Tuesday, January 19, 2021

05.02 – கருவூர் - (கரூர்)

05.02 – கருவூர் - (கரூர்)


2014-11-16

கருவூர் - (கரூர்)

--------------------------------------

(கலித்துறை - 'மா மா கூவிளம் மா புளிமாங்காய்' என்ற வாய்பாடு)

(திருஞானசம்பந்தர் தேவாரம் - 1.97.1 - "எய்யா வென்றித் தானவ ரூர்மூன் றெரிசெய்த");


1)

நண்ணும் அன்பர் தம்மிடர் தீர்த்து நலம்நல்கும்

அண்ணல் அரிய நஞ்சினை ஆர்ந்த அருளாளன்

எண்ணில் நாமம் ஏற்றவெம் மீசன் இடமென்பர்

கண்ணுக் கினிய கார்வயல் சூழ்ந்த கருவூரே.


நண்ணும் அன்பர்தம்டர் தீர்த்து நலம் நல்கும் அண்ணல் - அடைந்த பக்தர்களது துன்பத்தைத் தீர்த்து நலம் அளிக்கின்ற தலைவன்;

அரிய நஞ்சினை ஆர்ந்த அருளாளன் - ஆலகால விடத்தை உண்ட அருளாளன்; (ஆர்தல் - உண்ணுதல்);

எண்ல் நாமம் ஏற்றம் சன் இடம் என்பர் - எண்ணற்ற திருப்பெயர்கள் உடைய எம் ஈசன் உறையும் தலம்;

கண்ணுக்கு இனிய கார்வயல் சூழ்ந்த கருவூரே - கண்ணுக்கு இனிமை தரும், நீர்வளம் மிக்குப் பச்சைப்பசேல் என்றிருக்கும் வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்); (கார் - மேகம், மழை, நீர்; பசுமை; அழகு); ('மிக்க' என்றது இசையெச்சம் - Omission, from a sentence, of words needed to complete the sense; ellipsis for the sake of brevity or elegance;).

(சுந்தரர் தேவாரம் - 7.84.1 - "கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே");


குறிப்பு : கரூர் பெரிய ஊராகிவிட்டதால், வயல்களை ஊரின் புறப்பகுதிகளிலேயே காண இயலும்.


2)

போற்றிப் பாடும் அன்புடை யார்க்குப் புகலானான்

ஆற்றை ஏற்ற அஞ்சடை அப்பன் அயில்வேலன்

ஏற்றுக் கொடியன் ஏந்திழை கூறன் இடமென்பர்

காற்றில் அசையும் கார்வயல் சூழ்ந்த கருவூரே.


புகல் - அடைக்கலம்;

அஞ்சடை - அம் சடை - அழகிய சடை;

அயில்வேலன் - கூர்மையுடைய சூலத்தை ஏந்தியவன்; (அயில் - கூர்மை); (வேல் - இங்கே மூவிலை வேல் - சூலத்தைச் சுட்டியது);

ஏற்றுக் கொடியன் - இடபச் சின்னம் பொறித்த கொடியை உடையவன்;

ஏந்திழை கூறன் - உமையை ஒரு கூறாக உடையவன்;

காற்றில் அசையும் கார்வயல் - நெற்பயிர் காற்று வீசும்போது அசைந்தாடுகின்ற, நீர்வளம் மிக்குப் பச்சைப்பசேல் என்றிருக்கும் வயல்; (வயல் என்றதால், காற்றில் அசைவது நெற்பயிர் என்று குறிப்பால் உணர்த்தப்பெற்றது);


3)

அரவார் சடையன் அம்புலி சூடி அடிநாளும்

பரவாப் பணியும் பத்தருக் கன்பன் பலிநாடி

இரவா உழலும் எம்பெரு மான்றன் இடமென்பர்

கரவா தளிக்கும் கார்வயல் சூழ்ந்த கருவூரே.


அரவு ஆர் சடையன், அம்புலி சூடி - நாகம் பொருந்திய சடையினன், பிறையைச் சூடியவன்;

அடி நாளும் பரவாப் பணியும் பத்தருக்கு அன்பன் - திருவடியைத் தினமும் துதித்துப் பணியும் பக்தர்களுக்கு அன்பு உடையவன்; (பரவுதல் - புகழ்தல்);

பலி நாடி இரவா உழலும் எம்பெருமான்தன் இடம் என்பர் - பிச்சை விரும்பி இரந்து உழல்கின்ற எம்பெருமான் உறையும் இடம் ஆவது;

கரவாது அளிக்கும் கார்வயல் சூழ்ந்த கருவூரே - வஞ்சமின்றி கொடுக்கின்ற, நீர்வளம் மிக்குப் பச்சைப்பசேல் என்றிருக்கும் வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்) ஆகும்;

இலக்கணக் குறிப்பு - பரவா, இரவா - பரவி, இரந்து; ( செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம்);


4)

அயில்கொள் சூலன் ஆர்கழல் பணியும் அடியார்தம்

மயல்கள் தீர்த்து வானம ளிக்கும் மணிகண்டன்

எயில்கள் மூன்றை எய்தவன் உறையும் இடமென்பர்

கயல்கள் உகளும் கார்வயல் சூழ்ந்த கருவூரே.


அயில்கொள் சூலன் - கூர்மையுடைய சூலத்தை ஏந்தியவன்;

ஆர்கழல் பணியும் அடியார்தம் மயல்கள் தீர்த்து வானம் அளிக்கும் மணிகண்டன் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியை வணங்கும் அடியவர்களது மயக்கங்களைத் தீர்த்துச் சிவலோகம் அளிக்கின்ற நீலகண்டன்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (கழல் - திருவடி); (மயல்கள் - மயக்கங்கள்);

எயில்கள் மூன்றை எய்தவன் உறையும் இடம் என்பர் - முப்புரங்களை ஓர் அம்பால் எய்தவன் உறையும் தலம்;

கயல்கள் உகளும் கார்வயல் சூழ்ந்த கருவூரே - கயல் மீன்கள் பாயும், வளம் மிக்க வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்) ஆகும்;;


5)

தவறா தென்றும் தண்டமிழ் பாடித் தனையேத்தும்

அவர்வா னுலகம் ஆள்வதற் கருளும் அழல்வண்ணன்

இவரான் ஏறும் எம்பெரு மான்றன் இடமென்பர்

கவினார் சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே.


தவறாது என்றும் தண்மிழ் பாடித் தனைத்தும் அவர் வானுலகம் ஆள்வதற்கு அருளும் அழல்வண்ணன் - மறவாமல் எந்நாளும் குளிர்ந்த தமிழ்ப்பாமாலைகளைப் பாடித் தன்னைப் போற்றும் பக்தர்கள் சிவலோகம் ஆள அருள்கின்ற தீவண்ணன்; (தண்டமிழ் - தண்+தமிழ் - குளிர்ந்த தமிழ் - தேவாரம், திருவாசகம் முதலியன); (அழல் - தீ);

இவர்ஆன் ஏறும் எம்பெருமான்ன் இடம் என்பர் - இடப்வாகனம் உடைய எம்பெருமானது தலம்; (இவர்தல் - ஏறிச்செலுத்துதல்); (ஆன் - பசு/இடபம்);

கவின் ஆர் சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே - அழகிய பொழிலும் பசிய வயலும் சூழ்ந்த கருவூர் (கரூர்); (கவின் - அழகு);


6)

முதலும் முடிவும் ஆகிய மூர்த்தி முடிவில்லான்

நுதலிற் கண்ணன் கையினில் மூன்று நுனைவேலன்

எதிரில் லாத எம்பெரு மான்றன் இடமென்பர்

கதலி தென்னை கார்வயல் சூழ்ந்த கருவூரே.


நுதலில் கண்ணன் - நெற்றிக்கண்ணன்;

மூன்று நுனை வேலன் - மூன்று முனைகளை உடைய வேலை ஏந்தியவன் - திரிசூலன்;

எதிர் இல்லாத - ஒப்பற்ற; (எதிர் - ஒப்பு);

கதலி - வாழை;


7)

வாணி லாவை வார்சடை மீது மகிழ்பெம்மான்

பேணி வாழ்த்தும் அன்பரைப் பேணிப் பெருவான்சேர்

ஏணி ஆன எந்தையி ருக்கும் இடமென்பர்

காணற் கினிய கார்வயல் சூழ்ந்த கருவூரே.


வாணிலாவை வார் சடைமீது மகிழ் பெம்மான் - ஒளி வீசும் சந்திரனை நீள்சடையின்மேல் விரும்பிச் சூடிய பெருமான்; (வாணிலா - வாள் நிலா - ஒளி திகழும் சந்திரன்); (வார்தல் - நீள்தல்); (மகிழ்தல் - விரும்புதல்);

பேணி வாழ்த்தும் அன்பரைப் பேணிப் பெரு வான் சேர் ஏணி ஆன எந்தை - போற்றித் துதிக்கும் பக்தர்களைக் காத்துச் சிவலோகத்தில் சேர்க்கின்ற ஏணி ஆன எம் தந்தை; (பேணுதல் - போற்றுதல்; விரும்புதல்; பாதுகாத்தல்); (பெருவான்சேர் - பெரிய வானுலகத்தில் சேர்க்கின்ற);


8)

முனிவால் மலையைப் பேர்த்தவன் அலற முடிபத்தைத்

தனியோர் விரலை ஊன்றிய டர்த்துத் தயைசெய்தார்

இனியார் கைத்த நஞ்சணி கண்டர் இடமென்பர்

கனியார் சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே.


முனிவால் மலையைப் பேர்த்தவன் அலற முடி பத்தைத் தனிர் விரலை ஊன்றிடர்த்துத் தயைசெய்தார் - சினத்தால் கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அலறும்படி அவனது பத்துத் தலைகளையும் ஒரே ஒரு விரலை ஊன்றி நசுக்கி அருள்செய்தவர்; (முனிவு - கோபம்; சினம்); (அடர்த்தல் - நசுக்குதல்); (தயைசெய்தல் - அருள்செய்தல்);

இனியார் - இனியவர்;

கைத்த நஞ்சு அணி கண்டர் இடம் என்பர் - கசப்புடைய ஆலகால விடத்தை அணிந்த கண்டத்தை உடையவர் உறையும் தலம்; (கைத்தல் - கசத்தல்);

கனிர் சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே - கனிகள் நிறைந்த சோலைகளும் வளம் மிக்க வயலும் சூழ்ந்த கருவூர் (கரூர்);


9)

பெரிய தேவன் பேணிடு வாரைப் பிரியாதான்

அரியும் அயனும் அன்றடி முடியை அடையாத

எரியின் உருவன் ஏறமர் ஈசன் இடமென்பர்

கரிய சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே.


பெரிய தேவன் - மகாதேவன்;

பேணிடுவாரைப் பிரியாதான் - பக்தர்களை நீங்காமல் துணைநிற்பவன்;

எரியின் உருவன் ஏறு அமர் ஈசன் இடம் என்பர் - சோதி வடிவினன், இடபவாகனம் உடைய ஈசன் உறையும் தலம்;

கரிய சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே - அடர்ந்த சோலைகளும் வளம் மிக்க வயலும் சூழ்ந்த கருவூர் (கரூர்);


10)

துரும்பைத் தோணி என்றுரை துரிசர் சொலைநீங்கும்;

விரும்பு பத்தர் வெவ்வினை தீர்க்கும் விடையேறி

இரும்பு வெள்ளி பொன்னெயில் எய்த இறைவன்னூர்

கரும்பார் கின்ற கார்வயல் சூழ்ந்த கருவூரே.


துரும்பைத் தோணி என்றுரை துரிசர் சொலை நீங்கும் - பிறவிக் கடலைக் கடப்பிக்கும் தோணி என்று ஒரு துரும்பினைப் புகழ்ந்து பேசும் குற்றமுடையவர்கள்தம் சொல்லை மதியாமல் நீங்குங்கள்;

விரும்பு பத்தர் வெவ்வினை தீர்க்கும் விடையேறி - விரும்பி வழிபடும் பக்தர்களது கொடிய வினையைத் தீர்க்கும் இடபவாகனன்; (வெவ்வினை - கொடிய வினை); (விடையேறி - இடபவாகனன்);

இரும்பு வெள்ளி பொன்யில் எய்த இறைவன்னூர் - முறையே இரும்பு, வெள்ளி, பொன் இவற்றால் செய்யப்பெற்ற கோட்டைகளான முப்புரங்களை ஒரு கணையால் எய்த இறைவன் உறையும் தலம்; (இறைவன்னூர் - இறைவன் ஊர் - னகர ஒற்று விரித்தல் விகாரம்);

கரும்பு ஆர்கின்ற கார்வயல் சூழ்ந்த கருவூரே - கரும்புகள் நிறைந்த வளம் மிக்க வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்);


11)

மின்னற் சடையன் வெண்திரு நீறு மிளிர்மார்பன்

பன்னி நாளும் பாதமி ரண்டைப் பணிவார்தம்

இன்னல் களையும் எம்பெரு மான்றன் இடமென்பர்

கன்னல் விளையும் கார்வயல் சூழ்ந்த கருவூரே.


மின்னல் சடையன் - மின்னல் போல் ஒளி திகழும் சடையை உடையவன்;

வெண் திருநீறு மிளிர் மார்பன் - வெண்மை திகழும் திருநீறு ஒளிவீசும் மார்பை உடையவன்;

பன்னி நாளும் பாதம் இரண்டைப் பணிவார்தம் இன்னல் களையும் எம்பெருமான்ன் இடம் என்பர் - புகழ்ந்து பாடி இரு திருவடிகளை வழிபடும் பக்தர்களது துன்பத்தைத் தீர்க்கும் எம்பெருமானது தலம்; (பன்னுதல் - புகழ்தல்; பாடுதல்);

கன்னல் விளையும் கார்வயல் சூழ்ந்த கருவூரே - கரும்பு விளையும் வளம் மிக்க வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்); (கன்னல் - கரும்பு );


அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

----------------- ----------------


No comments:

Post a Comment