Saturday, September 25, 2021

05.19 – கொண்டீச்சரம் (திருக்கொண்டீச்சரம்)

05.19 – கொண்டீச்சரம் (திருக்கொண்டீச்சரம்)


2015-01-19

கொண்டீச்சரம் (திருக்கொண்டீச்சரம் - நன்னிலத்தை அடுத்து உள்ள தலம்)

-----------------------

(அறுசீர் விருத்தம் - "காய் காய் காய் காய் மா தேமா" அமைப்பு;

"மா காய் மா காய் மா தேமா" என்று நோக்கலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 2.72 - "பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி")


1)

ஏலக் குழலாளை இடப்பால் மகிழ்ந்தானை எழில்மி டற்றில்

நீல மணியானை நேயர் மனக்கோயில் நீங்கா தானைச்

சூலத் தொடுமானும் சுடரும் தரித்தானைச் சுரும்பொ லிக்கும்

கோலப் பொழில்சூழ்ந்த கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


ஏலக்குழலாளை இடப்பால் மகிழ்ந்தானை - மயிர்ச்சாந்து அணிந்த கூந்தலை உடைய உமையை இடப்பக்கம் விரும்பியவனை;

எழில் மிடற்றில் நீல மணியானை - அழகிய கண்டத்தில் கருமணி உடையவனை;

நேயர் மனக்கோயில் நீங்காதானை - பக்தர்களின் மனம் என்ற கோயிலில் என்றும் உறைபவனை;

சூலத்தொடு மானும் சுடரும் தரித்தானை - கையில் சூலத்தையும் மானையும் தீயையும் ஏந்தியவனை;

சுரும்பு ஒலிக்கும் கோலப் பொழில் சூழ்ந்த கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - வண்டுகள் ரீங்காரம் செய்யும் அழகிய சோலை சூழ்ந்த திருகொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக!


2)

துன்றிச் சுரரெல்லாம் துதிகள் பலபாடித் தொழுபி ரானை

மன்றிற் றிருநட்டம் மகிழும் பெருமானை மழவெள் ளேற்று

வென்றிக் கொடியானை மேவார் புரமூன்றும் வேவ எய்த

குன்றச் சிலையானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


துன்றிச் சுரரெல்லாம் துதிகள் பல பாடித் தொழு-பிரானை - நெருங்கித் தேவர்களெல்லாம் பல துதிகள் பாடி தொழும் தலைவனை;

மன்றில் திருநட்டம் மகிழும் பெருமானை - அம்பலத்தில் திருநடம் செய்யும் பெருமானை;

மழ-வெள்-ஏற்று வென்றிக் கொடியானை - இளைய, வெண்ணீற இடபச் சின்னம் பொறித்த வெற்றிக்கொடி உடையவனை;

மேவார் புரம் மூன்றும் வேவ எய்த குன்றச் சிலையானைக் - பகைவர்களது முப்புரமும் வெந்து அழியும்படி எய்த மேருவில்லை ஏந்தியவனைக்;

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே.- திருகொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக!


3)

பன்றி மருப்பணிந்த பவளத் திருமார்பில் பாம்பு மாலை

ஒன்றும் உடையானை ஒற்றை விடையானை ஓது வார்க்கு

நன்று மிகநல்கும் நங்கள் பெருமானை நறவம் நாறு

கொன்றை முடியானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


பன்றி மருப்பு - பன்றிக்கொம்பு ;

ஒற்றை - ஒப்பற்ற ;

ஓதுவார்க்கு நன்று மிக நல்கும் நங்கள் பெருமானை - (அப்பர் தேவாரம் - 4.77.3 - "அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே" - பாடல்களைப் பாடுபவர்களுக்கு இறைவன் அருளும் வகைகள் எல்லை இல்லாதன);

நறவம் நாறு கொன்றை முடியானை - வாசனை கமழும் கொன்றைமலரைச் சூடியவனை;


4)

தொடுக்கும் சரம்சாத்தித் தொழுத அடியவர்க்குத் துன்பம் செய்ய

அடுக்கும் அடற்கூற்றின் அகலம் தனிலுதைத்தங் கருளி னானைக்

கடுக்கும் கடல்நஞ்சைக் கரந்த மிடற்றானைக் கரவி லாது

கொடுக்கும் கரத்தானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


அடுக்கும் அடல் கூற்றின் அகலம்தனில் உதைத்து - மார்க்கண்டேயரை நெருங்கிய வலிய நமனது மார்பில் உதைத்து; (அடுத்தல் - நெருங்குதல்); (அகலம் - மார்பு);

கடுக்கும் கடல்நஞ்சு - எவரும் வெறுக்கும் கசக்கின்ற விஷம்; (கடுத்தல் - மிகுதல்; வெறுத்தல்; கசத்தல்);

கரந்த மிடற்றானை - ஒளித்த கண்டனை;

கரவு இலாது கொடுக்கும் கரத்தானை - ஒளித்தல் இன்றி வாரி வழங்கும் கரத்தை உடையவனை;


5)

இனியெம் துணைநீயென் றேத்தும் அடியார்உண் இன்பத் தேனைத்

தனிவெள் விடையானைத் தக்கன் பெருவேள்வி தனைய ழித்த

முனிவும் உடையானை முக்கட் பெருமானை முடியின் மீது

குனிவெண் மதிசூடும் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


அடியார் உண் இன்பத்தேனை - (8.10.3 - திருவாசகம் - திருக்கோத்தும்பி - "நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன்சொரியும்");

தனி வெள் விடை - ஒப்பற்ற வெண்ணிற இடபம்;

முனிவு - கோபம்;

குனி வெண் மதி - வளைந்த வெண் திங்கள்; (குனிதல் - வளைதல்);


6)

பாதித் திருமேனி பாவை வடிவேற்ற பரமன் தன்னை

ஆதி நடுவாகி அந்தம் எனவாகும் அளவி லானைப்

பூதிப் பொலிவோடு பூக்கள் பலதூவிப் போற்றிப் பாடிக்

கோதில் அடியார்சேர் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


பூதி - சாம்பல் - திருநீறு;

கோது இல் அடியார் சேர் - குற்றமற்ற அடியவர்கள் சேர்கின்ற;


7)

பறைகள் ஒலிக்கநடம் பயிலும் பசுபதியைப் பணிந்து வானோர்

இறைவ எமக்கருளாய் என்று துதிசெய்ய இரங்கி நஞ்சுண்

கறைகொள் மிடற்றானைக் கையால் மலர்தூவிக் கருது வார்தம்

குறைகள் களைவானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


8)

கருவம் மிகவாகிக் கயிலை மலைபேர்த்த கார ரக்கன்

வெருவ மலைமீது விரலிட் டடர்த்தானை வேதத் தானை

அரவப் புனற்கங்கை அணிகூ விளமாலை அரவம் கொன்றை

குரவம் புனைந்தானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


கார் அரக்கன் வெருவ - கரிய நிறத்து இராவணன் அஞ்சுமாறு;

அடர்த்தானை - நசுக்கியவனை;

அரவப் புனற்கங்கை, அணி கூவிள மாலை, அரவம், கொன்றை, குரவம் புனைந்தானை - ஒலிக்கும் புனல் பாயும் கங்கையையும் அழகிய வில்வமாலையையும் பாம்பையும் கொன்றைமலரையும் குரா மலரையும் சூடியவனை;


9)

நாற்ற மலர்மேலான் நாரா யணனிவர்கள் நண்ண ஒண்ணாத்

தோற்றச் சுடரானைச் சுடலைப் பொடியேறும் தோளி னானை

ஆற்றுச் சடையானை ஆல நிழலானை அன்பர்க் காகக்

கூற்றை உதைகோனைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


நாற்றமலர் மேலான் நாராயணன் இவர்கள் நண்ண ஒண்ணாத் தோற்றச் சுடரானை - வாசத்தாமரைமேல் இருக்கும் பிரமன் திருமால் இவர்களால் அடைய இயலாத தோற்றம் உடைய தீ ஆனவனை; (தோற்றம் - புகழ்; வடிவம்)

ஆல நிழலானை - கல்லால மரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தியை;


10)

பொக்கம் மலிநெஞ்சர் பொய்கள் பலசொல்லும் புல்லர் மார்க்கம்

துக்கம் மிகவாக்கும் துரிசர் உரைநீங்கித் தூவெண் ணீறும்

அக்கும் அணிவார்தம் அல்லல் களைவானை அரவத் தோடு

கொக்கின் இறகுமணி கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


பொக்கம் - வஞ்சகம்;

புல்லர் - கீழோர்;

துரிசர் - குற்றம் உடையவர்; (துரிசு - குற்றம்);

அக்கு - உருத்திராக்கம்;

கொக்கின் இறகும் அணி - கொக்கு வடிவுடைய குரண்டாசுரனைக் கொன்று அவ்விறகைச் சூடிய;


11)

தளிகள் பலநாடித் தமிழின் தொடைபாடித் தாழ்வார்க் கெல்லாம்

எளியன் எனவாகி இன்னல் வினைதீர்க்கும் இறைவன் தன்னை

அளிகள் இசைபாடி அலரில் மதுமாந்தி அகங்க ளிக்கும்

குளிரும் பொழில்சூழ்ந்த கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


தளி - கோயில்;

தமிழ் இன்தொடை - இனிய தமிழ்ப் பாமாலைகள்;

தாழ்வார்க்கு - வணங்குபவர்களுக்கு;

எளியன் - எளிதில் அடையப்படுபவன்;

இன்னல் வினை - துன்பம் செய்யும் வினை; துன்பத்தையும் வினையையும்;

அளி இசை பாடி அலரில் மது மாந்தி அகம் களிக்கும் - வண்டுகள் இனிய ஒலிசெய்து பூவில் தேன் உண்டு மனம் மகிழும்;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு :

  • அறுசீர் விருத்தம் - "காய் காய் காய் காய் மா தேமா" அமைப்பு;

  • காய்ச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்;

  • இப்பதிகத்தில் 1, 3-ஆம் சீர்கள் மாச்சீர்கள். 2, 4-ஆம் சீர்கள் புளிமாங்காய் / கருவிளங்காய்.

  • (சம்பந்தர் தேவாரம் - 2.72 - "பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி")


No comments:

Post a Comment