Saturday, January 17, 2026

P.465 - மாடம்பாக்கம் - இதழிவண் கூவிளம்

2019-02-18

P.465 - மாடம்பாக்கம்

(தாம்பரம் அருகுள்ள தலம்)

---------------------------------

(எண்சீர் விருத்தம் - விளம் விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.8.1 - "புண்ணியர் பூதியர் பூதநாதர்")


1)

இதழிவண் கூவிளம் வன்னி தூவி .. இருக்கொடு தோத்திரம் பலவும் ஓதிப்

பதமலர் போற்றிய பகீர தற்காப் .. பாய்புனற் கங்கையைச் சடையில் ஏற்றான்

முதலொடு முடிவுமி லாத மூர்த்தி .. முக்கணன் மலைமகள் அஞ்சு மாறு

மதகரி உரித்தவன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.


இதழி வண்-கூவிளம் வன்னி தூவி இருக்கொடு தோத்திரம் பலவும் ஓதிப் - கொன்றைமலர், வளமையான வில்வம், வன்னி இவற்றையெல்லாம் தூவி, வேதமந்திரங்கள், தோத்திரங்கள் எல்லாம் சொல்லி;

பதமலர் போற்றிய பகீரதற்காப் பாய்-புனல் கங்கையைச் சடையில் ஏற்றான் - திருவடித்தாமரையை வழிபட்ட பகீரதனுக்காகப் பாய்ந்து வந்த கங்கையைச் சடையில் ஏற்றவன்;

முதலொடு முடிவும் இலாத மூர்த்தி முக்கணன் - ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன், முக்கண்ணன்;

மலைமகள் அஞ்சுமாறு மதகரி உரித்தவன் - உமாதேவி அஞ்சும்படி மதயானையின் தோலை உரித்தவன்;

மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்; (* தேனுபுரீசன் - மாடம்பாக்கத்தில் ஈசன் திருநாமம்);


2)

ஆரணம் ஓதிவ ணங்கி நின்ற .. அருமறைச் சிறுவன தாவி காத்த

பூரணன் பூங்கணை எய்த வேளைப் .. பொடிபட நோக்கிய நெற்றிக் கண்ணன்

காரணன் மெல்லிடை அங்க யற்கண் .. காரிகை அஞ்சிடக் கான கத்து

வாரணம் உரித்தவன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.


ஆரணம் ஓதி வணங்கி நின்ற அருமறைச் சிறுவனது ஆவி காத்த பூரணன் - வேதம் ஓதி வழிபட்ட மார்க்கண்டேயரது உயிரைக் காத்த முழுமுதற்பொருள்;

பூங்கணை எய்த வேளைப் பொடிபட நோக்கிய நெற்றிக்கண்ணன் - மலர்க்கணை எய்த மன்மதனைச் சாம்பலாகும்படி பார்த்த நெற்றிக்கண்ணன்;

காரணன் - அனைத்திற்கும் மூலமானவன்;

மெல்லிடை அங்கயற்கண் காரிகை அஞ்சிடக் கானகத்து வாரணம் உரித்தவன் - சிற்றிடையும் அழகிய கயல்மீன் போன்ற கண்ணும் உடைய உமாதேவி அஞ்சும்படி காட்டுயானையின் தோலை உரித்தவன்;

மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;


3)

சாகரந் தனிலெழு நஞ்சு கண்டு .. தாளிணை தொழுசுரர் உய்ய உண்டு

மேகநி றந்திகழ் மணிமி டற்றன் .. விரிசடை மேலிளம் திங்க ளோடு

நாகமும் வைத்தவன் பூத நாதன் .. நரைவிடை ஊர்தியன் நாரி அஞ்ச

மாகரி உரித்தவன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.


சாகரம்-தனில் எழு நஞ்சு கண்டு தாளிணை தொழு சுரர் உய்ய உண்டு - கடலில் தோன்றிய ஆலகாலத்தைக் கண்டு அஞ்சித் திருவடியை வழிபட்ட தேவர்கள் பிழைக்கும்படி அதனைத் தான் உண்டதனால்;

மேகநிறம் திகழ் மணி மிடற்றன் - மேகம் போல் கரிய நிறம் திகழும் நீலகண்டத்தை உடையவன்;

விரிசடைமேல் இளம்-திங்களோடு நாகமும் வைத்தவன் - விரிந்த சடையின்மேல் இளம்பிறையையும் பாம்பையும் அணிந்தவன்;

பூத-நாதன் - பூதகணங்களுக்குத் தலைவன்;

நரைவிடை ஊர்தியன் - வெண்ணிற இடபத்தை ஊர்தியாக உடையவன்;

நாரி அஞ்ச மா-கரி உரித்தவன் - உமாதேவி அஞ்சும்படி பெரிய யானையின் தோலை உரித்தவன்;

மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;


4)

குழைவுறு மனத்தொடு பூவும் நீரும் .. கொண்டடி இணைதனைப் போற்றி செய்வார்

பழவினை தீர்த்தருள் செய்யும் பண்பன் .. பாய்புலித் தோலினன் பால்வெண் ணீற்றன்

அழகிய உமையொரு பாகம் ஆகும் .. அற்புதன் வெற்புவில் ஏந்து வீரன்

மழவிடை ஊர்தியன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.


குழைவுறு மனத்தொடு பூவும் நீரும் கொண்டு அடி-இணைதனைப் போற்றிசெய்வார் பழவினை தீர்த்தருள் செய்யும் பண்பன் - மனம் உருகிப் பூவாலும் நீராலும் இரு-திருவடிகளை வழிபடும் பக்தர்களது பழைய வினைகளையெல்லாம் தீர்த்து அருளும் குணம் உடையவன்;

பாய்-புலித் தோலினன் - பாயும் புலியின் தோலை ஆடையாக உடையவன்;

பால்வெண்ணீற்றன் - பால் போல் வெண்மை திகழும் திருநீற்றைப் பூசியவன்;

அழகிய உமை ஒரு பாகம் ஆகும் அற்புதன் - அழகிய உமையம்மையை ஒரு பாகமாக உடைய அற்புதன்;

வெற்புவில் ஏந்து வீரன் - மேருமலையை வில்லாக ஏந்திய வீரன்;

மழவிடை ஊர்தியன் - இளைய இடபத்தை ஊர்தியாக உடையவன்;

மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;


5)

கூன்பிறை கூவிளம் குரவம் கொன்றை .. குளிர்புனல் அணிந்தவன் தேவர் ஏத்தும்

கோன்புலித் தோலினை ஆடை யாகக் .. கொண்டவன் நூல்திகழ் கோல மார்பன்

மான்புரை நோக்கியை வாமம் வைத்த .. மன்னவன் வில்லென மலைவ ளைத்து

வான்புரம் எய்தவன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.


கூன்பிறை கூவிளம் குரவம் கொன்றை குளிர்புனல் அணிந்தவன் - வளைந்த சந்திரன், வில்வம், குராமலர், கொன்றைமலர், கங்கை இவற்றையெல்லாம் அணிந்தவன்;

தேவர் ஏத்தும் கோன் - தேவர்களெல்லாம் வணங்கும் தலைவன்;

புலித்தோலினை ஆடையாகக் கொண்டவன் - புலித்தோலை அரையில் ஆடையாக உடையவன்;

நூல் திகழ் கோல மார்பன் - அழகிய மார்பில் முப்புரிநூல் திகழ்பவன்;

மான் புரை நோக்கியை வாமம் வைத்த மன்னவன் - மான் போலப் பார்வையுடைய உமையை இடப்பக்கம் ஏற்ற மன்னன்; (புரைதல் - ஒத்தல்);

வில் என மலை வளைத்து வான்-புரம் எய்தவன் - மேருமலையை வில்லாக வளைத்து பெரிய முப்புரங்களை எய்தவன்;

மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;


6)

சுறவணி கொடியுடை வேள தாகம் .. சுடுபொடி ஆகிட நோக்க வல்லான்

குறமகள் கொழுநனைப் பெற்ற அத்தன் .. குற்றமில் பெற்றியன் குரவ னாகி

அறமுரை செய்திட ஆல நீழல் .. அமர்ந்தவன் அடியவர் வாழ அன்று

மறலியைச் செற்றவன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.


சுறவு அணி கொடியுடை வேளது ஆகம் சுடுபொடி ஆகிட நோக்க வல்லான் - மகரக்கொடியை உடைய மன்மதனது உடல் சாம்பல் ஆகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவன்;

குறமகள் கொழுநனைப் பெற்ற அத்தன் - வள்ளிகணவனான முருகனைப் பெற்ற தந்தை;

குற்றம் இல் பெற்றியன் - குற்றமற்றவன்; (பெற்றி - இயல்பு; தன்மை; பெருமை);

குரவன் ஆகி அறம் உரைசெய்திட ஆல-நீழல் அமர்ந்தவன் - குருவாகிக் கல்லாலமரத்தின்கீழ் இருப்பவன்;

அடியவர் வாழ அன்று மறலியைச் செற்றவன் - மார்க்கண்டேயர் வாழ்வதற்காக முன்னர் இயமனை உதைத்தவன்; (மறலி - இயமன்);

மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;


7)

சிலந்திசெய் பணியுகந் துலகம் ஆளும் .. செங்கணன் என்றொரு பிறவி தந்தான்

சலந்தரன் உடலினை வெட்டு மாறு .. தரைமிசைச் சக்கரம் தனைவ ரைந்தான்

அலந்தடி வீழ்தரு திங்கள் தன்னை .. அஞ்சடை அதன்மிசை ஒளிர வைத்தான்

வலந்திகழ் மழுவினன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.


சிலந்தி செய் பணி உகந்து உலகம் ஆளும் செங்கணன் என்று ஒரு பிறவி தந்தான் - திருவானைக்காவில் சிலந்தி செய்த தொண்டினைக் கண்டு மகிழ்ந்து செங்கட்சோழன் என்ற அரசனாகப் பிறப்பித்தவன்;

சலந்தரன் உடலினை வெட்டுமாறு தரைமிசைச் சக்கரம் தனை வரைந்தான் - ஜலந்தராசுரனது உடலை வெட்டி அவனை அழிக்கும்படி தரைமேல் ஒரு சக்கரத்தை வரைந்தவன்;

அலந்து அடி வீழ்தரு திங்கள்-தன்னை அஞ்சடை அதன்மிசை ஒளிர வைத்தான் - வருந்திவந்து திருவடியில் விழுந்த சந்திரனை அழகிய சடையின்மேல் ஒளிவீசும்படி வைத்தவன்;

வலம் திகழ் மழுவினன் - வெற்றியுடைய மழுவாயுதத்தை ஏந்தியவன்;

மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;


8)

தோள்மலை போல்திகழ் வல்ல ரக்கன் .. தூக்கிய வரைமிசை விரலை ஊன்றித்

தாள்மலர்ப் புகழ்தனைப் பாட வைத்த .. தயைமலி சங்கரன் வாளி னோடு

நாள்மிகத் தந்தவன் நக்க னாகி .. நாரியர் இடுபலிக் குழலும் ஏந்தல்

வாள்மதிக் கண்ணியன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.


* இலக்கணக் குறிப்பு - "ள் + = ண்ம" என்று புணர்ச்சியில் திரியும்.

தோள் மலை போல் திகழ் வல்-அரக்கன் தூக்கிய வரைமிசை - மலைபோல் திகழும் புஜங்களை உடைய வலிய அரக்கனான இராவணன் தூக்கிய கயிலைமலையின்மேல்; (வரை - மலை);

விரலை ஊன்றித் தாள்மலர்ப்-புகழ்தனைப் பாடவைத்த தயை மலி சங்கரன் - திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி (அவனை நசுக்கி), அவனைத் தன் திருவடித்தாமரையின் புகழைப் பாடச்செய்த அருள் மிகுந்த சங்கரன்;

வாளினோடு நாள் மிகத் தந்தவன் - பின்னர் அவனுக்கு இரங்கிச் சந்திரஹாஸம் என்ற வாளையும் நீண்ட ஆயுளையும் தந்தவன்;

நக்கன் ஆகி நாரியர் இடுபலிக்கு உழலும் ஏந்தல் - திகம்பரன் ஆகிப், பெண்கள் இடும் பிச்சைக்குத் திரிகின்ற பெருமை உடையவன்;

வாள்-மதிக் கண்ணியன் - ஒளியுடைய சந்திரனைச் சடையில் கண்ணிமாலை போல் அணிந்தவன்;

மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;


9)

நான்முகன் நாரணன் இவர்கள் நேடி .. நாணிவ ணங்கிட நின்ற சோதி

தேன்மலர்க் கொன்றைய லங்கல் மார்பன் .. செய்யவன் சினவிடை யேறி ஆவின்

பான்மகிழ்ந் தாடிய பரமன் கானில் .. பார்த்தனுக் கருளிய வேடன் சூலம்

மான்மறி தரித்தவன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.


நான்முகன் நாரணன் இவர்கள் நேடி நாணி வணங்கிட நின்ற சோதி - பிரமனும் திருமாலும் அடிமுடி தேடிக் காணாது வெட்கி வழிபடும்படி ஓங்கி நின்ற ஜோதிவடிவினன்;

தேன்மலர்க்-கொன்றை அலங்கல் மார்பன் - தேன் நிறைந்த கொன்றைமலர்-மாலையை மார்பில் அணிந்தவன்; (அலங்கல் - பூமாலை);

செய்யவன் - செம்மேனியன்;

சினவிடை ஏறி - சினம் உடைய இடபத்தை வாகனமாக உடையவன்;

ஆவின் பால் மகிழ்ந்து ஆடிய பரமன் - பசுவின் பாலால் அபிஷேகத்தை விரும்பிய பரமன்; (* இலக்கணக் குறிப்பு - "ல் + = ன்ம" என்று புணர்ச்சியில் திரியும்).

கானில் பார்த்தனுக்கு அருளிய வேடன் - காட்டில் அருச்சுனனுக்கு வேடன் வடிவில் சென்று அருளியவன்;

சூலம் மான்மறி தரித்தவன் - திரிசூலத்தையும் மான்கன்றையும் ஏந்தியவன்;

மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;


10)

பொய்யினை நெஞ்சினில் தாங்கி என்றும் .. புறனுரை செய்பவர்க் கருள கில்லான்

மெய்யினில் வெண்பொடி பூசி நின்று .. விரைகமழ் பூக்களைத் தூவி வாழ்த்திக்

கையினைக் கூப்பிய நேயர் நெஞ்சில் .. கருதிய யாவையும் நல்கும் வள்ளல்

மையணி மிடறினன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.


பொய்யினை நெஞ்சினில் தாங்கி என்றும் புறனுரை செய்பவர்க்கு அருளகில்லான் - நெஞ்சில் பொய்யைத் தாங்கி எந்நாளும் பழிமொழிகளையே பேசுவார்க்கு அருளாதவன்;

மெய்யினில் வெண்பொடி பூசி நின்று, விரை கமழ் பூக்களைத் தூவி வாழ்த்திக் - உடம்பில் வெண்திருநீற்றைப் பூசி, மணம் கமழும் பூக்களைத் தூவி வாழ்த்தி;

கையினைக் கூப்பிய நேயர் நெஞ்சில் கருதிய யாவையும் நல்கும் வள்ளல் - கைகூப்பி வழிபடும் அடியவர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் அளிக்கும் வள்ளல்;

மை அணி மிடறினன் - நீலகண்டன்; (மிடறு - கண்டம்);

மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;


11)

துணிமதி சூடிய தேவ என்றும் .. சுடலையில் ஆடிய கூத்த என்றும்

அணியென அரவினை மார்பில் ஏற்ற .. அழகிய சங்கர என்றும் ஓதிப்

பணிபவர் இன்புற அபயம் நல்கிப் .. பழவினை தீர்ப்பவன் பரசு பாணி

மணியணி மிடறினன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.


"துணி-மதி சூடிய தேவ" என்றும் - பிறையைச் சூடிய தேவனே என்றும்; (துணி - துண்டம்);

"சுடலையில் ஆடிய கூத்த" என்றும் - சுடுகாட்டில் ஆடும் கூத்தனே என்றும்;

"அணி என அரவினை மார்பில் ஏற்ற அழகிய சங்கர" என்றும் - ஆபரணமாகப் பாம்பினைத் திருமார்பில் தரித்த அழகிய சங்கரனே என்றும்;

ஓதிப் பணிபவர் இன்புற அபயம் நல்கிப் பழவினை தீர்ப்பவன் - பாடி வணங்கும் அன்பர்கள் இன்புறும்படி அவர்களுக்கு அபயம் அளித்து அவர்களது பழைய வினைகளையெல்லாம் தீர்ப்பவன்;

பரசு-பாணி - மழுவாயுதத்தை ஏந்தியவன்;

மணி அணி மிடறினன் - நீலகண்டன்; (மிடறு - கண்டம்);

மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு :

எண்சீர் விருத்தம் - விளம் விளம் மா தேமா - என்ற அரையடி வாய்பாடு.

அரையடிச் சந்தம் - தானன தானன தான தானா.

விளச்சீர் வரும் இடத்தில் மாங்காய்ச்சீரோ மாச்சீரோ வரலாம். விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

சம்பந்தர் தேவாரம் - 1.8.1 - "புண்ணியர் பூதியர் பூத நாதர்".

காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் - 11.2.1 - "கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து" - இவ்வமைப்பு என்று கருதுகின்றேன்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.464 - உத்தரகோசமங்கை - மேவலர் முப்புரமும்

2019-02-14

P.464 - உத்தரகோசமங்கை

-------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தானன தானதனா தனதானன தானதனா;

"தானதனா" என்பது "தானதானா" என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.57.1 - "விடையவன் விண்ணுமண்ணும்")

(சுந்தரர் தேவாரம் - 7.100.1 - "தானெனை முன்படைத்தான்")


1)

மேவலர் முப்புரமும் விழவோர்மலை வில்வளைத்த

காவல கண்ணுதலே கமழ்புன்சடை மேற்பிறையாய்

சேவமர் செம்பெருமான் திருவுத்தர கோசமங்கைச்

சேவக னேஅடிகேள் சிறியேன்வினை தீர்த்தருளே.


மேவலர் முப்புரமும் விழ ஓர் மலை வில் வளைத்த காவல - பகைவர்களது முப்புரங்களும் அழியும்படி ஒரு மலையை வில்லாக வளைத்த அரசனே; (மேவலர் - பகைவர்);

கண்ணுதலே - நெற்றிக்கண்ணனே;

கமழ் புன்சடைமேல் பிறையாய் - கமழும் செஞ்சடைமேல் திங்களை அணிந்தவனே;

சே அமர் செம்பெருமான் - இடபவாகனைத்தை விரும்பிய செம்மேனிப் பெருமானே; (சே - எருது);

திருவுத்தரகோசமங்கைச் சேவகனே - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் வீரனே;

அடிகேள் - சுவாமீ; (அடிகள் என்ற சொல் விளியில் அடிகேள் என்று ஆகும்);

சிறியேன் வினை தீர்த்தருளே - சிறுமைகள் மிக்க அடியேனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;


2)

தீயினும் வெம்மையனே தினமேத்திடும் அன்பருக்குத்

தாயினு(ம்) நல்லவனே தனிவெள்விடை ஊர்தியினாய்

சேயிழை பங்கினனே திருவுத்தர கோசமங்கை

மேயவ னேவிமலா வினையாயின தீர்த்தருளே.


தீயினும் வெம்மையனே - தீயைக்காட்டிலும் வெம்மை மிக்கவனே;

தினம் ஏத்திடும் அன்பருக்குத் தாயினும் நல்லவனே - நாள்தோறும் வழிபடும் பக்தர்களுக்குத் தாயைக்காட்டிலும் நன்மை புரிபவனே;

தனி வெள்விடை ஊர்தியினாய் - ஒப்பற்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனே; (தனி - ஒப்பற்ற);

சேயிழை பங்கினனே - உமைபங்கனே; (சேயிழை - பெண்);

திருவுத்தரகோசமங்கை மேயவனே - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருப்பவனே;

விமலா - தூயவனே;

வினையாயின தீர்த்தருளே - அடியேனது வினைகளையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;


3)

மந்திர நான்மறையாய் மணிமார்பினில் நூலினனே

சந்திர சேகரனே தலைமாலை அணிந்தவனே

செந்தழல் மேனியினாய் திருவுத்தர கோசமங்கை

அந்தண னேஅடிகேள் அடியேன்வினை தீர்த்தருளே.


மந்திர நான்மறையாய் - மந்திரமாக விளங்கும் நால்வேதப்பொருளே;

மணி-மார்பினில் நூலினனே - அழகிய பவளம் போன்ற மார்பில் முப்புரிநூல் அணிந்தவனே; (மணி - அழகு; பவளம்);

சந்திர-சேகரனே - பிறையைச் சூடியவனே;

தலைமாலை அணிந்தவனே - மண்டையோட்டு மாலையை அணிந்தவனே;

செந்தழல் மேனியினாய் - செந்தீப்போல் செம்மேனி உடையவனே;

திருவுத்தரகோசமங்கை அந்தணனே - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் அருளுடையவனே;

அடிகேள் - சுவாமீ;

அடியேன் வினை தீர்த்தருளே - அடியேனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;


4)

ஆலமர் மாமிடற்றாய் அணிமங்கள நாயகியோர்

பாலமர் பண்பினனே படுகானிடை ஆடலினாய்

சேலுகள் வாவிதிகழ் திருவுத்தர கோசமங்கை

நாலு மறைப்பொருளே நலிதீவினை தீர்த்தருளே.


ஆல் அமர் மா-மிடற்றாய் - ஆலகாலத்தை விரும்பி உண்ட அழகிய நீலகண்டனே;

அணி மங்களநாயகி ஓர் பால் அமர் பண்பினனே - அழகிய மங்களநாயகியைத் திருமேனியில் ஒரு பக்கம் பங்காக விரும்பியவனே; (* மங்களநாயகி - இத்தலத்து இறைவி திருநாமம்);

படுகானிடை ஆடலினாய் - சுடுகாட்டில் கூத்தாடுபவனே;

சேல் உகள் வாவி திகழ் திருவுத்தரகோசமங்கை நாலுமறைப்பொருளே - சேல்மீன்கள் பாயும் குளம் திகழும் திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் வேதநாயகனே;

நலி-தீவினை தீர்த்தருளே - அடியேனை வருத்துகின்ற தீவினைகளைத் தீர்த்து அருள்வாயாக;


5)

வெஞ்சினக் காலனுயிர் விடவீசிய பூங்கழலாய்

மஞ்சடை மாகயிலை மலைமேலுறை மன்னவனே

செஞ்சடை மேற்பிறையாய் திருவுத்தர கோசமங்கை

நஞ்சடை நன்மிடற்றாய் நலிவினை தீர்த்தருளே.


வெஞ்சினக் காலன் உயிர் விட வீசிய பூங்கழலாய் - கடுங்கோபமுடைய கூற்றுவனே இறக்கும்படி அவனை அழகிய மென்மையான திருவடியால் உதைத்தவனே;

மஞ்சு அடை மா கயிலைமலைமேல் உறை மன்னவனே - மேகம் அடைகின்ற அழகிய கயிலைமலையின்மேல் வீற்றிருக்கும் மன்னனே;

செஞ்சடைமேல் பிறையாய் - சிவந்த சடையின்மீது சந்திரனை அணிந்தவனே;

திருவுத்தரகோசமங்கை நஞ்சு அடை நன்-மிடற்றாய் - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும், ஆலகாலத்தை உண்டு ஒளித்த நல்ல கண்டம் உடையவனே (நீலகண்டனே);

நலி-வினை தீர்த்தருளே - அடியேனை வருத்துகின்ற தீவினைகளைத் தீர்த்து அருள்வாயாக;


6)

உண்ணரு மாவிடத்தை ஒருநற்கனி போலநுங்கி

எண்ணிய இன்னமுதை இமையோர்க்கருள் செய்தவனே

திண்ணிய மாமதில்சூழ் திருவுத்தர கோசமங்கைப்

பெண்ணொரு பங்கினனே பிணிவல்வினை தீர்த்தருளே.


உண்ணரு மாவிடத்தை ஒரு நற்கனி போல நுங்கி - உண்ணலாகாத பெரிய நஞ்சை ஒரு நல்ல பழம்போல் அள்ளி விழுங்கி; (உண்ணரு - உண்ண அரு - தொகுத்தல் விகாரம்); ( நுங்குதல் - விழுங்குதல்);

எண்ணிய இன்னமுதை இமையோர்க்கு அருள்செய்தவனே - தேவர்கள் விரும்பிய இனிய அமுதினை அவர்களுக்கு அருள்புரிந்தவனே;

திண்ணிய மா-மதில்சூழ் திருவுத்தரகோசமங்கைப் பெண் ஒரு பங்கினனே - வலிய பெரிய மதிலால் சூழப்பெற்ற திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் உமைபங்கனே;

பிணி-வல்வினை தீர்த்தருளே - அடியேனைப் பிணித்துள்ள வலிய வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;


7)

மறைமொழி நாவினனே மதவேளை எரித்தவனே

நறைமலர் நச்சரவம் நளிர்கங்கை அணிந்தவனே

சிறையளி ஆர்பொழில்சூழ் திருவுத்தர கோசமங்கை

உறைதரும் உத்தமனே உறுதீவினை தீர்த்தருளே.


மறைமொழி நாவினனே - வேதங்களைப் பாடியருளியவனே;

மதவேளை எரித்தவனே - மன்மதனை எரித்தவனே;

நறைமலர் நச்சரவம் நளிர்-கங்கை அணிந்தவனே - வாசமலர்கள், விஷப்பாம்பு, குளிர்ந்த கங்கை இவற்றையெல்லாம் அணிந்தவனே;

சிறை-அளி ஆர் பொழில் சூழ் திருவுத்தரகோசமங்கை உறைதரும் உத்தமனே - சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலைகளால் சூழப்பெற்ற திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் உத்தமனே; (சிறை - சிறகு); (அளி - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (தருதல் - ஒரு துணைவினை);

உறு-தீவினை தீர்த்தருளே - எனது மிகுந்த தீவினையைத் தீர்த்து அருள்வாயாக;


8)

சென்றரு வெற்பிடந்த சிதடன்முடி பத்துமிற

அன்றொரு தாள்விரலால் அடர்செய்திசை கேட்டவனே

தென்றலில் வாசமலி திருவுத்தர கோசமங்கை

நின்ற அருட்கடலே நினைவேன்வினை தீர்த்தருளே.


சென்று அரு-வெற்பு இடந்சிதடன் முடி பத்தும் இ - ஓடிச்சென்று கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான இராவணனது பத்துத்தலைகளும் நொறுங்கும்படி; (சிதடன் - அறிவிலி);

அன்று ஒரு தாள்விரலால் அடர்செய்து இசை கேட்டவனே - அன்று திருப்பாதவிரல் ஒன்றால் அவனை நசுக்கி, அவன் பாடிய இசையைக் கேட்டருளியவனே; (சம்பந்தர் தேவாரம் - 3.88.8 - "இலங்கையர் தலைவனைப் பண்பட வரைதனில் அடர்செய்த பைங்கழல்");

தென்றலில் வாசம் மலி திருஉத்தரகோசமங்கை நின்ற அருட்கடலே - தென்றலில் மணம் கமழும் திருஉத்தரகோசமங்கையில் நீங்காமல் உறைகின்ற பேரருளாளனே;

நினைவேன் வினை தீர்த்தருளே - உன்னையே எண்ணி வழிபடும் என் வினையைத் தீர்த்து அருள்வாயாக;


9)

மாயனு(ம்) நான்முகனும் மயலால்மிக வாதுசெய்து

போயடி மேலறியாப் பொருளாய்நிலம் வான்கடந்த

தீயென நின்றவனே திருவுத்தர கோசமங்கை

மேயவ னேவிமலா வினையாயின தீர்த்தருளே.


மாயனும் நான்முகனும் மயலால் மிக வாதுசெய்து - திருமாலும் பிரமனும் ஆணவத்தால் மிகவும் வாதிட்டு;

போய் அடி மேல் அறியாப் பொருளாய் நிலம் வான் கடந்த தீ என நின்றவனே - தேடிச்சென்று கீழும் மேலும் அறியாத பொருள் ஆகி, மண்ணையும் விண்ணையும் தாண்டி நின்ற ஜோதி ஆனவனே;

திருவுத்தரகோசமங்கை மேயவனே - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருப்பவனே;

விமலா - தூயவனே;

வினையாயின தீர்த்தருளே - அடியேனது வினைகளையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;


10)

நிந்தனை செய்துழல்வார் நிசிபோலிருள் நெஞ்சுடைய

அந்தகர் தாமறியா அறிவேஒளி நீறணிந்த

செந்தழல் மேனியனே திருவுத்தர கோசமங்கை

ஐந்தொழில் ஆற்றவலாய் அடியேன்வினை தீர்த்தருளே.


நிந்தனை செய்து உழல்வார் - வைதிகதர்மத்தைப் பழித்துப் பேசித் திரிகின்றவர்கள்;

நிசிபோல் இருள் நெஞ்சுடைய அந்தகர் தாம் அறியா அறிவே - இரவினைப் போல் நெஞ்சில் இருளை (வஞ்சத்தை) வைத்திருக்கும் அக்-குருடர்களால் அறியப்படாத ஞானவடிவினனே;

ஒளி-நீறு அணிந்த செந்தழல் மேனியனே - ஒளிவீசும் திருநீற்றைப் பூசிய செந்தீப்போல் செம்மேனியனே;

திருவுத்தரகோசமங்கை ஐந்தொழில் ஆற்றவலாய் - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருப்பவனே, பஞ்சகிருத்தியம் செய்பவனே; (ஐந்தொழில் - பஞ்சகிருத்தியம் - சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரஹம்);

அடியேன் வினை தீர்த்தருளே - என் தீவினையைத் தீர்த்து அருள்வாயாக;


11)

பரவிய நஞ்சையுண்ட பரமாசுடு காடிடமா

இரவில் நடம்புரிவாய் இகல்ஆனை உரித்தவனே

திரையணி செஞ்சடையாய் திருவுத்தர கோசமங்கை

அரவரை நாணுடையாய் அடியேன்வினை தீர்த்தருளே.


பரவிய நஞ்சை உண்ட பரமா - எங்கும் பரவிய ஆலகாலத்தை உண்டு காத்த பரமனே;

சுடுகாடு இடமா இரவில் நடம் புரிவாய் - சுடுகாட்டையே இடமாக விரும்பி இருளில் கூத்தாடுபவனே;

இகல்-ஆனை உரித்தவனே - போர்செய்த யானையின் தோலை உரித்தவனே; (இகல்தல் - பகைத்தல்; இகல் - பகை; போர்);

திரை அணி செஞ்சடையாய் - கங்கையைச் செஞ்சடையில் அணிந்தவனே; (திரை - அலை; நதி);

திருவுத்தரகோசமங்கை அரவு அரைநாண் உடையாய் - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருப்பவனே, பாம்பை அரைநாணாகக் கட்டியவனே;

அடியேன் வினை தீர்த்தருளே - என் தீவினையைத் தீர்த்து அருள்வாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------