Friday, June 17, 2022

06.02.130 – பொது - மனத்தினை அலைத்திடும் - (வண்ணம்)

06.02.130 – பொது - மனத்தினை அலைத்திடும் - (வண்ணம்)


2010-10-18

6.2.130) மனத்தினை அலைத்திடும் - பொது

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்தன தனத்தன தனத்தன தனத்தன

தனத்தன தனத்தன .. தனதான )


(இருப்பவல் திருப்புகழ் - திருப்புகழ் - திருத்தணிகை)


மனத்தினை அலைத்திடும் இடர்க்கடல் அமிழ்த்திடும்

.. .. மயக்கினை விலக்கிடு .. வழியோதி

.. மறைப்பொருள் தனைத்தமிழ் தனிற்றரு திருக்கழு

.. .. மலத்தவர் அளித்தன .. பலபாடி

உனைத்தினம் நினைத்திரு வினைக்கரு வழித்திடும்

.. .. உளத்தினை எனக்கருள் .. புரியாயே

.. உரக்கயி றெனப்பட அரப்பிணை பொருப்பலை

.. .. உறக்கடை சுரர்க்கணம் அமுதாரக்

கனைத்தெழு கடற்கரு விடத்தினை மடுத்தணி

.. .. களத்திடை நிறுத்திய .. தயையானே

.. கயற்கணி உமைக்கிடம் அளித்திடும் அருத்திய

.. .. கதைப்படை நமற்பட உதைகாலா

வனத்திடை அருச்சுனன் இயற்றிய தவத்தினை

.. .. மதித்தொரு படைக்கலன் அருள்வேடா

.. மதிப்பிறை தனைக்குளிர் திரைப்புனல் நிலைத்துழல்

.. .. மலர்ச்சடை மிசைப்புனை பெருமானே.


பதம் பிரித்து:

மனத்தினை அலைத்திடும், இடர்க்கடல் அமிழ்த்திடும்,

மயக்கினை விலக்கிடு வழி ஓதி,

மறைப்பொருள்தனைத் தமிழ்தனில் தரு திருக்கழு

மலத்தவர் அளித்தன பல பாடி,


உனைத் தினம் நினைத்து, இருவினைக்-கரு அழித்திடும்

உளத்தினை எனக்கு அருள் புரியாயே;

உரக்-கயிறு எனப் பட-அரப் பிணை பொருப்பு அலை

உறக் கடை சுரர்க்-கணம் அமுது ஆரக்,


கனைத்து எழு கடற்-கரு விடத்தினை மடுத்து, அணி

களத்திடை நிறுத்திய தயையானே;

கயற்கணி உமைக்கு இடம் அளித்திடும் அருத்திய;

கதைப்-படை நமற்-பட உதை காலா;


வனத்திடை அருச்சுனன் இயற்றிய தவத்தினை

மதித்து, ஒரு படைக்கலன் அருள் வேடா;

மதிப்பிறைதனைக் குளிர்-திரைப்புனல் நிலைத்து உழல்

மலர்ச்-சடைமிசைப் புனை பெருமானே.


மனத்தினை அலைத்திடும், இடர்க்கடல் அமிழ்த்திடும், மயக்கினை விலக்கிடு வழிதி - மனத்தை அலையச் செய்கின்றதும், துன்பக்கடலில் ஆழ்த்துபதுமான அறீயாமையை விலக்கும் வழியை உலகோருக்கு உபதேசித்து; (அலைத்தல் - அலையச்செய்தல்; வருத்துதல்); (மயக்கு - மயக்கம்; அறியாமை); (ஓதுதல் - சொல்லுதல்; பாடுதல்);

மறைப்பொருள்தனைத் தமிழ்தனில் தரு திருக்கழுமலத்தவர் அளித்தன பல பாடி - வேதப்பொருளைத் தமிழில் தந்தருளிய, திருக்கழுமலம் என்ற பெயருமுடைய சீகாழியில் அவதரித்தவரான சம்பந்தர் அருளிய பாமாலைகள் பலவும் பாடி;

உனைத் தினம் நினைத்து, ருவினைக்-கரு ழித்திடும் உளத்தினை எனக்கு அருள் புரியாயே - உன்னைத் தினமும் தியானித்து, இருவினையை வேரறுக்க விரும்பும் மனத்தை எனக்கு அருள்வாயாக;


உரக்-கயிறு எனப் பட-அரப் பிணை பொருப்பு அலை உறக் கடை சுரர்க்-கணம் அமுது ஆரக் - வலிய கயிறு என்று படம் திகழும் பாம்பைக் கட்டிய மேருமலை என்ற மத்தைப் பாற்கடலில் இட்டுக் கடைந்த தேவர்கூட்டம் அமுதத்தை உண்ணுமாறு; (உரம் - வலிமை); (படம் - பாம்பின் படம்); (அர - அரா - பாம்பு); (பிணைத்தல் - இணைத்தல்; கட்டுதல்); (பொருப்பு - மலை); (அலை - கடல்); (கணம் - கூட்டம்); (ஆர்தல் - உண்ணுதல்);

கனைத்து எழு கடற்-கரு விடத்தினை மடுத்து, அணி களத்திடை நிறுத்திய தயையானே - அலை ஒலித்து எழும் அக்கடலில் தோன்றிய கரிய நஞ்சினை உண்டு, அழகிய கண்டத்தில் வைத்த அருளுடையவனே; (கனைத்தல் - ஒலித்தல்); (மடுத்தல் - உண்ணுதல்); (அணி - அழகு); (களம் - கண்டம்); (தயையான் - தயை உடையவன்; தயை - கருணை; அருள்);

கயற்கணி உமைக்கு இடம் அளித்திடும் அருத்திய - கயல் போன்ற கண்ணை உடைய உமைக்கு இடப்பாகத்தை அளித்த அன்பினனே; (கயற்கணி - கயற்கண்ணி - இடைக்குறையாக வந்தது); (அருத்தி - அன்பு);

கதைப்-படை நமற்-பட உதை காலா - கதாயுதத்தை ஏந்தும் காலன் அழியும்படி அவனை உதைத்தருளியவனே (காலகாலனே); (கதை - தண்டாயுதம்); (படை - ஆயுதம்); (படுதல் - சாதல்; அழிதல்); (நமற்பட - நமனை அழியும்படி; இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருள் தெளிவுபடுமாறு முதற்சொல்லின் இறுதியில் உள்ள னகர ஒற்று றகர ஒற்றாகத் திரியும்);


வனத்திடை அருச்சுனன் இயற்றிய தவத்தினை மதித்து, ரு படைக்கலன் அருள் வேடா - காட்டில் அருச்சுனன் செய்த தவத்தை மெச்சி அவனுக்கு ஒப்பற்ற பாசுபட்ஹாஸ்திரத்தை அருளிய வேடனே;

மதிப்பிறைதனைக் குளிர்-திரைப்புனல் நிலைத்துழல் மலர்ச்-சடைமிசைப் புனை பெருமானே - பிறைச்சந்திரனைக் குளிர்ந்த அலையுடைய கங்கை என்றும் தங்கித் திரிகின்ற, மலர் அணிந்த சடையின்மேல் அணிந்த பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment