Wednesday, September 3, 2025

P.450 - நெல்வேலி - மழவிடை ஏறும்

2018-09-10

P.450 - நெல்வேலி (திருநெல்வேலி)

-------------------------------

(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி");

(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்");


1)

மழவிடை ஏறும் அழகிய மன்னே .. வார்சடை மேற்பிறை உடையாய்

அழலினை ஒத்த செவ்வண மேனி .. அதன்மிசை நீற்றனே என்று

கழலிணை தன்னிற் கடிமலர் தூவிக் .. கைதொழு தேத்திடும் அடியார்

பழவினை தீர்க்கும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.


மழவிடை ஏறும் அழகிய மன்னே - இளைய இடபத்தை வாகனமாக உடைய அழகிய மன்னனே;

வார்சடைமேல் பிறை உடையாய் - நீண்ட சடைமேல் சந்திரனை அணிந்தவனே; (வார்தல் - நீள்தல்);

அழலினை ஒத்த செவ்வண மேனி அதன்மிசை நீற்றனே என்று - தீப் போன்ற செந்நிறம் திகழும் திருமேனியின்மேல் திருநீற்றைப் பூசியவனே என்று வாழ்த்தி;

கழலிணை-தன்னில் கடிமலர் தூவிக், கைதொழுது ஏத்திடும் அடியார் - இரு-திருவடிகளில் வாசமலர்களைத் தூவிக் கைகூப்பித் துதிக்கும் பக்தர்களது;

பழவினை தீர்க்கும் தாமிரபரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - பழைய வினைகளைத் தீர்ப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (தீர்க்கும் - தீர்ப்பான்; செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று); (பாங்கர் - பக்கம்);


2)

வெற்றிவெள் விடைமேல் ஏறிய வேந்தே .. வேதம தோதிய நாவா

குற்றமில் புகழாய் கூவிளம் கொன்றை .. குரவணி சடையனே என்று

நற்றமிழ் பாடி நறுமலர் தூவி .. நாள்தொறும் ஏத்திடும் அடியார்

பற்றெலாம் பாற்றும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.


வெற்றி-வெள்-விடைமேல் ஏறிய வேந்தே - வெற்றியுடைய வெள்ளை இடபவாகனத்தின்மேல் ஏறிய அரசனே;

வேதம்அது ஓதிய நாவா - வேதங்களைப் பாடியருளியவனே;

குற்றம் இல் புகழாய் - குற்றமற்ற புகழை உடையவனே;

கூவிளம் கொன்றை குரவு அணி சடையனே என்று - வில்வம், கொன்றைமலர், குராமலர் இவற்றையெல்லாம் சடையில் அணிந்தவனே என்று சொல்லி;

நற்றமிழ் பாடி நறுமலர் தூவி நாள்தொறும் ஏத்திடும் அடியார் - தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகளைப் பாடி வாசமலர்களைத் தூவித் தினமும் வழிபடும் பக்தர்களது;

பற்று எலாம் பாற்றும் தாமிர பரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - பந்தங்களை எல்லாம் அழிப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (பற்று - அகப்பற்றுப் புறப்பற்றுகளாகிய அபிமானங்கள்); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (பாற்றும் - அழிப்பான்; செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று); (திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.5 - "பற்றற நான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ");


3)

மாவங்கக் கடலின் வல்விடம் உண்ட .. மணிமிடற் றண்ணலே அரனே

நாவங்கம் ஆறு நான்மறை ஓது .. நம்பனே நாதனே என்று

பூவங்கைக் கொண்டு பொற்கழல் தன்னைப் .. போற்றிடும் பொற்புடை அடியார்

பாவங்கள் பாற்றும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.


மா-வங்கக் கடலின் வல்விடம் உண்ட மணிமிடற்று அண்ணலே அரனே - பெரிய அலையுடைய (/ மரக்கலங்கள் செல்லும்) கடலில் தோன்றிய கொடிய நஞ்சை உண்ட நீலகண்டனே, ஹரனே; (வங்கம் - அலை; படகு; கப்பல்); (மிடறு - கண்டம்);

நா அங்கம் ஆறு நான்மறை ஓது நம்பனே நாதனே என்று - திருநாவால் நால்வேதத்தையும் ஆறங்கத்தையும் ஓதியவனே, விரும்பத்தக்கவனே, தலைவனே என்று; (நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று - விரும்பத்தக்கவன்);

பூ அங்கைக்-கொண்டு பொற்கழல் தன்னைப் போற்றிடும் பொற்புடை அடியார் - பூக்களைக் கையிற்கொண்டு ஈசனது பொன்னடியைப் போற்றி வழிபடும் குணம் உடைய பக்தர்களது; (பொற்பு - அழகு; தன்மை); (அப்பர் தேவாரம் - 5.90.5 - "பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்");

பாவங்கள் பாற்றும் தாமிரபரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - பாவங்களை எல்லாம் அழிப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (பாற்றும் - அழிப்பான்; செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);


4)

சந்தங்கள் பாடித் தாள்தொழு மாணி .. தன்னுயிர் கொல்வதற் கெண்ணி

வந்தங்கண் சேர்ந்த மறலியைச் செற்ற .. மைந்தனே என்றுளம் உருகிச்

சிந்துங்கள் மலரைச் சேவடி இட்டுத் .. தினந்தொறும் போற்றிசெய் அடியார்

பந்தங்கள் பாற்றும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.


சந்தங்கள் பாடித் தாள்தொழு மாணிதன் உயிர் கொல்வதற்கு எண்ணி - வேதங்களைப் பாடித் திருவடியைத் தொழுத மார்க்கண்டேயரது உயிரைக் கொல்ல நினைந்து; (சந்தம் - வேதம்; சந்தப் பாடல்);

வந்து அங்கண் சேர்ந்த மறலியைச் செற்ற மைந்தனே என்று உளம் உருகிச் - அவ்விடம் வந்து சேர்ந்த நமனை உதைத்து அழித்த வீரனே என்று உள்ளம் நெகிழ்ந்து; (அங்கண் - அவ்விடம்); (மறலி - இயமன்); (செறுதல் - அழித்தல்); (மைந்தன் - வீரன்);

சிந்தும் கள் மலரைச் சேவடி இட்டுத் தினந்தொறும் போற்றிசெய் அடியார் - வாசனை கமழும் தேன் நிறைந்த பூக்களைச் சிவந்த திருவடியில் தூவித் தினமும் வழிபடுகின்ற பக்தர்களது; ( சிந்துதல் - ஒழுகுதல்; பரப்புதல்); (சிந்தும் கள் மலரை = 1. கள் சிந்தும் மலரை (தேன் ஒழுகும் பூவை); 2. மணம் சிந்தும் கள்-மலரை (வாசனை கமழும் தேன்மலரை));

பந்தங்கள் பாற்றும் தாமிரபரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - பந்தங்களை எல்லாம் அழிப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (பந்தம் - கட்டு; வினைக்கட்டு); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (பாற்றும் - அழிப்பான்; செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);


5)

வகைவகை யான மலர்களைத் தூவி .. வணங்கிய வானவர்க் கிரங்கி

நகையது கொண்டு நண்ணலர் புரங்கள் .. நாசம தாக்கினாய் என்று

புகையொடு தீபம் புதுமலர் கொண்டு .. பொன்னடி போற்றிசெய் அடியார்

பகைவினை பாற்றும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.


வகைவகையான மலர்களைத் தூவி வணங்கிய வானவர்க்கு இரங்கி - பலவிதப் பூக்களைத் தூவி வணங்கிய தேவர்களுக்கு இரங்கி;

நகைஅது கொண்டு நண்ணலர் புரங்கள் நாசம்அது ஆக்கினாய் என்று - ஒரு சிரிப்பால் பகைவர்களது முப்புரங்களையும் அழித்தவனே என்று; (நகை - சிரிப்பு); (நண்ணலர் - பகைவர்); (நகையது, நாசமது - இவற்றில் "அது" என்றது பகுதிப்பொருள்விகுதி);

புகையொடு தீபம் புதுமலர் கொண்டு பொன்னடி போற்றிசெய் அடியார் - தூபம், தீபம், நாண்மலர் இவற்றால் பொன் போன்ற திருவடியை வழிபாடு செய்யும் பக்தர்களது; (புகை - தூபம்);

பகைவினை பாற்றும் தாமிர பரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - பகையான வினையையெல்லாம் அழிப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (பகைவினை - 1. பகையாக உள்ள வினை; 2. பகையையும் வினையையும் என்று உம்மைத் தொகையாகவும் கொள்ளக்கூடும்); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (பாற்றும் - அழிப்பான்; செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);


6)

காலனைக் காய்ந்து பாலனைக் காத்த .. கண்ணுதல் அண்ணலே ஒருபால்

சேலன கண்ணி சேர்திரு மேனிச் .. செல்வனே நல்லனே என்று

பாலன நீற்றைப் பாங்குறப் பூசிப் .. பதமலர் பணிபவர் தம்மைப்

பாலனம் செய்யும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.


காலனைக் காய்ந்து பாலனைக் காத்த கண்ணுதல் அண்ணலே - காலனைச் சினந்து உதைத்துச், சிறுவரான மார்க்கண்டேயரைக் காத்த நெற்றிக்கண்ணனே;

ஒருபால் சேல் அன கண்ணி சேர் திருமேனிச் செல்வனே நல்லனே என்று - சேல்மீன் போன்ற கண்களையுடைய உமையைத் திருமேனியில் ஒரு பக்கம் பாகமாக உடைய செல்வனே, நல்லவனே, என்று சொல்லி; (அன - அன்ன - போன்ற);

பால் அன நீற்றைப் பாங்கு உறப் பூசிப் பதமலர் பணிபவர் தம்மைப் - பால் போன்ற வெண்ணிறம் உடைய திருநீற்றை அழகுறப் பூசித் திருவடித்தாமரையை வழிபடும் பக்தர்களை; (சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - "சுந்தரம் ஆவது நீறு");

பாலனம் செய்யும் தாமிரபரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - காப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (பாலனம் - பாதுகாத்தல்);


7)

எரியொரு கையில் ஏந்திய ஈசா .. இருளினில் திருநடம் புரிவாய்

கரியுரி போர்த்த கறையணி கண்டா .. கடும்புனற் கங்கையைக் கரந்த

புரிசடைப் பெருமான் என்றனு தினமும் .. போற்றிசெய் அடியவர் தம்மைப்

பரிவொடு காக்கும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.


எரி ஒரு கையில் ஏந்திய ஈசா - ஒரு கரத்தில் தீயை ஏந்திய ஈசனே;

இருளினில் திருநடம் புரிவாய் - இரவில் கூத்து ஆடுபவனே; (புரிதல் - செய்தல்);

கரி-உரி போர்த்த கறை அணி கண்டா - யானைத்தோலை மார்புறப் போர்த்த நீலகண்டனே; (உரி - தோல்);

கடும்புனல் கங்கையைக் கரந்த புரிசடைப் பெருமான் என்று - விரைந்து வந்த கங்கையைச் சடையில் ஒளித்த பெருமானே என்று துதித்து; (கரத்தல் - மறைத்தல்); (புரிதல் - சுருள்தல்; முறுக்குக்கொள்தல்); (அப்பர் தேவாரம் - 5.79.5 -"கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் தன்னைக்");

அனுதினமும் போற்றிசெய் அடியவர்-தம்மைப் - தினமும் வழிபடுகின்ற அடியவர்களை; (அனுதினம் - நாள்தோறும்); (உம் - அசை);

பரிவொடு காக்கும் தாமிரபரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - அன்போடு காப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (பரிவு - அன்பு );


8)

விடுவிடென் றோடி வெற்பிடந் தானை .. விரல்நுதி யால்நெரி செய்தாய்

சுடுபொடி பூசிச் சுடலையில் ஆடும் .. தூயனே நாயனே என்று

தொடுமலர் மாலை துணையடிச் சாத்தித் .. தொழுதெழும் அடியவர்க் கிரங்கிப்

படுதுயர் களையும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.


விடுவிடென்று ஓடி வெற்பு இடந்தானை விரல்-நுதியால் நெரி-செய்தாய் - விரைந்து ஓடிப் போய்க் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனைத் திருப்பாத-விரல்நுனியால் நசுக்கியவனே; (நுதி - நுனி); (நெரிசெய்தல் - நசுக்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.86.8 - "நிட்டுரன் உடலொடு நெடுமுடி ஒருபது நெரிசெய்தார்");

சுடுபொடி பூசிச் சுடலையில் ஆடும் தூயனே நாயனே என்று - சுட்ட திருநீற்றைப் பூசிச் சுடுகாட்டில் ஆடுகின்ற தூயவனே, தலைவனே, என்று துதித்து; (நாயன் - தலைவன்; கடவுள்);

தொடு-மலர்மாலை துணையடிச் சாத்தித் தொழுதெழும் அடியவர்க்கு இரங்கிப் - தொடுத்த பூமாலைகளை இரு-திருவடிகளில் சூட்டி வழிபடும் பக்தர்களுக்கு இரங்கி; (சாத்துதல் - அணிதல்); (துணை - இரண்டு; உதவி; காப்பு);

படு-துயர் களையும் தாமிர பரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - அவர்கள் படுகின்ற (/ அவர்களது கொடிய) துன்பத்தைத் தீர்ப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (படு - பெரிய; கொடிய); (படுதல் - துன்பம் அனுபவித்தல்); (பரிவு - அன்பு); (சம்பந்தர் தேவாரம் - 3.93.3 - "பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர்");


9)

நறைமலர் மேலான் நாரணன் இவர்கள் .. நண்ணுதற் கரும்பெருஞ் சோதீ

பறைபல ஆர்த்துப் பாரிடஞ் சூழப் .. படுபிணக் காட்டிடை ஆடீ

கறையணி கண்டா என்றடி போற்றிக் .. கைதொழும் அடியவர் வினைகள்

பறைவுற அருளும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.


நறைமலர் மேலான் நாரணன் இவர்கள் நண்ணுதற்கு அரும் பெரும் சோதீ - வாசமலரான தாமரைமேல் உறையும் பிரமன், திருமால் என்ற இவ்விருவராலும் அடைய ஒண்ணாத அரிய பெரிய ஜோதியே;

பறை பல ஆர்த்துப் பாரிடம் சூழப் படுபிணக்காட்டிடை ஆடீ - பல பறைகளை முழக்கிப் பூதங்கள் சூழ, இறந்த பிணங்களையுடைய சுடுகாட்டில் திருநடம் ஆடுபவனே; (படுதல் - சாதல்); (சுந்தரர் தேவாரம் - 7.98.4 - "படு பல்பிணக் காடரங்கா ஆடிய மாநடத்தான்");

கறை அணி கண்டா என்று அடி போற்றிக் கைதொழும் அடியவர் வினைகள் - நீலகண்டனே என்று திருவடியை வாழ்த்திக் கைகூப்பி வழிபடும் அடியவர்களது வினைகள் எல்லாம்;

பறைவு-உற அருளும் தாமிர பரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - அழியுமாறு அருள்வான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (பறைவு - அழிவு; பறைதல் - அழிதல்);


10)

தவமென நாளும் அவ(ம்)மிகச் செய்யும் .. சழக்கர்கள் சொற்களை விடுமின்

பவளமே அனைய மேனியிற் பாவை .. பங்கனே இறைவனென் றன்பால்

சிவசிவ என்று நீற்றினைப் பூசித் .. தினமடி இணைதொழும் அடியார்

பவபயம் தீர்க்கும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.


தவம் என நாளும் அவம் மிகச் செய்யும் சழக்கர்கள் சொற்களை விடுமின் - தவம் என்று எந்நாளும் மிகவும் இழிந்த செயல்களையே செய்யும் தீயவர்களது பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (சழக்கன் - தீயவன்);

பவளமே அனைய மேனியில் பாவை பங்கனே இறைவன் என்று அன்பால் - பவளம் போன்ற செம்மேனியில் உமையை ஒரு பங்காக உடையவனே இறைவன் என்று தெளிந்து, அன்போடு;

சிவசிவ என்று நீற்றினைப் பூசித் தினம் அடிஇணை தொழும் அடியார் - சிவசிவ என்று சொல்லித் திருநீற்றை அணிந்து தினந்தோறும் இரு-திருவடிகளை வணங்கும் அடியவர்களது;

பவபயம் தீர்க்கும் தாமிரபரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - வினைகளை அழித்துப் பிறவிப்பிணியைத் தீர்ப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (பவம் - பிறவி; பவபயம் - பிறவித்தொடரால் ஏற்படும் அச்சம்);


11)

துணிமதி யோடு சுழல்மலி கங்கை .. தூமலர் கூவிளம் நாகம்

அணிமுடி உடையாய் அமரர்கள் உய்ய .. அருவிடம் அமுதென உண்டு

மணியணி கண்டா மாதுமை பங்கா .. மலரடி சரணெனப் போற்றிப்

பணிபவர்க் கருளும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.


துணி-மதியோடு, சுழல்-மலி கங்கை, தூ-மலர், கூவிளம், நாகம், அணி முடி உடையாய் - நிலாத்துண்டம், சுழல் மிக்க கங்கை, தூய மலர்கள், வில்வம், பாம்பு இவற்றையெல்லாம் திருமுடிமேல் அணிந்தவனே; (துணி - துண்டம்); (கூவிளம் - வில்வம்);

அமரர்கள் உய்ய அருவிடம் அமுது என உண்டு மணி அணி கண்டா - தேவர்கள் உய்வதற்காக, உண்ணற்கரிய ஆலகாலத்தை அமுதம் போல உண்டு கண்டத்தில் நீலமணியை அணிந்தவனே;

மாது உமை பங்கா - மாதொருபாகனே;

மலரடி சரண் எனப் போற்றிப் பணிபவர்க்கு அருளும் தாமிரபரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - உன் மலர்ப்பாதமே துணை என்று போற்றி வணங்கும் அடியவர்களுக்கு அருள்வான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.449 - இடையாறு - சுழலார் கங்கை

2018-09-06

P.449 - இடையாறு

-------------------------------

(அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா காய் - வாய்பாடு)

(ஈற்றடியில் 1-5 சீர்களிடையே எதுகை)

(சம்பந்தர் தேவாரம் - 1.73.1 - "வானார் சோதி மன்னு சென்னி")

(சுந்தரர் தேவாரம் - 7.95.1 - "மீளா அடிமை")


1)

சுழலார் கங்கை உலவு சடைமேல் தூய மதிசூடி

அழலார் மேனி அதன்மேல் எங்கும் அரவம் அணியண்ணல்

கழலார் பாதம் தொழுதார் தம்மைக் காக்கும் அருளாளர்

எழிலார் சோலை இடையா றமர்ந்த அழியாப் புகழாரே.


சுழல் ஆர் கங்கை உலவு சடைமேல் தூய மதி சூடி - சுழல்கள் பொருந்திய கங்கைநதி உலவுகின்ற சடைமீது தூய திங்களைச் சூடியவர்;

அழல் ஆர் மேனி அதன்மேல் எங்கும் அரவம் அணி அண்ணல் - தீப் போன்ற செம்மேனியின்மேல் பல பாம்புகள் அணிந்த தலைவர்; (அழல் - தீ); (ஆர்தல் - ஒத்தல்);

கழல் ஆர் பாதம் தொழுதார்தம்மைக் காக்கும் அருளாளர் - கழல் அணிந்த திருவடியை வணங்கியவர்களைக் காக்கின்ற அருளாளர்;

எழில் ஆர் சோலை இடையாறு அமர்ந்த – அழகிய பொழில் சூழ்ந்த திருஇடையாற்றில் உறைகின்ற;

அழியாப் புகழாரே - அழியாத புகழை உடைய சிவபெருமானார்;


2)

வாரார் கொங்கை மங்கை தன்னை வாமம் மகிழீசர்

காரார் கண்டர் மார்பில் நூலர் கையில் மழுவாளர்

சீரார் பாதம் தொழுதார் வினையைத் தீர்க்கும் அருளாளர்

ஏரார் சோலை இடையா றமர்ந்த நீரார் சடையாரே.


வார் ஆர் கொங்கை மங்கை-தன்னை வாமம் மகிழ் ஈசர் - கச்சு அணிந்த ஸ்தனங்களையுடைய உமையை இடப்பாகமாக விரும்பிய ஈசர்; (வார் - முலைக்கச்சு); (வாமம் - இடப்பக்கம்);

கார் ஆர் கண்டர் - மேகம் போன்ற கரிய கண்டம் உடையவர்; (கார் - கருமை; மேகம்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்; ஒத்தல்);

மார்பில் நூலர் - மார்பில் பூணூலை அணிந்தவர்;

கையில் மழுவாளர் - கையில் மழுவாளை ஏந்தியவர்;

சீர் ஆர் பாதம் தொழுதார் வினையைத் தீர்க்கும் அருளாளர் - நன்மையும் அழகும் பொருந்திய திருவடியை வணங்கியவர்களது வினையைத் தீர்க்கின்ற அருளாளர்;

ஏர் ஆர் சோலை இடையாறு அமர்ந்த – அழகிய பொழில் சூழ்ந்த திருஇடையாற்றில் உறைகின்ற;

நீர் ஆர் சடையாரே - கங்கையைச் சடையில் தாங்கிய சிவபெருமானார்;


3)

அசையா தனவும் அசையும் எவையும் ஆன ஒருதேவர்

தசையார் தலையில் பலிதேர் தலைவர் சடைமேற் பிறையாளர்

நசையால் நாளும் தொழுதார்க் கன்பர் நறையுண் டளிபாடும்

இசையார் சோலை இடையா றமர்ந்த விசையார் விடையாரே.


அசையாதனவும் அசையும் எவையும் ஆன ஒரு தேவர் - எல்லாப் பொருள்களிலும் எல்லா உயிர்களிலும் கலந்து இருப்பவர்; (சுந்தரர் தேவாரம் - 7.1.7 - "ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய் வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய்");

தசை ஆர் தலையில் பலிதேர் தலைவர் - புலால் பொருந்திய மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் தலைவர்; (சம்பந்தர் தேவாரம் - 1.25.8 - "ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை ஆனான்");

சடைமேற் பிறையாளர் - சடைமீது சந்திரனைச் சூடியவர்; (சம்பந்தர் தேவாரம் - 1.60.10 - "துளங்கும் இளம்-பிறையாளன் திருநாமம்");

நசையால் நாளும் தொழுதார்க்கு அன்பர் - அன்பால் தினமும் வணங்கும் பக்தர்களுக்கு அன்பர்; (நசை - விருப்பம்; அன்பு); (அப்பர் தேவாரம் - 4.29.5 - "அன்பருக் கன்பர் போலும்");

நறை உண்டு அளி பாடும் இசை ஆர் சோலை இடையாறு அமர்ந்த(பூக்களில்) தேனை உண்டு வண்டுகள் பாடுகின்ற இசை பொருந்திய பொழில் சூழ்ந்த திருஇடையாற்றில் உறைகின்ற; (நறை - தேன்); (அளி - வண்டு);

விசை ஆர் விடையாரே - விரைந்து செல்லும் இடபவாகனத்தை உடைய சிவபெருமானார்; (விசை - வேகம்); (அப்பர் தேவாரம் - 4.66.8 - "வேகமார் விடையர் போலும்");


4)

தலையே கலனாப் பலிதேர் சதுரர் அலைமூ வெயில்வேவ

மலையே சிலையா வளைவித் தெய்த மைந்தர் மலர்தூவி

அலையார் சடையாய் அருளென் பாரை அஞ்சல் எனுமீசர்

இலையார் சோலை இடையா றமர்ந்த தொலையாப் புகழாரே.


தலையே கலனாப் பலிதேர் சதுரர் - பிரமனது மண்டையோடே பிச்சைப்பாத்திரமாகக்கொண்டு பிச்சையேற்கும் ஆற்றல் மிக்கவர்; (தலை - மண்டையோடு); (கலனா - கலனாக); (பலிதேர்தல் - பிச்சையெடுத்தல்); (சதுரன் - சமர்த்தன்);

அலை-மூ-எயில் வேவ மலையே சிலையா வளைவித்து எய்த மைந்தர் - தேவர்களை வருத்திய, எங்கும் திரிந்த முப்புரங்களும் வெந்து அழியும்படி மேருமலையையே வில்லாக வளைத்து எய்த வீரர்; (அலைதல் - திரிதல்); (அலைத்தல் - வருத்துதல்); (சிலை - வில்); (மைந்தன் - வீரன்);

மலர் தூவி, "அலை ஆர் சடையாய் அருள்" என்பாரை "அஞ்சல்" எனும் ஈசர் - "கங்கையைச் சடையில் உடையவனே! அருள்வாயாக" என்று பூக்களைத் தூவி வழிபடும் பக்தர்களுக்கு அபயம் தரும் ஈசர்;

இலை ஆர் சோலை இடையாறு அமர்ந்த – இலைகள் நிறைந்த பொழில் சூழ்ந்த திருஇடையாற்றில் உறைகின்ற;

தொலையாப் புகழாரே - அழியாத புகழை உடைய சிவபெருமானார்;


5)

வெருளார் மனத்து விண்ணோர் வந்து விரையார் கழலேத்த

அருளால் அன்று நஞ்சை உண்டார் ஆல நிழல்வேதப்

பொருளோ தியவர் போற்றும் அடியார் பொல்லா வினைதீர்ப்பார்

இருளார் சோலை இடையா றமர்ந்த சுருளார் சடையாரே.


வெருள் ஆர் மனத்து விண்ணோர் வந்து விரை ஆர் கழல் ஏத்த – அச்சம் மிகுந்த மனத்தை உடைய தேவர்கள் வந்து மணம் கமழும் திருவடியை வணங்க; (வெருள் - அச்சம்);

அருளால் அன்று நஞ்சை உண்டார் - அவர்களுக்கு இரங்கிக் கருணையால் ஆலகால விடத்தை உண்டவர்;

லநிழல் வேதப்பொருள் ஓதியவர் - கல்லால-மரத்தின்கீழ் நான்மறைப்பொருளை உபதேசித்தவர்;

போற்றும் அடியார் பொல்லா வினை தீர்ப்பார் - போற்றுகின்ற அடியவர்களது தீவினையைத் தீர்ப்பவர்;

இருள் ஆர் சோலை இடையாறு அமர்ந்த – இருண்ட (அடர்ந்த) பொழில் சூழ்ந்த திருஇடையாற்றில் உறைகின்ற;

சுருள் ஆர் சடையாரே - சுருண்ட சடையை உடைய சிவபெருமானார்;


6)

உம்ப ரெல்லாம் ஒன்று கூடி உரைத்த மொழிகேட்டு

வம்பு நாறு வாளி எய்த மதனைப் பொடிசெய்தார்

நம்பி வாழ்த்து மாணி வாழ நமனை உதைபாதர்

இம்பர் ஏத்த இடையா றமர்ந்த செம்பொற் சடையாரே.


உம்பர் எல்லாம் ஒன்று கூடி உரைத்த மொழி கேட்டு - தேவரெல்லாம் திரண்டு வந்து சொன்ன பேச்சைக் கேட்டு; (உம்பர் - தேவர்);

வம்பு நாறு வாளி எய்த மதனைப் பொடிசெய்தார் - மணம் கமழும் அம்பினை எய்த மன்மதனைச் சாம்பலாக்கியவர்; (வம்பு - வாசனை); (நாறுதல் - மணம் கமழ்தல்); (வாளி - அம்பு);

நம்பி வாழ்த்து மாணி வாழ நமனை உதை பாதர் - விரும்பி வழிபாடு செய்த மார்க்கண்டேயர் என்றும் வாழும்படி கூற்றுவனைத் திருவடியால் உதைத்தவர்; (நம்புதல் - விரும்புதல்);

இம்பர் ஏத்த இடையாறு அமர்ந்த – இவ்வுலகோர் வழிபடத் திருஇடையாற்றில் உறைகின்ற; ( இம்பர் - இவ்வுலகம்);

செம்பொற்-சடையாரே - சிவந்த பொன் போன்ற சடையை உடைய சிவபெருமானார்;


7)

ஆற்றும் செயல்கள் அரனுக் கென்றே அன்பால் அடிநாளும்

போற்றும் அவர்கள் பொல்லா வினையைப் போக்கி அருளீசர்

நீற்றைப் பூசும் நெற்றிக் கண்ணர் நித்த மணவாளர்

ஏற்றுக் கொடியர் இடையா றமர்ந்த ஆற்றுச் சடையாரே.


ஆற்றும் செயல்கள் அரனுக்கு என்றே அன்பால் - செய்யும் எல்லாச் செயல்களும் ஈசன் தொண்டே ஆகும் பக்தியோடு; (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.19 - "எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க");

அடி நாளும் போற்றும் அவர்கள் பொல்லா வினையைப் போக்கி அருள் ஈசர் - திருவடியைத் தினமும் போற்றும் அன்பர்களது தீவினையைத் தீர்த்து அருளும் ஈசர்;

நீற்றைப் பூசும் நெற்றிக் கண்ணர் - திருநீற்றைப் பூசியவர், நெற்றிக்கண் உடையவர்;

நித்த மணவாளர் - அழியாத மணக்கோலம் உடையவன்; (அப்பர் தேவாரம் - 6.52.5 - "நித்தமணவாளன் என நிற்கின்றான்காண்");

ஏற்றுக்-கொடியர் - கொடிமேல் இடபச்சின்னத்தை உடையவர்;

இடையாறு அமர்ந்த – திருஇடையாற்றில் உறைகின்ற;

ஆற்றுச்-சடையாரே - சடையில் கங்கையை உடைய சிவபெருமானார்;


8)

கரிய அரக்கன் கயிலை மலைக்கீழ்க் கதற விரல்வைத்தார்

நரிகள் திரியும் சுடலை தன்னில் நட்டம் புரிநாதர்

கரியின் உரியைப் போர்த்த மார்பர் கருதார் புர(ம்)மூன்றும்

எரிய எய்தார் இடையா றமர்ந்த பெரிய விடையாரே.


கரிய அரக்கன் கயிலை மலைக்கீழ்க் கதற விரல் வைத்தார் - கரிய நிறம் உடைய இராவணன் கயிலைமலையின்கீழ் ஓலமிட்டு அழும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கியவர்;

நரிகள் திரியும் சுடலைதன்னில் நட்டம் புரி நாதர் - நரிகள் உலாவும் சுடுகாட்டில் திருக்கூத்து ஆடுகின்ற தலைவர்;

கரியின் உரியைப் போர்த்த மார்பர் - யானைத்தோலை மார்பில் போர்த்தவர்; (கரி - யானை); (உரி - தோல்);

கருதார் புரம் மூன்றும் எரிய எய்தார் - (தேவர்களைப்) பகைத்த அசுரர்களது முப்புரங்களும் எரியும்படி கணை எய்தவர்; (கருதார் - பகைவர்);

இடையாறு அமர்ந்த – திருஇடையாற்றில் உறைகின்ற;

பெரிய விடையாரே - பெரிய இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமானார்;


9)

அரவத் தணையான் அலர்மேல் உறைவான் அன்று மிகநேடிப்

பரவச் சுடராய் ஓங்கு பரமர் படர்செஞ் சடைமீது

குரவம் மத்தம் கொன்றை சூடும் குழகர் இடுகாட்டில்

இரவில் ஆடி இடையா றமர்ந்த கரவில் சிவனாரே.


அரவத்து அணையான் அலர்மேல் உறைவான் அன்று மிக நேடிப் பரவச் சுடராய் ஓங்கு பரமர் - பாம்பைப் படுக்கையாக உடைய திருமால், தாமரைப்பூவின்மேல் உறையும் பிரமன் என்ற இவ்விருவரும் முன்பு அடிமுடியை மிகவும் தேடிப் பின் துதிக்கும்படி ஜோதியாகி ஓங்கிய பரமர்; (அணை - படுக்கை); (அலர் - பூ); (நேடுதல் - தேடுதல்); (பரவுதல் - துதித்தல்);

படர்-செஞ்சடைமீது குரவம் மத்தம் கொன்றை சூடும் குழகர் - படர்ந்த சிவந்த சடையின்மேல் குராமலர், ஊமத்தமலர், கொன்றைமலர் இவற்றையெல்லாம் சூடும் அழகர்; (குழகன் - இளமை உடையவன்; அழகன்);

இடுகாட்டில் இரவில் ஆடி - சுடுகாட்டில் நள்ளிருளில் திருநடம் செய்பவர்;

இடையாறு அமர்ந்த – திருஇடையாற்றில் உறைகின்ற;

கரவு இல் சிவனாரே - ஒளித்தல் இன்றி அருள்புரிகின்ற சிவபெருமானார்; (கரவு - வஞ்சனை; மறைத்தல்);


10)

மையை நெஞ்சில் வைத்த கையர் மந்தை மிகவேண்டிப்

பொய்யைச் சொல்லும் புல்லர் என்றும் புகலொன் றிலரானார்

கையிற் சூலன் கனலார் கணையால் கருதார் புர(ம்)மூன்றை

எய்ய வல்லான் இடையா றமர்ந்த செய்ய சடையானே.


மையை நெஞ்சில் வைத்த கையர் - கறுப்பை (வஞ்சத்தை) மனத்தில் தாங்கிய கீழோர்கள்; (மை - இருள்; குற்றம்; கருநிறம்); (கையர் - கீழோர்; வஞ்சகர்);

மந்தை மிகவேண்டிப் பொய்யைச் சொல்லும் புல்லர் - மந்தையைப் பெருக்குவதற்காகப் பல பொய்களைச் சொல்லும் அறிவீனர்கள்; (புல்லன் - அறிவீனன்; ஒழுக்கமற்றவன்);

என்றும் புகல் ஒன்று இலர் ஆனார் - அவர்கள் உய்யும் உபாயம் இல்லாதவர்கள்; (புகல் - பற்றுக்கோடு; சரண்); (ஒன்று இலர் - ஒன்றும் இல்லார்);

கையிற் சூலன் - கையில் திரிசூலத்தை ஏந்தியவன்;

கனல் ஆர் கணையால் கருதார் புரம் மூன்றை எய்ய வல்லான் - தீப் பொருந்திய ஒரு கணையால் பகைவர்களது முப்புரங்களை அழிக்க வல்லவன்; (கருதார் - பகைவர்); (எய்தல் - பாணம் பிரயோகித்தல்);

இடையாறு அமர்ந்த – திருஇடையாற்றில் உறைகின்ற;

செய்ய சடையானே - சிவந்த சடையை உடைய சிவபெருமான்; (செய்ய - சிவந்த);


11)

துங்கத் தமிழைப் பாடித் தொழுவன் தொண்டர் மகிழ்வெய்தச்

செங்கல் தன்னைச் செம்பொன் னாகச் செய்த புகலூரர்

அங்கை மழுவர் மங்கை பங்கர் அன்பர் வினைதீர்க்கும்

எங்கள் இறைவர் இடையா றமர்ந்த திங்கள் முடியாரே.


துங்கத் தமிழைப் பாடித் தொழு வன்தொண்டர் மகிழ்வு எய்தச் - உயர்ந்த தமிழைப் பாடி வழிபட்ட வன்தொண்டர் (சுந்தரர்) மகிழும்படி; (துங்கம் - உயர்ச்சி; பெருமை; தூய்மை);

செங்கல்-தன்னைச் செம்பொன்னாகச் செய்த புகலூரர் - செங்கல்லைப் பொன்னாக மாற்றி அருளிய திருப்புகலூர் ஈசர்; (இவ்வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

அங்கை மழுவர் - கையில் மழுவை ஏந்தியவர்;

மங்கை பங்கர் - மாதொருபாகர்;

அன்பர்-வினை தீர்க்கும் எங்கள் இறைவர் - பக்தர்களது பாவங்களைத் தீர்க்கின்ற எம் இறைவர்;

இடையாறு அமர்ந்த – திருஇடையாற்றில் உறைகின்ற;

திங்கள் முடியாரே - சந்திரசேகரர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Monday, September 1, 2025

P.448 - மயிலாப்பூர் - புயல்வணன் வாயு

2018-09-04

P.448 - மயிலாப்பூர்

-------------------------------

(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி");

(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்");


 * முற்குறிப்பு: மகிழிடமாமயிலாப்பே = 1. மகிழ் இடம் மா மயிலாப்பே; 2. மகிழ் இடம் ஆம் மயிலாப்பே; (மா - அழகு); (மயிலாப்பு - மயிலாப்பூர்); (அப்பர் தேவாரம் - 6.2.1 - "மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார்");


1)

புயல்வணன் வாயு எரியிணை அம்பு .. பொன்மலை வில்லிவை ஏந்தி

எயிலொரு மூன்றை எய்தழி வீரன் .. இளமதிச் சடையினில் நீரன்

அயிலுறு சூலன் உண்பலி தேர .. அங்கையில் ஏந்துக பாலன்

மயிலன சாயல் மாதொரு பங்கன் .. மகிழிட மாமயி லாப்பே.


புயல்வணன் வாயு எரிணை அம்பு, பொன்மலை-வில்வை ஏந்தி - மேகம் போன்ற நிறத்தினனான திருமால், வாயு,அக்கினி இணைந்த ஒரு கணையும், மேருமலையால் ஆன வில்லும் ஏந்தி; (புயல் - மேகம்); (சேந்தனார் - திருவிசைப்பா - 9.7.8 - "புரம்பொடி படுத்த பொன்மலை வில்லி");

எயில் ஒரு மூன்றை எய்து அழி வீரன் - முப்புரங்களைக் எய்து அழித்த வீரன்; (எயில் - கோட்டை);

ளமதிச் சடையினில் நீரன் - இளந்திங்களைச் சூடிய சடையில் கங்கையை உடையவன்;

அயில் உறு சூலன் - கூர்மை மிக்க சூலத்தை ஏந்தியவன்; (அயில் - கூர்மை); (உறுதல் - இருத்தல்; மிகுதல்);

உண்பலி தேர அங்கையில் ஏந்து கபாலன் - பிச்சையெடுக்கக் கையில் பிரமனது கபாலத்தை ஏந்தியவன்; (உண்பலி - பிச்சை); (* கபாலன் - இத்தலத்து இறைவன் திருநாமம் - கபாலீஸ்வரன்);

மயில் அன சாயல் மாது ஒரு பங்கன் மகிழ் இடம் மா மயிலாப்பே - மயில் போன்ற சாயலை உடைய உமையை ஒரு பங்கில் உடைய சிவபெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்; (அன – அன்ன – போன்ற); (* உமாதேவி மயில்-உருவில் ஈசனை வழிபட்ட தலம் இது);


2)

புனலலை கின்ற புன்சடை மீது .. பொறிதிகழ் பாம்பையும் வைத்தான்

சினமலை போன்ற வெள்விடை ஏறும் .. சேவகன் போரது செய்த

வனமலை அனைய மதகரி உரிவை .. மார்பினை மூடிடப் போர்த்தான்

வனமுலை மங்கை கற்பகத் தோடும் .. மகிழிடம் மாமயி லாப்பே.


புனல் அலைகின்ற புன்சடை மீது பொறி திகழ் பாம்பையும் வைத்தான் - கங்கை திரியும் செஞ்சடைமேல் புள்ளிகள் திகழும் பாம்பையும் வைத்தவன்; (புன்மை - புகர்நிறம்); (பொறி - புள்ளி);

சினமலை போன்ற வெள்விடை ஏறும் சேவகன் - கோபம் உடைய மலை போன்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய வீரன்; (சினம் - கோபம்); (சேவகன் - வீரன்);

போரது செய்த வனமலை அனைய மதகரி உரிவை மார்பினை மூடிடப் போர்த்தான் - போர்செய்த காட்டில் வாழும் மலை போன்ற மதயானையின் தோலைத் திருமார்பில் போர்வை போலப் போர்த்தவன்; (வனம் - காடு); (அனைய - போன்ற); (கரி - யானை); (உரிவை - தோல்);

வனமுலை மங்கை கற்பகத்தோடும் மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் அழகிய ஸ்தனங்களை உடைய கற்பகாம்பாளோடு விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்; (வனம் - அழகு); (* கற்பகம் - கற்பகாம்பாள் - இத்தலத்து இறைவி திருநாமம்);


3)

ஆனது நல்கும் அஞ்சுகந் தாடும் .. அங்கணன் செஞ்சடை தன்னில்

தேனலர் சூடி கானகந் தன்னில் .. மாநடம் செய்திடும் தேவன்

மானன நோக்கி மாதொரு பங்கன் .. மலரடி இணைதனைத் தொழுத

வானவர் வாழ வல்விடம் உண்டான் .. மகிழிடம் மாமயி லாப்பே.


ஆன்அது நல்கும் அஞ்சு உகந்து ஆடும் அங்கணன் - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் (பஞ்சகவ்வியத்தால்) அபிஷேகம் செய்யப்பெறுபவன், அருள்நோக்கம் உடையவன்;

செஞ்சடை-தன்னில் தேன்-அலர் சூடி - சிவந்த சடையில் தேன் நிறைந்த மலர்களைச் சூடியவன்;

கானகம்-தன்னில் மா-நடம் செய்திடும் தேவன் - சுடுகாட்டில் திருக்கூத்து ஆடுகின்ற தேவன்;

மான் அன நோக்கி மாது ஒரு பங்கன் - மான் போன்ற பார்வையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்;

மலரடி-இணைதனைத் தொழுத வானவர் வாழ வல்விடம் உண்டான் - அப்பெருமானது மலர் போன்ற இரு-திருவடிகளை வணங்கிய தேவர்கள் வாழ்வதற்காகக் கொடிய விஷத்தை உண்டவன்;

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


4)

பொங்கிள நாகம் பொலிதிரு மார்பில் .. பொடிதனைப் பூசிய புனிதா

மங்கிய திங்கள் வந்தடி போற்ற .. வார்சடை வாழ்வருள் செய்தாய்

கங்குலில் ஆடும் சங்கர என்று .. கைகுவித் தேத்திடு வார்க்கு

மங்கல மெல்லாம் மல்கிட அருள்வான் .. மகிழிடம் மாமயி லாப்பே.


"பொங்கு இளநாகம் பொலி திருமார்பில் பொடிதனைப் பூசிய புனிதா - "சீறும் இளம்பாம்பு திகழ்கின்ற மார்பில் திருநீற்றைப் பூசிய புனிதனே;

மங்கிய திங்கள் வந்து அடி போற்ற வார்-சடை வாழ்வு அருள்செய்தாய் - தேய்ந்து அழிந்துகொண்டிருந்த சந்திரன் வந்து திருவடியை வணங்க, இரங்கி அருள்புரிந்து நீள்சடைமேல் நிலைக்கவைத்தவனே; (வார்தல் - நீள்தல்);

கங்குலில் ஆடும் சங்கர" என்று கைகுவித்து ஏத்திடுவார்க்கு - இருளில் ஆடுகின்ற சங்கரனே" என்று கைகூப்பி வழிபடும் பக்தர்களுக்கு;

மங்கலம் எல்லாம் மல்கிட அருள்வான் - எல்லா மங்கலங்களும் பெருகும்படி அருள்பவன்;

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


5)

சொல்வினை மனத்தால் தொழுமறை முனிக்குத் .. துணையென நின்றுயிர் காத்தாய்

கொல்வினை செய்யும் கூற்றுவன் தன்னைக் .. குரைகழ லாலுதை செய்தாய்

பல்வினைப் பயனால் படுதுயர் களையாய் .. பரமனே என்றடி பணிவார்

வல்வினை தீர்த்து வானருள் வள்ளல் .. மகிழிடம் மாமயி லாப்பே.


"சொல் வினை மனத்தால் தொழு மறைமுனிக்குத் துணை என நின்று உயிர் காத்தாய் - "சொல்லால், செயலால், மனத்தால் ( = மனம், வாக்கு காயம் இவை மூன்றாலும்) வழிபட்ட மார்க்கண்டேயருக்குத் துணை ஆகி நின்று அவருடைய உயிரைக் காத்தவனே; (குறிப்பு: மனம் மொழி உடல் என்ற தொடர், யாப்பு நோக்கி வரிசை மாறி வந்தது);

கொல்-வினை செய்யும் கூற்றுவன்-தன்னைக் குரைகழலால் உதைசெய்தாய் - கொலைத்தொழிலைச் செய்யும் காலனை ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியால் உதைத்தவனே;

பல்வினைப் பயனால் படு-துயர் களையாய் பரமனே" என்று அடி பணிவார் - பல வினைகளின் பயனால் அனுபவிக்கின்ற துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக" என்று திருவடியை வணங்கும் பக்தர்களுக்கு; (படுதல் - உண்டாதல்; துன்பம் அனுபவித்தல்);

வல்வினை தீர்த்து வான் அருள் வள்ளல் - அவர்களது வலிய வினையைத் தீர்த்துச் சிவலோக வாழ்வை அருளும் வள்ளல் சிவபெருமான்;

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


6)

வெண்டலை ஏந்தி உண்பலி தேர்வான் .. மென்மலர் வாளிமன் மதனைப்

பண்டெரி செய்த கண்திகழ் நுதலன் .. பண்திகழ் செந்தமிழ் பாடும்

தொண்டருக் கென்றும் துணையென நின்று .. தொல்வினை தீர்த்தருள் தூயன்

வண்டமர் ஓதி மாதொரு பங்கன் .. மகிழிடம் மாமயி லாப்பே.


வெண்தலை ஏந்தி உண்பலி தேர்வான் - வெள்ளிய மண்டையோட்டைக் கையில் தாங்கிப் பிச்சை ஏற்பவன்;

மென்மலர்-வாளி மன்மதனைப் பண்டு எரி செய்த கண் திகழ் நுதலன் - மென்மையான மலர்களை அம்பாக உடைய மன்மதனை முன்பு எரித்த நெற்றிக்கண்ணன்; (வாளி - அம்பு); (நுதல் - நெற்றி); (பண்டு - முன்பு); (நுதல் - நெற்றி);

பண் திகழ் செந்தமிழ் பாடும் தொண்டருக்கு என்றும் துணை என நின்று தொல்வினை தீர்த்தருள் தூயன் - பண் பொருந்திய தேவாரப் பதிகங்களைப் பாடும் பக்தர்களுக்கு என்றும் துணையாகிக் காத்து அவர்களுடைய பழவினையைத் தீர்க்கும் புனிதன்;

வண்டு அமர் ஓதி மாது ஒரு பங்கன் - வண்டுகள் விரும்பும் கூந்தலையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (அமர்தல் - விரும்புதல்); (ஓதி - கூந்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை பேணின");

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


7)

நுழைவிலாத் தக்கன் வேள்வியைச் செற்றான் .. நூல்திகழ் மார்பினில் நீற்றன்

குழையணி காதன் குரைகழற் பாதன் .. குளிர்மதி சூடிய நாதன்

முழவுகள் ஆர்க்கச் சுடலையில் ஆடும் .. முக்கணன் அக்கணி அழகன்

மழவிடை ஏறி வருமொரு மன்னன் .. மகிழிடம் மாமயி லாப்பே.


நுழைவு இலாத் தக்கன் வேள்வியைச் செற்றான் - நுண்ணறிவு இல்லாத தக்கன் செய்த வேள்வியை அழித்தவன்; (நுழைவு - நுட்பவறிவு);

நூல் திகழ் மார்பினில் நீற்றன் - மார்பில் பூணூலும் திருநீறும் திகழ்பவன்;

குழை அணி காதன் - காதில் குழையை அணிந்தவன்;

குரைகழற் பாதன் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியினன்;

குளிர்மதி சூடிய நாதன் - குளிர்ச்சி பொருந்திய சந்திரனைச் சூடிய தலைவன்;

முழவுகள் ஆர்க்கச் சுடலையில் ஆடும் முக்கணன் - முழாக்கள் ஒலிக்கச் சுடுகாட்டில் ஆடுகின்ற முக்கண்ணன்;

அக்கு அணி அழகன் - எலும்புகளை அணிகின்ற அழகன்; (அக்கு - எலும்பு);

மழவிடை ஏறி வரும் ஒரு மன்னன் - இளைய எருதினை வாகனமாக உடைய ஒப்பற்ற அரசன்;

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


8)

வல(ம்)மலி தோள்கள் மன(ம்)நினை மடையன் .. மாமலை தனையெறி நாளில்

மலரன பாதம் தனையிறை ஊன்றி .. வாயொரு பத்தழ வைத்தான்

தலைமலி மாலை தலையணி தலைவன் .. தாழ்சடை மேல்மதி சூடி

மலைமக ளோடு மழவிடை ஏறி .. மகிழிடம் மாமயி லாப்பே.


வல(ம்) மலி தோள்கள் மன(ம்) நினை மடையன் மா-மலை-தனைறி நாளில் - வலிமை மிகுந்த புஜங்களை மனத்தில் எண்ணிய அறிவிலியான இராவணன் கயிலைமலையைப் பெயர்த்து வீச முயன்ற பொழுது;

மலர் அன பாதம்-தனைறை ஊன்றி வாய் ஒரு-பத்து அழ வைத்தான் - தாமரைமலர் போன்ற திருவடியைச் சிறிதே ஊன்றி அவனை நசுக்கி அவனது பத்துவாய்களையும் அழச்செய்தவன்; (அன - அன்ன); (இறை - கொஞ்சம்);

தலை மலி மாலை தலை அணி தலைவன் - தலைக்குத் தலைமாலை அணிந்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.4.1 - "தலைக்குத் தலைமாலை அணிந்ததென்னே");

தாழ்சடைமேல் மதி சூடி - தாழும் சடைமேல் சந்திரனைச் சூடியவன்;

மலைமகளோடு மழவிடை ஏறி - மலைமகளான உமையோடு இளைய இடபத்தின்மேல் ஏறுபவன்;

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


9)

நாரணன் பிரமன் நண்ணொணாச் சோதி .. நாள்தொறும் நறுமலர் தூவிப்

பூரணன் என்றும் புண்ணியன் என்றும் .. புலியதள் ஆடையன் என்றும்

ஆரணன் என்றும் அடிதொழும் அன்பர் .. அருவினை தீர்த்தருள் அண்ணல்

வாரணத் துரிவை போர்த்திடு மார்பன் .. மகிழிடம் மாமயி லாப்பே.


நாரணன் பிரமன் நண்ணொணாச் சோதி - திருமால் பிரமன் இவர்களால் அடைய ஒண்ணாத ஜோதி வடிவினன்; (நண்ணொணா - நண்ண ஒண்ணாத; தொகுத்தல், இடைக்குறை விகாரம்);

நாள்தொறும் நறுமலர் தூவிப், பூரணன் என்றும், புண்ணியன் என்றும், புலி-அதள் ஆடையன் என்றும், ஆரணன் என்றும், அடிதொழும் அன்பர் அருவினை தீர்த்தருள் அண்ணல் - தினமும் வாசமலர்களைத் தூவிப், "பூரணன், அறவடிவினன், புலித்தோலை ஆடையாக அணிந்தவன், வேத முதல்வன்" என்றெல்லாம் போற்றித் திருவடியை வணங்கும் பக்தர்களது பழவினையைத் தீர்த்து அருள்கின்ற தலைவன்; (பூரணன் - நிறைவானவன்); (அதள் - தோல்); (ஆரணன் - வேதமுதல்வன்);

(அப்பர் தேவாரம் - 6.8.3 - "பூரணன்காண் புண்ணியன்காண்"); (சுந்தரர் தேவாரம் - 7.97.6 - "செஞ்சடைமேல் மதியும் அரவும் உடனே புல்கிய ஆரணன்");

வாரணத்து உரிவை போர்த்திடு மார்பன் - யானைத்தோலை மார்பில் போர்த்தவன்; (வாரணம் - யானை); (உரிவை - தோல்); (சம்பந்தர் தேவரம் - 2.10.3 - "கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்");

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


10)

பொய்யணி யாகப் பூண்டுழல் புல்லர் .. புன்னெறி விற்பவர் நீறு

மெய்யணி யாத வீணர்சொல் விடுமின் .. விடைமிசை ஏறிய விகிர்தன்

நெய்யணி சூலன் நீள்கழல் போற்றும் .. நேயர்கள் நினைவரம் தருவான்

மையணி கண்டன் மாதொரு பங்கன் .. மகிழிடம் மாமயி லாப்பே.


பொய் அணியாகப் பூண்டு உழல் புல்லர் புன்னெறி விற்பவர் - பொய்யையே அணிந்து உழல்கின்ற கீழோர்கள் சிறுநெறியை விற்கின்றவர்கள்; ("அணி ஆகப் பொய் பூண்டு உழல் புல்லர்" என்றும் இயைத்துப் பொருள்கொள்ளக் கூடும்; "கூட்டம் சேர்ப்பதற்காகப் பொய்யை அணிந்து உழல்கின்ற கீழோர்கள்"); (அணி - 1. ஆபரணம்; 2. கூட்டம்);

நீறு மெய் அணியாத வீணர் சொல் விடுமின் - திருநீற்றை உடம்பின்மேல் பூசாத பயனிலிகள் பேசும் பேச்சை மதிக்கவேண்டா, அவர் பேச்சை நீங்குங்கள்; (மெய் - உடம்பு);

விடைமிசை ஏறிய விகிர்தன் - இடபவாகனன், மாறுபட்ட செயலினன்; (விகிர்தன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று);

நெய் அணி சூலன் - நெய் பூசப்பெற்ற திரிசூலத்தை ஏந்தியவன்; (ஆயுதங்கள் துருப்பிடித்தலைத் தடுக்க அவற்றின்மேல் நெய் தடவி வைப்பது வழக்கம்); (சம்பந்தர் தேவாரம் - 3.60.4 - "நெய்யணி சூலமொடு நிறை வெண்மழுவும்");

நீள்-கழல் போற்றும் நேயர்கள் நினை-வரம் தருவான் - தன் திருவடியை வழிபடும் பக்தர்கள் எண்ணிய எவ்வரமும் தருபவன்;

மை அணி கண்டன் - நீலகண்டன்; (மை - கருமை);

மாது ஒரு பங்கன் - உமையை ஒரு பங்கில் உடையவன்;

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


11)

மணிமலர் தூவி வழிபடும் அன்பர் .. மகிழ்வுற வரமருள் வள்ளல்

பிணியிலன் என்றும் நரைதிரை இல்லான் .. பேர்களோர் ஆயிரம் உடையான்

பணியணி மார்பன் பாய்புலித் தோலன் .. பாற்கடல் நஞ்சினை உண்டு

மணியணி கண்டன் மாதொரு பங்கன் .. மகிழிடம் மாமயி லாப்பே.


மணி-மலர் தூவி வழிபடும் அன்பர் மகிழ்வுற வரம் அருள் வள்ளல் - அழகிய பூக்களைத் தூவி வழிபடும் பக்தர்கள் மகிழும்படி வரங்கள் அருளும் வள்ளல்; (மணி - அழகு);

பிணி இலன் என்றும் நரை திரை இல்லான் - பந்தங்களும், நோயும், மூப்பும் என்றும் இல்லாதவன்; (பிணி - பந்தம்; நோய்); (நரை திரை - நரைத்த மயிர், சுருங்கிய தோல் - முதுமையைக் குறித்தது); ("என்றும்" என்ற சொல்லை இடைநிலைத்-தீவகமாகக் கொண்டு இருபக்கமும் இயைத்து, "என்றும் பிணியிலன்", "என்றும் நரைதிரை இல்லான்" என்று பொருள்கொள்க); (சம்பந்தர் தேவாரம் - 3.33.11 - "சம்பந்தன் ஒண் தமிழ்வல்லார் நரைதிரை இன்றியே நன்னெறி சேர்வரே");

பேர்கள் ஓர் ஆயிரம் உடையான் - சஹஸ்ரநாமங்கள் உடையவன்;

பணி அணி மார்பன் - பாம்பை மாலைபோல் மார்பில் அணிந்தவன்; (பணி - நாகம்);

பாய்புலித்-தோலன் - பாயும் புலியின் தோலை ஆடையாக அணிந்தவன்;

பாற்கடல் நஞ்சினை உண்டு மணி அணி கண்டன் - பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்டதனால் கண்டத்தில் நீலமணியை உடையவன்;

மாது ஒரு பங்கன் - உமையை ஒரு பங்கில் உடையவன்;

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------