Friday, November 24, 2017

03.05.023 – மதுரை - கற்கிற பொருளைக் - (வண்ணம்)

 03.05.023 – மதுரை - கற்கிற பொருளைக் - (வண்ணம்)


2009-08-20

03.05.023 - உனக்கு அற்றிடும் அறிவைத் தருவாய் (மதுரை)

-------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தன தனனத் தத்தன தனனத்

தத்தன தனனத் .. தனதான );

(இச்சந்தத்தில் திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்)


கற்கிற பொருளைக் கற்கிற முறையிற்

..... கற்றிடு வழியைத் .. தெரியாமல்

.. கற்பனை உலகிற் பற்பல கனவுக்

..... கட்டுகள் வலையிற் .. படுவேனோ

அற்பரை அணுகிப் பொய்க்குழி விழுதற்

..... கக்கினி புகுவிட் .. டிலின்நேர்நான்

.. அப்படி அழிவைப் பெற்றிடு முனுனக்

..... கற்றிடு மறிவைத் .. தருவாயே

வெற்பினை எறியப் புக்கவன் அலறப்

..... பொற்புடை விரலிட் .. டருள்வோனே

.. வித்தகர் புகலிப் புத்திரர் எரியிற்

..... பத்திரம் இடவெற் .. றியையீவாய்

அற்புத வடிவிற் சத்தியு மிணையப்

..... பொற்சடை அதனிற் .. புனல்சூடீ

.. அக்கர அரவக் கச்சின மணிவிட்

..... டக்கணி மதுரைப் .. பெருமானே.


பதம் பிரித்து:

கற்கிற பொருளைக் கற்கிற முறையில்

..... கற்றிடு வழியைத் தெரியாமல்

.. கற்பனை உலகில் பற்பல கனவுக்

..... கட்டுகள் வலையில் படுவேனோ;

அற்பரை அணுகிப் பொய்க்குழி விழுதற்கு

..... அக்கினி புகு விட்டிலின் நேர் நான்;

.. அப்படி அழிவைப் பெற்றிடுமுன் உனக்கு

..... அற்றிடும் அறிவைத் தருவாயே;

வெற்பினை எறியப் புக்கவன் அலறப்

..... பொற்பு உடை விரல் இட்டு அருள்வோனே;

.. வித்தகர், புகலிப் புத்திரர் எரியில்

..... பத்திரம் இட வெற்றியை ஈவாய்;

அற்புத வடிவில் சத்தியும் இணையப்,

..... பொற்சடை அதனில் புனல்சூடீ

.. அக்கர; அரவக் கச்சின; மணி விட்டு

..... அக்கு அணி மதுரைப் பெருமானே.


* 3-ம் அடி - கயிலையைப் பேர்க்க முயன்ற இராவணனை நெரித்ததையும், மதுரையில் அனல்வாதத்தின்போது சம்பந்தரின் திருப்பதிக ஏடு பசுமையாக இருக்க அருள்புரிந்ததையும் சுட்டியது;


சொற்பொருள்:

பொய்க்குழி - பொய்ம்மையாகிய குழி;

அக்கினி புகு - தீயிற் புகும்; (இலக்கணக் குறிப்பு: ஏழாம் வேற்றுமைத்தொகையில் பொதுவாக வலி மிகும். ஓசைக்காக இவ்விடத்தில் மிகாமல் வந்தது என்று கொள்க);

நேர் - ஒப்பு;

அறுதல் - நட்புச்செய்தல். (பேணித் தம்மோ டற்றவருக் கறாதோரும் - உத்தரரா. திக்குவி. 55);

வெற்பு - மலை; இங்கே கயிலை மலை;

பொற்பு உடை விரல் - அழகிய விரல்;

வித்தகன் - ஞானி; பேரறிவாளன்; வல்லவன்;

புகலிப் புத்திரர் - காழிப்பிள்ளையார்; (புகலி - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);

பத்திரம் - புத்தகத்தின் ஏடு;

புனல் - நீர் - இங்கே கங்கை;

அக்கரன் - அக்ஷரன் - அழிவற்றவன்;

விடுதல் - நீங்குதல்; விலக்குதல்;

அக்கு - எலும்பு;


கற்கிற பொருளைக் கற்கிற முறையில் கற்றிடு வழியைத் தெரியாமல் - கற்க வேண்டியதைக் கற்கின்ற முறையில் கற்கும் வழியை அறிந்துகொள்ளாமல்;

கற்பனை உலகில் பற்பல கனவுக் கட்டுகள் வலையில் படுவேனோ - நிலையற்ற உலகில் பலபல கனவுக்கோட்டைகளைக் கட்டி அந்த பந்தங்களின் வலையில் சிக்கி அழிவேனோ;

அற்பரை அணுகிப் பொய்க்குழி விழுதற்கு அக்கினி புகு விட்டிலின் நேர் நான் - கீழோரை அண்டிப் பொய்ம்மைக்குழியில் விழுவதற்கு விரைகின்ற நான் தீயில் விழ விரைகின்ற விட்டிலை ஒத்தேன்;

அப்படி அழிவைப் பெற்றிடுமுன் உனக்கு அற்றிடும் அறிவைத் தருவாயே - அப்படி அழிவதன்முன் உனக்கு அன்புசெய்யும் உணர்வை அருள்வாயாக;

(சம்பந்தர் தேவாரம் - 3.120.2 - "... உலகினில் இயற்கையை ஒழித்திட் டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே" - உலகியல்புகளை வெறுத்து அகப்பற்று, புறப்பற்று ஆகியவற்றைக் கைவிட்டுத் தம்மையே கருதும் அன்பர்க்கு அன்பராய் விளங்குபவர்);

(திருவாசகம் - அச்சப்பத்து - 8.35.1 - "புற்றில்வா ளரவும் அஞ்சேன்....எம் பெம்மாற் கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே" - 'பெம்மாற்கு அற்றிலாதவர்');

வெற்பினை எறியப் புக்கவன் அலறப் பொற்பு உடை விரல் இட்டு அருள்வோனே - கயிலையைப் பெயர்த்து எறியச் சென்ற இராவணன் அலறி அழும்படி அழகிய விரலை ஊன்றி அவனை நசுக்கியருளியவனே;

வித்தகர், புகலிப் புத்திரர் எரியில் பத்திரம் இட வெற்றியை ஈவாய் - புகலியில் அவதரித்த திருஞான சம்பந்தர் அனல்வாதத்தின்போது தேவாரப் பதிக ஏட்டினைத் தீயில் இட்டபோது அவர்க்கு வெற்றியைக் கொடுப்பவனே; (திருப்புகழ் - "புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே");

அற்புத வடிவில் சத்தியும் இணையப், பொற்சடை அதனில் புனல்சூடீ - அற்புதமான அர்த்தநாரீஸ்வரக் கோலத்தில் பொன் போன்ற சடையில் கங்கையைத் தரித்தவனே;

அக்கர - அக்ஷரனே - அழிவற்றவனே;

அரவக் கச்சின - பாம்பைக் கச்சாக உடையவனே;

மணி விட்டு அக்கு அணி மதுரைப் பெருமானே - நவரத்தினங்களை அணியாமல் எலும்பை அணிந்த, மதுரையில் எழுந்தருளிய சிவபெருமானே;


அன்போடு,

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Thursday, November 23, 2017

03.05.022 – பொது - கமழ்தமிழ் ஓதுகின்ற - (வண்ணம்)

03.05.022 – பொது - கமழ்தமிழ் ஓதுகின்ற - (வண்ணம்)

2007-03-22

3.5.22 - கமழ்தமிழ் ஓதுகின்ற - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தான தந்த

தனதன தான தந்த

தனதன தான தந்த .. தனதான )

(நிலவினி லேயி ருந்து -- திருப்புகழ் - சுவாமிமலை)


கமழ்தமிழ் ஓது கின்ற அடியவர் பால டைந்து

.. .. கடையவ னேனு னன்பன் .. எனவாகிக்

.. கசிவொடு பாடி நெஞ்சில் நிலவிருள் போய கன்று

.. .. கழலடி யேஇ லங்க .. அருளாயே

நமவென ஓதி உன்றன் அடிதொழு மாணி அஞ்சு

.. .. நமனுயிர் கால நெஞ்சில் .. உதைபாதா

.. நடமிடு மாவ ரங்கம் எனவிடு காட மர்ந்த

.. .. நதிபுனை நாத வெந்த .. பொடியாடீ

சமநிலை யேஅ டைந்த தவசிகள் நாடும் இன்ப

.. .. தழலெரி யாகி நின்ற .. தனிநாதா

.. சரமென மேனி யெங்கும் அரவுடை யாய்வி ரிந்த

.. .. சடைதனில் நாறு கொன்றை .. அணிவோனே

இமையவர் ஓதம் அன்று கடையவு(ம்) மேலெ ழுந்த

.. .. எரிதரும் ஆலம் உண்ட .. அருளாளா

.. எருதினை யேஉ கந்த கொடியிடை மாது பங்க

.. .. இருளினில் ஆடு கின்ற .. பெருமானே


பதம் பிரித்து:

கமழ்-தமிழ் ஓதுகின்ற அடியவர்பால் அடைந்து,

.. .. கடையவனேன் உன் அன்பன் .. என ஆகிக்,

.. கசிவொடு பாடி, நெஞ்சில் நிலவு-இருள் போய்-அகன்று,

.. .. கழல்-அடியே இலங்க, அருளாயே;

"நம" என ஓதி உன்றன் அடிதொழு மாணி அஞ்சு

.. .. நமன் உயிர் கால நெஞ்சில் உதை-பாதா;

.. நடமிடும் மா அரங்கம் என இடுகாடு அமர்ந்த,

.. .. நதி புனை நாத; வெந்த பொடி ஆடீ;

சமநிலையே அடைந்த தவசிகள் நாடும் இன்ப;

.. .. தழல் எரி ஆகி நின்ற தனி நாதா;

.. சரம் என மேனி எங்கும் அரவு உடையாய்; விரிந்த

.. .. சடைதனில் நாறு கொன்றை அணிவோனே;

இமையவர் ஓதம் அன்று கடையவும் மேல் எழுந்த

.. .. எரிதரும் ஆலம் உண்ட அருளாளா;

.. எருதினையே உகந்த, கொடியிடை மாது பங்க;

.. .. இருளினில் ஆடுகின்ற பெருமானே;


கமழ்-தமிழ் ஓதுகின்ற அடியவர்பால் அடைந்து, கடையவனேன் உன் அன்பன் என ஆகிக் - மணம் மிக்க தமிழ்ப்பாமாலைகளால் உன் மலர்த்திருவடியைப் பாடும் அடியார்களை அடைந்து, கீழ்மையுடைய நானும் உன் பக்தன் என்று ஆகி; (கமடமிழ் = கமழ் + தமிழ்); (கடையவனேன் - சிறியேனாகிய நான்); (உனன்பன் - உன்னன்பன் என்பது சந்தம் நோக்கி இப்படி வந்தது);

கசிவொடு பாடி, நெஞ்சில் நிலவு-இருள் போய்-அகன்று, கழல் அடியே இலங்க, அருளாயே - உருகி உன்னைப் போற்றிப் பாடி, என் மனத்தில் இருக்கும் அறியாமை நீங்கிக், கழல் அணிந்த உன் திருவடியே ஒளி வீச அருள்வாயாக;

"நம" என ஓதி உன்றன் அடிதொழு மாணி அஞ்சு நமன் உயிர் கால நெஞ்சில் உதை-பாதா - உன் திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயர் அஞ்சிய காலனே உயிரைக் கக்கும்படி (மாளும்படி) அன்று காலனது மார்பில் உதைத்த திருவடியினனே;

நடமிடும் மா அரங்கம் என இடுகாடு அமர்ந்த, நதி புனை நாத - கூத்தாடும் மன்று எனச் சுடுகாட்டை விரும்பிய கங்காதரனே; (அமர்தல் - விரும்புதல்);

வெந்த பொடி ஆடீ - சுட்ட திருநீற்றைப் பூசியவனே; (ஆடுதல் - பூசுதல்; ஆடி - பூசியவன்; ஆடீ - பூசியவனே):

சமநிலையே அடைந்த தவசிகள் நாடும் இன்ப - விருப்பு வெறுப்பு இல்லாத தவசிகள் போற்றும் ஆனந்த ஸ்வரூபியே;

தழல் எரி ஆகி நின்ற தனி நாதா - எல்லையற்ற சோதியாகி நின்ற ஒப்பற்ற தலைவனே; (தழல் எரி - தழல்கின்ற சோதி); (தனி - ஒப்பற்ற);

சரம் என மேனி எங்கும் அரவு உடையாய் - திருமேனியில் பாம்புகளை மாலையாக அணிந்தவனே; (சரம் - மாலை);

விரிந்த சடைதனில் நாறு கொன்றை அணிவோனே - விரிந்த சடையில் மணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவனே;

இமையவர் ஓதம் அன்று கடையவும் மேல் எழுந்த எரிதரும் ஆலம் உண்ட அருளாளா - தேவர்கள் முன்பு பாற்கடலைக் கடைந்தபோது பொங்கிய சுட்டெரிக்கும் ஆலகால விடத்தை உண்ட அருளாளனே; (ஓதம் - கடல்);

எருதினையே உகந்த, கொடியிடை மாது பங்க - இடபத்தையே வாகனமாக விரும்பிய, கொடி போன்ற நுண்ணிடையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனே;

ருளினில் ஆடுகின்ற பெருமானே - சர்வசங்கார காலத்தில் கூத்து இயற்றுபவனே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.021 – கோயில் (சிதம்பரம்) - தீங்கையே புரி வஞ்சமனம் - (வண்ணம்)

03.05.021 – கோயில் (சிதம்பரம்) - தீங்கையே புரி வஞ்சமனம் - (வண்ணம்)

2007-03-17

3.5.21 – தீங்கையே புரி வஞ்சமனம் (கோயில் - சிதம்பரம்)

--------------------------------

(வண்ணவிருத்தம்;

தாந்த தானன தந்தன தந்தன

தாந்த தானன தந்தன தந்தன

தாந்த தானன தந்தன தந்தன .. தந்ததான );

(கூந்த லாழவி ரிந்துச ரிந்திட -- திருப்புகழ் - சிதம்பரம்)


தீங்கை யேபுரி வஞ்சம னங்கழல்

... ஆய்ந்தி டாதது செந்தமி ழின்சுவை

... தேர்ந்து பாடிடும் அன்பது தந்தருள் .. எம்பிரானே

தாங்கொ ணாதவி டந்தனை உண்டிருள்

... தாங்கு மாமிட றும்பொடி யும்பணி

... தாங்கு மேனியும் அஞ்சடை யுந்திகழ் .. அண்டவாணா

ஆங்கு மாலயன் அஞ்சிவ ணங்கிட

... ஓங்கு தீயென நின்றப ரம்பர

ஆன்ற மாணியி ருந்திட அந்தனை .. வென்றபாதா

நீங்கி டாதுமை மங்கையு டன்திகழ்

... பாங்க தூயகு ளந்தனில் அங்கயல்

... நீந்த ஆடக மன்றின டம்புரி .. கின்றகோனே.


பதம் பிரித்து:

தீங்கையே புரி வஞ்ச மனம் கழல்

... ஆய்ந்திடாது; அது செந்தமிழ் இன்சுவை

... தேர்ந்து பாடிடும் அன்பது தந்து அருள் எம்பிரானே;

தாங்கொணாத விடந்தனை உண்டு இருள்

... தாங்கு மாமிடறும் பொடியும் பணி

... தாங்கு மேனியும் அம் சடையும் திகழ் அண்டவாணா;

ஆங்கு மால் அயன் அஞ்சி வணங்கிட

... ஓங்கு தீ என நின்ற பரம்பர;

ஆன்ற மாணி இருந்திட அந்தனை வென்ற பாதா;

நீங்கிடாது உமை மங்கை உடன் திகழ்

... பாங்க; தூய; குளந்தனில் அம் கயல்

... நீந்த, ஆடக மன்றில் நடம் புரிகின்ற கோனே.


தீங்கையே புரி வஞ்ச மனம் கழல் ஆய்ந்திடாது - தீமையையே விரும்பும் (/ செய்யும்) வஞ்சம் மிக்க என் மனம் உன் திருவடியை எண்ணாது; (தீங்கு - தீமை); (புரிதல் - செய்தல் விரும்புதல்); (ஆய்தல் - ஆராய்தல்; சிந்தித்தல்);

அது செந்தமிழ் இன்சுவை தேர்ந்து பாடிடும் அன்பது தந்து அருள் எம்பிரானே - அத்தகைய என் மனமானது தேவாரம் முதலிய செந்தமிழ்ப் பாமாலைகளின் இனிய சுவையை அறிந்து உன்னைப் பாடும் அன்பைக் கொடுத்து அருள்க எம்பெருமானே; (தேர்தல் - அறிதல்);


தாங்கொணாத விடந்தனை உண்டு இருள் தாங்கு மா மிடறும், பொடியும் பணி தாங்கு மேனியும், அம் சடையும் திகழ் அண்டவாணா - எவராலும் பொறுத்தற்கு அரிய ஆலகால விடத்தை உண்டு அதனால் கருமை திகழும் அழகிய கண்டத்தையும், திருநீற்றையும் பாம்பையும் அணிந்த திருமேனியையும், அழகிய சடையையும் உடைய கடவுளே; (தாங்கொணாத - தாங்க ஒண்ணாத); (மா - அழகு); (மிடறு - கண்டம்); (பொடி - நீறு; இங்கே "நீறும்" - உம்மைத்தொகை); (பணி - நாகப்பாம்பு); (அம் - அழகு); (அண்டவாணன் - அனைத்துலக நாதன்);


ஆங்கு மால் அயன் அஞ்சி வணங்கிட ஓங்கு தீ நின்ற பரம்பர – முன்பு திருமாலும் பிரமனும் (அடிமுடி தேடிக் காணாது) அஞ்சி வணங்கும்படி எல்லையின்றி ஓங்கிய ஜோடி வடிவில் நின்ற பரம்பரனே; (ஆங்கு - அவ்விடம்; அன்று; அசைச்சொல்)

ஆன்ற மாணி இருந்திட அந்தனை வென்ற பாதா - மாட்சிமையுடைய மார்க்கண்டேயர் சாவாமல் என்றும் இருக்குமாறு, காலனை உதைத்து அழித்த திருவடியினனே; (ஆன்ற – மாட்சிமையுடைய); (அந்தன் - யமன்);


நீங்கிடாது உமை மங்கை உடன் திகழ் பாங்க - உமாதேவி பிரியாமல் எப்போது உடனாக இருக்கும் உமாபதியே; (பாங்கன் - கணவன்); (பாங்கு - பக்கம்);

தூய - தூயனே;

குளந்தனில் அம் கயல் நீந், ஆடக மன்றில் நடம் புரிகின்ற கோனே - குளத்தில் அழகிய கயல்மீன்கள் நீந்தப், பொன்னம்பலத்தில் திருநடம் செய்கின்ற அரசனே; (ஆடகம் - பொன்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.020 – ஆரூர் - செலவு செயப்பணம் அதனை நினைத்தனு - (வண்ணம்)

03.05.020 – ஆரூர் - செலவு செயப்பணம் அதனை நினைத்தனு - (வண்ணம்)

2007-03-16

3.5.20 - செலவு செயப் பணம் - (ஆரூர் - திருவாரூர்)

------------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தனத்தன தனன தனத்தன

தனன தனத்தன தனன தனத்தன

தனன தனத்தன தனன தனத்தன .. தனதான)

(இதனைத் - தனதன தத்தன தனதன தத்தன x 3 + தனதான - என்றும் நோக்கலாம்)

(குருவி யெனப்பல கழுகு நரித்திரள் - திருப்புகழ் - திருத்தணிகை)

(பலபல தத்துவ மதனையெ ரித்திருள் - திருப்புகழ் - திருவெண்ணெய்நல்லூர்)


செலவு செயப்பணம் அதனை நினைத்தனு

.. .. தினமு மலைப்புறு மனமும் உனைத்தொழு

.. .. செயலை நயப்புறு நலனை எனக்கருள் .. புரியாயே

.. திலக வதிக்கென இளைய வருக்கொரு

.. .. வலியை அளித்தவர் உனது கழற்புகழ்

.. .. செகமும் உயச்சொல அரிய திருப்பெயர் .. தருவோனே


உலக மயக்குகள் ஒழிய உனைத்தொழு

.. .. துருகி அழைத்திடும் அடியர் வழுத்திடும்

.. .. ஒருவ அவர்க்குயர் நிலையை அளித்திடும் .. அருளாளா

.. உடைய தெனப்புலி அதளை உடுத்தழல்

.. .. உமிழும் அரக்கயி றரையில் அசைத்தணி

.. .. உமையை இடத்தினில் மகிழும் அருத்தியை .. உடையானே


மலையை எடுத்திடு மதியி லரக்கனை

.. .. வரையின் மிசைத்திரு விரலின் நெரித்தவன்

.. .. மறுகி இசைத்தடி பரவ விடுத்தொரு .. படையீவாய்

.. மணியை அடித்திடு பசுவின் வழக்கினில்

.. .. முறையை அளித்திட அரசு நடத்திய

.. .. மனுவின் மகற்குயிர் அருளும் மதிச்சடை .. யுடையாரூர்த்


தலைவ வனத்தினில் விசயன் விருப்பொடு

.. .. தவம தியற்றியொர் விறலை உடைப்படை

.. .. தருக எனத்தொழ அதனை அளித்திடும் .. ஒருவேடா

.. தருவின் அடித்தவர் அறிய இருக்குரை

.. .. தருமம் விரித்திடு குரவ மயக்கிடு

.. .. சரம துகைத்திடு மதனை விழித்தடு .. பெருமானே.


பதம் பிரித்து:

செலவு செயப் பணம்-அதனை நினைத்து அனு

.. .. தினமும் அலைப்புறு மனமும் உனைத் தொழு

.. .. செயலை நயப்புறு நலனை எனக்கு அருள் .. புரியாயே;

.. திலகவதிக்கு என இளையவருக்கு ஒரு

.. .. வலியை அளித்து, அவர் உனது கழற்புகழ்

.. .. செகமும் உயச் சொல, அரிய திருப்பெயர் .. தருவோனே;


உலக மயக்குகள் ஒழிய உனைத் தொழுது

.. .. உருகி அழைத்திடும் அடியர் வழுத்திடும்

.. .. ஒருவ; அவர்க்கு உயர்-நிலையை அளித்திடும் .. அருளாளா;

.. உடையது எனப் புலி-அதளை உடுத்து, அழல்

.. .. உமிழும் அரக்-கயிறு அரையில் அசைத்து, அணி

.. .. உமையை இடத்தினில் மகிழும் அருத்தியை .. உடையானே;


மலையை எடுத்திடு மதி-இல் அரக்கனை

.. .. வரையின்மிசைத் திருவிரலின் நெரித்து, அவன்

.. .. மறுகி இசைத்து அடி பரவ, விடுத்து ஒரு .. படை ஈவாய்;

.. மணியை அடித்திடு பசுவின் வழக்கினில்

.. .. முறையை அளித்திட அரசு நடத்திய

.. .. மனுவின் மகற்கு உயிர் அருளும் மதிச்சடையுடை ஆரூர்த்


தலைவ; வனத்தினில் விசயன் விருப்பொடு

.. .. தவமது இயற்றி, "ஒர் விறலையுடைப் படை

.. .. தருக" எனத் தொழ, அதனை அளித்திடும் .. ஒரு வேடா;

.. தருவின்-அடித் தவர் அறிய இருக்கு உரை

.. .. தருமம் விரித்திடு குரவ; மயக்கிடு

.. .. சரமது உகைத்திடு மதனை விழித்து அடு .. பெருமானே.


செலவு செயப் பணம் அதனை நினைத்து அனுதினமு மலைப்புறு மனமும் உனைத் தொழு செயலை நயப்புறு நலனை எனக்கு அருள் புரியாயே - செலவு செய்யப் பணத்தையே எண்ணித் தினமும் மயங்கிக் கலங்கும் என் மனமும் உன்னை வழிபடுவதை விரும்பும் நன்மையை எனக்கு அருள்வாயாக; (தினமுமலைப்புறு = தினமும் மலைப்புறு & தினமும் அலைப்புறு); (மலைப்பு - அறிவுமயக்கம்); (அலைப்பு - வருத்தம்); (நயப்பு - அன்பு; விருப்பம்); (நலன் - நலம் - நன்மை);

திலகவதிக்கு என இளையவருக்கு ஒரு வலியை அளித்து, வர் உனது கழற்புகழ் செகமும் உயச் சொல அரிய திருப்பெயர் தருவோனே - திலகவதியாரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து அவர் தம்பியார்க்குச் சூலைநோயைத் தந்து, பின் அவர் உனது திருவடிப்புகழை உலகும் உய்யுமாறு பாடக் கேட்டு, அவருக்குத் திருநாவுக்கரசர் என்ற அரிய திருப்பெயரைத் தந்தவனே; (செகம் - உலகம்); (உய - உய்ய - இடைக்குறை);


உலக மயக்குகள் ஒழிய உனைத் தொழுதுருகி அழைத்திடும் டியர் வழுத்திடும் ஒருவ - அவர்க்குயர் நிலையை அளித்திடும் அருளாளா - உலக மயக்கங்கள் எல்லாம் நீங்கும்படி உன்னை உருகிப் போற்றி அழைக்கும் பக்தர்களால் துதிக்கப்படும் ஒப்பற்றவனே; (ஒருவ - ஒருவனே - ஒப்பற்றவனே);

உடை-அது எனப் புலி அதளை உடுத்து, ழல் உமிழும் அரக் கயிறு அரையில் அசைத்து, ணி உமையை இடத்தினில் மகிழும் அருத்தியை உடையானே - ஆடையாகப் புலித்தோலை அணிந்து, சீறுகின்ற பாம்பை அரைநாணாகக் கட்டி, அழகிய உமையை இடப்பக்கம் ஒரு கூறாக விரும்பிய அன்பு உடையவனே; (அதள் - தோல்); (அர - பாம்பு); (அசைத்தல் - கட்டுதல்); (அணி - அழகு); (அருத்தி - அன்பு);


மலையை எடுத்திடு மதி இல் அரக்கனை வரையின்மிசைத் திருவிரலின் நெரித்து, வன் மறுகி இசைத்து அடி பரவ, விடுத்து ஒரு படைவாய் - கயிலைமலையை எடுத்த அறிவற்ற அரக்கனான இராவணனை அம்மலையின்மேல் (ஊன்றிய) ஒரு விரலினால் நசுக்கிப், பின் அவன் மனம் கலங்கி இசைபாடித் திருவடியை வழிபடக் கண்டு, அவனைப் போகவிட்டு அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளை அளித்தவனே; (வரை - மலை); (மறுகுதல் - மனம் கலங்குதல்); (விரலின் - விரலினால்); (விடுத்தல் - போகவிடுதல்); (படை - ஆயுதம்);

மணியை அடித்திடு பசுவின் வழக்கினில் முறையை அளித்தி அரசு நடத்திய மனுவின் மகற்குயிர் அருளும் மதிச்சடையுடைரூர்த் தலைவ - ஆராய்ச்சிமணியை அடித்த பசுவின் வழக்கில் நீதி அளித்திடுமாறு செங்கோல் பிறழாமல் ஆட்சி செய்த அரசன் மனுநீதிச்சோழன் மகனுக்கு மீண்டும் உயிர்கொடுத்த, சந்திரனைச் சடையில் அணிந்த, திருவாரூர்த் தலைவனே; (முறை - இராசநீதி); (மனு - மனுநீதிச்சோழன்)


வனத்தினில் வியன் விருப்பொடு தவம் அது இயற்றி, "ர் விறலை உடைப் படை தருக" எனத் தொழ, அதனை அளித்திடும் ஒரு வேடா - காட்டில் அருச்சுனன் விரும்பித் தவம் செய்து, "ஒப்பற்ற வெற்றியையுடைய பாசுபதாஸ்திரத்தை வரம் அருள்க" என்று வேண்ட, அதனை அவனுக்கு அளித்த வேடனே; (விசயன் - விஜயன் - அர்ஜுனன்); (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல்; - ஒப்பற்ற); (விறல் - வெற்றி; வலிமை; பெருமை);

தருவின்அடித் தவர் அறிய இருக்குரை தருமம் விரித்திடு குரவ - கல்லால மரத்தின்கீழ்ச் சனகாதி முனிவர்களுக்கு வேதங்கள் சொல்லும் தர்மத்தை விளக்கிய குருவே; (தரு - மரம்); (தவர் - தவசிகள்); (இருக்கு - வேதம்); (விரித்தல் - விளக்குதல்); (குரவன் - குரு);

மயக்கிடு சரம்-அது உகைத்திடு மதனை விழித்து அடு பெருமானே - மனத்தை மயக்கும் மலர்க்கணை தொடுத்த மன்மதனை நெற்றிக்கண்ணால் பார்த்து எரித்த பெருமானே; (சரம் - அம்பு); (உகைத்தல் - செலுத்துதல்); (மதன் - மன்மதன்); (அடுதல் - அழித்தல்; கொல்லுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.019 – இடைமருதூர் - காடு மலைகடல் ஓடி - (வண்ணம்)

03.05.019 – இடைமருதூர் - காடு மலைகடல் ஓடி - (வண்ணம்)

Verse and Meaning in English - Please see the bottom half of this page.

2009-08-20

3.5.19 - காடு மலைகடல் ஓடி (இடைமருதூர் - திருவிடைமருதூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தான தனதன தான தனதன

தான தனதன .. தனதான )

(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)


காடு மலைகட லோடி மிகுபொருள்

..... நாடு மனநிலை .. உளதாலே

.. காணு மிடர்பல வாகி உனதிரு

..... காலை வழிபட .. அறியேனும்

கூடு தனைவிடு நாளி லொருபெயர்

..... கூறு நினைவது .. பெறுமாறே

.. கோல உமைதனை ஆக மதிலொரு

..... கூறு மகிழ்பவ .. அருளாயே

சூடு மதியொடு நாக மலைமலி

..... தூய நதியடை .. சடையானே

.. தோழர் அவர்துயர் தீர இருமுறை

..... தூது செலுமதி .. சயநேயா

ஓடு தனில்இடும் ஊணை எனமறை

..... ஓதி உழல்தரும் .. உடையானே

.. ஓத முகில்வள மாரு மிடைமரு

..... தூரி லினிதுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

காடு மலை கடல் ஓடி மிகு பொருள்

..... நாடும் மனநிலை உளதாலே,

.. காணும் இடர் பலவாகி உனது இரு

..... காலை வழிபட அறியேனும்,

கூடு தனைவிடு நாளில் ஒரு பெயர்

..... கூறு நினைவு-அது .. பெறுமாறே,

.. கோல உமைதனை ஆகம்-அதில் ஒரு

..... கூறு மகிழ் பவ, அருளாயே;

சூடு மதியொடு, நாகம், அலை மலி

..... தூய நதி அடை சடையானே;

.. தோழர் அவர் துயர் தீர, இருமுறை

..... தூது செலும் அதிசய நேயா;

"ஓடுதனில் இடும் ஊணை" என மறை

..... ஓதி உழல்தரும் உடையானே;

.. ஓத முகில் வளம் ஆரும் இடைமரு

..... தூரில் இனிது உறை பெருமானே.


* 3-ம் அடி - சுந்தரருக்காகப் பரவையாரிடம் சிவபெருமான் இரவில் இருமுறை தூது சென்றதைக் குறித்தது.


காடு மலை கடல் ஓடி மிகு பொருள் நாடும் மனநிலை உளதாலே - காடு மலை கடல் என்று உலகெங்கும் அலைந்து திரிந்து பெரும்பொருளைத் தேடுகின்ற ஆசையினால்; (ஓடுதல் - செல்லுதல்);

காணும் இடர் பலவாகி உனது இரு காலை வழிபட அறியேனும் - அடையும் துன்பங்கள் பல ஆகி, உன் இரு தாளை வழிபட அறியாது இருக்கின்ற நானும்; (காணுதல் - அனுபவத்தில் அறிதல்);

கூடுதனை விடு நாளில் ஒரு பெயர் கூறு நினைவு அது பெறுமாறே - உடலிலிருந்து உயிர் பிரியும் தினத்தில் உன் ஒப்பற்ற திருநாமத்தைச் சொல்லும் எண்ணத்தைப் பெறும்படி; (கூடு - உடல்); (ஒரு - ஒப்பற்ற);

கோல உமைதனை ஆகம் அதில் ஒரு கூறு மகிழ் பவ அருளாயே - அழகிய உமையைத் திருமேனியில் ஒரு கூறாக விரும்பிய பவனே, அருள்வாயாக; (கோலம் - அழகு); (ஆகம் - மேனி); (பவன் - சிவன் திருநாமம்);

சூடு மதியொடு நாகம் அலை மலி தூய நதி அடை சடையானே - சூடிய சந்திரனுடன் பாம்பும் அலை மிக்க கங்கையும் திகழும் சடையை உடையவனே;

தோழர் அவர் துயர் தீர இருமுறை தூது செலும் அதிசய நேயா - தோழரான சுந்தரருக்கு இரங்கித் திருவாரூரில் பரவையார் இல்லத்திற்கு இருமுறை தூது நடந்த அதிசயனே, அன்பனே; (அதிசயநேயா - 1. அதிசயனே, நேயனே; 2. அதி ஜய (மிகுந்த வெற்றியுடைய) நேயனே);

"ஓடுதனில் இடும் ஊணை" என மறை ஓதி உழல்தரும் உடையானே - "மண்டையோட்டில் பிச்சையாக உணவை இடுங்கள்" என்று வேதங்களைப் பாடியவண்ணம் திரிகின்ற சுவாமியே, செல்வனே; (ஓடு - மண்டையோடு); (ஊண் - உணவு); (உழல்தரும் - உழலும் - திரியும்); (தருதல் - ஒரு துணைவினை); (உடையான் - சுவாமி; - உடையவன் - 1. உரியவன்; 2. செல்வமுள்ளவன்);

ஓத முகில் வளம் ஆரும் இடைமருதூரில் இனிது உறை பெருமானே - ஈரம் உள்ள மேகத்தின் வளம் பொருந்திய திருவிடைமருதூரில் இனிது எழுந்தருளிய சிவபெருமானே; (ஓத முகில் - ஈரம் உள்ள மேகம்); (திருப்புகழ் - பொது - "சூதினுண வாசைதனில் ... ஓதமுகி லாடுகிரி யேறுபட");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

madisūḍi 3.5.19 - kāḍu malai kaḍal (tiruviḍaimarudūr)

---------------------------------

(tāna tanadana tāna tanadana

tāna tanadana .. tanadāna )

(pādi madinadi - tiruppugaḻ - suvāmimalai)


kāḍu malai-kaḍal ōḍi migu-poruḷ

..... nāḍum mananilai uḷadālē

.. kāṇum iḍar-pala vāgi unadu-iru

..... kālai vaḻibaḍa aṟiyēnum

kūḍu tanai-viḍu nāḷil oru-peyar

..... kūṟu ninaivu-adu .. peṟumāṟē

.. kōla umaidanai āgam adil-oru

..... kūṟu magiḻbava aruḷāyē;

sūḍu madiyoḍu nāgam alai-mali

..... tūya nadi-aḍai saḍaiyānē;

.. tōḻar avar-tuyar tīra irumuṟai

..... tūdu selum-adisaya nēyā;

"ōḍudanil-iḍum ūṇai" ena-maṟai

..... ōdi uḻaldarum uḍaiyānē;

.. ōda mugil-vaḷam ārum-iḍai maru

..... dūril inidu-uṟai perumānē.


kāḍu malai kaḍal ōḍi migu poruḷ nāḍum mananilai uḷadālē - Because of the desire to amass wealth even if it requires going all over the world;

kāṇum iḍar palavāgi unadu iru kālai vaḻibaḍa aṟiyēnum - experiencing endless suffering, I fail to worship Your two feet. Even if I am like that;

kūḍudanai viḍu nāḷil oru peyar kūṟu ninaivu adu peṟumāṟē - May you make me think of Your holy name when my life leaves this body!

kōla umaidanai āgam adil oru kūṟu magiḻ bava aruḷāyē - O Siva, having beautiful Uma as one half of Your form! May you bestow Your grace on me!


sūḍu madiyoḍu nāgam alai mali tūya nadi aḍai saḍaiyānē - O Lord wearing the crescent moon, a cobra, and the Ganga river on Your matted locks!

tōḻar avar tuyar tīra irumuṟai tūdu selum adisaya nēyā - O Loving God who went twice as a messenger in order to help Your friend Sundarar! (See Sundarar story in Periya Puranam for further details of this episode).

"ōḍudanil iḍum ūṇai" ena maṟai ōdi uḻaldarum uḍaiyānē - O Lord who has this entire universe but goes around singing Vedas and seeks alms in the begging bowl that is Barhma's skull!

ōda mugil vaḷam ārum iḍaimarudūril inidu uṟai perumānē - O Siva dwelling in Thiruvidaimarudur which has fertile fields receiving plenty of rain!


V. Subramanian

====================