Wednesday, August 6, 2025

N.049 - திருஞான சம்பந்தர் துதி - திருமறைக்காட்டில்

2018-05-29

N.049 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2018

----------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)


திருமறைக் காட்டில் அப்பர் .. செந்தமிழ் காப்பு நீக்கும்

அருமணிக் கதவு மீண்டும் .. அடைத்திடப் பதிகம் பாடி

அருளிய காழி மன்னர் .. ஆலவாய் அரன்வெண் ணீற்றால்

அருகரை வாதில் வென்றார் .. அணிமலர்ப் பாதம் போற்றி.


திருமறைக்காட்டில் அப்பர் செந்தமிழ் காப்பு நீக்கும் அருமணிக் கதவு மீண்டும் அடைத்திடப் பதிகம் பாடி அருளிய காழி மன்னர் - வேதாரண்யத்தில் திருநாவுக்கரசரது தேவாரம் தாழ் நீக்கிய அரிய அழகிய திருக்கதவு மீண்டும் சாத்தும்படி பதிகம் பாடியருளிய சீகாழித் தலைவர்; (காப்பு - கதவின் தாழ்); (காழி மன்னர் - சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தர்); (* திருநாவுக்கரசர் தேவாரம் - 5.10.1 - "பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ"); (* சம்பந்தர் தேவாரம் - 2.37.1 - "சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்");

ஆலவாய் அரன் வெண்ணீற்றால் அருகரை வாதில் வென்றார் - ஆலவாய் ஈசனது வெண்-திருநீற்றால் சமணரை வாதில் வென்றவர்; (அருகர் - சமணர்); (* சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - மந்திர மாவது நீறு");

அணி-மலர்ப்பாதம் போற்றி - அத்-திருஞானசம்பந்தரது அழகிய தாமரைமலர் போன்ற திருவடியை வணங்குகின்றேன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.437 - பேரூர் - கடிமா மலர்கள்

2018-05-26

P.437 - பேரூர்

---------------------------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)

(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியை")

(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி")


1)

கடிமா மலர்கள் பலதூவிக் .. கையால் தொழுதார்க் கருளண்ணல்

இடிபோல் குரல்வெள் ளேற்றின்மேல் .. ஏறும் ஏந்தல் இளந்திங்கள்

முடிமேல் திகழும் முக்கண்ணன் .. முத்துப் போன்ற வெண்ணகையாள்

பிடிபோல் நடையாள் உமைபங்கன் .. பேரூர் நட்டப் பெருமானே.


கடி-மா-மலர்கள் பல தூவிக் கையால் தொழுதார்க்கு அருள் அண்ணல் - மணம் கமழும் சிறந்த பூக்கள் பலவற்றைத் தூவிக் கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரியும் தலைவன்; (கடி - வாசனை);

இடிபோல் குரல் வெள்-ஏற்றின்மேல் ஏறும் ஏந்தல் - இடி போன்ற குரலும் வெண்ணிறமும் உடைய எருதை வாகனமாக உடைய தலைவன்; (ஏந்தல் - பெருமையிற் சிறந்தோன்);

இளம்-திங்கள் முடிமேல் திகழும் முக்கண்ணன் - பிறையைத் திருமுடிமேல் அணிந்த, நெற்றிக்கண்ணன்;

முத்துப் போன்ற வெண்ணகையாள் பிடிபோல் நடையாள் உமைபங்கன் - முத்துப் போன்ற பற்களும் பெண்யானை போன்ற அழகிய நடையும் உடைய உமையை ஒரு பங்காக உடையவன்; (நகை - பல்); (பிடி - பெண்யானை);

பேரூர் நட்டப் பெருமானே - பேரூரில் உறைகின்ற நடராஜன்; (நட்டம் - நடனம்); (சம்பந்தர் தேவாரம் - 1.80.10 - "சிற்றம்பலமேய நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே");


2)

போதைத் தூவிப் புகழ்பாடிப் .. போற்றி னார்க்குப் புகலானான்

வாதை தீராய் என்றடைந்த ... வானோர் வாழக் குகனையருள்

தாதை தாழ்செஞ் சடையின்மேல் .. தண்ணார் திங்கள் தாங்கியவன்

பேதை ஓர்பால் மகிழீசன் .. பேரூர் நட்டப் பெருமானே.


போதைத் தூவிப் புகழ் பாடிப் போற்றினார்க்குப் புகல் ஆனான் - பூக்களைத் தூவித் துதிகள் பாடி வணங்கியவர்களுக்குப் புகலிடம் ஆனவன்; (போது - பூ);

"வாதை தீராய்" என்று அடைந்த வானோர் வாழக் குகனை அருள் தாதை - "துன்பத்தைத் தீர்த்தருள்வாயாக" என்று சரண்புகுந்த தேவர்கள் உய்ய முருகனை ஈன்றருளிய அப்பன்;

தாழ்-செஞ்சடையின்மேல் தண் ஆர் திங்கள் தாங்கியவன் - தாழும் சிவந்த சடைமேல் குளிர்ச்சி பொருந்திய சந்திரனைச் சூடியவன்;

பேதை ஓர்பால் மகிழ் ஈசன் - உமையை ஒரு பக்கம் பாகமாக விரும்பிய ஈசன்; (மகிழ்தல் - விரும்புதல்);

பேரூர் நட்டப் பெருமானே - பேரூரில் உறைகின்ற நடராஜன்;


3)

தண்ணீர் பூக்கள் இவைகொண்டு .. தாளைத் தொழுவார் துயர்தீர்ப்பான்

விண்ணோர் சொல்கேட் டம்பெய்த .. வேள்தன் அழகார் உடல்வேவக்

கண்ணார் நுதலால் காய்ந்தபிரான் .. கயல்மீன் அன்ன கண்ணுடைய

பெண்ணோர் பாகம் மகிழீசன் .. பேரூர் நட்டப் பெருமானே.


தண்ணீர் பூக்கள் இவைகொண்டு தாளைத் தொழுவார் துயர் தீர்ப்பான் - குளிர்ந்த நீராலும் பூக்களாலும் திருவடியை வழிபடும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்;

விண்ணோர் சொல் கேட்டு அம்பு எய்த வேள்தன் அழகு ஆர் உடல் வேவக் கண் ஆர் நுதலால் காய்ந்த பிரான் - தேவர்கள் பேச்சைக் கேட்டுக் கணை எய்த மன்மதனது அழகிய உடல் வெந்து சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் நோக்கிய தலைவன்;

கயல்மீன் அன்ன கண்ணுடைய பெண் ஓர் பாகம் மகிழ் ஈசன் - கயல்மீன் போன்ற கண்களையுடைய உமையை ஒரு பாகமாக விரும்பிய ஈசன்;

பேரூர் நட்டப் பெருமானே - பேரூரில் உறைகின்ற நடராஜன்;


4)

இறைவா அருளென் றிருபோதும் .. ஏத்தி னார்தம் இடர்தீர்ப்பான்

மறைமா முனிமார்க் கண்டேயர் .. வாழ நமனை உதைசெய்தான்

அறையார் கடலில் எழுநஞ்சை .. அழகார் மணிபோல் அணிகண்டன்

பிறைபோல் நுதலாள் ஒருபங்கன் .. பேரூர் நட்டப் பெருமானே.


"இறைவா! அருள்" என்று இருபோதும் ஏத்தினார்தம் இடர் தீர்ப்பான் - "இறைவனே! அருள்வாயாக" என்று இருபொழுதும் வழிபடுபவர்களது கஷ்டங்களைத் தீர்ப்பவன்;

மறை மா-முனி மார்க்கண்டேயர் வாழ நமனை உதைசெய்தான் - வேதம் ஓதி வழிபட்ட சிறந்த முனிவரான மார்க்கண்டேயர் என்றும் வாழும்படி கூற்றை உதைத்தவன்;

அறை ஆர் கடலில் எழு நஞ்சை அழகு ஆர் மணிபோல் அணி கண்டன் - ஒலிக்கின்ற கடலில் தோன்றிய விஷத்தை அழகிய மணி போலக் கண்டத்தில் அணிந்தவன்;

பிறை போல் நுதலாள் ஒரு பங்கன் - பிறை போன்ற நெற்றியை உடைய உமையை ஒரு பாகமாக உடையவன்;

பேரூர் நட்டப் பெருமானே - பேரூரில் உறைகின்ற நடராஜன்;


5)

என்றாய் தந்தை நீயென்றே .. இறைஞ்சி னாரைப் பண்டைவினை

துன்றா வண்ணம் காக்கின்ற .. தோன்றாத் துணைவன் வேடுவனாய்ச்

சென்றான் பார்த்தற் கருள்செய்யத் .. தேனார் கொன்றை மலர்மார்பன்

பின்றாழ் சடைமேற் பிறைசூடி .. பேரூர் நட்டப் பெருமானே.


"என் தாய் தந்தை நீ" என்றே இறைஞ்சினாரைப் பண்டைவினை துன்றா வண்ணம் காக்கின்ற தோன்றாத் துணைவன் - "என் தாயும் தந்தையும் நீயே" என்று போற்றி வணங்கும் பக்தர்களைப் பழவினை நெருங்காதபடி, புறக்கண்ணுக்குப் புலப்படாத துணையாகி நின்று காத்தருள்பவன்; (என்றாய் = என் + தாய்); (துன்றுதல் - நெருங்குதல்; பொருந்துதல்); (அப்பர் தேவாரம் - 4.94.1 - "ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் ... தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே");

வேடுவனாய்ச் சென்றான் பார்த்தற்கு அருள்செய்ய - அர்ஜுனனுக்கு அருள்செய்வதற்காக ஒரு வேடன் உருவில் சென்றவன்; (பார்த்தற்கு - பார்த்தனுக்கு);

தேன் ஆர் கொன்றைமலர் மார்பன் - தேன் நிறைந்த கொன்றைமாலையை மார்பில் அணிந்தவன்;

பின் தாழ் சடைமேல் பிறைசூடி - பின்னால் தாழ்ந்து தொங்கும் சடையின்மேல் பிறையை அணிந்தவன்; (பின்றாழ் = பின் + தாழ்);

பேரூர் நட்டப் பெருமானே - பேரூரில் உறைகின்ற நடராஜன்;


6)

நேசத் தோடு திருநாமம் .. நினைவார்க் கின்ப நிலைதருவான்

பாசத் தோடு மாணியின்மேல் .. பாயும் கூற்றை உதைத்தபிரான்

வாசக் கொன்றை கூவிளம்வெண் .. மதியம் சூடு வார்சடையன்

பேசற் கரிய பெருமையினான் .. பேரூர் நட்டப் பெருமானே.


நேசத்தோடு திருநாமம் நினைவார்க்கு இன்பநிலை தருவான் - அன்போடு திருப்பெயரைத் தியானிக்கின்ற பக்தர்களுக்குப் பேரின்பம் அருள்பவன்;

பாசத்தோடு மாணியின்மேல் பாயும் கூற்றை உதைத்த பிரான் - மார்க்கண்டேயரைக் கொல்வதற்காகப் பாசம் வீசிய காலனை உதைத்த தலைவன்;

வாசக்-கொன்றை கூவிளம் வெண்-மதியம் சூடு வார்-சடையன் - மணம் கமழும் கொன்றைமலரையும் வில்வத்தையும் வெண்-திங்களையும் சூடிய நீள்-சடையன்; (கூவிளம் - வில்வம்); (வார்தல் - நீள்தல்);

பேசற்கு அரிய பெருமையினான் - சொல்வதற்கு இயலாதவாறு அளவற்ற பெருமை உடையவன்;

பேரூர் நட்டப் பெருமானே - பேரூரில் உறைகின்ற நடராஜன்;


7)

குற்றம் பொறுப்பான் தொழுவார்தம் .. குறைகள் தீர்ப்பான் அருளாளன்

சுற்றும் திகிரிப் படைவேண்டித் .. தொழுத மாலுக் கிரங்கியவன்

அற்றம் மறைக்க அரவரையில் .. ஆர்த்துப் பிச்சைக் குழல்செல்வன்

பெற்றம் ஊரும் பெற்றியினான் .. பேரூர் நட்டப் பெருமானே.


குற்றம் பொறுப்பான் தொழுவார்தம் - வணங்கும் அடியார்களது பிழைகளை மன்னித்தருள்பவன்;

தொழுவார்தம் குறைகள் தீர்ப்பான் - வணங்கும் அடியார்களது குறைகளைத் தீர்ப்பவன்; ("தொழுவார்தம்" என்ற சொற்றொடர் - இடைநிலைத்தீவகமாய் இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ள நின்றது);

அருளாளன் - மிகவும் கருணை உடையவன்;

சுற்றும் திகிரிப்-படை வேண்டித் தொழுத மாலுக்கு இரங்கியவன் - சக்கராயுதம் வேண்டி வழிபட்ட திருமாலுக்கு அருள்புரிந்தவன்; (திகிரி - சக்கரம்); (படை - ஆயுதம்); (திருமாலுக்குச் சக்கரம் அளித்த வரலாறு திருவீழிமிழலை நிகழ்ச்சி);

அற்றம் மறைக்க அரவு அரையில் ஆர்த்துப் பிச்சைக்கு உழல் செல்வன் - அரையில் பாம்பு ஒன்றைக் கட்டிப் பிச்சைக்குத் திரியும் செல்வன்; (ஆர்த்தல் - கட்டுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.113.1 - "அற்ற(ம்) மறைப்பது முன்பணியே" - அற்றம் மறைப்பது - உனது மானத்தைக் காப்பது. பணியே - பாம்பே);

பெற்றம் ஊரும் பெற்றியினான் - இடபத்தின்மேல் ஏறும் பெருமை உடையவன்; (பெற்றம் - எருது);

பேரூர் நட்டப் பெருமானே - பேரூரில் உறைகின்ற நடராஜன்;


8)

கரிய இலங்கைக் கோன்தன்னைக் .. கதற வைத்த கால்விரலன்

அரிய மறையின் பொருள்விரிக்க .. ஆல நீழல் அமர்ந்தபிரான்

எரியை ஒத்த செவ்வண்ணன் .. இமையோர் போற்றும் இருள்கண்டன்

பெரிய விடைமேல் வருமீசன் .. பேரூர் நட்டப் பெருமானே.


கரிய இலங்கைக்கோன்-தன்னைக் கதறவைத்த கால்விரலன் - கரிய நிறமுடையவனும் இலங்கை மன்னனுமான இராவணனை அழவைத்த திருப்பாத-விரலை உடையவன்;

அரிய மறையின் பொருள் விரிக்க ஆலநீழல் அமர்ந்த பிரான் - அரிய வேதப்பொருளை உபதேசிக்கக் கல்லால-மரத்தின்கீழ் இருந்தவன்;

எரியை ஒத்த செவ்வண்ணன் - தீப்போல் செம்மேனி உடையவன்; (எரி - தீ);

இமையோர் போற்றும் இருள்கண்டன் - தேவர்கள் வணங்கும் நீலகண்டன்;

பெரிய விடைமேல் வரும் ஈசன் - பெரிய இடபத்தை வாகனமாக உடைய ஈசன்;

பேரூர் நட்டப் பெருமானே - பேரூரில் உறைகின்ற நடராஜன்;


9)

ஓரா அயனும் திருமாலும் .. உயர்ந்தும் ஆழ்ந்தும் அறிவரியான்

கூரார் சூலப் படையுடையான் .. கொடியின் மீது விடையுடையான்

காரார் கண்டன் போர்செய்த .. கைம்மா தன்னை உரிசெய்தான்

பேரா யிரத்தான் பெயரில்லான் .. பேரூர் நட்டப் பெருமானே.


ஓரா அயனும் திருமாலும் உயர்ந்தும் ஆழ்ந்தும் அறிவு அரியான் - தொழ எண்ணாத பிரமனும் திருமாலும் வானில் உயர்ந்தும் மண்ணை அகழ்ந்தும் அவர்களால் அறிய இயலாதவன்; (ஓர்தல் - எண்ணுதல்);

கூர் ஆர் சூலப்-படை உடையான் - கூரிய சூலாயுதத்தை ஏந்தியவன்;

கொடியின்மீது விடை உடையான் - இடபக்கொடியை உடையவன்;

கார் ஆர் கண்டன் - நீலகண்டன்;

போர்செய்த கைம்மா-தன்னை உரிசெய்தான் - வந்து போர்செய்த யானையைத் தோலுரித்தவன்; (கைம்மா - யானை);

பேர் ஆயிரத்தான், பெயர் இல்லான் - பெயர் இல்லாதவன், ஆயிரம் திருநாமங்கள் உடையவன்; (திருவாசகம் - திருத்தெள்ளேணம் - 8.11.1 - "ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ");

பேரூர் நட்டப் பெருமானே - பேரூரில் உறைகின்ற நடராஜன்;


10)

உண்மை தன்னை ஒளித்துப்பொய் .. உரைத்துத் திரிவார் சொல்நீங்கும்

வெண்மை திகழும் நீறணிந்து .. விரும்பித் தொழுவார் தமக்கென்றும்

அண்மை யாகிக் காத்துவரம் .. அளிக்கும் வள்ளல் ஆகத்தில்

பெண்மை ஒருபால் காட்டுமிறை .. பேரூர் நட்டப் பெருமானே.


உண்மைதன்னை ஒளித்துப் பொய் உரைத்துத் திரிவார் சொல் நீங்கும் - உண்மையை மறைத்துப் பொய்யே பேசித் திரிகின்றவர்களது பேச்சை நீங்குங்கள்;

வெண்மை திகழும் நீறு அணிந்து விரும்பித் தொழுவார்-தமக்கு என்றும் அண்மையாகிக் காத்து வரம் அளிக்கும் வள்ளல் - திருநீற்றைப் பூசி அன்போடு வழிபடுபவர்களுக்கு, அருகே இருந்து காத்து, வரம் அருளும் வள்ளல்; (அண்மை - சமீபம்);

ஆகத்தில் பெண்மை ஒருபால் காட்டும் இறை - திருமேனியில் ஒரு பக்கத்தில் உமையை உடைய இறைவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.1.5 - "ஒருமை பெண்மையுடையன்");

பேரூர் நட்டப் பெருமானே - பேரூரில் உறைகின்ற நடராஜன்;


11)

முன்னை மூன்று புரஞ்சுட்டாய் .. முதல்வா முடிமேல் இளமதியம்

தன்னை வாழ வைத்தவனே .. சடையில் கங்கை தரித்தவனே

உன்னை யன்றித் துணையிங்கார் .. உளரென் றுருகும் அடியார்க்குப்

பின்னை என்னா தருளீசன் .. பேரூர் நட்டப் பெருமானே.


"முன்னை மூன்று புரம் சுட்டாய் - "முன்பு முப்புரங்களை எரித்தவனே;

முதல்வா - முதல்வனே;

முடிமேல் இளமதியம் தன்னை வாழ வைத்தவனே - தேய்ந்து அழிந்துகொண்டிருந்த சந்திரனைத் திருமுடிமேல் வைத்துக் காத்தவனே;

சடையில் கங்கை தரித்தவனே - சடையில் கங்கையை அணிந்தவனே;

உன்னை அன்றித் துணை இங்கு ஆர் உளர்?" என்று உருகும் அடியார்க்குப் - உன்னைத் தவிர இங்கு வேறு யார் எம் துணை?" என்று உள்ளம் உருகி வழிபடும் பக்தர்களுக்கு;

"பின்னை" என்னாது அருள் ஈசன் - "பிறகு அருள்வோம்" என்று சொல்லாமல், உடனே அருள்புரியும் ஈசன்; (அப்பர் தேவாரம் - 5.38.2 - "தன்னை நோக்கித் தொழுதெழுவார்க்கெலாம் பின்னை என்னார் பெருமான்-அடிகளே");

பேரூர் நட்டப் பெருமானே - பேரூரில் உறைகின்ற நடராஜன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.436 - பேரூர் - அலையார்நதி மதிகூவிளம்

2018-05-23

P.436 - பேரூர்

---------------------------------

(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்");

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீ");


1)

அலையார்நதி மதிகூவிளம் அணிசெஞ்சடை அடிகள்

மலையான்மகள் ஒருபங்கென மகிழும்பரன் எண்ணில்

பலபேரினன் பேரூருறை பட்டீசனைக் கண்டு

நலமார்தரு தமிழ்மாலைகள் நவில்வார்வினை அறுமே.


அலை ஆர் நதி, மதி, கூவிளம் அணி செஞ்சடை அடிகள் - அலை மிக்க கங்கை, சந்திரன், வில்வம் இவற்றை அணிந்த செஞ்சடைப் பெருமான்;

மலையான்மகள் ஒரு பங்கு என மகிழும் பரன் - உமையை ஒரு பாகமாக விரும்பும் பரமன்;

எண் இல் பல பேரினன் - எண்ணற்ற பல திருநாமங்களை உடையவன்;

பேரூர் உறை பட்டீசனைக் கண்டு நலம் ஆர்தரு தமிழ்மாலைகள் நவில்வார் வினை அறுமே - பேரூரில் உறைகின்ற பட்டீசன் என்ற திருநாமம் உடைய ஈசனைத் தரிசித்து நன்மை மிக்க தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகளைப் பாடி வழிபடும் பக்தர்களது வினைகள் அழியும். (ஆர்தல் - நிறைதல்); (தருதல் - ஒரு துணைவினை);


2)

ஆரார்புரம் அவைவெந்திட அன்றோர்கணை தொட்டான்

நீரார்சடை மேல்வெண்பிறை நிலைபெற்றிட வைத்தான்

பாரோர்தொழப் பேரூருறை பட்டீசனைக் கண்டு

சீரார்தமிழ் சொல்வாரவர் தீராவினை அறுமே.


ஆரார் புரம்அவை வெந்திட அன்று ஓர் கணை தொட்டான் - பகைவர்களது முப்புரங்கள் வெந்து அழிய முன்பு ஒரு கணையை எய்தவன்; (ஆரார் - பகைவர்);

நீர் ஆர் சடைமேல் வெண்பிறை நிலைபெற்றிட வைத்தான் - கங்கைச்சடையின்மேல் வெண்திங்களை வைத்துக் காத்தவன்;

பாரோர் தொழப் பேரூர் உறை பட்டீசனைக் கண்டு சீர் ஆர் தமிழ் சொல்வார் அவர் தீரா வினை அறுமே - உலகோர் தொழுமாறு பேரூரில் உறைகின்ற பட்டீசனைத் தரிசித்து நன்மை மிக்க தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப்-பாமாலைகளைப் பாடி வழிபடும் பக்தர்களது தீராத வினைகளெல்லாம் அழியும்.


3)

ஓதந்தனில் எழுநஞ்சினை உண்டன்றருள் கண்டன்

வேதந்தனைக் கல்லால்நிழல் விரிசெய்தவன் அடியார்

பாதந்தொழப் பேரூருறை பட்டீசனைக் கண்டு

சீதந்திகழ் தமிழ்மாலைகள் செப்பக்கெடும் வினையே.


ஓதந்தனில் எழு நஞ்சினை உண்டு அன்று அருள் கண்டன் - கடலில் தோன்றிய ஆலகாலத்தை முன்னம் உண்டு அருள்செய்த நீலகண்டன்; (ஓதம் - கடல்);

வேதந்தனைக் கல்லால்நிழல் விரிசெய்தவன் - வேதங்களைக் கல்லால-மரத்தின்கீழ் உபதேசித்தவன்;

அடியார் பாதம் தொழப் பேரூர் உறை பட்டீசனைக் கண்டு, சீதம் திகழ் தமிழ்மாலைகள் செப்பக் கெடும் வினையே - அடியவர்கள் தன் திருவடியை வழிபடுமாறு பேரூரில் உறைகின்ற பட்டீசனைத் தரிசித்துக், குளிர்ச்சி பொருந்திய தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வழிபடும் பக்தர்களது வினைகள் அழியும்.


4)

நாகத்தினை அணிமார்பினன் நரையேற்றினன் எரிபோல்

ஆகத்தினன் பச்சைக்கிளி அன்னாள்மலை மங்கை

பாகத்தினன் பேரூருறை பட்டீசனை வாழ்த்தச்

சோகத்தினைத் தருவல்வினைத் துரிசோய்வது திடனே.


நாகத்தினை அணி மார்பினன் - பாம்பை மாலை போல மார்பில் அணிந்தவன்;

நரை-ஏற்றினன் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;

எரி போல் ஆகத்தினன் - தீப்போல் செம்மேனியன்;

பச்சைக்கிளி அன்னாள் மலைமங்கை பாகத்தினன் - அழகிய பைங்கிளி போன்றவளான மலைமகளை ஒரு பாகத்தில் உடையவன்; (* இத்தலத்து இறைவி திருநாமம் பச்சைநாயகி);

பேரூர் உறை பட்டீசனை வாழ்த்தச் சோகத்தினைத் தரு வல்வினைத் துரிசு ஓய்வது திடனே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனை வாழ்த்தினால், துன்பம் தரும் கொடிய வலிய வினைக்குற்றம் அழிவது நிச்சயம்; (துரிசு - குற்றம்); (ஓய்தல் - அழிதல்);


5)

தோடுங்குழை ஒன்றும்புனை தூயன்சுடு கானில்

ஆடும்புகழ் உடையான்புலி அதளான்மறை நாலும்

பாடும்பரன் பேரூருறை பட்டீசனை அன்பால்

நாடுங்குணம் உடையார்தமை நண்ணாவினை தானே.


தோடும் குழை ஒன்றும் புனை தூயன் - காதில் தோடும் ஒரு குழையும் அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்;

சுடுகானில் ஆடும் புகழ் உடையான் - சுடுகாட்டில் கூத்து ஆடுபவன்;

புலி-அதளான் - புலித்தோலை ஆடையாக அணிந்தவன்; (அதள் - தோல்); (அப்பர் தேவாரம் - 6.68.1 - "கொல்வேங்கை அதளானை");

மறை நாலும் பாடும் பரன் - நால்வேதங்களைப் பாடியவன்; நால்வேதங்களால் பாடப்படுபவன்;

பேரூர் உறை பட்டீசனை அன்பால் நாடும் குணம் உடையார்தமை நண்ணா வினைதானே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனை அன்போடு வழிபடுபவர்களை வினைகள் நெருங்கமாட்டா;


6)

மடமாதொரு கூறானவன் மதனைச்சுடு கண்ணான்

சுடர்சோதியை நிகர்மேனியன் தூவெண்மதி திகழும்

படர்வேணியன் பேரூருறை பட்டீசனை நாளும்

உடலால்மனம் வாக்கால்தொழ ஒழியும்பழ வினையே.


மடமாது ஒரு கூறு ஆனவன் - அழகிய உமையை ஒரு கூறாக உடையவன்;

மதனைச் சுடு கண்ணான் - மன்மதனைச் சுட்டெரித்த (நெற்றிக்)கண்ணினன்; (அப்பர் தேவாரம் - 4.43.4 - "காமனைக் காய்ந்த கண்ணார்");

சுடர்-சோதியை நிகர் மேனியன் - சுடர்விடும் தீப்போன்ற செம்மேனியை உடையவன்;

தூ-வெண்மதி திகழும் படர் வேணியன் - தூய வெண்பிறையைப் படரும் சடைமேல் சூடியவன்;

பேரூர் உறை பட்டீசனை நாளும் உடலால் மனம் வாக்கால் தொழ ஒழியும் பழவினையே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைத் தினமும் மனம், வாக்கு, காயம் இவை மூன்றாலும் வழிபடுபவர்களது பழைய வினைகள் அழியும். (மனம் - மனத்தால்);


7)

சடையான்திரி சூலப்படை தரிசங்கரன் கொடிமேல்

விடையான்கழல் விண்ணோர்தொழ விடமுண்டவன் பூதப்

படையானணி பேரூருறை பட்டீசனைப் போற்றி

அடைவாரவர் அருநோய்கெடும் அடைவாரமர் உலகே.


சடையான், திரிசூலப்படை தரி சங்கரன் - சடையை உடையவன், திரிசூலத்தை ஏந்திய சங்கரன்; (படை - ஆயுதம்);

கொடிமேல் விடையான் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவன்;

கழல் விண்ணோர் தொழ விடம் உண்டவன் - திருவடியைத் தேவர்கள் இறைஞ்ச அவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்டவன்;

பூதப்படையான் - பூதகணப்-படை உடையவன்;

அணி பேரூர் உறை பட்டீசனைப் போற்றி அடைவாரர் அவர் அருநோய் கெடும்; அடைவார் அமர் உலகே - அழகிய பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைப் போற்றி அடைபவர்களது அரிய நோய் (உடற்பிணி / பிறவிப்பிணி) அழியும்; அவர்கள் விரும்பத்தக்க சிவலோகத்தை அடைவார்கள்; (அமர்தல் - விரும்புதல்);


8)

வலியேமிக உன்னித்திரு மலைபேர்த்தவன் அழுகை

ஒலியேமிக விரலூன்றிய உமைகோன்அயன் தலையிற்

பலிதேரிறை பேரூருறை பட்டீசனைப் போற்றிப்

பொலிமாமலர் இடுவாரவர் பொல்லாவினை அறுமே.


வலியே மிக உன்னித் திருமலை பேர்த்தவன் அழுகை ஒலியே மிக விரல் ஊன்றிய உமைகோன் - தன் வலிமையையே மிகவும் எண்ணிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது அழுகை ஒலியே மிகும்படி திருப்பாத-விரல் ஒன்றை ஊன்றியவன், உமாபதி; (வலி - வலிமை); (உன்னுதல் - எண்ணுதல்);

அயன் தலையில் பலிதேர் இறை - பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சை ஏற்கும் இறைவன்;

பேரூர் உறை பட்டீசனைப் போற்றிப் பொலி மாமலர் இடுவார்அவர் பொல்லாவினை அறுமே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைப் போற்றி அழகிய பூக்களைத் தூவி வழிபடும் பக்தர்களது தீவினை அழியும்;


9)

சிசுபாலனை மாய்த்தான்அயன் தேடித்தொழு சோதி

சசிசேகரன் புரிநூலணி தடமார்பினில் நீற்றன்

பசுவேறிறை பேரூருறை பட்டீசனைப் போற்றிக்

கசிவாரவர் வினையாயின கழலப்பெறு வாரே.


சிசுபாலனை மாய்த்தான் அயன் தேடித் தொழு சோதி - சிசுபாலனைக் கொன்ற (கிருஷ்ணனாக அவதரித்த) திருமாலும் பிரமனும் அடிமுடி தேடித் தொழநின்ற தீப்பிழம்பு;

சசிசேகரன் - மதிசூடி; (சசி - சந்திரன்);

புரிநூல் அணி தட-மார்பினில் நீற்றன் - பூணூலை அணிந்த அகன்ற மார்பில் திருநீற்றைப் பூசியவன்;

பசு ஏறு இறை - இடபவாகனன்;

பேரூர் உறை பட்டீசனைப் போற்றிக் கசிவார்அவர் வினை ஆயின கழலப் பெறுவாரே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைப் போற்றி உருகும் பக்தர்களது வினைகள் நீங்கும்; (அப்பர் தேவாரம் - 5.83.2 - "வார்சடை ஈசனை ... கண்டலும் வினையான கழலுமே");


10)

கரவேமலி நெஞ்சத்தினர் கத்தித்திரி பொய்யர்

உரைநீங்கிடும் அடியார்தொழும் உருவேற்றருள் செய்யும்

பரமாபரன் பேரூருறை பட்டீசனைப் போற்றிச்

சுரமார்தமிழ் சொல்வாரவர் துயராயின அறுமே.


கரவே மலி நெஞ்சத்தினர் கத்தித் திரி பொய்யர் உரை நீங்கிடும் - வஞ்சமே நிறைந்த நெஞ்சம் உடையவர்கள், பொய்களைக் கத்தித் திரிகின்றவர்கள் இவர்களது பேச்சை நீங்குங்கள்;

அடியார் தொழும் உரு ஏற்று அருள்செய்யும் பரமாபரன் - பக்தர்கள் வழிபடும் எந்த உருவையும் ஏற்று அவ்வடிவில் வந்து அருள்கின்ற மிக-மேலானவன்;

பேரூர் உறை பட்டீசனைப் போற்றிச் சுரம் ஆர் தமிழ் சொல்வார் அவர் துயர் ஆயின அறுமே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைப் போற்றி இசை பொருந்திய தமிழ்ப்பாமாலைகளைச் சொல்லும் அன்பர்களது துன்பம் தீரும்; (சுரம் - ஸ்வரம் - ஏழிசை);


11)

மணிநீரலை சடையின்மிசை மதிகூவிளம் கொன்றை

அணிநீர்மையன் வரியார்தரும் அதளாடையின் மீது

பணியார்பரன் பேரூருறை பட்டீசனைப் போற்றிப்

பணிவாரவர் வினைதீர்ந்தினிப் படிமேல்பிற வாரே.


மணிநீர் அலை சடையின்மிசை மதி கூவிளம் கொன்றை அணி நீர்மையன் - தெளிந்த கங்கை அலைகின்ற (/ அலைக்கின்ற) அழகிய பவளம் போன்ற சடைமேல் சந்திரன் வில்வம் கொன்றைமலர் இவற்றை அணிந்த பெருமை உடையவன்; (மணி - அழகு; பவளம்; பளிங்கு); (மணி - நீருக்கும் அடைமொழி & சடைக்கும் அடைமொழி);

வரிர்தரும் அதள்-டையின் மீது பணிர்-பரன் - வரிகள் பொருந்திய (புலித்)தோலாடையின்மேல் பாம்பைக் கட்டிய பரமன்; (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்); (அதள் - தோல்); (பணி - நாகம்); (ஆர்த்தல் - கட்டுதல்);

பேரூர் உறை பட்டீசனைப் பேரூருறை பட்டீசனைப் போற்றிப் பணிவாரவர் - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைப் போற்றி வணங்கும் அன்பர்கள்;

வினை தீர்ந்து இனிப் படிமேல் பிறவாரே - தங்கள் வினையெல்லாம் தீர்ந்து மீண்டும் பூமியில் பிறவி இல்லாத நிலையை (= முக்தி) அடைவார்கள்; (படி - பூமி);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.435 - பொது - தலமாலை - ஆடானை ஆட

2018-05-22

P.435 - பொது - தலமாலை

---------------------------------

(குறள்வெண்பா)


முற்குறிப்பு: ஒவ்வொரு பாடலிலும் ஒரு தலம். அடிதோறும் முதற்சீரில் மடக்கு அமைந்த பாடல்கள்.


1) -- திருவாடானை --

ஆடானை ஆடவைக்கும் பாடானைப் பாடவைக்கும்

ஆடானை ஐயன் அருள்.


திருவாடானைப் பெருமானது அருளானது ஆடாதவரையும் ஆடச்செய்யும், பாடாதவரையும் பாடச் செய்யும்; (* திருநாவுக்கரசர் தேவாரம் - 6.95.3 - "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே ... பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே");


2) -- திருவாலங்காடு --

ஆலங்காட் டீசன் அழகிய கண்டத்தில்

ஆலங்காட் டன்பார் அரன்.


ஆலங்காட்டு ஈசன் அழகிய கண்டத்தில் ஆலம் காட்டு அன்பு ஆர் அரன் - திருவாலங்காட்டில் உறைகின்ற ஈசன் தன் அழகிய மிடற்றில் ஆலகாலத்தைக் (கரிய மணியாகக்) காட்டுகின்ற அன்பு மிக்க ஹரன்;

3) -- திருநல்லம் (கோனேரிராஜபுரம்) --

நல்ல நிலைபெறலா(ம்) நானிலத்தில் நெஞ்சமே

நல்ல நகரானை நாடு.


நல்ல நிலை பெறல் ஆம் நானிலத்தில், நெஞ்சமே, நல்லம் நகரானை நாடு - நெஞ்சே, திருநல்லத்தில் உறைகின்ற இறைவனை விரும்பி அடை; மண்ணுலகில் இன்புற்று வாழும் நிலை கிட்டும்; ("நல்லம் + நகர் = நல்லநகர்" என்று மகர-ஒற்றுக் கெட்டுப் புணரும்); (சம்பந்தர் தேவாரம் - 1.85.1 - "நல்லான் நமையாள்வான் நல்ல நகரானே");


4) -- திருவலிதாயம் (பாடி) --

வலிதாய பண்டைவினை மாய மனமே

வலிதாய மேயானை வாழ்த்து.


வலிதாய பண்டைவினை மாய, மனமே, வலிதாயம் மேயானை வாழ்த்து - மனமே, வலிமை மிக்கதான பழவினை அழியத், திருவலிதாயத்தில் உறைகின்ற பெருமானைப் போற்றி வழிபடு; (வலிது - வலிமையுள்ளது); (பண்டை - பழமை); (வலிதாயம் + மேயானை = "வலிதாய மேயானை" என்று மகர-ஒற்றுக் கெட்டுப் புணரும்);


5) -- திருக்கானூர் --

கானூர் பெரும்பாம்பு கங்கை மதிபுனைந்த

கானூர் அரனைக் கருது.


கான் ஊர் பெரும்பாம்பு, கங்கை, மதி புனைந்த கானூர் அரனைக் கருது - காட்டில் ஊர்கின்ற பெரிய பாம்பு, கங்கைநதி, சந்திரன் இவற்றை அணிந்த, திருக்கானூரில் உறைகின்ற ஹரனை விரும்பி எண்ணு;


6) -- சிக்கல் (திருச்சிக்கல்) --

சிக்கலில் மேன்மைபெறச் சிந்தி தினம்நெஞ்சே

சிக்கலில் மேயசிவன் சீர்.


சிக்கல் இல் மேன்மை பெறச், சிந்தி தினம் நெஞ்சே, சிக்கலில் மேய சிவன் சீர் - மனமே, கஷ்டங்கள் இல்லாத உயர்நிலை பெறுவதற்குத், திருச்சிக்கலில் உறைகின்ற சிவபெருமான் புகழைத் தினமும் எண்ணுவாயாக.


7) -- திங்களூர் --

திங்களூர் பாம்பு திகழ்முடிமேற் சேர்த்தவன்

திங்களூர் ஈசனெனச் செப்பு.


திங்கள், ஊர் பாம்பு திகழ்முடிமேல் சேர்த்தவன் திங்களூர் ஈசன் எனச் செப்பு - சந்திரனையும் ஊர்கின்ற பாம்பையும் திருமுடிமேல் ஒன்றாகச் சேர்த்தவன் திங்களூரில் உறைகின்ற ஈசன் என்று சொல்.

8) -- அண்ணாமலை --

அண்ணா கமியென் றழுதசமு கற்குமுண்டே

அண்ணா மலையான் அருள்.


"அண்ணா! கமி!" என்று அழு தசமுகற்கும் உண்டே அண்ணாமலையான் அருள் - "அண்ணலே! பொறுத்தருளாய்" என்று அழுத இராவணனுக்கும் திருவண்ணாமலை இறைவன் அருள் உண்டு. (கமித்தல் - க்ஷமித்தல் - மன்னித்தல்; பொறுத்தல்); (தசமுகற்கும் - தசமுகனுக்கும்);


9) -- ஆனைக்கா (திருவானைக்காவல்) --

ஆனைக்கா ஓர்முதலை செற்றான் அயனறியார்

ஆனைக்கா அண்ணல் அடி.


ஆனைக்கா ஓர் முதலை செற்றான் அயன் அறியார் ஆனைக்கா அண்ணல் அடி - கஜேந்திரனுக்காக ஒரு முதலையை அழித்த திருமாலாலும் பிரமனாலும் அறியப்படாதது திருவானைக்கா ஈசனது திருவடி; (ஆனைக்கா - 1. யானைக்காக; 2. திருவானைக்கா என்ற தலம்); (செறுதல் - அழித்தல்);


10) -- அன்பில் ஆலந்துறை --

அன்பிலா வம்பர்க் கருளிலான் ஆற்றனிடம்

அன்பிலா லந்துறை ஆம்.


அன்பு இலா வம்பர்க்கு அருள் இலான், ஆற்றன் இடம் அன்பில் ஆலந்துறை ஆம் - அன்பற்ற துஷ்டர்களுக்கு அருள் இல்லாதவனும், கங்கையை அணிந்தவனுமான ஈசன் உறையும் இடம் அன்பில் ஆலந்துறை ஆகும்; (வம்பர் - பயனற்றவர்; துஷ்டர்); (ஆறு - 1. நதி; 2. நெறி); (ஆற்றன் - கங்காதரன்; நீதிநெறியே வடிவாக உடையன் எனலும் ஆம்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");


11) -- பேரூர் --

பேரூர் உரைத்தல் பெறவேண்டில் நாவேநீ

பேரூர் அரன்புகழே பேசு.


பேர் ஊர் உரைத்தல் பெறவேண்டில், நாவே நீ பேரூர் அரன் புகழே பேசு - நம் பெயரையும் புகழையும் ஊர்மக்கள் எல்லாரும் சொல்லும் உயர்ந்த நிலையைப் பெறவேண்டும் என்றால், நாக்கே நீ பேரூரில் உறையும் சிவபெருமான் புகழையே பேசு. (பேர் - பெயர்; புகழ்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------