2018-05-26
P.437 - பேரூர்
---------------------------------
(அறுசீர்
விருத்தம் - மா
மா காய் - அரையடி
வாய்பாடு)
(அப்பர்
தேவாரம் - 4.15.1 - "பற்றற்
றார்சேர் பழம்பதியை")
(சுந்தரர்
தேவாரம் - 7.53.1 - "மருவார்
கொன்றை மதிசூடி")
1)
கடிமா
மலர்கள் பலதூவிக் ..
கையால்
தொழுதார்க் கருளண்ணல்
இடிபோல்
குரல்வெள் ளேற்றின்மேல் ..
ஏறும்
ஏந்தல் இளந்திங்கள்
முடிமேல்
திகழும் முக்கண்ணன் ..
முத்துப்
போன்ற வெண்ணகையாள்
பிடிபோல்
நடையாள் உமைபங்கன் ..
பேரூர்
நட்டப் பெருமானே.
கடி-மா-மலர்கள்
பல தூவிக் கையால் தொழுதார்க்கு
அருள் அண்ணல் - மணம்
கமழும் சிறந்த பூக்கள் பலவற்றைத்
தூவிக் கைகூப்பி வணங்கும்
பக்தர்களுக்கு அருள்புரியும்
தலைவன்; (கடி
- வாசனை);
இடிபோல்
குரல் வெள்-ஏற்றின்மேல்
ஏறும் ஏந்தல் - இடி
போன்ற குரலும் வெண்ணிறமும்
உடைய எருதை வாகனமாக உடைய
தலைவன்; (ஏந்தல்
- பெருமையிற்
சிறந்தோன்);
இளம்-திங்கள்
முடிமேல் திகழும் முக்கண்ணன்
- பிறையைத்
திருமுடிமேல் அணிந்த,
நெற்றிக்கண்ணன்;
முத்துப்
போன்ற வெண்ணகையாள் பிடிபோல்
நடையாள் உமைபங்கன் -
முத்துப்
போன்ற பற்களும் பெண்யானை
போன்ற அழகிய நடையும் உடைய
உமையை ஒரு பங்காக உடையவன்;
(நகை
- பல்);
(பிடி
- பெண்யானை);
பேரூர்
நட்டப் பெருமானே -
பேரூரில்
உறைகின்ற நடராஜன்;
(நட்டம்
- நடனம்);
(சம்பந்தர்
தேவாரம் - 1.80.10 - "சிற்றம்பலமேய
நட்டப் பெருமானை நாளும்
தொழுவோமே");
2)
போதைத்
தூவிப் புகழ்பாடிப் ..
போற்றி
னார்க்குப் புகலானான்
வாதை
தீராய் என்றடைந்த ...
வானோர்
வாழக் குகனையருள்
தாதை
தாழ்செஞ் சடையின்மேல் ..
தண்ணார்
திங்கள் தாங்கியவன்
பேதை
ஓர்பால் மகிழீசன் ..
பேரூர்
நட்டப் பெருமானே.
போதைத்
தூவிப் புகழ் பாடிப்
போற்றினார்க்குப் புகல்
ஆனான் - பூக்களைத்
தூவித் துதிகள் பாடி
வணங்கியவர்களுக்குப் புகலிடம்
ஆனவன்; (போது
- பூ);
"வாதை
தீராய்" என்று
அடைந்த வானோர் வாழக் குகனை
அருள் தாதை - "துன்பத்தைத்
தீர்த்தருள்வாயாக"
என்று
சரண்புகுந்த தேவர்கள் உய்ய
முருகனை ஈன்றருளிய அப்பன்;
தாழ்-செஞ்சடையின்மேல்
தண் ஆர் திங்கள் தாங்கியவன்
- தாழும்
சிவந்த சடைமேல் குளிர்ச்சி
பொருந்திய சந்திரனைச் சூடியவன்;
பேதை
ஓர்பால் மகிழ் ஈசன் -
உமையை
ஒரு பக்கம் பாகமாக விரும்பிய
ஈசன்; (மகிழ்தல்
- விரும்புதல்);
பேரூர்
நட்டப் பெருமானே -
பேரூரில்
உறைகின்ற நடராஜன்;
3)
தண்ணீர்
பூக்கள் இவைகொண்டு ..
தாளைத்
தொழுவார் துயர்தீர்ப்பான்
விண்ணோர்
சொல்கேட் டம்பெய்த ..
வேள்தன்
அழகார் உடல்வேவக்
கண்ணார்
நுதலால் காய்ந்தபிரான் ..
கயல்மீன்
அன்ன கண்ணுடைய
பெண்ணோர்
பாகம் மகிழீசன் ..
பேரூர்
நட்டப் பெருமானே.
தண்ணீர்
பூக்கள் இவைகொண்டு தாளைத்
தொழுவார் துயர் தீர்ப்பான்
- குளிர்ந்த
நீராலும் பூக்களாலும் திருவடியை
வழிபடும் பக்தர்களது துன்பத்தைத்
தீர்ப்பவன்;
விண்ணோர்
சொல் கேட்டு அம்பு எய்த வேள்தன்
அழகு ஆர் உடல் வேவக் கண் ஆர்
நுதலால் காய்ந்த பிரான் -
தேவர்கள்
பேச்சைக் கேட்டுக் கணை எய்த
மன்மதனது அழகிய உடல் வெந்து
சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால்
நோக்கிய தலைவன்;
கயல்மீன்
அன்ன கண்ணுடைய பெண் ஓர் பாகம்
மகிழ் ஈசன் - கயல்மீன்
போன்ற கண்களையுடைய உமையை ஒரு
பாகமாக விரும்பிய ஈசன்;
பேரூர்
நட்டப் பெருமானே -
பேரூரில்
உறைகின்ற நடராஜன்;
4)
இறைவா
அருளென் றிருபோதும் ..
ஏத்தி
னார்தம் இடர்தீர்ப்பான்
மறைமா
முனிமார்க் கண்டேயர் ..
வாழ
நமனை உதைசெய்தான்
அறையார்
கடலில் எழுநஞ்சை ..
அழகார்
மணிபோல் அணிகண்டன்
பிறைபோல்
நுதலாள் ஒருபங்கன் ..
பேரூர்
நட்டப் பெருமானே.
"இறைவா!
அருள்"
என்று
இருபோதும் ஏத்தினார்தம் இடர்
தீர்ப்பான் - "இறைவனே!
அருள்வாயாக"
என்று
இருபொழுதும் வழிபடுபவர்களது
கஷ்டங்களைத் தீர்ப்பவன்;
மறை
மா-முனி
மார்க்கண்டேயர் வாழ நமனை
உதைசெய்தான் - வேதம்
ஓதி வழிபட்ட சிறந்த முனிவரான
மார்க்கண்டேயர் என்றும்
வாழும்படி கூற்றை உதைத்தவன்;
அறை
ஆர் கடலில் எழு நஞ்சை அழகு
ஆர் மணிபோல் அணி கண்டன் -
ஒலிக்கின்ற
கடலில் தோன்றிய விஷத்தை அழகிய
மணி போலக் கண்டத்தில் அணிந்தவன்;
பிறை
போல் நுதலாள் ஒரு பங்கன்
- பிறை
போன்ற நெற்றியை உடைய உமையை
ஒரு பாகமாக உடையவன்;
பேரூர்
நட்டப் பெருமானே -
பேரூரில்
உறைகின்ற நடராஜன்;
5)
என்றாய்
தந்தை நீயென்றே ..
இறைஞ்சி
னாரைப் பண்டைவினை
துன்றா
வண்ணம் காக்கின்ற ..
தோன்றாத்
துணைவன் வேடுவனாய்ச்
சென்றான்
பார்த்தற் கருள்செய்யத் ..
தேனார்
கொன்றை மலர்மார்பன்
பின்றாழ்
சடைமேற் பிறைசூடி ..
பேரூர்
நட்டப் பெருமானே.
"என்
தாய் தந்தை நீ"
என்றே
இறைஞ்சினாரைப் பண்டைவினை
துன்றா வண்ணம் காக்கின்ற
தோன்றாத் துணைவன் -
"என்
தாயும் தந்தையும் நீயே"
என்று
போற்றி வணங்கும் பக்தர்களைப்
பழவினை நெருங்காதபடி,
புறக்கண்ணுக்குப்
புலப்படாத துணையாகி நின்று
காத்தருள்பவன்;
(என்றாய்
= என்
+ தாய்);
(துன்றுதல்
- நெருங்குதல்;
பொருந்துதல்);
(அப்பர்
தேவாரம் - 4.94.1 - "ஈன்றாளுமாய்
எனக்கு எந்தையுமாய் ...
தோன்றாத்
துணையாய் இருந்தனன் தன்
அடியோங்களுக்கே");
வேடுவனாய்ச்
சென்றான் பார்த்தற்கு அருள்செய்ய
- அர்ஜுனனுக்கு
அருள்செய்வதற்காக ஒரு வேடன்
உருவில் சென்றவன்;
(பார்த்தற்கு
- பார்த்தனுக்கு);
தேன்
ஆர் கொன்றைமலர் மார்பன் -
தேன்
நிறைந்த கொன்றைமாலையை மார்பில்
அணிந்தவன்;
பின்
தாழ் சடைமேல் பிறைசூடி -
பின்னால்
தாழ்ந்து தொங்கும் சடையின்மேல்
பிறையை அணிந்தவன்;
(பின்றாழ்
= பின்
+ தாழ்);
பேரூர்
நட்டப் பெருமானே -
பேரூரில்
உறைகின்ற நடராஜன்;
6)
நேசத்
தோடு திருநாமம் ..
நினைவார்க்
கின்ப நிலைதருவான்
பாசத்
தோடு மாணியின்மேல் ..
பாயும்
கூற்றை உதைத்தபிரான்
வாசக்
கொன்றை கூவிளம்வெண் ..
மதியம்
சூடு வார்சடையன்
பேசற்
கரிய பெருமையினான் ..
பேரூர்
நட்டப் பெருமானே.
நேசத்தோடு
திருநாமம் நினைவார்க்கு
இன்பநிலை தருவான் -
அன்போடு
திருப்பெயரைத் தியானிக்கின்ற
பக்தர்களுக்குப் பேரின்பம்
அருள்பவன்;
பாசத்தோடு
மாணியின்மேல் பாயும் கூற்றை
உதைத்த பிரான் -
மார்க்கண்டேயரைக்
கொல்வதற்காகப் பாசம் வீசிய
காலனை உதைத்த தலைவன்;
வாசக்-கொன்றை
கூவிளம் வெண்-மதியம்
சூடு வார்-சடையன்
- மணம்
கமழும் கொன்றைமலரையும்
வில்வத்தையும் வெண்-திங்களையும்
சூடிய நீள்-சடையன்;
(கூவிளம்
- வில்வம்);
(வார்தல்
- நீள்தல்);
பேசற்கு
அரிய பெருமையினான் -
சொல்வதற்கு
இயலாதவாறு அளவற்ற பெருமை
உடையவன்;
பேரூர்
நட்டப் பெருமானே -
பேரூரில்
உறைகின்ற நடராஜன்;
7)
குற்றம்
பொறுப்பான் தொழுவார்தம் ..
குறைகள்
தீர்ப்பான் அருளாளன்
சுற்றும்
திகிரிப் படைவேண்டித் ..
தொழுத
மாலுக் கிரங்கியவன்
அற்றம்
மறைக்க அரவரையில் ..
ஆர்த்துப்
பிச்சைக் குழல்செல்வன்
பெற்றம்
ஊரும் பெற்றியினான் ..
பேரூர்
நட்டப் பெருமானே.
குற்றம்
பொறுப்பான் தொழுவார்தம்
- வணங்கும்
அடியார்களது பிழைகளை
மன்னித்தருள்பவன்;
தொழுவார்தம்
குறைகள் தீர்ப்பான் -
வணங்கும்
அடியார்களது குறைகளைத்
தீர்ப்பவன்; ("தொழுவார்தம்"
என்ற
சொற்றொடர் - இடைநிலைத்தீவகமாய்
இருபக்கமும் இயைத்துப்
பொருள்கொள்ள நின்றது);
அருளாளன்
- மிகவும்
கருணை உடையவன்;
சுற்றும்
திகிரிப்-படை
வேண்டித் தொழுத மாலுக்கு
இரங்கியவன் - சக்கராயுதம்
வேண்டி வழிபட்ட திருமாலுக்கு
அருள்புரிந்தவன்;
(திகிரி
- சக்கரம்);
(படை
- ஆயுதம்);
(திருமாலுக்குச்
சக்கரம் அளித்த வரலாறு
திருவீழிமிழலை நிகழ்ச்சி);
அற்றம்
மறைக்க அரவு அரையில் ஆர்த்துப்
பிச்சைக்கு உழல் செல்வன்
- அரையில்
பாம்பு ஒன்றைக் கட்டிப்
பிச்சைக்குத் திரியும்
செல்வன்; (ஆர்த்தல்
- கட்டுதல்);
(சம்பந்தர்
தேவாரம் - 3.113.1 - "அற்ற(ம்)
மறைப்பது
முன்பணியே" - அற்றம்
மறைப்பது - உனது
மானத்தைக் காப்பது.
பணியே
- பாம்பே);
பெற்றம்
ஊரும் பெற்றியினான் -
இடபத்தின்மேல்
ஏறும் பெருமை உடையவன்;
(பெற்றம்
- எருது);
பேரூர்
நட்டப் பெருமானே -
பேரூரில்
உறைகின்ற நடராஜன்;
8)
கரிய
இலங்கைக் கோன்தன்னைக் ..
கதற
வைத்த கால்விரலன்
அரிய
மறையின் பொருள்விரிக்க ..
ஆல
நீழல் அமர்ந்தபிரான்
எரியை
ஒத்த செவ்வண்ணன் ..
இமையோர்
போற்றும் இருள்கண்டன்
பெரிய
விடைமேல் வருமீசன் ..
பேரூர்
நட்டப் பெருமானே.
கரிய
இலங்கைக்கோன்-தன்னைக்
கதறவைத்த கால்விரலன் -
கரிய
நிறமுடையவனும் இலங்கை மன்னனுமான
இராவணனை அழவைத்த திருப்பாத-விரலை
உடையவன்;
அரிய
மறையின் பொருள் விரிக்க
ஆலநீழல் அமர்ந்த பிரான் -
அரிய
வேதப்பொருளை உபதேசிக்கக்
கல்லால-மரத்தின்கீழ்
இருந்தவன்;
எரியை
ஒத்த செவ்வண்ணன் -
தீப்போல்
செம்மேனி உடையவன்;
(எரி
- தீ);
இமையோர்
போற்றும் இருள்கண்டன் -
தேவர்கள்
வணங்கும் நீலகண்டன்;
பெரிய
விடைமேல் வரும் ஈசன் -
பெரிய
இடபத்தை வாகனமாக உடைய ஈசன்;
பேரூர்
நட்டப் பெருமானே -
பேரூரில்
உறைகின்ற நடராஜன்;
9)
ஓரா
அயனும் திருமாலும் ..
உயர்ந்தும்
ஆழ்ந்தும் அறிவரியான்
கூரார்
சூலப் படையுடையான் ..
கொடியின்
மீது விடையுடையான்
காரார்
கண்டன் போர்செய்த ..
கைம்மா
தன்னை உரிசெய்தான்
பேரா
யிரத்தான் பெயரில்லான் ..
பேரூர்
நட்டப் பெருமானே.
ஓரா
அயனும் திருமாலும் உயர்ந்தும்
ஆழ்ந்தும் அறிவு அரியான்
- தொழ
எண்ணாத பிரமனும் திருமாலும்
வானில் உயர்ந்தும் மண்ணை
அகழ்ந்தும் அவர்களால் அறிய
இயலாதவன்; (ஓர்தல்
- எண்ணுதல்);
கூர்
ஆர் சூலப்-படை
உடையான் - கூரிய
சூலாயுதத்தை ஏந்தியவன்;
கொடியின்மீது
விடை உடையான் -
இடபக்கொடியை
உடையவன்;
கார்
ஆர் கண்டன் - நீலகண்டன்;
போர்செய்த
கைம்மா-தன்னை
உரிசெய்தான் - வந்து
போர்செய்த யானையைத் தோலுரித்தவன்;
(கைம்மா
- யானை);
பேர்
ஆயிரத்தான்,
பெயர்
இல்லான் - பெயர்
இல்லாதவன், ஆயிரம்
திருநாமங்கள் உடையவன்;
(திருவாசகம்
- திருத்தெள்ளேணம்
- 8.11.1 - "ஒருநாமம்
ஓருருவம் ஒன்றுமில்லாற்கு
ஆயிரம் திருநாமம் பாடிநாம்
தெள்ளேணம் கொட்டாமோ");
பேரூர்
நட்டப் பெருமானே -
பேரூரில்
உறைகின்ற நடராஜன்;
10)
உண்மை
தன்னை ஒளித்துப்பொய் ..
உரைத்துத்
திரிவார் சொல்நீங்கும்
வெண்மை
திகழும் நீறணிந்து ..
விரும்பித்
தொழுவார் தமக்கென்றும்
அண்மை
யாகிக் காத்துவரம் ..
அளிக்கும்
வள்ளல் ஆகத்தில்
பெண்மை
ஒருபால் காட்டுமிறை ..
பேரூர்
நட்டப் பெருமானே.
உண்மைதன்னை
ஒளித்துப் பொய் உரைத்துத்
திரிவார் சொல் நீங்கும் -
உண்மையை
மறைத்துப் பொய்யே பேசித்
திரிகின்றவர்களது பேச்சை
நீங்குங்கள்;
வெண்மை
திகழும் நீறு அணிந்து விரும்பித்
தொழுவார்-தமக்கு
என்றும் அண்மையாகிக் காத்து
வரம் அளிக்கும் வள்ளல் -
திருநீற்றைப்
பூசி அன்போடு வழிபடுபவர்களுக்கு,
அருகே
இருந்து காத்து, வரம்
அருளும் வள்ளல்; (அண்மை
- சமீபம்);
ஆகத்தில்
பெண்மை ஒருபால் காட்டும் இறை
- திருமேனியில்
ஒரு பக்கத்தில் உமையை உடைய
இறைவன்; (சம்பந்தர்
தேவாரம் - 1.1.5 - "ஒருமை
பெண்மையுடையன்");
பேரூர்
நட்டப் பெருமானே -
பேரூரில்
உறைகின்ற நடராஜன்;
11)
முன்னை
மூன்று புரஞ்சுட்டாய் ..
முதல்வா
முடிமேல் இளமதியம்
தன்னை
வாழ வைத்தவனே .. சடையில்
கங்கை தரித்தவனே
உன்னை
யன்றித் துணையிங்கார் ..
உளரென்
றுருகும் அடியார்க்குப்
பின்னை
என்னா தருளீசன் ..
பேரூர்
நட்டப் பெருமானே.
"முன்னை
மூன்று புரம் சுட்டாய் -
"முன்பு
முப்புரங்களை எரித்தவனே;
முதல்வா
- முதல்வனே;
முடிமேல்
இளமதியம் தன்னை வாழ வைத்தவனே
- தேய்ந்து
அழிந்துகொண்டிருந்த சந்திரனைத்
திருமுடிமேல் வைத்துக்
காத்தவனே;
சடையில்
கங்கை தரித்தவனே -
சடையில்
கங்கையை அணிந்தவனே;
உன்னை
அன்றித் துணை இங்கு ஆர் உளர்?"
என்று
உருகும் அடியார்க்குப் -
உன்னைத்
தவிர இங்கு வேறு யார் எம்
துணை?" என்று
உள்ளம் உருகி வழிபடும்
பக்தர்களுக்கு;
"பின்னை"
என்னாது
அருள் ஈசன் - "பிறகு
அருள்வோம்" என்று
சொல்லாமல், உடனே
அருள்புரியும் ஈசன்;
(அப்பர்
தேவாரம் - 5.38.2 - "தன்னை
நோக்கித் தொழுதெழுவார்க்கெலாம்
பின்னை என்னார் பெருமான்-அடிகளே");
பேரூர்
நட்டப் பெருமானே -
பேரூரில்
உறைகின்ற நடராஜன்;
வி.
சுப்பிரமணியன்
-----------
--------------