Saturday, October 29, 2022

06.05.026 - அம்புதை - (மடக்கு)

06.05 – பலவகை

2013-02-20

06.05.026 - அம்புதை - (மடக்கு)

----------------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)


அம்புதை சடையின் மேலோர்

.. அணிமதி சூடும் அண்ணல்

அம்புதை ஏவும் வேளை

.. அனங்கனாய் ஆக்கும் கண்ணன்

அம்புதை கேழற் பின்போய்

.. அருச்சுனற் கருளும் வேடன்

அம்புதை நாவ லூர்க்கோன்

.. அவர்முடி வைத்தான் தானே.


சொற்பொருள்:

அம் - நீர்; அழகு;

அம்பு - பாணம்; நீர்;

புதை - புதைத்தல் (ஒளித்துவைத்தல்); அம்பு;

தை - தைத்தல்; அம்பு முதலியன ஊடுருவுதல்;

கேழல் - பன்றி;

நாவலூர்க்கோன் - சுந்தரமூர்த்திநாயனார்;


அம்புதை - 1a. அம்+புதை சடை (நீரை உள்ளடக்கிய சடை); 1b. அம்பு+உதை சடை ( அலைமோதுகின்ற சடை) / 2. அம்+புதை ஏவும் வேளை (அழகிய அம்பு - மலர்க்கணை ஏவிய மன்மதனை); / 3. அம்பு+தை கேழல் (அம்பு தைத்த பன்றி); / 4. அம்பு+உதை (அன்பு உதை; அன்பு, 'அம்பு' என மருவியது).


(அப்பர் தேவாரம் - 5.1.1 - "அன்னம் பாலிக்கும் .... என்னம் பாலிக்கு மாறு ....." -- என் அன்பு எனப் பிரிக்க. அன்பு என்பது அம்பு என மருவிற்று. )


அம் புதை சடையின் மேல் ஓர் அணிமதி சூடும் அண்ணல் - கங்கையை ஒளித்த சடையின் மேல் அழகிய சந்திரனைச் சூடும் தலைவன்; ("அம்பு - நீர்" என்ற பொருளில், "அம்பு உதை சடை" என்றும் பிரித்துப் பொருள்கொள்ளல் ஆம். அலை மோதுகின்ற சடை);

அம் புதை ஏவும் வேளை அனங்கனாய் ஆக்கும் கண்ணன் - அழகிய மலர்க்கணையை ஏவிய மன்மதனை உடலற்றவன் ஆக்கிய நெற்றிக்கண்ணன்;

அம்பு தை கேழல்பின் போய் அருச்சுனற்கு அருளும் வேடன் - வேடனாகிக் காட்டில் அம்பு தைத்த பன்றிப்பின் சென்று அருச்சுனனுக்குப் பாசுபதம் அருளியவன்;

அம்பு-உதை நாவலூர்க்கோன் அவர் முடி வைத்தான்தானே - (திருவதிகையில் முதியவர் உருவில் சென்று) சுந்தரர் உறங்கும்போது அவர் தலையில் அன்போடு உதை வைத்த சிவபெருமானே!


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment