் மாதேவன் - வலிய வினைகள் தொடராதபடி இன்னருள் செய்யும் மகாதேவன்; (செய்ம்மாதேவன் - புணர்ச்சியில் மகரஒற்று மிகும்);

செல்வி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


3)

வாயினில் நூலைக் கொண்டு .. வலையொரு சிலந்தி பின்ன

மாயிரு ஞாலம் ஆளும் .. மன்னவன் ஆக்கும் எந்தை

தாயினும் நல்லன் கையில் .. தழல்மழு சூலம் ஏந்தி

சேயிழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


வாயினில் நூலைக் கொண்டு வலை ஒரு சிலந்தி பின்ன(திருவானைக்காவில்) ஒரு சிலந்தி தன் வாய்நூலால் வலை பின்னி ஈசனை வழிபடவும்;

மாயிருஞாலம் ஆளும் மன்னவன் ஆக்கும் எந்தை - இந்தப் பெரிய நிலவுலகை ஆளும் சோழமன்னன் ஆக்கிய எம் தந்தை; (அப்பர் தேவாரம் - 4.56.1 - "மாயிரு ஞாலமெல்லா(ம்) மலரடி வணங்கும்"); (* கோச்செங்கட்சோழ நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

தாயினும் நல்லன் - தாயைவிட நல்லவன்;

கையில் தழல் மழு சூலம் ஏந்தி - கையில் தீ, மழு, சூலாயுதம் இவற்றையெல்லாம் ஏந்தியவன்;

சேயிழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


4)

வருந்திய வானோர் வந்து .. மலரடி வாழ்த்த நஞ்சை

அருந்திய கண்டன் நால்வர்க்(கு) .. அருமறை விரிக்க ஆல்கீழ்

இருந்தவன் ஓடொன் றேந்தி .. இரந்தவன் இமவான் பெற்ற

திருந்திழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


வருந்திய வானோர் வந்து மலரடி வாழ்த்த நஞ்சை அருந்திய கண்டன் - வருந்தி வந்து திருவடியை வழிபட்ட தேவர்கள் உய்ய ஆலகாலத்தை உண்ட நீலகண்டன்;

நால்வர்க்கு அருமறை விரிக்க ஆல்கீழ் இருந்தவன் - சனகாதியர்களுக்கு மறைப்பொருளை உபதேசிக்கக் கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருந்தவன்;

ஓடு ஒன்று ஏந்தி இரந்தவன் - பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சை ஏற்றவன்;

இமவான் பெற்ற திருந்திழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலையரசன் பெண்ணான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


5)

மலைதனை ஒருவில் லாக்கி .. மாற்றலர் புர(ம்)மூன் றெய்தான்

தலைமலி மாலை தன்னைத் .. தலைக்கணி தலைவன் ஆர்க்கும்

அலைமலி கங்கை தன்னை .. அஞ்சடை அடைத்த அண்ணல்

சிலைமகள் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


மலைதனை ஒரு வில் ஆக்கி, மாற்றலர் புரம்-மூன்று எய்தான் - மேருமலையை வில்லாக வளைத்துப் பகைவர்களது முப்புரங்களை எய்தவன்; (மாற்றலர் - பகைவர்);

தலை மலி மாலைதன்னைத் தலைக்கு அணி தலைவன் - தலைக்குத் தலைமாலை அணிந்த தலைவன்;

ஆர்க்கும் அலை மலி கங்கைதன்னை அஞ்சடை அடைத்த அண்ணல் - ஒலிக்கின்ற அலைகள் மிக்க கங்கையை அழகிய சடையில் அடைத்த அண்ணல்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (அஞ்சடை - அம் சடை - அழகிய சடை);

சிலைமகள் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலைமகளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (சிலை - மலை); (திருப்புகழ் - திருத்தணிகை - "கலைமடவார்தம் .. .. சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்");


6)

வாவியார் பங்க யம்போல் .. மலர்விழி மாலிட் டேத்த

ஓவிலா வென்றி ஆழி .. உகந்தருள் பெம்மான் கொக்கின்

தூவியார் சென்னித் தூயன் .. சுரும்பினம் அமரும் ஓதித்

தேவியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


வாவி ஆர் பங்கயம்போல் மலர்விழி மால் இட்டு ஏத்த - குளத்தில் திகழும் தாமரைப்பூப் போலத் தன் மலர்க்கண்ணை இடந்து பூவாகத் திருவடியில் இட்டுத் திருமால் வழிபாடு செய்ய;

ஓவு இலா வென்றி ஆழி உகந்துஅருள் பெம்மான் - நீங்குதல் இல்லாத வெற்றியுடைய சக்கராயுதத்தை அருளிய பெருமான்; (ஓவு - நீங்குதல்; முடிதல்); (வென்றி - வெற்றி); (சம்பந்தர் தேவாரம் - 3.116.5 - "ஓவிலாதிடுங் கரணமே");

கொக்கின் தூவி ஆர் சென்னித் தூயன் - கொக்கின் இறகைத் திருமுடிமேல் சூடிய தூயவன்; (தூவி - இறகு); (கொக்கிறகு - ஒரு பூ; குரண்டாசுரனை அழித்த அடையாளம்);

சுரும்பு-இனம் அமரும் ஓதித் தேவி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - வண்டுகள் விரும்பும் கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (ஓதி - பெண்களின் கூந்தல்; ஓதித் தேவி - ஓதியை உடைய தேவி); (சம்பந்தர் தேவாரம் - 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை பேணின"); (பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 12.28.669 - "தெள்ளு நீர்விழித் தெரிவையார்")


7)

வில்விச யனுக்கு நல்க .. வேடனாய்ச் சென்ற வேந்தன்

வெல்விடை யான்வன் தொண்டர் .. வேண்டவும் ஆரூர் தன்னில்

நெல்விசும்(பு) அணாவத் தந்த .. நீர்மையன் மலையான் பெற்ற

செல்வியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


வில்விசயனுக்கு நல்க வேடனாய்ச் சென்ற வேந்தன் - வில்வித்தையில் சிறந்த அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருள்வதற்கு ஒரு வேடன் உருவில் சென்ற வேந்தன்;

வெல்விடையான் - வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடையவன்;

வன்தொண்டர் வேண்டவும் ஆரூர் தன்னில் நெல் விசும்பு அணாவத் தந்த நீர்மையன் - வன்தொண்டர் (சுந்தரர்) வேண்டியபடி திருவாரூரில் வானளாவ நெல்லைத் தந்தருளியவன்; (அணாவுதல் - கிட்டுதல்; நெருங்குதல்); (நீர்மை - தன்மை; சௌலப்பியம்); (* சுந்தரருக்குக் குண்டையூரில் நெல்மலை அளித்துப் பின் அவர் வேண்டியபடி ஈசன் அந்த நெல்மலையைத் திருவாரூரில் ஈந்த வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

மலையான் பெற்ற செல்வி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலையரசன் மகளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


8)

போயிரு வரையி டந்தான் .. பொன்முடி பத்த டர்த்து

வாயிரும் புகழைப் பாட .. வாளொடு நாளும் ஈந்தான்

ஆயிரம் பெயர்கள் உள்ளான் .. அரையினிற் புலியின் தோலன்

சேயிழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


போய் இரு-வரை இடந்தான் பொன்முடி பத்து அடர்த்து - சென்று பெரிய கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது கிரீடம் அணிந்த பத்துத்-தலைகளையும் நசுக்கி; (இருமை - பெருமை); (இடத்தல் - பெயர்த்தல்);

வாய் இரும்-புகழைப் பாட, வாளொடு நாளும் ஈந்தான் - (பின் இராவணனது) வாய்கள் ஈசனது பெரும்புகழைப் பாடவும் கேட்டு இரங்கி, அவனுக்கு வாளும் நீண்ட ஆயுளும் கொடுத்தவன்;

ஆயிரம் பெயர்கள் உள்ளான் - ஆயிரம் திருநாமங்கள் உடையவன்;

அரையினில் புலியின் தோலன் - அரையில் புலித்தோலைக் கட்டியவன்;

சேயிழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


9)

பெருந்தொடர் வாது செய்த .. பிரமனு(ம்) மாலு(ம்) நேட

அருந்தழல் ஆனான் போற்றி .. அடைமணி வாச கர்க்குக்

குருந்தமர் குரவன் ஆனான் .. கொடியன மென்ம ருங்குல்

திருந்திழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


பெரும்-தொடர்-வாது செய்த பிரமனும் மாலும் நேட அரும் தழல் ஆனான் - தொடர்ந்து மிகவும் வாது செய்த பிரமனும் திருமாலும் தேடுமாறு, அவர்களால் அறிவதற்கு அரிய ஜோதி ஆனவன்; (நேடுதல் - தேடுதல்);

போற்றி அடை மணிவாசகர்க்குக் குருந்து அமர் குரவன் ஆனான் - வணங்கி அடைந்த மாணிக்கவாசகருக்குக் குருந்தமரத்தின்கீழ்க் குரு ஆனவன்; (குரவன் - குரு);

கொடி அன மென் மருங்குல் திருந்திழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - கொடி போன்ற மெல்லிய இடையை உடைய உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (அன – அன்ன – ஒத்த); (மருங்குல் - இடை);


10)

பலபல பொய்கள் சொல்லிப் .. படுகுழித் தள்ளப் பார்க்கும்

கலதிகட் கெட்டா எந்தை .. கண்ணுதல் கழலை வாழ்த்தி

வலம்வரும் அன்பர்க் கின்பம் .. மல்கிட அருளும் வள்ளல்

சிலைமகள் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


பலபல பொய்கள் சொல்லிப், டுகுழித் தள்ளப் பார்க்கும் கலதிகட்கு எட்டா எந்தை கண்ணுதல் - பல பொய்களைச் சொல்லிப், (புன்னெறி என்ற) படுகுழியில் மக்களைத் தள்ள முயல்கின்ற தீயோருக்கு எட்டாதவன் நெற்றிக்கண்ணனான எம் தந்தை; (கலதி - தீக்குணம் உடையவன்);

கழலை வாழ்த்தி வலம்வரும் அன்பர்க்கு இன்பம் மல்கிட அருளும் வள்ளல் - திருவடியைப் போற்றிப் பிரதட்சிணம் செய்து வழிபடும் பக்தர்களுக்கு இன்பம் பொங்குமாறு அருள்கின்ற வள்ளல் அவன்;

சிலைமகள் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலைமகளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (சிலை - மலை);


11)

நாவினால் அஞ்செ ழுத்தை .. நாள்தொறும் நவிலும் அன்பர்

தீவினை ஆன தீர்த்துத் .. திருவருள் செய்யும் தேவன்

சேவினை விரும்பி ஏறி .. செங்கயல் அன்ன கண்ணி

தேவியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


நாவினால் அஞ்செழுத்தை நாள்தொறும் நவிலும் அன்பர் தீவினை ஆன தீர்த்துத் திருவருள் செய்யும் தேவன் - தங்கள் நாக்கால் திருவைந்தெழுத்தைத் தினமும் சொல்லும் அடியவர்களது பாவங்களையெல்லாம் தீர்த்து இன்னருள் செய்யும் இறைவன்; (நவில்தல் - சொல்லுதல்);

சேவினை விரும்பி ஏறி - இடபவாகனத்தை விரும்பியவன்; (ஏறி - ஏறுபவன்);

செங்கயல் அன்ன கண்ணி தேவி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - செங்கயல்மீன் போன்ற கண்களை உடையவளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.424 - நணா (பவானி) - விற்படை ஏந்தி

2018-02-28

P.424 - நணா (பவானி)

---------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - வேதியா வேத கீதா)


1)

விற்படை ஏந்திச் சென்று விசயனுக் கருள்செய் வேடர்

கற்சிலை கையில் ஏந்திக் கடியரண் மூன்றும் எய்தார்

பொற்சடை மீது திங்கள் புனைந்தவர் புலியின் தோலர்

நற்புனற் பொன்னிப் பாங்கர் நணாவுறை நாத னாரே.


விற்படை ஏந்திச் சென்று விசயனுக்கு அருள்செய் வேடர் - வேடன் உருவில் வில்லை ஏந்திப் போய் அர்ஜுனனுக்கு அருளியவர்; (படை - ஆயுதம்);

கற்சிலை கையில் ஏந்திக் கடி-அரண் மூன்றும் எய்தார் - மலையை வில்லாக ஏந்திக் காவல் மிக்க முப்புரங்களையும் எய்தவர்; (கல் - மலை); (சிலை - வில்); (கடி - காவல்);

பொற்சடை மீது திங்கள் புனைந்தவர் - பொன் போன்ற அழகிய சடையின்மேல் சந்திரனைச் சூடியவர்;

புலியின் தோலர் - புலித்தோலை ஆடையாக அணிந்தவர்;

நற்புனற்-பொன்னிப் பாங்கர் நணா உறை நாதனாரே - நல்ல நீர் மிக்க காவிரியின் பக்கத்தில் திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


2)

குறும்புசெய் நெஞ்ச னாகிக் குறுகிய மதன தாகம்

வெறும்பொடி ஆகு மாறு விழித்தருள் நெற்றிக் கண்ணர்

உறும்பிணி நீக்கி அன்பர்க் குறுதுணை ஆகி நிற்பார்

நறும்பொழில் புடைய ணிந்த நணாவுறை நாத னாரே.


குறும்பு செய் நெஞ்சனாகிக் குறுகிய மதனது ஆகம் வெறும்-பொடி ஆகுமாறு விழித்தருள் நெற்றிக்கண்ணர் - மலர்க்கணையை எய்து விஷமம் செய்ய வந்தடைந்த மன்மதனது உடல் முற்றும் எரிந்து வெறும்-சாம்பல் ஆகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவர்; (வெறுமை - கலப்பின்மை);

உறும் பிணி நீக்கி அன்பர்க்கு உறுதுணை ஆகி நிற்பார் - உற்ற பிணியைத் தீர்த்து அடியவர்களுக்கு நல்ல துணை ஆவார்;

நறும்-பொழில் புடை அணிந்த நணா உறை நாதனாரே - வாசமலர்ச் சோலை சூழ்ந்த திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


3)

புதியவர் ஆயின் சாலப் புராதனர் மலர்கள் தூவித்

துதிசெயும் அன்பர்க் கன்பர் சுடலையில் ஆடும் பாதர்

மதியுடன் நாகப் பாம்பு வாழ்சடை உடையார் பொன்னி

நதியுடன் பவானி கூடும் நணாவுறை நாத னாரே.


புதியவர், ஆயின் சாலப் புராதனர் - புதியவர், ஆனால் மிகப் பழையவர்;

மலர்கள் தூவித் துதிசெயும் அன்பர்க்கு அன்பர் - பூக்கள் தூவி வழிபடும் பக்தர்களுக்கு அன்பர்;

சுடலையில் ஆடும் பாதர் - சுடுகாட்டில் கூத்தாடும் திருப்பாதம் உடையவர்;

மதியுடன் நாகப்பாம்பு வாழ்சடை உடையார் - சந்திரனோடு நாகப்பாம்பும் வாழும் சடையை உடையவர்;

பொன்னி-நதியுடன் பவானி கூடும் நணா உறை நாதனாரே - காவிரியாறும் பவானி-நதியும் சங்கமிக்கும் திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


4)

ஆரியம் தமிழ்கொண் டேத்தி அடியிணை போற்றி னார்கள்

கோரிய வரங்க ளெல்லாம் கொடுத்தருள் செய்யும் வள்ளல்

ஏரியல் ஆலின் கீழே இருந்தறம் சொன்ன மூர்த்தி

நாரியைப் பங்கு கந்து நணாவுறை நாத னாரே.


ஆரியம் தமிழ்கொண்டு ஏத்தி அடியிணை போற்றினார்கள் கோரிய வரங்களெல்லாம் கொடுத்து அருள்செய்யும் வள்ளல் - வேதமந்திரங்களாலும் தேவாரம் முதலிய தமிழ்ப்-பாமாலைகளாலும் போற்றி இரு-திருவடிகளை வழிபட்டவர்கள் வேண்டிய எல்லா வரங்களையும் அளிக்கும் வள்ளல்;

ஏர் இயல் ஆலின் கீழே இருந்து அறம் சொன்ன மூர்த்தி - அழகிய கல்லால-மரத்தின்கீழ் இருந்து வேதப்பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தி; (ஏர் - அழகு; எழுச்சி);

நாரியைப் பங்கு உகந்து, நணா உறை நாதனாரே - உமையை ஒரு பாகமாக விரும்பித், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


5)

அஞ்செழுத் தோது மாணி ஆருயிர் தன்னைக் காத்து

வெஞ்சினக் கூற்று தைத்த விரைகமழ் கமல பாதர்

அஞ்சிய உம்பர் உய்ய அமுதினை அருள்பு ரிந்து

நஞ்சினை உண்ட கண்டர் நணாவுறை நாத னாரே.


அஞ்செழுத்து ஓது மாணி ஆருயிர் தன்னைக் காத்து - திருவைந்தெழுத்தை ஓதிய மார்க்கண்டேயரது அரிய உயிரைக் காத்து;

வெஞ்சினக் கூற்று உதைத்த விரைகமழ் கமல-பாதர் - கொடிய சினம் மிக்க நமனை மணம் கமழும் தாமரை போன்ற பாதத்தால் உதைத்தவர்;

அஞ்சிய உம்பர் உய்ய அமுதினை அருள்புரிந்து - பயந்த தேவர்கள் உய்யும்படி அமுதத்தை அவர்களுக்கு அருள்புரிந்து;

நஞ்சினை உண்ட கண்டர் நணா உறை நாதனாரே - விடத்தை உண்ட நீலகண்டர், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


6)

தரையினில் ஆழி கீறிச் சலந்தரன் தனைத்த டிந்தார்

அரையினில் அரவ நாணர் அழகிய திங்கள் கொன்றை

திரைமத மத்தம் நாகம் செஞ்சடைச் சூடும் செல்வர்

நரைவிடைப் பாகர் நன்னீர் நணாவுறை நாத னாரே.


தரையினில் ஆழி கீறிச் சலந்தரன்தனைத் தடிந்தார் - நிலத்தில் ஒரு சக்கரத்தைக் வரைந்து அதுகொண்டு சலந்தரனை அழித்தவர்;

அரையினில் அரவ-நாணர் - அரைநாணாகப் பாம்பைக் கட்டியவர்;

அழகிய திங்கள், கொன்றை, திரை, மதமத்தம், நாகம் செஞ்சடைச் சூடும் செல்வர் - அழகிய சந்திரன், கொன்றைமலர், கங்கை, ஊமத்தமலர், பாம்பு இவற்றைச் செஞ்சடையில் செஞ்சடையில் அணிந்த செல்வர்; (திரை - அலை; நதி);

நரைவிடைப் பாகர் நன்னீர் நணா உறை நாதனாரே - வெள்ளை-இடபத்தை ஊர்தியாக உடையவர், நல்ல நீர் மிக்க திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்; (நரை - வெண்மை);


7)

செங்கையில் ஓடொன் றேந்திச் சில்பலிக் குழலும் செல்வர்

கங்குலிற் பூதம் சூழக் கானிடை ஆடும் கூத்தர்

சங்கரர் சீறும் பாம்பைத் தாரெனப் பூண்ட மார்பர்

நங்கையைப் பங்கு கந்து நணாவுறை நாத னாரே.


செங்கையில் ஓடு-ஒன்று ஏந்திச் சில்பலிக்கு உழலும் செல்வர் - சிவந்த கரத்தில் பிரமனது மண்டையோட்டை ஏந்திச் சிறிய அளவில் இடும் உணவை ஏற்கத் திரியும் செல்வர்; (சுந்தரர் தேவாரம் - 7.45.5 - "சென்றவன் சில்பலிக்கென்று தெருவிடை");

கங்குலில் பூதம் சூழக் கானிடை ஆடும் கூத்தர் - இருளில் பூதகணங்கள் சூழச் சுடுகாட்டில் கூத்தாடுபவர்;

சங்கரர் - நன்மையைச் செய்பவர்;

சீறும் பாம்பைத் தார் எனப் பூண்ட மார்பர் - சீறும் நாகத்தை மாலையாக மார்பில் அணிந்தவர்;

நங்கையைப் பங்கு உகந்து, நணா உறை நாதனாரே - உமையை ஒரு பாகமாக விரும்பித், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


8)

முக்கணர் மலையைப் பத்து முடியுடை அரக்கன் பேர்த்த

அக்கணம் விரலொன் றூன்றி அடர்த்தழ வைத்த ஈசர்

மிக்கிகழ் தக்கன் செய்த வேள்வியைச் செற்ற வீரர்

நக்கெயில் மூன்றெ ரித்து நணாவுறை நாத னாரே.


முக்கணர் மலையைப் பத்து-முடியுடை அரக்கன் பேர்த்த அக்கணம் விரல்-ஒன்று ஊன்றி அடர்த்து அழவைத்த ஈசர் - முக்கண்ணரான சிவபெருமானார் உறையும் கயிலைமலையைப் பத்துத்தலை அரக்கனான இராவணன் பெயர்த்த அச்சமயத்தில் பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கி அழவைத்த ஈசனார்;

மிக்கு இகழ் தக்கன் செய்த வேள்வியைச் செற்ற வீரர் - செருக்குற்றுச் சிவனாரை இகழ்ந்த தக்கன் செய்த அவவேள்வியை அழித்த வீரர்; (மிகுதல் - செருக்குறுதல்);

நக்கு எயில் மூன்று எரித்து, நணா உறை நாதனாரே - சிரித்து முப்புரங்களை எரித்துத், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


9)

ஆனிரை மேய்த்தான் பூமேல் அயனிவர் மண்ண கழ்ந்தும்

வானிலு யர்ந்தும் நேடி வாடிட ஓங்கு சோதி

மானிகர் நோக்கி பங்கர் மார்பினில் நூலர் என்றும்

ஞானியர் நெஞ்சை நீங்கார் நணாவுறை நாத னாரே.


ஆனிரை மேய்த்தான், பூமேல் அயன் இவர் மண் அகழ்ந்தும் வானில் உயர்ந்தும் நேடி வாடிட ஓங்கு சோதி - (கிருஷ்ணாவதாரத்தில்) பசுக்கூட்டத்தை மேய்த்த திருமாலும் தாமரைமேல் உறையும் பிரமனும் நிலத்தை அகழ்ந்தும் வானில் பறந்து சென்றும் அடிமுடி தேடி வாடும்படி எல்லையின்றி ஓங்கிய ஒளித்தூண் ஆனவர்; (ஆனிரை - ஆன் நிரை - பசுக்கூட்டம்); (நேடுதல் - தேடுதல்);

மான் நிகர் நோக்கி பங்கர் - மான் போன்ற மருண்ட பார்வையையுடைய உமையைப் பங்கில் உடையவர்;

மார்பினில் நூலர் - மார்பில் பூணூல் அணிந்தவர்;

என்றும் ஞானியர் நெஞ்சை நீங்கார், நணா உறை நாதனாரே - எப்பொழுதும் ஞானியர் நெஞ்சில் நிலைத்தவர், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


10)

புன்னெறி வீணர் சொல்லும் பொய்களில் மதிம யங்கேல்

முன்னறி வாளர் சென்று முத்திய டைந்த அந்தச்

செந்நெறி சிந்தை செய்து சிவசிவ என்பார் கட்கு

நன்னெறி காட்டும் நம்பர் நணாவுறை நாத னாரே.


புன்னெறி வீணர் சொல்லும் பொய்களில் மதி மயங்கேல் - சிறுநெறிகளில் செல்லும் வீணர்கள் சொல்லும் பொய்களைக் கேட்டு மயங்கவேண்டா; (வீணர் - பயனற்றோர்);

முன் அறிவாளர் சென்று முத்தி அடைந்த அந்தச் செந்நெறி சிந்தை செய்து சிவசிவ என்பார்கட்கு - ஞானம் மிக்க முன்னோர் சென்று முக்தி பெற்றதான சிறந்த வேதநெறியைக் கருதிச், "சிவசிவ" என்று சொல்லி வழிபடும் பக்தர்களுக்கு;

நன்னெறி காட்டும் நம்பர் நணா உறை நாதனாரே - நற்கதி கொடுக்கும் பெருமானார், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்; (அப்பர் தேவாரம் - 5.90.2 - "நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே");


11)

பெண்ணினார் ஒருபால் போற்றிப் பெருந்துயர் தீரீர் என்ற

விண்ணினார்க் கிரங்கி அன்று வியன்புரம் மூன்றை நாசம்

பண்ணினார் உள்நெ கிழ்ந்து பண்ணினார் தமிழ்கள் பாடி

நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நணாவுறை நாத னாரே.


பெண்ணினார் ஒருபால் - உமையை இடப்பக்கம் ஒரு பாகமாக உடையவர்;

போற்றிப், "பெருந்-துயர் தீரீர்" என்ற விண்ணினார்க்கு இரங்கி அன்று வியன்-புரம்-மூன்றை நாசம் பண்ணினார் - "பெருந்-துன்பத்தைத் தீர்த்து அருளுங்கள்" என்று போற்றி வணங்கிய தேவர்களுக்கு இரங்கி முன்பு பெரிய முப்புரங்களையும் அழித்தவர்; (வியன் - பெருமை);

உள் நெகிழ்ந்து பண்ணின் ஆர் தமிழ்கள் பாடி நண்ணினார் வினைகள் தீர்ப்பார் - மனம் உருகிப் பண்கள் பொருந்திய தேவாரப் பாடல்கள் பாடித் திருவடியைச் சரணடைந்தவர்களது வினைகளைத் தீர்ப்பவர்;

நணா உறை நாதனாரே - திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.423 - அவிநாசி - உதவிடாய் என்றொரு

2018-02-25

P.423 - அவிநாசி

---------------------------------

(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பு)

(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.90.1 - மாசில் வீணையும்)

* தேவாரத்தில் - புக்கொளியூர் அவிநாசி;

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

உதவி டாயென் றொருதொண்டர் வேண்டவு(ம்)

முதலை உண்டஅப் பாலனைத் தந்தவன்

முதலி லாதவன் முன்னெதிர் ஆனையின்

அதளைப் போர்த்த அவிநாசி அப்பனே.


"உதவிடாய்" என்று ஒரு தொண்டர் வேண்டவும் முதலை உண்ட அப்-பாலனைத் தந்தவன் - "உதவி செய்வாயாக" என்று ஒப்பற்ற வன்தொண்டர் இறைஞ்சவும், முன்பு முதலை உண்ட அச்சிறுவனை மீண்டும் தந்து அருளிய பெருமான்; (தொண்டர் - வன்தொண்டர் - ஏகதேசம்); (சுந்தரர் தேவாரம் - 7.92.4 - "முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே"); (* முதலை உண்ட பாலகனை மீண்டும் உயிரோடு வருவித்தது - சுந்தரர் வரலாற்றில் இத்தலத்தில் நிகழ்ந்த அதிசயம்);

முதல் இலாதவன் - ஆதி இல்லாதவன் (= என்றும் உள்ளவன்);

முன் எதிர்-ஆனையின் அதளைப் போர்த்த அவிநாசி அப்பனே - முன்பு எதிர்த்துப் போர்செய்த யானையின் தோலை உரித்துப் போர்த்த அவிநாசி அப்பன்; (அதள் - தோல்);


2)

வந்து வன்றொண்டர் வாழ்த்த முதலையுண்

அந்த ணச்சிறு வன்தனைத் தந்தவன்

வெந்த வெண்பொடி பூசிய வித்தகன்

அந்தி வண்ணன் அவிநாசி அப்பனே.


வந்து வன்றொண்டர் வாழ்த்த முதலை உண் அந்தணச் சிறுவன்தனைத் தந்தவன் - குளக்கரைக்கு வந்து சுந்தரர் பதிகம் பாடி வாழ்த்தவும், முன்பு முதலை உண்ட அந்தணச் சிறுவனை மீண்டும் அளித்தவன்;

வெந்த வெண்-பொடி பூசிய வித்தகன் - சுட்ட வெண்-திருநீற்றைப் பூசியவன், ஞான-வடிவினன்; சர்வ-வல்லமை உடையவன்;

அந்தி-வண்ணன் அவிநாசி அப்பனே - மாலை-நேரத்துச் செவ்வானம் போன்ற நிறத்தை உடையவனான அவிநாசி அப்பன்;


3)

அம்பை எய்ம்மதன் ஆகம் எரித்தவன்

செம்பொன் மேனியன் தெண்டிரை வேணியன்

என்பும் பூண்டவன் இன்தமிழ் பாடிடும்

அன்பர்க் கன்பன் அவிநாசி அப்பனே.


அம்பை எய்ம்-மதன் ஆகம் எரித்தவன் - கணை எய்த மன்மதனது உடலை எரித்தவன்; (* எய்ம்மதன் - புணர்ச்சியில் மகரஒற்று மிகும்); (ஆகம் - உடல்);

செம்பொன் மேனியன் - செம்பொன் போன்ற திருமேனி உடையவன்;

தெண்-திரை வேணியன் - தெளிந்த அலைகளையுடைய கங்கையைச் சடையில் உடையவன்;

என்பும் பூண்டவன் - எலும்பையும் அணிந்தவன்; (உம் - எச்சவும்மை; சிறப்பும்மை என்றும் கொள்ளல் ஆம்);

இன்-தமிழ் பாடிடும் அன்பர்க்கு அன்பன் அவிநாசி அப்பனே - இனிய தமிழ்ப்-பாமாலைகள் பாடும் பக்தர்களுக்கு அன்பு உடையவன் அவிநாசி அப்பன்;


4)

ஊறும் அன்பால் உருகும் அடியவர்

கூறும் யாவையும் ஏற்றருள் கொள்கையன்

நீறு பூசிய நெற்றியிற் கண்ணினன்

ஆறு சூடி அவிநாசி அப்பனே.


ஊறும் அன்பால் உருகும் அடியவர் கூறும் யாவையும் ஏற்று அருள் கொள்கையன் - அன்பின் பெருக்கால் உருகுகின்ற பக்தர்கள் சொல்லும் எவற்றையும் ஏற்று அருள்பவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.71.1 - "கோழைமிடறாக கவி-கோளும் இலவாக இசை கூடும்வகையால் ஏழை அடியாரவர்கள் யாவைசொன சொல் மகிழும் ஈசன்");

நீறு பூசிய நெற்றியில் கண்ணினன் - நெற்றியில் திருநீற்றைப் பூசியவன்; நெற்றிக்கண்ணன்;

ஆறு சூடி அவிநாசி அப்பனே - கங்காதரன் அவிநாசி அப்பன்;


5)

பல்லில் சென்று பலிதேர் பெருமையன்

அல்லல் செய்த அரண்பட மாமலை

வில்லிற் பாம்பினை வீக்கிய வித்தகன்

அல்லில் ஆடி அவிநாசி அப்பனே.


பல்-இல் சென்று பலி தேர் பெருமையன் - பல இல்லங்களுக்குப் போய்ப் பிச்சை ஏற்கும் பெருமை உடையவன்; (பலி - பிச்சை);

அல்லல் செய்த அரண் பட மாமலை-வில்லில் பாம்பினை வீக்கிய வித்தகன் - தேவர்களுக்குத் துன்பம் தந்த முப்புரங்களும் அழிய மேருமலையை வில்லாக்கி அதனில் வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டிய ஆற்றலுள்ளவன்; (படுதல் - அழிதல்);

அல்லில் ஆடி அவிநாசி அப்பனே - இரவில் திருநடம் செய்பவன் அவிநாசி அப்பன்; (அல் - இருள்; இரவு);


6)

தொண்டர் கட்குத் துணையென நிற்பவன்

அண்டி உம்பர் அடிதொழ நஞ்சினை

உண்ட கண்டன்பல் லூழிகள் கண்டவன்

அண்டர் அண்டன் அவிநாசி அப்பனே.


தொண்டர்கட்குத் துணை என நிற்பவன் - அடியவர்களுக்குத் துணை ஆகி நிற்பவன்;

அண்டி உம்பர் அடிதொழ நஞ்சினை உண்ட கண்டன் - தேவர்கள் சரணடைந்து திருவடியை வணங்க, இரங்கி விடத்தை உண்ட நீலகண்டன்; (கண்டன் - 1. கண்டத்தை உடையவன்; 2. வீரன்);

பல்-ஊழிகள் கண்டவன் - பல ஊழிக்காலங்களைக் கடந்து நிற்பவன் (= காலத்தைக் கடந்தவன்);

அண்டர்-அண்டன் அவிநாசி அப்பனே - தேவதேவன் அவிநாசி அப்பன்;


7)

உச்சி மேலர வொண்மதி சூடிய

பிச்சன் ஆயிரம் பேருடைப் பிஞ்ஞகன்

நச்சி நாளு(ம்) நறுமலர் தூவினார்

அச்சம் தீர்க்கும் அவிநாசி அப்பனே.


உச்சிமேல் அரவு ஒண்மதி சூடிய பிச்சன் - திருமுடிமேல் பாம்பையும் ஒளிவீசும் திங்களையும் சூடிய பேரருளாளன்; (பிச்சன் - பித்தன் - பேரருளாளன்);

ஆயிரம் பேருடைப் பிஞ்ஞகன் - ஆயிரம் திருநாமங்கள் உடையவன்; தலைக்கோலம் உடையவன்;

நச்சி நாளும் நறுமலர் தூவினார் அச்சம் தீர்க்கும் அவிநாசி அப்பனே - விரும்பித் தினமும் வாசமலர்களைத் தூவி வழிபடும் பக்தர்களது அச்சத்தைத் தீர்க்கின்ற (/தீர்ப்பான்) அவிநாசி அப்பன்;


8)

தானஞ் சாது தடவெற் பிடந்தவன்

கானஞ் செய்யக் கழல்விரல் ஊன்றினான்

வானஞ் செல்லு(ம்) மதியம் புனைந்தவன்

ஆனஞ் சாடும் அவிநாசி அப்பனே.


தான் அஞ்சாது தட-வெற்பு இடந்தவன் கானம் செய்யக் கழல்விரல் ஊன்றினான் - கொஞ்சமும் பயமின்றிப் பெரிய கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் இசை பாடும்படி அவனைக் கால்விரலை ஊன்றி நசுக்கியவன்;

வானம் செல்லும் மதியம் புனைந்தவன் - வானில் செல்லும் திங்களை அணிந்தவன்;

ஆன்-அஞ்சு ஆடும் அவிநாசி அப்பனே - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் அபிஷேகம் செய்யப்பெறும் அவிநாசி அப்பன்;


9)

பாரும் விண்ணும் பறந்தகழ்ந் தார்மயல்

தீரும் வண்ணம் திகழெரி ஆனவன்

ஊரும் பாம்பே ஒருபெருந் தாரென

ஆரு(ம்) மார்பன் அவிநாசி அப்பனே.


பாரும் விண்ணும் பறந்து அகழ்ந்தார் மயல் தீரும் வண்ணம் திகழ் எரி ஆனவன் - மண்ணை அகழ்ந்தும் விண்ணில் பறந்தும் தேடிய திருமால் பிரமன் இவர்களது மயக்கம் தீரும்படி விளங்கிய ஜோதி ஆனவன்;

ஊரும் பாம்பே ஒரு பெரும்-தார் என ஆரும் மார்பன் - ஊர்கின்ற பாம்பையே ஒரு சிறந்த மாலையாக மார்பில் அணிபவன்;

அவிநாசி அப்பனே - அவிநாசி அப்பன்;


10)

வெஞ்சொல் பேசிடும் வீணர்க் கருளிலான்

செஞ்சொல் மாலைகள் செப்பி அனுதினம்

நெஞ்சில் அன்பால் நினையும் அடியரை

அஞ்சல் என்பான் அவிநாசி அப்பனே.


வெஞ்சொல் பேசிடும் வீணர்க்கு அருள் இலான் - இகழ்ந்து பேசும் வீணர்களுக்கு அருள் இல்லாதவன்;

செஞ்சொல் மாலைகள் செப்பி அனுதினம் நெஞ்சில் அன்பால் நினையும் அடியரை - தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடித் தினமும் நெஞ்சில் அன்போடு நினைக்கின்ற பக்தர்களை;

அஞ்சல் என்பான் அவிநாசி அப்பனே - "அஞ்சேல்" என்று அருள்பவன் அவிநாசி அப்பன்;


11)

துணிவெண் திங்களைச் சூடி மிடற்றினில்

மணியன் வண்தமிழ் மாலைகள் கொண்டடி

பணியும் அன்பர் பழவினை தீர்த்தவர்க்

கணியன் ஆவன் அவிநாசி அப்பனே.


துணி வெண் திங்களைச் சூடி - வெண்திங்கள் துண்டத்தைச் சூடியவன்;

மிடற்றினில் மணியன் - கண்டத்தில் நீலமணியை உடையவன்;

வண்-தமிழ் மாலைகள் கொண்டு அடி பணியும் அன்பர் பழவினை தீர்த்து - வளமிக்க தேவாரம் முதலிய தமிழ்ப்-பாமாலைகளால் திருவடியை வழிபடும் பக்தர்களது பழைய வினைகளையெல்லாம் தீர்த்து;

அவர்க்கு அணியன் ஆவன் அவிநாசி அப்பனே - அவ்வடியவர்களுக்குப் பக்கத்தில் துணையாகி இருப்பவன் அவிநாசி அப்பன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------