Monday, June 27, 2022

06.01.128 - சிவன் - கடல் - சிலேடை-3

06.01 – சிவன் சிலேடைகள்


2010-11-14

06.01.128 - சிவன் - கடல் - சிலேடை-3

-------------------------------------------------------

நங்கையுஞ் சேரும் நதிசேரும் ஆவிவரும்

மங்கல மாமழை கண்டமுறும் - பொங்கும்

அரவமும் பூண்டிருக்கும் அங்கரைக்கண் ஆழி

சிரமலி மாலைச் சிவன்.


சொற்பொருள்:

நங்கை - 1) நம் கை; / 2) நங்கை - பெண்;

ஆவிவரும் - 1) ஆவி வரும்; / 2) ஆ இவரும்;

இவர்தல் - ஏறுதல்; மீது ஊர்தல்;

மங்கல மாமழை - 1) மங்கலம் ஆம் மழை; / 2) மங்கல மா மழை;

மழை - 1) மேகத்திலிருந்து பொழியும் நீர்; / 2) கரிய மேகம்;

கண்டம் - 1) நிலப்பரப்பு; / 2) மிடறு; கழுத்து;

உறுதல் - 1) இருத்தல்; நிகழ்தல்; / 2) ஒத்தல்;

பொங்குதல் - 1) கொந்தளித்தல்; மிகுதல்; / 2) கோபித்தல்;

அரவம் - 1) சத்தம்; / 2) பாம்பு;

அங்கரைக்கண் - 1) அம் கரைக்கண்; / 2) அங்கு அரைக்கண்;

அம் - அழகு;

கண் - ஏழாம்வேற்றுமை உருபு;


கடல்:

நம் கையும் சேரும் நதி சேரும் - நாம் வணங்கும் புண்ணிய நதிகளெல்லாம் சென்று சேரும்; ("நம் கையும் சேரும் = கடல் நம்மால் தொடக்கூடியபடி உள்ளது" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

ஆவி வரும் - (கடலிலிருந்து) நீராவி வரும்;

மங்கலம் ஆம் மழை கண்டம் உறும் - (அது) வளத்தைத் தரும் மழையை நிலப்பரப்புகள் அடையும்;

பொங்கும் அரவமும் பூண்டிருக்கும் அம் கரைக்கண் - அழகிய கரையில் மிகுந்த ஒலியும் கொண்டிருக்கும்; ("பொங்கும் = கொந்தளிக்கும்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

ஆழி - கடல்;


சிவன்:

நங்கையும் சேரும் நதி சேரும் - உமாதேவியும் கங்கையும் சேர்ந்திருப்பர்;

ஆ இவரும் - இடபத்தின்மேல் ஏறுவான்;

மங்கல மாமழை கண்டம் உறும் - நன்மை தரும் அழகிய மேகத்தைக் கண்டம் ஒக்கும்; (நீலகண்டம்);

பொங்கும் அரவமும் பூண்டிருக்கும் அங்கு அரைக்கண் - சீறும் பாம்பையும் அரையில் நாணாகக் கட்டியிருப்பான்;

சிரமலி மாலைச் சிவன் - மண்டையோட்டு மாலை அணிந்த சிவபெருமான்;


பிற்குறிப்பு:

முன்னர் எழுதிய "கடல் - சிவன்" சிலேடைகள் - 03.04.025 & 03.04.093 - காண்க.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


2 comments: