Monday, January 10, 2022

06.01.111 - சிவன் - சிங்கம் - முருகன் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2010-01-09

06.01.111 - சிவன் - சிங்கம் - முருகன் - சிலேடை

-----------------------------------------------

கானில் நடமாடும் கண்ணிற் பொறிபறக்கும்

மான்மேலே பாயுமா றோடுமே - கோனென்று

வான்புகழ்நற் கோலமா மானஞ்சு கண்டமுடை

யான்மிசையூர் மைந்தன் அரி.


சொற்பொருள்:

கான் - 1) சுடுகாடு; 2) காடு;

நடமாடுதல் - 1) திருநடம் செய்தல்; 2) சஞ்சரித்தல்;

பொறிபறத்தல் - 1) தீப்பொறி சிதறுகை; 2) சினத்தோடு பார்த்தல்;

மான் - 1) ஒரு விலங்கு - Deer; 2) பெரியோன் - e.g. "எம்மான்";

பாயுமாறு - 1) பாயும் ஆறு; 2) பாயும்படி;

ஓடு - 1) மண்டையோடு; 2) ஓடுதல்;

- அம்பு;

மே - மேம்பாடு (Excellence);

வான் புகழ் - 1) வானோர் புகழும்; 2) பெரும் புகழ் உடைய;

கோலம் - 1) வேடம்; 2) உருவம்; அழகு; தன்மை;

கோலமா மானஞ்சு - 1) கோலம் ஆம், மால் நஞ்சு/ஆல் நஞ்சு; 2) கோலம் ஆம், மான் அஞ்சு/ஆன் அஞ்சு;

மால் - 1) கருமை (Blackness); 2) பெருமை (greatness);

ஆல் - ஓர் அசைநிலை;

ஆல் நஞ்சு - ஆலகால விஷம்;

மால் நஞ்சு - கரிய விடம்;

ஆன் - 1) இடபம்; 2) எருமை, பெற்றம், மரை இவற்றின் பெண்;

கண்டம் - 1) தொண்டை; கழுத்து; 2) குரல்; 3) பேராபத்து;

ஆன் மிசை ஊர் - இடபத்தின்மேல் செல்லும்;

மைந்தன் - 1) வீரன்; 2) மகன்; 3) இளையோன்;

அரி - சிங்கம்;


(மால் நஞ்சு = மானஞ்சு --- இலக்கணக் குறிப்பு - 154/155 காண்க.

கோலம் ஆம் மான் அஞ்சு = கோலமா மானஞ்சு --- இலக்கணக் குறிப்பு - 146 காண்க.

ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம்:

146. மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியிலுங் கெடும்.

154. லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.

155. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், இரு வழியிலும், வரு நகரந் திரிந்த விடத்துக் கெடும்.)


சிங்கம்:

கானில் நடமாடும் - காட்டில் சஞ்சரிக்கும்;

கண்ணிற் பொறிபறக்கும் - சினத்தோடு பார்க்கும் - மிகுந்த கோபம் உடையது;

மான் மேலே பாயுமாறு ஓடுமே - மான் மீது பாயும்படி ஓடும்;

கோன் என்று வான்புகழ் நற் கோலம் ஆம் - காட்டுக்கு அரசன் என்று சொல்லும்படி பெரும்புகழ் உடைய வடிவம்/தன்மை இருக்கும்;

மான்/ஆன் அஞ்சு கண்டம் உடை - மிருகங்கள் அஞ்சி நடுங்கும்படி குரலை உடைய;

அரி - சிங்கம்;


முருகன்:

கானில் நடமாடும் கண்ணில் பொறிபறக்கும் மான் மேலே பாயுமாறு ஓடுமே - (மான் - மான் போன்ற வள்ளி) - காட்டில் வாழ்கின்ற, கோபிக்கும் கண்ணைக் காட்டும், மான் போன்ற வள்ளி அஞ்சித் தன் மேல் பாய்ந்து கட்டிக்கொள்ளும்படி அங்கே விரைபவன்;

கோன் என்று வான் புகழ் நற் கோலம் ஆமால் - தலைவன் என்று தேவர்கள் புகழும் கோலம் பூண்பவன்;

நஞ்சு கண்டம் உடையான் மிசை ஊர் மைந்தன் - (குழந்தையாக) நீலகண்டன்மேல் ஏறி அமர்ந்து வரும் (விளையாடும்) மகன்;


சிவன்:

கானில் நடமாடும் - சுடுகாட்டில் திருநடம் செய்பவன்;

கண்ணிற் பொறிபறக்கும் - நெற்றிக்கண்ணில் தீப்பொறி பறக்கின்றவன்;

மான், மேலே பாயும் ஆறு, ஓடுமே கோன் என்று வான் புகழ் நற் கோலம் ஆம் - அரசன் என்று தேவர்கள் எல்லாம் புகழும் வேடமாக மானையும் தலைமேல் பாயும் கங்கையையும் பிரமனின் மண்டையோட்டையுமே தாங்குவார்; (--அல்லது-- "கண்ணிற் பொறிபறக்கும் மான், மேலே பாயும் ஆறு ஓடுமே" - நெற்றிக்கண்ணில் தீப்பொறி பறக்கும் சுவாமி மேல் பாயும் கங்கை ஓடும் - என்றும் கொள்ளலாம்).;

மால்/ஆல் நஞ்சு கண்டம் உடை - கரிய ஆலகால விடம் இருக்கும் நீலகண்டம் உடைய;

ஆன் மிசை ஊர் மைந்தன் - இடபத்தின்மேல் வரும் வீரனான சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment