Thursday, February 22, 2024

07.33 – வான்மியூர் (திருவான்மியூர்) - சங்கரா சம்புவே

07.33 – வான்மியூர் (திருவான்மியூர்)

2016-03-15

வான்மியூர் (திருவான்மியூர்)

---------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - "தானனா தானனா தானனா தானனா")

(வடமொழி யாப்பில் - ஸ்ரக்விணீ (sragviNI - स्रग्विणी ) என்ற பெயருடைய சந்தம்)

(திருஞானசம்பந்தர் தேவாரம் - 3.30.1 - "பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி")

(திருஞானசம்பந்தர் தேவாரம் - 3.36.1 - "சந்தமா ரகிலொடு சாதிதேக் கம்மரம்")


1)

சங்கரா சம்புவே சாமவே தாவெனத்

தங்கரங் கூப்பினார் தங்களைக் காப்பவன்

கங்கையார் சென்னியான் காம்புபோல் தோளுடை

மங்கையோர் பங்கினன் வான்மியூர் நாதனே.


"சங்கரா, சம்புவே, சாம வேதா" எனத் - "சங்கரனே (நன்மை செய்பவனே); சம்புவே (இன்பம் அளிப்பவனே), சாமவேதனே" என்று;

தம் கரம் கூப்பினார் தங்களைக் காப்பவன் - தம் கைகளைக் கூப்பி வணங்கும் அன்பர்களைக் காப்பவன்;

கங்கை ஆர் சென்னியான் - கங்கை பொருந்திய திருமுடியினன்; (சென்னி - தலை);

காம்பு போல் தோள் உடை மங்கை ஓர் பங்கினன் - மூங்கில் போல் புஜங்களை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (காம்பு - மூங்கில்); (தோள் - புஜம்); (அப்பர் தேவாரம் - 4.23.2 - "கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா");

வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் தலைவன்;


2)

தேனுலாம் பூவிடும் சிந்தையார்க் கன்பினான்

மானுலாம் கையினான் மாசுணக் கச்சையான்

கானிலா டும்பிரான் காதிலோர் தோடினான்

வானிலாச் சூடினான் வான்மியூர் நாதனே.


தேன் உலாம் பூ இடும் சிந்தையார்க்கு அன்பினான் - தேன் திகழும் பூக்களைத் திருவடியில் இட்டுத் தொழும் எண்ணம் உடையவர்களுக்கு அன்பு உடையவன்; (உலாம் - உலவும் - பொருந்திய);

(சம்பந்தர் தேவரம் - 2.9.5 - "தேனுலாமலர் கொண்டு மெய்த்தேவர்கள் சித்தர்கள்");

மான் உலாம் கையினான் - கையில் மானை ஏந்தியவன்;

மாசுணக் கச்சையான் - பாம்பை அரையில் கச்சையாகக் கட்டியவன்; (மாசுணம் - பாம்பு); (கச்சை - அரைக்கச்சு); (திருவாசகம் - திருப்பொற்சுண்ணம் - 8.9.19 - "கட்டிய மாசுணக் கச்சை பாடிக்");

கானில் ஆடும் பிரான் - சுடுகாட்டில் ஆடும் தலைவன்;

காதில் ஓர் தோடினான் - ஒரு காதில் தோடு அணிந்தவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.113.3 - "காதம ரத்திகழ் தோடினனே"); (சம்பந்தர் தேவாரம் - 3.78.4 - "காடர்கரி காலர் ... செவியில் தோடர்");

வான் நிலாச் சூடினான் - அழகிய வெண்பிறைச் சந்திரனை அணிந்தவன்; (வானிலா - 1. வான் நிலா; 2. வால் நிலா); (வான்- அழகு); (வால் - வெண்மை);

வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் தலைவன்;


3)

ஓலமென் றன்றுவான் ஓடிவந் தேத்தவும்

ஆலகா லத்தையும் மன்பினால் உண்டவன்

கோலமா உச்சிமேற் கொக்கினோர் தூவலான்

மாலைவான் மேனியான் வான்மியூர் நாதனே.


"ஓலம்" என்று அன்று வான் ஓடிவந்து ஏத்தவும் - முற்காலத்தில் "ஓலம்" என்று கூவிக்கொண்டு தேவர்கள் ஓடிவந்து வணங்கியபொழுது;

ஆலகாலத்தையும் அன்பினால் உண்டவன் - அவர்களுக்கு இரங்கி ஆலகால விஷத்தையும் உண்டவன்; (ஆலகாலத்தையும்மன்பினால் - ஆலகாலத்தையும் அன்பினால் - மகர ஒற்று விரித்தல் விகாரம்);

கோலமா உச்சிமேல் கொக்கின் ஓர் தூவலான் - அழகாகத் திருமுடிமேல் ஒரு கொக்கின் இறகைச் சூடியவன்; (தூவல் - இறகு); (கொக்கிறகு அணிந்தது - கொக்கு வடிவம் உடைய குரண்டாசுரனை அழித்த அடையாளம்; கொக்கிறகு என்ற மலர்);

மாலை வான் மேனியான் - அந்திப்பொழுதின் வானம் போல் செம்மேனி உடையவன்; (சுந்தரர் தேவாரம் - 7.36.4 - "அந்தி வானமும் மேனியோ சொலும்");

வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் தலைவன்;


4)

தேறினார் சிந்தையிற் சேர்ந்தவன் தேவியோர்

கூறினான் கையிலோர் கூர்மழுப் பற்றினான்

ஈறிலாப் பெற்றியான் என்றுமே வெற்றியான்

மாறிலாச் சோதியான் வான்மியூர் நாதனே.


தேறினார் சிந்தையிற் சேர்ந்தவன் - மெய்ப்பொருளைத் தெளிந்தவர்கள் நெஞ்சில் குடிகொண்டவன்; (தேறுதல் - தெளிதல்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.78.4 - "தேறினார் சித்தத் திருந்தார் தாமே");

தேவி ஓர் கூறினான் - உமையை ஒரு கூறாக உடையவன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.35.8 - "பழனத்தான் கூறினான் உமையாளொடுங் கூடவே");

கையில் ஓர் கூர் மழுப் பற்றினான் - கையில் கூர்மை மிக்க மழுப்படையை ஏந்தியவன்;

ஈறு இலாப் பெற்றியான் - அந்தம் இல்லாத பெருமை உடையவன்;

என்றுமே வெற்றியான் - என்றும் வெற்றி உடையவன்;

மாறு இலாச் சோதியான் - ஒப்பில்லாத சோதி வடிவன்; அழிவற்ற சோதி வடிவன்; (மாறு - 1. Mutation, change; வேறுபாடு; 4. Similarity; equality; ஒப்பு; 5. Death; இறந்துபாடு); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.78.4 - "மாறிலா மேனி உடையார் தாமே");

வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் தலைவன்;


5)

கள்ளமொன் றின்றியே கைதொழும் பத்தரின்

உள்ளமே கோயிலாம் உத்தமன் கங்கையின்

வெள்ளமார் வேணியன் வெள்ளையே றேறினான்

வள்ளிகோன் அத்தனெம் வான்மியூர் நாதனே.


கள்ளம் ஒன்று இன்றியே கைதொழும் பத்தரின் உள்ளமே கோயில் ஆம் உத்தமன் - வஞ்சம் இன்றி வழிபடும் பக்தர்களுடைய நெஞ்சத்தில் உறையும் உத்தமன்; (சம்பந்தர் தேவாரம் - 1.50.4 - "மெய்யராகிப் பொய்யைநீக்கி ... செய்யரானார் சிந்தையானே");

கங்கையின் வெள்ளம் ஆர் வேணியன் - கங்கை நீர் பொருந்திய சடையை உடையவன்; (வெள்ளம் - நீர்); (வேணி - சடை);

வெள்ளை ஏறு ஏறினான் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;

வள்ளிகோன் அத்தன் - வள்ளிகணவனான முருகனுக்குத் தந்தை; (அத்தன் - தந்தை);

எம் வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் எம் தலைவன்;


6)

நாரிலார் மும்மதில் நாசமா கும்படி

தேரிலே ஏறியோர் தீச்சரம் தொட்டவன்

நாரியோர் பங்கினான் ஞானிமார் உச்சியான்

வாரிநஞ் சுண்டவன் வான்மியூர் நாதனே.


நார் இலார் மும்மதில் நாசம் ஆகும்படி - அன்பு இல்லாத அசுரர்களின் முப்புரங்களும் அழியும்படி; (நார் - அன்பு);

தேரிலே ஏறி ஓர் தீச் சரம் தொட்டவன் - தேவர்கள் அமைத்த தேரின்மேல் ஏறி ஒர் எரிக்கும் கணையை எய்தவன்; (சரம் - அம்பு);

நாரி ஓர் பங்கினான் - உமையை ஒரு பங்கில் உடையவன்; (நாரி - பெண்);

ஞானிமார் உச்சியான் - ஞானியர்கள்தம் தலைமேல் உறைபவன்; (சுந்தரர் தேவாரம் - 7.92.4 - "உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்");

வாரி நஞ்சு உண்டவன் - கடல் விடத்தை அள்ளி உண்டவன்; (வாரி - கடல்); (வாருதல் - அள்ளுதல்);

வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் தலைவன்;


7)

அங்கழல் போற்றினார்க் கன்பினன் மாண்டவர்

அங்கமே ஆரமாப் பூண்டவன் தாண்டவன்

கொங்குதேர் வண்டுசேர் கொன்றையார் சென்னியான்

வங்கமார் வாரிசூழ் வான்மியூர் நாதனே.


அம் கழல் போற்றினார்க்கு அன்பினன் - அழகிய, கழல் அணிந்த திருவடியை வணங்கியவர்களுக்கு அன்பு உடையவன்;

மாண்டவர் அங்கமே ஆரமாப் பூண்டவன் - இறந்தவர்களுடைய எலும்பை மாலையாக அணிந்தவன்; (அங்கம் - எலும்பு); (ஆரமா - ஆரமாக; ஆரம் - மாலை);

தாண்டவன் - கூத்தன்; நடராஜன்;

கொங்கு தேர் வண்டு சேர் கொன்றை ஆர் சென்னியான் - தேனை நாடும் வண்டுகள் பொருந்தும் கொன்றையை முடிமேல் சூடியவன்; (கொங்கு - தேன்); (தேர்தல் - ஆராய்தல்; கொள்ளுதல்);

வங்கம் ஆர் வாரி சூழ் வான்மியூர் நாதனே - படகுகள் (/ அலைகள்) நிறைந்த கடல் சூழ்ந்த திருவான்மியூரில் உறையும் தலைவன்;


8)

தூற்றுவாய் பத்துடைத் தூர்த்தனும் சாலநாள்

போற்றுமா றோர்விரல் வெற்புமேல் ஊன்றினார்

கூற்றினைக் காய்ந்தவர் கொல்புலித் தோலினார்

மாற்றிலாப் பொன்னனார் வான்மியூர் நாதரே.


தூற்று வாய் பத்துஉடைத் தூர்த்தனும் - தூற்றிய வாய்கள் பத்து உடைய இராவணனும்; (தூர்த்தன் - கொடியவன்);

சால நாள் போற்றுமாறு ஓர் விரல் வெற்புமேல் ஊன்றினார் - தம்மை நெடுங்காலம் போற்றிப் பாடும்படி ஒரு விரலைக் கயிலைமலையின்மேல் ஊன்றி அவனை நசுக்கியவர்;

கூற்றினைக் காய்ந்தவர் - காலனைச் சினந்தவர்;

கொல்புலித் தோலினார் - கொல்லும் இயல்பு உடைய புலியின் தோலை அணிந்தவர்;

மாற்று இலாப் பொன் அனார் - உயர்ந்த பொன் போன்றவர்; (மாற்றிலாப் பொன் - உரைத்து மாற்றுக் காணுதற்கரிய, மிக உயர்ந்த பொன்); (அனார் - அன்னார் - அன்னவர் - போன்றவர்); (அப்பர் தேவாரம் - 5.60.5 - "மாற்றிலாச் செம்பொன் ஆவர் மாற்பேறரே"); (திருப்புகழ் - காஞ்சிபுரம் - "இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்");

வான்மியூர் நாதரே - அப்பெருமானார், திருவான்மியூரில் உறையும் தலைவர்;


9)

அன்னமாய்ப் பன்றியாய் அம்புயன் மாலிவர்

முன்னநே டோர்தழற் சோதியான் முக்கணன்

சென்னிமேற் பாம்புடன் திங்களைச் சேர்த்தவன்

வன்னியோர் கையினான் வான்மியூர் நாதனே.


அன்னமாய்ப் பன்றியாய் அம்புயன் மால் இவர் முன்னம் நேடு ஓர் தழற் சோதியான் - பிரமனும் திருமாலும் அன்னப்பறவை ஆகியும் பன்றி ஆகியும் முன்னர்த் தேடிய ஒப்பற்ற தழல் பொருந்திய சோதி வடிவன்; (அம்புயன் - நான்முகன்; அம்புயம் - அம்புஜம் - தாமரை); (நேடுதல் - தேடுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.7.9 - "பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழித் தன்னை இன்னான் எனக் காண்பரிய தழற் சோதியும்");

முக்கணன் - நெற்றிக்கண்ணன்;

சென்னிமேல் பாம்புடன் திங்களைச் சேர்த்தவன் - தன் திருமுடிமேல் பாம்பையும் சந்திரனையும் ஒன்றும்படி வைத்தவன்;

வன்னி ஓர் கையினான் - ஒரு கையில் தீயை ஏந்தியவன்; (வன்னி - நெருப்பு);

வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் தலைவன்;


10)

தத்துவம் தேர்கிலார் சத்தியம் சொல்கிலார்

கத்திடும் வார்த்தையைத் தள்ளுமின் கற்றவர்

நித்தலும் கைதொழும் நித்தியன் சென்னிமேல்

மத்தமும் சூடினான் வான்மியூர் நாதனே.


தத்துவம் தேர்கிலார் சத்தியம் சொல்கிலார் - ஒரு தத்துவமும் அறியாதவர்கள்; மெய்ப்பொருளைத் தெளியமாட்டார்கள்; உண்மையைப் பேசமாட்டார்கள்; (தேர்தல் - தெளிதல்; அறிதல்); (தேர்கிலார், சத்தியம் என்ற சொற்கள் இடைநிலைத் தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளுமாறு அமைந்தன); (அப்பர் தேவாரம் - 5.90.5 - "நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்");

கத்திடும் வார்த்தையைத் தள்ளுமின் - அவர்கள் கத்துகின்ற வார்த்தைகளை மதிக்கவேண்டா; அவற்றைத் தள்ளுங்கள்; (தள்ளுதல் - அங்கீகரியாதிருத்தல்; நிராகரித்தல்; புறக்கணித்தல்);

கற்றவர் நித்தலும் கைதொழும் நித்தியன் - கற்றறிந்தவர்கள் தினமும் கைகூப்பி வணங்கும், என்றும் நிலைத்து இருக்கும் கடவுள்; (கைதொழுந்நித்தியன் - நகர ஒற்று விரித்தல் விகாரம்)

சென்னிமேல் மத்தமும் சூடினான் - தலைமேல் (பாம்பு, கங்கை, சந்திரன், கொன்றை, வில்வம் முதலியவற்றோடு) ஊமத்த மலரையும் சூடியவன்;

வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் தலைவன்;


11)

தேசனைத் திங்களைச் சென்னிவைத் தான்தனை

வாசனைப் பாக்களால் வாழ்த்துவார் வல்வினை

மாசினைத் தீர்ப்பவன் வானகம் சேர்ப்பவன்

மாசுணக் கச்சினான் வான்மியூர் நாதனே.


தேசனைத், திங்களைச் சென்னி வைத்தான்தனை - ஒளி உருவினனைச், சந்திர சேகரனை; (தேசன் - ஒளி வடிவினன்);

வாசனைப் பாக்களால் வாழ்த்துவார் வல்வினை மாசினைத் தீர்ப்பவன் - மணம் மிகுந்த பாமாலைகளால் வாழ்த்தும் அன்பர்களுடைய வலிய வினைகளை அழிப்பவன்; (வாசனைப் பா - தேவாரம் முதலிய மணம் கமழும் பாமாலைகள்); (மாசு - குற்றம்; மலம்);

வானகம் சேர்ப்பவன் - அவ்வடியார்களைச் சிவலோகத்தில் சேர்ப்பவன்;

மாசுணக் கச்சினான் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (மாசுணம் - பாம்பு); (கச்சு - அரைப்பட்டிகை);

வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் தலைவன்;


பிற்குறிப்பு:
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - “தானனா தானனா தானனா தானனா" என்ற சந்தம்.
சமஸ்கிருதத்தில் - ஸ்ரக்விணீ - sragviNI - स्रग्विणी - என்ற பெயருடைய சந்தம்.

அடிதோறும் 4 முறை "குரு-லகு-குரு" அமைப்புப் பெற்று வந்து, 4 அடிகளால் ஆவது.

பலரும் அறிந்த அச்யுதாஷ்டகம் இவ்வமைப்பில் அமைந்த பாடல்.

அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்

க்ருஷ்ணதா மோதரம் வாசுதே வம்ஹரிம்

ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்

ஜானகீ நாயகம் ராமசந்த் ரம்பஜே.


சம்பந்தர் தேவாரம் - 3.35.7 -

கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்

வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடம்

தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை

தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.


வி. சுப்பிரமணியன்

-------------------


3 comments:

  1. how to get this collection/book offline, please help

    ReplyDelete
    Replies
    1. Please use the contact form on the top right hand side of this page to send a direct message with your contact information.

      Delete
  2. சிவானந்த அனுபவம் சித்தக்க வைத்தன🙏😊

    ReplyDelete